search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kangeyam"

    • அனைவரும் கட்சி வளர்ச்சி பணிகளிலும், பொது நலப்பணிகளிலும் தீவிரமாகவும், ஒற்றுமையாகவும் செயல்பட வேண்டும்.
    • அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் திருப்பூர் சாலையில் தெற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக செய்தித்துறை அமைச்சரும், தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்து அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் வரவேற்றார்.காங்கயம் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணை பிரகாஷ், நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் மோகனசெல்வம், ஒன்றிய செயலாளர்களான வெள்ளகோவில் சந்திரசேகரன், சென்னிமலை கிழக்கு பிரபு, மூலனூர் பழனிசாமி, குண்டடம் கிழக்கு சிவசெந்தில்குமார், மேற்கு சந்திரசேகர், நகர செயலாளர்களான காங்கயம் வசந்தம் சேமலையப்பன், வெள்ளகோவில் சபரி முருகானந்தம், மூலனூர் தண்டபாணி, கன்னிவாடி சுரேஷ் மற்றும் யூனியன் கவுன்சிலர்களான சந்தானலட்சுமி, அருண் தீபக், பழனாத்தாள் மாரிமுத்து, சிவன்மலை ஊராட்சி துணை தலைவர் சண்முகம், சிவன்மலை கிளை தி.மு.க. செயலர் சிவகுமார், வீரணம்பாளையம் ஊராட்சி தலைவர் உமாநாயகி உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், அனைவரும் கட்சி வளர்ச்சி பணிகளிலும், பொது நலப்பணிகளிலும் தீவிரமாகவும், ஒற்றுமையாகவும் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. முடிவில் காங்கயம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவனாந்தன் நன்றி கூறினார். 

    • தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் 6 கடைகளை நடத்துவோா் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வந்துள்ளனா்.
    • வாடகை செலுத்தாத 6 கடைகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

    காங்கயம் :

    காங்கயம் பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி சந்தை வளாகத்தில் 6 கடைகளை நடத்துவோா் கடந்த 3 மாதத்துக்கும் மேலாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வந்துள்ளனா். இந்த கடைகளின் வாடகை நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்து 79 ஆயிரம் ஆகும்.

    இந்த கடைகளுக்கு உரிய வாடகை செலுத்த வலியுறுத்தி நகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் வாடகை செலுத்தாத 6 கடைகளை காங்கயம் நகராட்சி ஊழியா்கள் பூட்டி 'சீல்' வைத்தனா்.

    இது குறித்து நகராட்சி ஆணையா் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:- நகராட்சிக்கு உரிய கட்டணங்களை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படுவதோடு, குடிநீா்க் கட்டணம் செலுத்தாத குடியிருப்புகளின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என தொடா்ந்து அறிவுறுத்தி வருகிறோம். எனவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை உள்ளிட்ட கட்டணங்களை உடனடியாக செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
    • தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை 19-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    மின் தடை செய்யப்படும் இடங்கள்: ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு.

    பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.

    காடையூா் துணை மின் நிலையம்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்மந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னங்காளிவலசு.

    • காங்கயம் இன காளைகள் ஜல்லிக்கட்டிகளில் பிடிபடாத வீரத்திற்கு பெயர் பெற்றவை.
    • பாலுக்கு தனி கிராக்கி ஏற்பட்டுள்ளது, ஒரு லிட்டர் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    காங்கயம் :

    காங்கயம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது காங்கயம் இன பசு மாடுகளும், காளைகளும் தான். காங்கயம் பகுதியை பூர்வீகமாக கொண்டு தோன்றியதால் ஊரின் பெயரிலேயே இந்த இன மாடுகள் அழைக்கப் படுகின்றன.கரிய நிறம், கூரான கொம்புகள், கம்பீரமான உடலமைப்பு, மலை போன்ற திமில்களுடன் காட்சியளிக்கும் காங்கயம் இன காளைகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டிகளில் பிடிபடாத வீரத்திற்கு பெயர் பெற்றவை. எருதுகள் சுமார் நான்கு டன் அளவிலான பாரத்தை சாதாரணமாக இழுக்கும் ஆற்றலுடையவை. அதே போல குறைவான தீவனத்தை உண்டு சத்தான பாலைத்தரும் காங்கயம் இன பசுக்களை கொங்கு மண்டல பகுதிகளில் திருமணம் முடித்து செல்லும் பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக தருவது பாரம்பரியமான மரபாக உள்ளது.

    பாலில் இருந்து ஏராளமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால் அன்றாடம் நாம் பயன்படுத்தப்படும் உணவில் பால் ஒரு பகுதியாக உள்ளது. சுத்தமான பால் கிடைப்பதில்லை என சிலர் மாடுகளில் இருந்து பால் கறக்கும் இடத்திற்கே சென்று பால் வாங்கி கொண்டு செல்கின்றனர். காங்கயம் இன மாட்டு பால் உடலுக்கு கேடு விளைவிக்காத ஏ2 ரகத்தை சேர்ந்தது. இதனால் இந்த பாலுக்கு தனி கிராக்கி ஏற்பட்டுள்ளது, ஒரு லிட்டர் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ஐரோப்பா ,அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் சாதரண பாலுக்கும், ஏ2 ரக பாலுக்கும் அதிக விலை வித்தியாசம் உள்ளது. அங்குள்ள பல்பொருள் அங்காடிகளில் ஏ2 ரக பாலுக்கு கிராக்கி உள்ளது. இதன் காரணமாக அந்நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏ2 ரக பாலை இறக்குமதி செய்கின்றன. திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் காங்கயம் இன மாடுகள் தற்போது அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மேற்கண்ட மாவட்டங்களில் கொரங்காடுகள் என அழைக்கப்படும் மானாவாரி நிலங்களில் வளரும் கொழுக்கட்டை புல் வகையாகும்.

    இந்த புல் கோடை காலங்களில் முழுவதும் காய்ந்து விடும். பின் மழை பெய்யும்போது நன்கு வளர்ந்து வரும். இதை உணவாக உட்கொள்ளும் மாடுகள், அதிக திடகாத்திரமாக உள்ளது. காரணம் இந்த புற்களில் இருந்து கால்சியம், மக்னீசியம், உள்ளிட்ட பல நுண் சத்துக்கள் இப்புல்லில் இருப்பதால் இதிலிருந்து கிடைக்கும் பால் அதிக சத்தானதாக உள்ளது. இதனால் தான் நாட்டு மாட்டு பாலுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது மக்கள் இயற்கை சார்ந்து பொருட்கள் வாங்கி பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் காங்கயம் இன நாட்டு மாட்டு பால் தேவையும் அதிகரித்து வருகிறது.

    அருகாமை மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் நாட்டு மாட்டின பால் சேகரிப்பு மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையம் அமைத்துள்ளது. இதன் மூலம் நாட்டு மாட்டு பால் சேகரிக்கப்பட்டு பதப்படுத்தி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்பட்டு ஈரோடு, கோவை, மைசூர் போன்ற நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இது போல், திருப்பூர் மாவட்ட, ஆவின் நிர்வாகத்தின் சார்பில் காங்கயம் மாடுகள் அதிக செரிவுள்ள பகுதியாக விளங்கும் காங்கயம், வெள்ளகோவில் முத்தூர்,தாராபுரம்,ஊத்துக்குளி பகுதிகளில் மேற்கண்ட ஏதேனும் ஒரு பகுதியில் காங்கயம் நாட்டு மாட்டு பால் சேகரிப்பு மற்றும் விற்பனை மையத்தினை துவங்கினால் அது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் தற்போது குழங்தைகளுக்கு நாட்டு மாட்டு பால் தரும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக பால் கிடைக்கும் இடங்களுக்கு சென்று வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இது குறித்து பாப்பினி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில்:- தற்போது இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி உள்ளிட்ட பொருட்களை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது போல் நகர பகுதிகளில் நாட்டு மாட்டு பால் கிடைப்பது அரிதான ஒன்றாகும். எனவே காங்கயம் நாட்டு மாட்டு பால் தேவை உள்ளோருக்கு வழங்கும் வகையிலும், விவசாயிகளிடையே இவ்வின மாடுகளை அதிக அளவில் வளர்க்கும் நோக்கில் விற்பனை மையத்தை அமைத்து கண்ணாடி குடுவைகளில் அடைத்து திருப்பூர் போன்ற நகரங்களுக்கு அனுப்பினால் நல்ல விலை கிடைக்கும்.

    விவசாயிகளிடம் இருந்து நாட்டு மாட்டு பால் உற்பத்தியும் பெருகும். மக்களுக்கு தரமான பால் கிடைக்கும். நாட்டு மாட்டு பால் தேவைப்படுவோர் மையத்தில் சென்று தரமான பாலை வாங்கி பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் கூட்டுறவு சங்கத்திற்கும் வருவாய் கிடைக்கும். கூட்டுறவு சங்கம் தோற்றுவித்ததற்கான நோக்கத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் திருப்பூர் ஆவின் நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

    வறட்சியான பகுதியில் மட்டுமே வளர்க்கப்பட்டு வரும் காங்கயம் இன பசுமாடுகள் மற்றும் காளைகள் அப்பகுதியில் கிடைக்கும் தீவினங்களை உண்டு வருவதால் இந்த பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப காங்கயம் கால்நடைகள் தங்களை தகவமைத்து கொள்வதால், காங்கயம் நாட்டுமாட்டு பால் எந்த காலநிலையிலும் எந்த வயதினரும் அருந்தும் வகையில் உள்ளது. இதன் தேவையை கருதி கால்நடைதுறையும் முன்முயற்சி எடுத்து பால் கொள்முதல் நிலையம் அமைக்க ஊக்குவிப்பு செய்ய வேண்டும் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். 

    • பிஏபி. பாசன கிளை வாய்க்காலின் மூலம் தண்ணீா் பெற்று விவசாயம் செய்து வருகிறாா்.
    • காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே உள்ள சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட சிக்கரசம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தாமணி (வயது 55). இவருக்குச் சொந்தமாக 4 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. பிஏபி. பாசன கிளை வாய்க்காலின் மூலம் தண்ணீா் பெற்று விவசாயம் செய்து வருகிறாா்.

    இந்நிலையில் வாய்க்காலில் இருந்து தண்ணீா் வரும் பாதையை பக்கத்து நிலத்துக்காரா் அடைத்து வைத்துவிட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சாந்தாமணி புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சாந்தாமணி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளாா். பின்னா் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, சாந்தாமணி திடீரெனெ வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தாா். அப்போது அங்கிருந்த துணை வட்டாட்சியா் மற்றும் போலீசார் அவரிடமிருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்தனா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து வட்டாட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து சாந்தாமணி மற்றும் அவரது குடும்பத்தினா் திரும்பிச் சென்றனா்.

    • கொடுமுடி ஆற்றில் இருந்து காங்கயம் நகருக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் கொண்டு வரப்படுகிறது.
    • நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டாா்களை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காவிரி ஆற்றில் வெள்ளம் தணிந்தவுடன் காங்கயம் நகருக்கு குடிநீா் வழங்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஆற்றில் இருந்து காங்கயம் நகருக்கு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் கொடுமுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மின் மோட்டாா்களை இயக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்க போா்க்கால அடிப்படையில் வாகனங்கள் மூலம் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.ஆற்றில் வெள்ளம் தணிந்தவுடன் காங்கயம் நகராட்சி பொதுமக்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குடிநீா் சீராக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • காங்கேயம் காளை சிலை அமைப்பதற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் பேசியதாவது:- காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட நெய்க்காரன்பாளையம் அரசுப் பள்ளி அருகே போதைப் பொருள் பயன்பாடு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தியுள்ளோம்.மேலும் இப்பள்ளி மாணவா்களின் கற்றல் தொடா்பாக பிரச்சினை எதுவும் உள்ளதா என வட்டாரக்கல்வி அலுவலகம் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் முன்பு காங்கேயம் காளை சிலை அமைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தோம். இப்போதைக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டரிடம் இருந்து பதில் வந்துள்ளது. காளை சிலை அமைப்பது தொடா்பாக மீண்டும் அனுமதி கேட்கவுள்ளோம்.காங்கயம் ஒன்றியத்துக்குட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதற்கென தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து ரூ.2 லட்சம் செலவிட வேண்டியுள்ளது. பிரதமா் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நடைபெறும் சாலைப்பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஒப்பந்தப்புள்ளி நிறைவுற்ற பின்னரும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.ஊராட்சி பகுதிகளில் பிரதமா் திட்டத்தின்கீழ் சாலை அமைக்கப்படும்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் அடிப்படை வசதிகளை விரைவாக செயல்படுத்துவது உள்பட 15 தீர்மானங்கள் ஏகமனதுடன் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியக் கவுன்சிலா்கள் மற்றும் குடிநீா் வடிகால் வாரியம், வட்டாரக் கல்வி அலுவலகம், மின்சார வாரியம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைரீதியான அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.கவுன்சிலர்களின் கோரிக்கைகளை ஏற்று விரைவில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனியன் அதிகாரிகளை சேர்மன் கேட்டுக்கொண்டார்.

    • காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தியுள்ளோம்.
    • ஒப்பந்தப்புள்ளி நிறைவுற்ற பின்னரும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.

    காங்கயம் :

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜீவிதா முன்னிலை வகித்தாா்.

    கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் பேசியதாவது:- காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட நெய்க்காரன்பாளையம் அரசுப் பள்ளி அருகே போதைப் பொருள் பயன்பாடு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, காங்கயம் காவல் துறையினரிடம் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தியுள்ளோம்.மேலும் இப்பள்ளி மாணவா்களின் கற்றல் தொடா்பாக பிரச்சினை எதுவும் உள்ளதா என வட்டாரக்கல்வி அலுவலகம் கண்காணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்தின் முன்பு காங்கேயம் காளை சிலை அமைப்பதற்கு அனுமதி கேட்டிருந்தோம். இப்போதைக்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டரிடம் இருந்து பதில் வந்துள்ளது. காளை சிலை அமைப்பது தொடா்பாக மீண்டும் அனுமதி கேட்கவுள்ளோம்.காங்கயம் ஒன்றியத்துக்குட்பட்ட 15 ஊராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதற்கென தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதியமாக மாதந்தோறும் ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்து ரூ.2 லட்சம் செலவிட வேண்டியுள்ளது. பிரதமா் சாலை மேம்பாட்டு திட்டத்தில் நடைபெறும் சாலைப்பணிகள் குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிப்பதில்லை. ஒப்பந்தப்புள்ளி நிறைவுற்ற பின்னரும் கூட தகவல் தெரிவிப்பதில்லை.ஊராட்சி பகுதிகளில் பிரதமா் திட்டத்தின்கீழ் சாலை அமைக்கப்படும்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

    இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஒன்றியக் கவுன்சிலா்கள் மற்றும் குடிநீா் வடிகால் வாரியம், வட்டாரக் கல்வி அலுவலகம், மின்சார வாரியம், வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைரீதியான அதிகாரிகள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

    • கலை சிறப்புகள் மிகுந்த சலங்கையாட்டமும், வள்ளி கும்மியாட்டமும் நடந்தது.
    • சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்ட நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    காங்கயம் :

    காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்றத்தின் சார்பில் என்.எஸ்.என். திருமண மகாலில் தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலை சிறப்புகள் மிகுந்த சலங்கையாட்டமும், வள்ளி கும்மியாட்டமும் நடந்தது.

    அப்போது கலந்து கொண்ட காங்கயம் தமிழர் பாரம்பரிய கலை மன்ற நிர்வாகிகளில் ஒருவரும், காங்கயம் பஞ்சாயத்து யூனியன் சேர்மனுமான மகேஸ்குமார் தனது மன்ற நிர்வாகிகளுடன் (ஆண்கள் மற்றும் பெண்களுடன்) சலங்கையாட்டம் ஆடினார். தொடர்ந்து கொடுவாய் வெற்றிவேலன் கலைக்குழுவின் தலைவர் குருவேலன் தங்கவேலன் தங்களது குழுவின் உறுப்பினர்களுடன் வள்ளி கும்மியாட்டம் ஆடினார்.

    அப்போது கலந்து கெரண்ட காங்கயம் நகராட்சி சேர்மன் சூர்யபிரகாஷ், காங்கயம் தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் என்.எஸ்.என்.தனபால் , செயலாளர் கங்கா சக்திவேல், பொருளாளர் பாலாஜி ரவிச்சந்திரன், காங்கயம் நகர , ஒன்றிய, வட்டார பகுதிகளின் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், சமூக சேவகர்கள் , சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் சலங்கையாட்டம், வள்ளி கும்மியாட்ட நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.   

    • 211 இடங்கள் முதல் இரண்டு கலந்தாய்வில் நிரப்பப்பட்டுவிட்டன.
    • 3-ம் கட்ட கலந்தாய்வில் விண்ணப்பிக்காத அனைவரும் பங்கேற்கலாம்.

    காங்கயம் :

    காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு வரும் 22ந் தேதி நடக்கிறது. கல்லூரியில் உள்ள 340 இடங்களில் 211 இடங்கள் முதல் இரண்டு கலந்தாய்வில் நிரப்பப்பட்டுவிட்டன.

    3-ம் கட்டமாக வரும் 22-ந் தேதி நடக்கும் கலந்தாய்வில் இனசுழற்சி அடிப்படையில் மட்டுமே 'சீட்' நிரப்பப்படுகிறது. தொடர்ந்து, 26ந் தேதி நடக்கும் 3-ம் கட்ட கலந்தாய்வில், விண்ணப்பம் உள்ள மற்றும் விண்ணப்பிக்காத அனைவரும் பங்கேற்கலாம். காலி இடங்களை பொறுத்தும் மதிப்பெண் அடிப்படையிலும் அனைவருக்கும் சேர்க்கை வழங்கப்படும். திருப்பூர் மற்றும் பிற மாவட்ட மாணவர்களும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என முதல்வர் நசீம் ஜான் தெரிவித்தார்.

    • ஆகஸ்டு 15ல், கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.
    • 2,300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும்

    காங்கயம் :

    பவானிசாகர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், 161 கி.மீ., கடந்து காங்கயம் பகுதியை அடைந்துள்ளது. இதனால் கீழ் பவானி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி .கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.ஆண்டுதோறும் ஆகஸ்டு 15ல், கீழ்பவானி வாய்க்கால் முதல் போக நஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு முன்கூட்டியே அணை நிரம்பியதால் கீழ் பவானி வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த, 12ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் 120 நாட்கள் இந்த தண்ணீர், 2,300 கன அடி வீதம் திறக்கப்படும்.தண்ணீர் திறக்கப்பட்ட நான்கு நாளில் நேற்று மாலை காங்கயம், நத்தக்காடையூர், பொடாரம்பாளையம் பகுதியில் தண்ணீர் கடந்து சென்றது. வழக்கமாக 6 நாட்களுக்குப் பின்பே அணையிலிருந்து 100 மைல் தொலைவில் உள்ள இப்பகுதிக்கு தண்ணீர் வந்து சேரும். தற்போது நான்கு நாளில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் திருப்பூர் உணவுத் திருவிழா காங்கேயத்தில் தொடங்கியது.
    • பாரம்பரிய உணவுப் பொருட்கள் என 50 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.‌

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் திருப்பூர் உணவுத் திருவிழா காங்கேயத்தில் தொடங்கியது.

    மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், பெண்கள், வணிகர்கள், பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.‌ 'உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி' காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்திலிருந்து காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, அரங்குகளைப் பார்வையிட்டார். இதில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரங்குகள், திருப்பூர் மாவட்டத்தின் சுவை அடையாளமாக இருக்கும் சைவ, அசைவ உணவு அரங்குகள், பிற அரசுத்துறை அரங்குகள், மருத்துவ முகாம்கள், தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருட்கள் என 50 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.‌ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக, உணவு அரங்குகளும், உணவு பாதுகாப்பு குறித்த கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சமையலில் ஆர்வமுள்ளவர்கள் ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென் இந்திய சமையல், சிறுதானிய சமையல், பால் வகை சமையல், மறந்து போன உணவுகள், சமையல் அலங்காரம் ஆகிய 10 தலைப்புகளில் உணவு வகைகளை தயார் செய்து காட்சி படுத்தியுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முதலிடம் பெற்றவர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு அறுசுவை அரசி என்ற பட்டமும், பரிசும் வழங்கப்பட உள்ளது.

    ×