search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சீசன் களை கட்டியது: கன்னியாகுமரி கடற்கரையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்
    X

    கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதை காணலாம். 

    சீசன் களை கட்டியது: கன்னியாகுமரி கடற்கரையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்

    • பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த 17-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.

    முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கடந்த 3 நாட்களாக மழை மேகமூட்டத்தினால் தெரியாமல் இருந்த சூரிய உதயம் இன்று மழை மேகம் நீங்கியதைத்தொடர்ந்து கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத்தெரிந்தது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன்காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம், பாரதமாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று சபரிமலை சீசன் களைகட்டி உள்ளது.

    இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    Next Story
    ×