search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி"

    • படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். (வயது 58) விவசாயி. இவர் கடந்த 12-ந்தேதி இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே வடபழனியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த செல்வக்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வக்குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுபற்றி மருத்துவமனை டாக்டர்கள் செல்வக்குமார் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்து வேறு சிலரது உயிர்களை காப்பாற்ற உதவ வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து செல்வக்குமார் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    பின்னர் அரசு உடல் உறுப்பு தானம் திட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி ஈரோடு தனியார் மருத்துவமனையில் செல்வக்குமார் உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவை அகற்றப்பட்டு கோவை மருத்துவமனைக்கு தானமாக அனுப்பப்பட்டது.மேலும் காங்கயம் வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் செல்வக்குமார் உடல் தகனம் செய்யப்பட்டது. செல்வகுமாருக்கு ஜானகி என்ற மனைவியும், சதீஷ்குமார் என்ற மகனும், கல்பனாதேவி என்ற மகளும் உள்ளனர்.

    • தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார்.
    • தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்-மீனாட்சிபுரம் சி எஸ்.ஐ.சர்ச் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல்(வயது 80). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார். தனது தோட்டத்தில் பதியம் வைத்து புதிதாக வளர்க்கப்படும் மரக்கன்று களை தனது காலி விளை நிலங்களில் ஊன்றி வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பதியம் வைத்து தென்னங்கன்றுகள் வளர்த்தபோது அதில் ஒரு தேங்காயில் இருந்து இரு தென்னங்கன்றுகள் முளைவிட்டு வந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். ஏனெனில் ஒரு தேங்காயில் இருந்து ஒரு தென்னை கன்று தான் எப்பொழுதும் முளைக்கும். ஆனால் இதில் 2 தென்னங்கன்றுகள் முளைத் துள்ளது. தற்பொழுது ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல் வளர்ந்த அந்த தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    மேலும் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அதிசயமாக வளர்ந்துள்ள தென்னங்கன்றுகளை தொடர்ந்து காண்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

    தானியேல் தான் செல்லும் இடங்களுக்கு கையிலேயே அந்த தென்னங்கன்றை எடுத்துச் செல்வதால் பொதுமக்களும் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

    • உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
    • வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, வாழை தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் விவசாயி விஜயகுமார் (48) என்பவர் தோட்டத்தில் புகுந்து வாழை மரத்தை சேதம் செய்தது.

    இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகள் உதவியுடன் யானையை விரட்டினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 200 வாழைகள் சேதம் ஆனது.

    வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தொடர்ந்து வனவிலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து சேதம் செய்து வருவது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி ஏற்படும் விலை சரிவு விவசாயிகளின் வாழ்க்கையை அதல பாதாளத்துக்கு தள்ளி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத நிலையில் ஆங்காங்கே சாலையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளி உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து வியாபாரிகள் மூலம் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. வரத்து மற்றும் தேவையை பொறுத்து தினசரி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் விலை சரிவை சந்திப்பதும் விவசாயிகள் நஷ்டமடைவதும் தொடர்கதையாகவே உள்ளது. தற்போது 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.150 வரையே விற்பனையாகிறது. இதனால் போக்குவரத்து, சுங்கம், கூலி என செலவு செய்து சந்தைக்கு கொண்டு வந்து நஷ்டத்துடன் திரும்புவதை விட சாலை ஓரத்தில் வீசி எறிவதே சிறந்தது என்று விவசாயிகள் முடிவு செய்து விடுகின்றனர்.

    பல விவசாயிகள் விரக்தியின் உச்சத்தில், டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழிக்க தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஏற்படும் இந்த நிலையால் தக்காளி செடிகள் மட்டும் அழிக்கப்படுவதில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரமும், எதிர்காலமும் சேர்ந்தே அழிந்து போகிறது. இந்தநிலை ஏற்படாமல் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயம் மட்டுமல்லாமல் விவசாயியும் சேர்ந்தே அழியும் நிலை உருவாகி விடும்.

    எல்லா பொருட்களின் விலைவாசியும் 10 ஆண்டுகளுக்குள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் ஒரு கட்டு கீரை ரூ.10 லிருந்து ரூ.15 ஆக உயர்த்தப்பட்டால் அது அநியாய விலையாக பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்கப்பட வேண்டும். ஆனால் ரூ.5-க்கும் ரூ.10-க்கும் அள்ளி கொடுத்து விட்டு விவசாயி மூலையில் முடங்கி கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மடத்துக்குளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தக்காளியை கொட்டி உள்ளனர்.

    எனவே விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலையில் தக்காளி சந்தை உருவாக்கி, இருப்பு வைக்கவும், உரிய விலை கிடைக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும், மதிப்புக் கூட்டுப்பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
    • எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வரதராஜன். இவர் 4 ஏக்கர் விவசாய தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், வெற்றிலை உள்ளிட்ட பயிர்களை பன்றிகள் மிகவும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து விவசாயி வரதராஜன் கூறுகையில் எலத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிலர் இறைச்சிக்காக பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பன்றிகளை பட்டியில் அடைத்து வளர்க்காமல் திறந்தவெளியில் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளர்ப்பதால் தோட்ட த்து பகுதிகளில் புகுந்து அறுவடைக்கு தயாராக உள்ள மக்காச்சோளம், கரும்பு பயிர்களை சேதம் செய்ததால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் நாங்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து பயிர்களை வளர்த்தால் ஒரே நாளில் இந்த பன்றிகள் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.

    எனவே இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பயிர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீர் பெற்று விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.
    • இதுவரை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்து வீணாகிவிட்டதால், மிகுந்த வேதனை அளிக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இம்முறை காவிரியில் இருந்து போதிய நீர் இல்லாததால் குறுவை சாகுபடி மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதேபோல் தண்ணீர் இல்லாத காரணத்தால் சம்பா, தாளடியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டம் கீழத்திருப்பூந்துருத்தி, மேலத் திருப்பூந்துருத்தி, காட்டுக்கோட்டை பாதை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடி செய்யப்பட்டது. காவிரி நீர் வரத்து இல்லாததால், அருகிலுள்ள மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீர் பெற்று விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.

    ஆனால், கடந்த 4 மாதங்களாக காவிரி நீர் வரத்து இல்லாததாலும், ஒரு மாதத்துக்கு மேலாக மழை பெய்யாததாலும் மோட்டார் பம்ப்செட்டுக்கும் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துவிட்டது. இதனால், ஆற்றுப்பாசனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

    காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், வெண்ணாற்றில் மட்டும் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு விடப்பட்டதே தவிர, தஞ்சாவூர் மாவட்டத்துக்குக் விடவில்லை. இதனால், திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப் பாசனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலையுடன் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்பகுதிகளில் கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல், நிலங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு காய்ந்துவிட்டன. இப்பயிர்களை இனிமேல் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால், விவசாயிகள் ஆடுகளை விட்டு மேய்த்தனர்.

    இது குறித்து மேலத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:

    மேலத் திருப்பூந்துருத்தி கூடுதல் வருவாய் கிராமத்தில் ஆற்றுப்பாசனத்தைச் சார்ந்த பல ஏக்கரில் அருகிலுள்ள மோட்டார் பம்ப்செட் மூலம் சம்பா சாகுபடி செய்து வந்தோம். பம்ப்செட்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால், எங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், பல ஏக்கரில் நிலங்களில் தண்ணீரின்றி காய்ந்து, வெடிப்பு ஏற்பட்டு பயிர்களும் கருகி வருகின்றன. இதனால், வேறு வழியின்றி ஆடுகளை விட்டு பயிர்களை அழித்து வருகிறோம். இதுவரை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்து வீணாகிவிட்டதால், மிகுந்த வேதனை அளிக்கிறது.

    அருகிலுள்ள கருப்பூர், பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதி விவசாயிகளுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது.

    நாகர்கோவில்:

    தமிழ்நாட்டில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாலும், அளவில் சற்று பெரியது என்பதாலும் இல்லத்தரசிகள் அதிகம் விரும்புவார்கள்.

    இதுபோக, தமிழகத்தின் தேவைக்கு ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பூண்டு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தின்போது தமிழகத்தில் பூண்டு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. உற்பத்தி குறைந்த தால், அதன் விலையும் கிலோவுக்கு ரூ.150 அதிகரித்து, ரூ.350 வரை விற்பனை செய்யப் பட்டது. தற்போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பூண்டின் வரத்தும் குறைந்துள்ளதால், அதன் விலை மேலும் அதிக ரித்துள்ளது. அந்த வகையில் நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டது. அதாவது சிறிய பூண்டு கிலோ ரூ.250-க்கும், நடுத்தர பூண்டு கிலோ ரூ.350-க்கும், பெரிய பூண்டு கிலோ ரூ.420-க்கும் விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே சமயம் நாகர்கோவிலில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் 15 நாட்களுக்கு பூண்டு விலை குறையாது என்றும், அதன்பிறகு புதுப்பூண்டு வெளி மாநிலங்களில் இருந்து வர தொடங்கியதும் அதன் விலை குறையதட தொடங்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல சீரகம் ரூ.480, மல்லி-ரூ.99, மிளகு ரூ.660, கடலை பருப்பு ரூ.72 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காய்கறி வரத்து சீராக இருப்பதால் காய்கறிகள் விலை கூடவோ குறையவோ இல்லை.

    • தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.
    • மக்களுடன் முதல்வர் திட்டம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று பெருமிதத்துடன் கூறி வருகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகரன்.

    இவர் அதே கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரிடம் கடந்த 1988-ம் ஆண்டில் 21 செண்ட் நிலத்தை கிரயம் வாங்கினார். பின்னர் இந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்யும் நடவடிக்கையில் சந்திரசேகரன் ஈடுபட்டு வந்தார். ஆனால் 35 ஆண்டுகளாக முயன்றும் பட்டா மாற்றம் நடைபெறவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் இனி நம்மால் பட்டா மாற்றம் செய்யவே முடியாது என்ற விரக்தியுடன் காணப்பட்டார்.

    இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் குறைதீர்க்கும் திட்டமாக மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை செயல்படுத்தினார். ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த வட்டார தாசில்தார் தலைமையில் முகாம் நடத்தி மக்கள் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கானோர் பயன் அடைந்தனர்.

    அதன்படி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கும்பகோணம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வலையப்பேட்டை வருவாய் கிராமத்தை சேர்ந்த மாங்குடி கிராமத்திலும் நடைபெற்றது. இதனை அறிந்து சந்திரசேகரன் தனது 35 ஆண்டுக்கால எதிர்பார்ப்பான பட்டா மாற்றம் கோரி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார்.

    அந்த விண்ணப்பத்தின் மீது அதிகாரிகள் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து கடந்த 2-ந் தேதி சந்திரசேகரனுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டு கும்பகோணம் தாலுகா அலுவலகத்தின் இணைய சேவை மூலம் வெளியிடப்பட்டது. இந்த தகவலை இணையத்தின் மூலம் அறிந்து விவசாயி சந்திரசேகரன் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்.

    அதாவது முகாமில் வழங்கிய விண்ணப்பம் மீது அடுத்த 3 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து முடித்து வைக்கபட்டுள்ளது.

    35 ஆண்டுக்கால பிரச்சினையை வெறும் மூன்றே நாளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் தீர்வு கண்டு முடித்து வைக்கப்பட்டுள்ளதை எண்ணி அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    இதனால் அவர் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்புகள், பயன்கள் குறித்து மற்ற விவசாயிகளுக்கு எடுத்து கூறி வருகிறார். மேலும் மக்களுடன் முதல்வர் திட்டம் அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதம் என்று பெருமிதத்துடன் கூறி வருகிறார்.

    • நெல்கதிர் வளர்ந்து முற்றி பயிர்கள் தலை சாய்ந்துள்ளது கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.
    • என்னுடைய வயலில் கதிர் விட்டு நெல் பயிர்கள் தலை சாய்ந்து கிடக்கிறது என்று தகவல் தெரிந்து வயலுக்கு சென்று பார்த்தபோது எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ் (வயது 52). இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நெல் பயிரிட்டு, ரூ.50 ஆயிரம் செலவு செய்தார். ஆனால் போதுமான நெல் விளைச்சல் இல்லாமல் செலவு செய்த தொகை கூட கிடைக்காமல் நஷ்டம் அடைந்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த அவர் இந்த முறை நெல் சாகுபடி செய்யாமல் விவசாய நிலத்தை அப்படியே தரிசாக விட்டு விட்டார். அதன் பிறகு ஜெயராஜ் தனது வயலுக்கு செல்லாமல் இருந்தார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஜெயராஜிடம் உங்கள் வயலில் நெல் கதிர் விட்டு பயிர்கள் தலைசாய்ந்துள்ளது. இன்னும் ஏன் கதிரை அறுக்காமல் வைத்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர்.

    அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெயராஜ், கடந்த சில மாதங்களாக வயலுக்கு செல்லாமல் இருந்து மீண்டும் வயலை பார்க்கச் சென்றபோது அங்கு நெல்கதிர் வளர்ந்து முற்றி பயிர்கள் தலை சாய்ந்துள்ளது கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார்.

    இதுபற்றி ஜெயராஜ் கூறுகையில், கடந்த முறை நெல் விவசாயம் செய்து நஷ்டம் அடைந்த நிலையில் அதற்குப்பின் நெல் விவசாயத்தையே மறந்து விட்டு தான் வேறு தொழிலை பார்க்க சென்று விட்டேன். இந்த நிலையில் என்னுடைய வயலில் கதிர் விட்டு நெல் பயிர்கள் தலை சாய்ந்து கிடக்கிறது என்று தகவல் தெரிந்து வயலுக்கு சென்று பார்த்தபோது எனக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    நான் நெல் விதை விதைக்கவில்லை, நடவு நடவில்லை, தண்ணீர் பாய்ச்சவில்லை, உரம் வைக்கவில்லை ஆனால் ஒரு ஏக்கருக்கு 8 மூட்டை வீதம் 16 மூட்டை நெல் விளைந்திருக்கிறது. இது என்னை மட்டுமல்ல இப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த முறை நெல்கதிர் அறுத்து விட்டு, வயலை சுத்தம் செய்யாமல் விட்டு விட்டேன்.

    இந்நிலையில் கதிர் அறுத்த பிறகு இருந்த அடியில் உள்ள அருப்பு தாழிலிருந்து பயிர் வளர்ந்து அதன் மூலம் நெல் விளைந்துள்ளது என்னைப்போன்ற விவசாயிகளுக்கு ஆச்சரியமாக உள்ளது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயிரிட்டபோது கிடைக்காத நெல் விளைச்சல் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் தற்போது ஒரு ஏக்கருக்கு 8 மூட்டை விளைந்திருப்பது மிகப்பெரிய சந்தோசமாக உள்ளது என்றார்.

    • குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.61 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 798 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முதல் சுற்று நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.52 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.04 அடியாகவும் உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகள் மட்டுமின்றி திருச்செந்தூர், உடன்குடி, மெஞ்ஞானபுரம், ஆழ்வார்திருநகரி, ஏரல், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றிய ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    இப்பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முடங்கியது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

    அதேநேரம் இதுவரை பல ஆண்டுகளாக மழை இல்லாத பகுதிகளாக இருந்து வந்த உடன்குடி பகுதியில், கனமழை காரணமாக அனைத்து குளங்கள், குட்டைகள், ஆறு மற்றும் ஏராளமான தற்காலிகமான நீர் பிடிப்பு பகுதிகள் எல்லாமே சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் முழுமையாக நிரம்பியது.

    இந்த ஆண்டு எல்லாமே முழுமையாக நிரம்பிவிட்டது என்று விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரு சில நாட்கள் கூட நீடிக்கவில்லை.

    ஸ்ரீவைகுண்டம் அணையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அத்துடன் இணைந்த சடைய நேரி கால்வாயில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டிருந்தது.

    இதனால் உடன்குடி அருகே உள்ள சடையனேரி குளம் கிழக்கு பகுதி உடைந்தது, அதில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் உடன்குடி ஒன்றிய பகுதியில் உள்ள மெஞ்ஞானபுரம், மானிக்கபுரம், லட்சுமிபுரம், வேப்பங்காடு, மருதூர் கரை, செட்டியாபத்து, பரமன்குறிச்சி, என்.எஸ். நகர், சிங்கராயபுரம், வட்டன் விளை, வெள்ளாளன் விளை, சீயோன்நகர், செட்டி விளை, சிதம்பரபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதனால் ஏராளமான பொதுமக்களும் விவசாய தோட்டங்களும், கருப்பட்டி, கற்கண்டு, உற்பத்தியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தேக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி மதிப்புள்ள கருப்பட்டி, கற்கண்டு அனைத்தும் மழையிலும், வெள்ள நீரிலும் நனைந்தும் நாசமாயின.

    மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையம், அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியன தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் தற்காலிகமாக சுமார் 10 நாட்கள் வேறு இடங்களில் செயல்பட்டது. இதன் காரணமாக உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் நேர்வழி சாலையும், உடன்குடியில் இருந்து பரமன் குறிச்சி செல்லும் நேர்வழிச் சாலையும் முழுமையாக துண்டிக்கப்பட்டது.


    நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு செல்லும் மக்கள் சுமார் 25 நாட்களாக பல கிலோமீட்டர் சுற்றி சுற்றி சென்று வந்தனர்.

    இந்நிலையில், வட்டன் விளை மற்றும் சீயோன்நகர் பகுதியில் முதல் கட்டமாக ஏராளமான பம்புசெட், நீர் மோட்டார் மூலம் தேங்கி கிடந்த தண்ணீரை அருகில் உள்ள செம்மணல் தேரியில் கொண்டு சேர்க்கும் பணி இரவு பகலாக 10 நாட்கள் நடந்தது.

    தண்ணீர் அப்புறப்படுத்தவில்லை. குறையவும் இல்லை, அடுத்து மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மருதூர் கரையில் சாலையை உயர்த்தி 15 நாட்களுக்கு பின் போக்குவரத்தை தொடங்கினர். உடன்குடியில் இருந்து செட்டியாபத்து மெஞ்ஞான புரம் வழியாக நெல்லைக்கு போக்குவரத்து தொடங்கியது.

    அதன் பின்பு சியோன் நகர் அருகே பல லாரி மணல் மற்றும் கற்களை கொட்டி தரைப் பாலத்தை சுமார் 25 அடி உயர்த்தி 25 நாட்களுக்குப் பின் போக்குவரத்தை தொடங்கினர்.

    ஆனாலும் இன்று வரை சுமார் 40 நாட்கள் ஆகியும் வட்டன் விளை ஊருக்குள் பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் இருந்து உள்ளே வர முடியாத அளவிற்கு சுமார் 10 அடி ஆழத்திற்கு இன்னும் தண்ணீர் தேங்கிகிடக்கிறது.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள தேங்காய்கள் மற்றும் விவசாய பொருட்ககளை தோட்டத்தில் இருந்து கொண்டு வருவதற்கு தற்காலிக படகு போல அமைத்து அதில் சென்று தேங்காய் மற்றும் விவசாய பொருட்களை வெளியில் கொண்டு வருகிறார்கள்.

    தோட்டத்திற்கு நீச்சலில் செல்கிறார்கள். வாழை விவசாயிகள், வாழை குலைகளை வெட்டி தண்ணீரில் எடுத்து கொண்டு வருகின்றனர்.


    இன்று வரை விவசாயிகள் மற்றும் பல தரப்பட்ட மக்கள் வடியாத வெள்ளத்தில் தங்களது வாழ்க்கையை கடத்தி வருகின்றனர்.

    இது பற்றி விவசாயிகள் கூறும் போது, நிரந்தரமாக வடிகால் அமைத்தால் தான் இனி தண்ணீர் வடியும். தண்ணீர் வடிவதற்கு எந்த விதமான சூழ்நிலையும் தற்போது இல்லை.

    தண்ணீர் தேங்கி 40 நாட்களை கடந்து விட்டதால் அதிகமான அளவில் சேறும்சகதியும் சேர்ந்து விட்டதால் தேங்கியதண்ணீர் பூமிக்குள் இறங்கும் நிலைமை இல்லை.

    அதனால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வடிகால் அமைத்தால் தான் எங்கள் விவசாயங்களை நாங்கள் காப்பாற்ற முடியும். மீண்டும் புதியதாக விவசாயம் செய்ய முடியும் என்றனர்.

    தரைமேல்பிறக்க வைத்தான், எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான் என்ற ஒரு சினிமாபாடலை பாடிக்கொண்டு விவசாயிகளும், கிராம மக்களும் தண்ணீருக்குள் சென்று தங்கள் தோட்டத்தில் உள்ள விவசாய பயிர்களை வெளியே கொண்டு வருவது மிகவும் பரிதாபமாகவும், பரிதவிப்பாகவும் உள்ளது.

    • சங்கராந்தி பண்டிகையின் போது பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஆட்டுப்பந்தயத்திலும் பங்கேற்க செய்கிறார்.
    • ஆட்டுக்கிடாய்கள் மூலம் புள்ளையா கணிசமாக பணம் சம்பாதித்து வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பாபுல பாடு அடுத்த வீரவல்லியை சேர்ந்தவர் புள்ளையா. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆட்டுக்கிடா குட்டிகளை விலைக்கு வாங்கி வந்தார். அவற்றுக்கு ராம், லட்சுமண் என பெயரிட்டார்.

    சிறிய பாரத்தை இழுக்க ஆட்டுக்கிடாய்களுக்கு பயிற்சி அளித்தார். பின்னர் ஆட்டுக்கிடாய்களுக்கு ஏற்றவாறு பிரத்தியோகமாக வண்டி ஒன்றை தயார் செய்தார்.

    அதன் மூலம் வயலில் இருந்து விளைவிக்கப்படும் காய்கறி, நெல் மற்றும் புல்லைக் கொண்டு வர பயன்படுத்தினார்.

    மேலும் ஆட்டுக்கிடாய்களை வைத்து ஏர் ஓட்டி வருகிறார். உள்ளூர் கிராம மக்களுக்கு நகர்புறங்களில் இருந்து சிமெண்ட் மூட்டைகள், சிமெண்ட் பைப்புகள் வண்டியை ஏற்று வந்து பணம் சம்பாதித்து வருகிறார். சங்கராந்தி பண்டிகையின் போது பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஆட்டுப்பந்தயத்திலும் பங்கேற்க செய்கிறார்.

    ஆட்டுக்கிடாய்கள் மூலம் புள்ளையா கணிசமாக பணம் சம்பாதித்து வருகிறார். மாட்டு வண்டிக்கு ஒன்றும் குறைவில்லாமல் விவசாய வேலைகளில் அயராது உழைத்து வருமானம் ஈட்டி தரும் எந்த ஆட்டுக்கிடாய்களை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

    ×