search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்முதல் மையம்"

    • காங்கயம் இன காளைகள் ஜல்லிக்கட்டிகளில் பிடிபடாத வீரத்திற்கு பெயர் பெற்றவை.
    • பாலுக்கு தனி கிராக்கி ஏற்பட்டுள்ளது, ஒரு லிட்டர் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    காங்கயம் :

    காங்கயம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது காங்கயம் இன பசு மாடுகளும், காளைகளும் தான். காங்கயம் பகுதியை பூர்வீகமாக கொண்டு தோன்றியதால் ஊரின் பெயரிலேயே இந்த இன மாடுகள் அழைக்கப் படுகின்றன.கரிய நிறம், கூரான கொம்புகள், கம்பீரமான உடலமைப்பு, மலை போன்ற திமில்களுடன் காட்சியளிக்கும் காங்கயம் இன காளைகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டிகளில் பிடிபடாத வீரத்திற்கு பெயர் பெற்றவை. எருதுகள் சுமார் நான்கு டன் அளவிலான பாரத்தை சாதாரணமாக இழுக்கும் ஆற்றலுடையவை. அதே போல குறைவான தீவனத்தை உண்டு சத்தான பாலைத்தரும் காங்கயம் இன பசுக்களை கொங்கு மண்டல பகுதிகளில் திருமணம் முடித்து செல்லும் பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக தருவது பாரம்பரியமான மரபாக உள்ளது.

    பாலில் இருந்து ஏராளமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால் அன்றாடம் நாம் பயன்படுத்தப்படும் உணவில் பால் ஒரு பகுதியாக உள்ளது. சுத்தமான பால் கிடைப்பதில்லை என சிலர் மாடுகளில் இருந்து பால் கறக்கும் இடத்திற்கே சென்று பால் வாங்கி கொண்டு செல்கின்றனர். காங்கயம் இன மாட்டு பால் உடலுக்கு கேடு விளைவிக்காத ஏ2 ரகத்தை சேர்ந்தது. இதனால் இந்த பாலுக்கு தனி கிராக்கி ஏற்பட்டுள்ளது, ஒரு லிட்டர் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ஐரோப்பா ,அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் சாதரண பாலுக்கும், ஏ2 ரக பாலுக்கும் அதிக விலை வித்தியாசம் உள்ளது. அங்குள்ள பல்பொருள் அங்காடிகளில் ஏ2 ரக பாலுக்கு கிராக்கி உள்ளது. இதன் காரணமாக அந்நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏ2 ரக பாலை இறக்குமதி செய்கின்றன. திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் காங்கயம் இன மாடுகள் தற்போது அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மேற்கண்ட மாவட்டங்களில் கொரங்காடுகள் என அழைக்கப்படும் மானாவாரி நிலங்களில் வளரும் கொழுக்கட்டை புல் வகையாகும்.

    இந்த புல் கோடை காலங்களில் முழுவதும் காய்ந்து விடும். பின் மழை பெய்யும்போது நன்கு வளர்ந்து வரும். இதை உணவாக உட்கொள்ளும் மாடுகள், அதிக திடகாத்திரமாக உள்ளது. காரணம் இந்த புற்களில் இருந்து கால்சியம், மக்னீசியம், உள்ளிட்ட பல நுண் சத்துக்கள் இப்புல்லில் இருப்பதால் இதிலிருந்து கிடைக்கும் பால் அதிக சத்தானதாக உள்ளது. இதனால் தான் நாட்டு மாட்டு பாலுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. தற்போது மக்கள் இயற்கை சார்ந்து பொருட்கள் வாங்கி பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனால் காங்கயம் இன நாட்டு மாட்டு பால் தேவையும் அதிகரித்து வருகிறது.

    அருகாமை மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் நாட்டு மாட்டின பால் சேகரிப்பு மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையம் அமைத்துள்ளது. இதன் மூலம் நாட்டு மாட்டு பால் சேகரிக்கப்பட்டு பதப்படுத்தி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்பட்டு ஈரோடு, கோவை, மைசூர் போன்ற நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இது போல், திருப்பூர் மாவட்ட, ஆவின் நிர்வாகத்தின் சார்பில் காங்கயம் மாடுகள் அதிக செரிவுள்ள பகுதியாக விளங்கும் காங்கயம், வெள்ளகோவில் முத்தூர்,தாராபுரம்,ஊத்துக்குளி பகுதிகளில் மேற்கண்ட ஏதேனும் ஒரு பகுதியில் காங்கயம் நாட்டு மாட்டு பால் சேகரிப்பு மற்றும் விற்பனை மையத்தினை துவங்கினால் அது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என்பதில் ஐயம் இல்லை. ஏனெனில் தற்போது குழங்தைகளுக்கு நாட்டு மாட்டு பால் தரும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக பால் கிடைக்கும் இடங்களுக்கு சென்று வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இது குறித்து பாப்பினி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில்:- தற்போது இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறி உள்ளிட்ட பொருட்களை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது போல் நகர பகுதிகளில் நாட்டு மாட்டு பால் கிடைப்பது அரிதான ஒன்றாகும். எனவே காங்கயம் நாட்டு மாட்டு பால் தேவை உள்ளோருக்கு வழங்கும் வகையிலும், விவசாயிகளிடையே இவ்வின மாடுகளை அதிக அளவில் வளர்க்கும் நோக்கில் விற்பனை மையத்தை அமைத்து கண்ணாடி குடுவைகளில் அடைத்து திருப்பூர் போன்ற நகரங்களுக்கு அனுப்பினால் நல்ல விலை கிடைக்கும்.

    விவசாயிகளிடம் இருந்து நாட்டு மாட்டு பால் உற்பத்தியும் பெருகும். மக்களுக்கு தரமான பால் கிடைக்கும். நாட்டு மாட்டு பால் தேவைப்படுவோர் மையத்தில் சென்று தரமான பாலை வாங்கி பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் கூட்டுறவு சங்கத்திற்கும் வருவாய் கிடைக்கும். கூட்டுறவு சங்கம் தோற்றுவித்ததற்கான நோக்கத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் திருப்பூர் ஆவின் நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

    வறட்சியான பகுதியில் மட்டுமே வளர்க்கப்பட்டு வரும் காங்கயம் இன பசுமாடுகள் மற்றும் காளைகள் அப்பகுதியில் கிடைக்கும் தீவினங்களை உண்டு வருவதால் இந்த பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப காங்கயம் கால்நடைகள் தங்களை தகவமைத்து கொள்வதால், காங்கயம் நாட்டுமாட்டு பால் எந்த காலநிலையிலும் எந்த வயதினரும் அருந்தும் வகையில் உள்ளது. இதன் தேவையை கருதி கால்நடைதுறையும் முன்முயற்சி எடுத்து பால் கொள்முதல் நிலையம் அமைக்க ஊக்குவிப்பு செய்ய வேண்டும் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். 

    • 3000 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்திட தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
    • ஒரு விவசாயிடமிருந்து 216 கிேலா கொப்பரை மட்டும் கொள்முதல் செய்யப்படும்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் முத்தூர் களத்தில் பல்லடம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் மையத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    திருப்பூர் மாவட்டம் வாவிபாளையத்திலும், கோவை மாவட்டம் சூலூரிலும், திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தயம் மற்றும் பட்டிவீரன்பட்டி ஆகிய இடங்களில் கூட்டுறவுத் துறை மூலம் 3000 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்திட தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது.இவற்றுள் பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு அரவைக் கொப்பரை 1000 மெட்ரிக் டன்அளவுக்கு கொள்முதல் செய்திட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கொப்பரையை அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைத்திட்டத்தின்படி கிலோ ரூ.105.90 என்ற விலையில் 6 சதவிகிதத்திற்குள் ஈரப்பத்துடன் சீரான ,சராசரித் தரத்தில் உள்ள கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படும். ஒரு விவசாயிடமிருந்து மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும்.

    நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயிடமிருந்து 216 கிேலா கொப்பரை (50 கோணிகள்) மட்டும் கொள்முதல் செய்யப்படும். இதற்காக விவசாயிகள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சுய விவரங்களை சம்ரிதி என்ற போர்டலில் பதிவு செய்து கொள்ள ஏக்கர் மற்றும் விளைச்சல் விவரங்களுக்கான சான்றிதழுடன் வங்கி விவரங்களையும் பல்லடம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தை அணுகி பதிவு செய்து கொண்டு பின்னர் கொப்பரையைக் கொண்டு வந்து விற்பனை செய்திடலாம்.

    மேலும் திருப்பூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் பொங்கலூர், உடுமலை, காங்கயம் மற்றும் பெதப்பம்பட்டி ஆகிய மையங்கள் மூலம் 1.2.2022 முதல் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் 31.7.2022 வரை 4284.700 மெட்ரிக் டன் கொப்பரைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 3498 விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சோ.சீனிவாசன், பல்லடம் வேளாண்மை உற்பத்தியர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் செயலாளர் சுரேஷ், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியகுழுத்தலைவர் எஸ்.குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×