காங்கயத்தில் உணவு திருவிழா - பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்

உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் திருப்பூர் உணவுத் திருவிழா காங்கேயத்தில் தொடங்கியது. பாரம்பரிய உணவுப் பொருட்கள் என 50 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.‌
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

காங்கயம் :

திருப்பூர் மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் திருப்பூர் உணவுத் திருவிழா காங்கேயத்தில் தொடங்கியது.

மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், பெண்கள், வணிகர்கள், பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.‌ 'உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி' காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்திலிருந்து காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து, அரங்குகளைப் பார்வையிட்டார். இதில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரங்குகள், திருப்பூர் மாவட்டத்தின் சுவை அடையாளமாக இருக்கும் சைவ, அசைவ உணவு அரங்குகள், பிற அரசுத்துறை அரங்குகள், மருத்துவ முகாம்கள், தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பொருட்கள் என 50 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.‌ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் விதமாக, உணவு அரங்குகளும், உணவு பாதுகாப்பு குறித்த கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சமையலில் ஆர்வமுள்ளவர்கள் ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென் இந்திய சமையல், சிறுதானிய சமையல், பால் வகை சமையல், மறந்து போன உணவுகள், சமையல் அலங்காரம் ஆகிய 10 தலைப்புகளில் உணவு வகைகளை தயார் செய்து காட்சி படுத்தியுள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முதலிடம் பெற்றவர்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறுபவருக்கு அறுசுவை அரசி என்ற பட்டமும், பரிசும் வழங்கப்பட உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com