search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edappadi Palaniswami"

    • புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.
    • மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாஜக ஏன் வரவே கூடாது?

    தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம்.

    இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது.

    தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம்.

    புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.

    மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?

    தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

    இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக்காசாக்கி விடும்! வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

    மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள்.

    மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!

    பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க #Vote4INDIA!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


    • மக்களைப் பிரித்தாலும் சூழ்ச்சி செய்யும் கட்சி வடக்கிலிருந்து வந்த பாஜக
    • அதிமுக என்னும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை பாஜக உணர வேண்டும்

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில்,

    "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று சட்டமன்றத்தில் சிங்கமாக கர்ஜித்தாரே நம் அன்புத் தாய், அந்தத் தாயின் சபதத்தை நிறைவேற்ற 'நான் உழைப்பேன், உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன்' என்று சபதம் எடுத்துக்கொண்டு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் இலட்சிய உணர்வோடு உழைத்து வருகிறீர்கள்.

    கழக உடன்பிறப்புகளே, உங்கள் நம்பிக்கைகள் எதுவும் வீணாகாது. உங்களுக்காக இங்கே ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நாடாளுமன்ற மக்களவையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் காலத்தைப் போலவே, மிகப் பெரிய கட்சியாக நாம் அமர்ந்திட உங்கள் உழைப்பும், கவனமும் இந்த பிரசாரத்தின் கடைசி நாட்களில் தேவைப்படுகின்றன.

    ஏராளமான ஊழல் பணத்துடனும், தேர்தல் நிதியாகத் திரட்டிய பெரும் பண மூட்டையுடனும் தீய சக்தியான திமுக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறது.

    நமது இயக்கத்தை பிளவுபடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம். வன்முறை வெறியாட்டங்களையும், வடக்கே இருந்து ஏவப்படும் விஷ அம்புகளையும், ஆளும் கட்சிக்கு இருக்கும் அதிகார மமதையில் நடத்தப்படும் அருவருக்கத்தக்க ஏற்பாடுகளையும், 1972-ல் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து நாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்? இத்தகைய கோழைத் தனங்களைத் தாண்டிதானே எண்ணற்ற வெற்றிகளை நாம் பெற்று வருகிறோம்?

    நாம் வம்பு சண்டைக்குப் போவதில்லை. ஆனால், வந்த சண்டையை விடுவதில்லை. நாம் அமைதியை நாடுபவர்கள். ஆனால், நமது அமைதியும், சாந்தமும் வீரத்தின் வேறு வடிவங்களே. அதிமுக என்னும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை, நம்மை சீண்டிப் பார்க்கும் இந்த சிற்றறிவு மனிதர்கள் உணர்ந்துகொள்ளட்டும்.

    இந்த தேர்தலில் நமது அர்ப்பணிப்பும், உழைப்பும், ஈடுபாடும் பல மடங்கு இருக்க வேண்டும். துவளாமல், அஞ்சாமல், அயராமல் 'வெற்றி ஒன்றே' நம் இலக்காகக் கொண்டு தேர்தல் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.

    வெற்றி நமதே! 40-ம் நமதே. நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்று அவர் எழுதியுள்ளார்.

    • மழை வெள்ளத்தின் போது, மக்களை திமுக அரசு வஞ்சித்தது.
    • மழை வெள்ளத்தின்போது, மக்களுக்கு உதவி செய்தது அதிமுக தான்.

    சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அங்கு தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து வாக்கு சேகரிக்கப்பட்டது.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். மழை வெள்ள பாதிப்புக்கு, மற்றவர்கள் மீது பழி சுமத்தி திமுக அரசு தப்பிக்க பார்க்கிறது.

    மழை வெள்ளத்தின் போது, மக்களை திமுக அரசு வஞ்சித்தது. மழை வெள்ளத்தின்போது, மக்களுக்கு உதவி செய்தது அதிமுக தான்.

    ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், திமுக அரசு என்ன செய்தது ? விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.

    ஊழல் இல்லாத துறையே இல்லை, எல்லா துறையிலும் லஞ்சம். மழை வெள்ளத்தின்போது, மக்களுக்கு உதவி செய்தது அதிமுக தான்.

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனை செய்ததாக 2,118 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. திமுக அறிவித்த 520 வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர்.

    2021 சட்டமன்ற தேர்தலில், திமுக, அதிமுக இடையேயான வாக்கு சதவீதம் 3 சதவீதம் மட்டுமே.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிற அளவுக்கு உயர்ந்துள்ளது.
    • பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கைத்தறி பற்றி குறிப்பிடவில்லை. நெசவாளர் பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) மீண்டும் காஞ்சிபுரம் வந்து அ.தி.மு.க. வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

    திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று அண்ணா சொன்ன அந்த பொன்மொழியை அ.தி.மு.க. தொடர்ந்து கடைபிடித்து அதை நிறைவேற்றுவதற்கு பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

    இன்று ஸ்டாலின் போற பக்கமெல்லாம் பேசுகிறார். அ.தி.மு.க. 3 ஆக போய் விட்டது 4 ஆக போய் விட்டது என்கிறார். மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்துக்கு வந்து பார்க்கட்டும் அண்ணா பிறந்த மண், அண்ணா கண்ட கனவை நினைவாக்கும் கட்சி அ.தி.மு.க. காஞ்சிபுரமே குலுங்குகிற அளவுக்கு இன்று மக்கள் வெள்ளம். அ.தி.மு.க.வை பிரிக்க பார்க்கிறீர்கள். அது ஒரு போதும் நடக்காது. உங்களது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.

    அண்ணா கண்ட கனவை நிச்சயமாக நிறைவேற்றியே தீருவோம். அது எங்களது இரு பெரும் தலைவர்களுடைய கொள்கை, லட்சியம். அதை நிறைவேற்றுவது தான் எங்களை போல் உள்ள தொண்டனுக்கு பெருமை.

    இந்த மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம். விவசாயிகள், நெசவாளர்கள் நிறைந்த மாவட்டம். உழைப்பாளர்கள் நிறைந்த இந்த பூமியிலே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    விவசாயம், நெசவுத்தொழில் இரண்டு தொழிலும் பிரதான தொழிலாக உள்ள காஞ்சி மாவட்டம் மென்மேலும் வளருவதற்கு நம்முடைய வெற்றி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் வெற்றி பெற வேண்டும்.

    இன்றைக்கு எத்தனையோ பேர் வருவார்கள், போவார்கள். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதிலே அ.தி.மு.க.தான் முன்னிலையில் இருக்கும். இந்த மண்ணிலே எத்தனையோ தலைவர்கள் பிறக்கின்றார்கள். வாழ்கிறார்கள். இறக்கின்றார்கள்.

    இடைப்பட்ட காலத்திலே மக்களுக்கு நன்மை செய்கின்ற தலைவர்கள்தான் மக்கள் உள்ளத்திலே வாழ்வார்கள். அப்படி நமது முப்பெரும் தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா இந்த மண்ணிலே மறைந்தாலும் மக்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். இன்னும் சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்கிற தலைவர்கள். யார் என்று உங்களுக்கு தெரியும்.

    இன்றைக்கு இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்று சொல்கிறார்கள். அது அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் இன்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. எனவே அ.தி.மு.க. ஆட்சி தான் இதற்கு காரணம்.

    ஏரிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் மணிமங்கலத்தில் நான் குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைத்தேன். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப்பணித்துறையில் இருக்கிறது. அதில் சுமார் 6,211 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு குடிமராமத்து திட்டத்தில் கொண்டு வந்து முழுக்க விவசாயிகள் பங்களிப்போடு திட்டத்தை நிறைவேற்றினோம். இதற்கு மட்டும் சுமார் ரூ.1,240 கோடி நிதி ஒதுக்கினோம்.

    இந்த குடிமராமத்து திட்டம் மூலமாக ஏரிகள் ஆழமாக்கப்பட்டது. மழை நீர் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

    இந்த அற்புதமான திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது.

    இங்கு 40 வருடத்திற்கு ஒருமுறை அத்திவரதர் மக்களுக்கு அருள் புரிந்தார். அ.தி.மு.க. ஆட்சியில்தான் அத்திவரதர் எழுந்தருளி மக்களுக்கு காட்சி அளித்தார். அந்த விழாவில் 60 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த காஞ்சிபுரம் நகரமே சிறப்பு பெற்றது.

    அப்படி அத்திவரதரை தரிசனம் செய்ய பல லட்சம் பேர் வந்து குழுமி பத்திரமாக வீடு திரும்பினாார்கள். அந்த அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சி நிர்வாக திறமை பிரதிபலித்தது.

    இந்த பகுதியில் கைத்தறி, விசைத்தறி இரண்டு தொழிலும் நலிவடைந்துள்ளது. இந்த தொழிலை நம்பிதான் இப்பகுதி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. கைத்தறி நெசவு படிப்படியாக சரிந்து விட்டது. விசைத்தறி அதோடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி விரைவில் மலரும். நமது வெற்றி வேட்பாளர் ராஜசேகர் வெற்றி பெற்று இந்த தொழில் சிறக்க பாராளுமன்றத்திலே குரல் கொடுப்பார்.

    பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கைத்தறி பற்றி குறிப்பிடவில்லை. நெசவாளர் பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இந்த கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. கைத்தறி நெசவாளர்களை பாதுகாத்தோம். கைத்தறி நெசவு தொழில் அ.தி.மு.க. ஆட்சியில்தான் பாதுகாக்கப்பட்டது.

    காஞ்சி என்று சொன்னாலே பட்டுதான் நினைவுக்கு வரும். பட்டு விற்பனைக்கு பெயர் பெற்ற நகரம் பட்டு நெசவு இங்குதான் அதிகமாக உள்ளது.

    இந்த தொழில்கள் சிறக்க வேண்டும் என்றால் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மத்திய-மாநில அரசுகள் இந்த மக்களுக்கு தேவையான திட்டங்களை எதுவும் இதுவரை செய்யவில்லை.

    இன்று கடுமையான மின் கட்டண உயர்வு உள்ளது. வீடுகளுக்கு பயன்படுத்துகிற மின் கட்டணம் உயர்ந்து விட்டது. விசைத்தறி மற்றும் கடைகளுக்கு பயன்படுத்துகிற கட்டணம் 'பீக் ஹவர்' என்று கூறி அதிக கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.

    மின் கட்டண உயர்வினால் கடுமையாக தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி பாதிக்கப்பட்டு விட்டது. கடைகளுக்கு அதிக வரி போடப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசு வந்தாலே மின் கட்டணம் உயர்ந்து விடும். இது கோடை காலம். அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் வெட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் தடையில்லா மின்சாரத்தை தந்தோம். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டில் விலைவாசி உயர்வு அதிகமாகி விட்டது. இன்று 1 கிலோ அரிசி 18 ரூபாய் உயர்ந்து விட்டது. எண்ணெய் விலை உயர்ந்து விட்டது, பருப்பு, சர்க்கரை விலை உயர்ந்து விட்டது. மளிகை பொருட்கள் விலை அனைத்தும் 40 சதவீதம் உயர்ந்து விட்டது. வேலையில்லை. வருமானம் இல்லை. செலவு அதிகம். மக்கள் இன்றைக்கு படாதபாடுபடுகிறார்கள்.

    இப்படிப்பட்ட அவல நிலைதான் தி.மு.க. ஆட்சியில் பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் பேசும்போது என்ன சொல்கிறார், தி.மு.க. ஆட்சி மக்களுக்கு நன்மை செய்கிற ஆட்சி என்று சொல்கிறார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய அரசு மக்கள் விரோத ஆட்சியாக தி.மு.க. அரசை பார்க்கிறார்கள்.

    தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிற அளவுக்கு உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சி புரிகிறதோ அப்போதெல்லாம் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சி மக்களை பற்றி சிந்திப்பது கிடையாது. மக்கள் படும் துன்பத்தை அவர்கள் பார்ப்பதில்லை. ஆகவே ஏழை மக்களுக்கு உதவி செய்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. கட்சி. அ.தி.மு.க. அரசுதான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன்.
    • கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் அவர் போட்டியிடுகின்றார். உங்கள் எல்லாருக்கும் தெரியும் தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும்.

    கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகவும் அனைத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில் தே. மு.தி.க. வெற்றி பெற்றவுடன் அவர் பல நல்ல திட்டங்களை இந்த தொகுதியில் அறிவித்து செயல்படுத்த உள்ளார். அதில் சிலவற்றை என்னிடம் கூறினார். அதை நான் உங்களிடம் கூறுகின்றேன்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கேப்டன் பிறந்தநாள் அன்று 60 பெண்களை தேர்வு செய்து பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் மூலம் எங்களது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க உள்ளார். ஆண்டுதோறும் 6 லட்சம் வீதம் 5 வருடத்தில் ரூ.30 லட்சம் வரை பெண்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளார்.

    தொகுதி முழுவதிலும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்கப்படும். இலவச தையல் பள்ளிகள், இலவச நீட் கோச்சிங் சென்டர், படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள் வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்வாதாரம் உயர நடவடிக்கை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தவும் கூலித் தொகையை ரூ.500 ஆக அதிகரிக்கவும் பாராளுமன் றத்தில் கோரிக்கை வைப்பார்.

    நமது வேட்பாளர் வயதில் சின்னவர் என்று நினைக்காதீர்கள். அவர் நல்ல அறிவாளி, உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். பல்வேறு மொழிகளை பேசும் திறமை கொண்டவர். பாராளுமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளை எழுப்பி அதற்கு தீர்வு காணும் வல்லமை அவரிடம் உள்ளது. குணத்திலும், பழகுவதிலும் கேப்டனின் மறு உருவம். 34 வருடம் கேப்டனுக்கு மனைவியாக வாழ்ந்தும், அவருக்கு தாயாக இருந்தும் சேவை செய்திருக்கிறேன். கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    இவர் அவர் பேசினார்.

    • ஆரணி, திருவண்ணாமலையில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் வந்தார்.
    • பரமத்திவேலூர் ரோடு புறநகர் போலீஸ் நிலையம் எதிரில் திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    ஆரணி, திருவண்ணாமலையில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி இரவு சேலம் வந்தார். பின்னர் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்கினார். தொடர்ந்து இன்று மாலை நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தமிழ்மணியை ஆதரித்து திருச்செங்கோட்டில் பரமத்திவேலூர் ரோடு புறநகர் போலீஸ் நிலையம் எதிரில் திறந்த வேனில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து இரவு 7 மணியளவில் சேலம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி திருச்செங்கோடு மற்றும் சேலம் கோட்டை பகுதியில் அ.தி.மு.க.கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி, திராட்சைப் பழத்தை எடுக்க முடியாததால், அந்தப் பழம் புளிக்கும் என நரி சொல்வதைப் போலச் சொல்கிறார் - அண்ணாமலை
    • அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலைக்கு தான் நரி மற்றும் ஓநாயின் குணம் இருக்கிறது - செம்மலை

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பேசிய அவர், "மத்தியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்துவிட்டு செல்கிறார்கள். இதனால் என்ன பயன்?. வருகிறீர்கள். அதனால் ஒரு திட்டத்தை கொடுத்து மக்கள் நன்மை பெற்றிருந்தால் ஒரு பிரயோஜனம் உண்டு. அதைவிட்டு நேராக வருகிறர்கள். ரோட்டில் செல்கிறார்கள். அதோடு கதை முடிந்து விட்டது.

    மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா?. தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரண மக்களா?. அறிவுத்திறன் படைத்தவர்கள். எது சரி? தவறு? என எடைபோட்டு தீர்ப்பு அளிக்கக்கூடிய மக்கள் தமிழக மக்கள். இந்த ஏமாற்று வேலைகள் ஒன்றும் தமிழகத்தில் எடுபடாது என்று பேசியிருந்தார்.

    கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு அவர் பதில் அளித்தார்.

    "கருத்துச் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி, திராட்சைப் பழத்தை எடுக்க முடியாததால், அந்தப் பழம் புளிக்கும் என நரி சொல்வதைப் போலச் சொல்கிறார். நான் சொல்வதைத் தான் மோடியும் சொல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். இ.பி.எஸ். ரோடு ஷோ நடத்த தயாராக இருக்கிறாரா?. அவர் ரோடு ஷோ நடத்தட்டும் எவ்வளவு கூட்டம் வருகிறது என்று பார்ப்போம். பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தலாமே?. அதற்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள்.

    நாங்கள் ரோடு ஷோவை வெறும் ரோடு ஷோவாக கருதவில்லை. அதனை நாங்கள் மக்கள் தரிசன யாத்திரையாக கருதுகிறோம். எங்கள் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் ஆசியை பெற்று வருகின்றனர்" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை நரியுடன் ஒப்பிட்டு அண்ணாமலை பேசியதற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேசிய செம்மலை, "நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாஜகவின் நிலை நரியின் நிலைமைபோல் தான் இருக்கும். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அண்ணாமலையை ஓநாய் என்றால் அதை பாஜக ஏற்றுக்கொள்ளுமா? அண்ணாமலைக்கு தான் நரி மற்றும் ஓநாயின் குணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒன்றரை சதவீதம் தான் வாக்கு வங்கி உள்ளது. எனவே தோல்வி பயத்தால் அண்ணாமலை உளறி கொண்டு வருகிறார். இந்த மக்களவை தேர்தலில் பாஜக என்ன செய்தாலும் 5 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வாங்கமாட்டார்கள் என தெரிவித்தார்.

    இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேசிய ஜெயக்குமார், " அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி, அரசியலில் கத்துக்குட்டி. தேர்தலில் போட்டியே திமுகவும் அதிமுகவும். அதனால் நானும் தேர்தல் போட்டியில் இருக்கிறேன் என்பதற்காக நானும் ரவுடிதான் என்ற பாணியில் அதிமுகவை அண்ணாமலை சீண்டி வருகிறார். தேசிய கட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனியாக நின்று பாஜகவால் ஒரு எம்.எல்.ஏ சீட்டு வெல்ல முடியுமா? தமிழ்நாட்டில் பாஜகவால் காலூன்ற முடியுமா?

    பாஜகவுடன் 2019 ஆம் ஆண்டு கூட்டணி வைத்ததால் தான் அந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. பாஜக கூட்டணியால்தான் இதுவரை தோல்வியே காணாத நான் ராயபுரம் தொகுதியில் தோல்வியடைந்தேன்.

    ஒரு அண்ணாமலை அல்ல ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்ட கட்சி அதிமுக. இனிமேலும் ஆட்சி செய்ய போகிற கட்சி அதிமுக" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தக்கலையில் வேனில் நின்றபடி பேசுகிறார்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    நெல்லை:

    தமிழ்நாட்டிற்கு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரசாரத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் முன்னணி நிர்வாகிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்து வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தேசிய கட்சியான பா.ஜனதா, காங்கிரசும் தங்களுக்கே உரித்தான வழியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் தென் மாவட்டங்களை நோக்கி முக்கிய தலைவர்களின் கண் பார்வை தற்போது விழுந்துள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றவேண்டும் என்ற நோக்கத்துடன் போட்டியிடும் அனைத்து கட்சியின் வேட்பாளர்களும் தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு கட்சி மேலிட நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்து வாக்கு சேகரிக்கின்றனர்.

    பா.ஜனதாவை பொறுத்தவரை பிரதமர் மோடி நேற்று வரை 7-வது முறையாக தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். அவர் ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே கடந்த மாதம் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வருகிற 15-ந்தேதி நெல்லை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக அம்பை அகஸ்தியர் பட்டியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதனால் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதேபோல் உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (வெள்ளிக்கிழமை) மதுரைக்கு சிறப்பு விமானத்தில் வருகிறார். அங்கிருந்து சிவகங்கை தொகுதிக்கு செல்லும் அமித்ஷா, ரோடு- ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர் புதுக்கோட்டையில் உள்ள கோட்டை பைரவர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்யும் அவர் விமானத்தில் மீண்டும் மதுரை செல்கிறார். அங்கு மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் மதுரையில் இரவில் ஓய்வெடுக்கும் அமித்ஷா, நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை தனி விமானத்தில் திருவனந்தபுரம் செல்கிறார்.

    பின்னர் காரில் குமரி மாவட்டம் தக்கலைக்கு செல்லும் அமித்ஷா அங்கு பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து ரோடு ஷோவில் பங்கேற்கிறார். பின்னர் மதியம் 12 மணிக்கு தனி விமானத்தில் திருச்சி செல்கிறார். அங்கிருந்து திருவாரூர் சென்று கார் மூலமாக நாகப்பட்டினம் செல்கிறார். அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் அமித்ஷா, மீண்டும் திருச்சி வந்து அங்கிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு மாலை 6 மணிக்கு வந்தடைகிறார்.

    அங்கிருந்து ஹெலிகாப்டரில் தென்காசிக்கு புறப்படும் அமித்ஷா, இலஞ்சியில் ராமசாமி பிள்ளை பள்ளி மைதானத்தில் வந்து இறங்குகிறார். அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு தென்காசி பாராளுமன்ற தொகுதி கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து ஆசாத் நகர் முதல் தென்காசி புதிய பஸ் நிலையம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் ரோடு ஷோவில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் தூத்துக்குடி புறப்படும் அமித்ஷா, இரவு 8.30 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நெல்லையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதற்காக ஹெலிகாப்டரில் நெல்லை வந்திறங்கும் ராகுல் காந்தி, பொதுக்கூட்ட மேடை வரை ரோடு ஷோவில் ஈடுபடுகிறார்.

    பின்னர் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்டவர்களை ஆதரித்து அவர் ஆதரவு திரட்டுகிறார்.

    தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தக்கலையில் வேனில் நின்றபடி பேசுகிறார். பின்னர் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் பேசுகிறார்.

    அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் உதயநிதி நெல்லைக்கு வருகிறார். அவர் நெல்லை தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து நாங்குநேரி பஜார் தெருவில் வேனில் நின்றபடி மக்களிடையே வாக்கு சேகரித்து பேசுகிறார். பின்னர் இரவு 8 மணிக்கு பாளை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் ரவுண்டானா பகுதியில் பொதுமக்களிடையே ஆதரவு திரட்டுகிறார். இரவில் நெல்லையில் தங்குகிறார்.

    பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு தென்காசி புதிய பஸ் நிலையம் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து கடையநல்லூர் மணிக்கூண்டு பெரிய பள்ளிவாசல் பகுதியில் பிரசாரம் செய்யும் அவர் மாலை 4 மணிக்கு சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்கிறார். பின்னர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.க்கு ஆதரவாக நாளை மாலை கோவில்பட்டி பஸ் நிலையம் முன்பும், இரவு 7 மணிக்கு மாப்பிள்ளை யூரணியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் முன்பும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜான்சிராணியை ஆதரித்து இன்று மாலை 6 மணிக்கு நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தச்சநல்லூர் சந்தி மறிச்சம்மன் கோவில் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

    அடுத்தடுத்து தலைவர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரம் செய்வதால் தென் மாவட்ட தொகுதிகளின் பிரசார களத்தில் அனல் பறக்கிறது.

    • எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார்.
    • பா.ஜ.க தலைவர்கள் செய்வது ரோடு ஷோ அல்ல. மக்கள் தரிசன யாத்திரை.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி பழைய பஞ்சாங்கத்தையே பேசி வருகிறார். இ.பி.எஸ். ரோடு ஷோ நடத்த தயாராக இருக்கிறாரா?. அவர் ரோடு ஷோ நடத்தட்டும் எவ்வளவு கூட்டம் வருகிறது என்று பார்ப்போம். பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தலாமே?. அதற்கு மக்கள் யாரும் வரமாட்டார்கள்.

    நாங்கள் ரோடு ஷோவை வெறும் ரோடு ஷோவாக கருதவில்லை. அதனை நாங்கள் மக்கள் தரிசன யாத்திரையாக கருதுகிறோம். எங்கள் தலைவர்கள் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் ஆசியை பெற்று வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தான் கேட்கும் கேள்விகளுக்கு கியாரண்டி தருவாரா? என கேட்கிறார்.

    அதற்கு நான் சொல்கிறேன். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததும் 2024-க்கு பிறகு ஊழல் செய்தவர்கள் ஜெயிலில் இருப்பார்கள் என்று பிரதமர் மோடி கியாரண்டி தருகிறார்.

    8½ கோடி தமிழக மக்களையும் தி.மு.க என்ற தீயசக்தியில் இருந்து காப்பாற்றுவோம் என பிரதமர் கியாரண்டி தருகிறார். தமிழ்நாட்டை டாஸ்மாக்கில் இருந்து காப்பாற்றுவோம் என கியாரண்டி கொடுக்கிறார்.

    தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் பேசும் சக்திகளை அடக்குவோம். குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என பிரதமர் கியாரண்டி தருகிறார்.

    பா.ஜ.க மேல்தட்டு கட்சி, வடமாநில கட்சி என தமிழக மக்களிடம் திராவிட கட்சிகள் ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். அதேபோல் ஜி என்று சொன்னாலே கெட்டவர்கள் என்பது போலவும் திராவிட கட்சிகள் மாய பிம்பத்தை உருவாக்குகின்றனர். இந்த பிம்பங்கள் எல்லாம் உடைய போகிறது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின் போது, குழந்தைக்கு ரோலக்ஸ் என்று பெயர் சூட்டுகிறார். கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் போதைக்கடத்தல் கும்பல் தலைவனாக வரும் கதாபாத்திரத்தின் பெயர் தான் ரோலக்ஸ். அந்த பெயரை குழந்தைக்கு சூட்டலாமா?.

    கொங்கு மண்டலம் தங்களது கோட்டை என திராவிட கட்சிகள் சொல்லி வருகின்றன. வருகிற பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந்தேதி கொங்கு மண்டலம் யாருடையது என்பது தெரிந்து விடும். அப்போது திராவிட கட்சிகளின் இந்த பிம்பம் உடைந்து போய்விடும். இதனை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள்.

    ஸ்டாலின் ஊழல் பல்கலைக்கழகம் என ஒன்று அமைந்தால், அதன் தவறுகளை திருத்தும் வேந்தராக பிரதமர் மோடி இருப்பார். எனக்கு அரசியலில் நண்பர்கள் கிடையாது. ஜனநாயகம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தகுதி இல்லாத ஒரு தலைவர் யார் என்றால் அது மு.க.ஸ்டாலின் தான்.

    தமிழகத்தில் பணத்தையும், பரிசு பொருளையும் கொடுத்து ஜெயித்து விடலாம் என எதிர்கட்சிகள் நினைக்கின்றன. வருகின்ற தேர்தலில் மக்கள் அதற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். பண அரசியல் என்னும் பேயை மக்கள் ஜூன் 4-ந் தேதி வேப்பிலையுடன் விரட்டி அடிப்பார்கள். இதனை இந்த தேர்தலில் நாம் பார்க்க போகிறோம்.

    மத்தியில் பாஜக ஆட்சியில் மந்திரி பதவியில் இடம்பெறுவது குறித்து எனது நோக்கம் அல்ல. 2026-ல் தமிழகத்தில் நிலைமை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

    மீண்டும் பாரதிய ஜனதா மத்தியிலே ஆட்சிக்கு வந்தால் தேர்தல் முறையே இருக்காது என்று கூறுவது சரியல்ல. அப்படி என்றால் 2014-க்கு பிறகு தேர்தல் நடைபெறவே இல்லையா. 2019-க்கு பிறகு தேர்தல் நடைபெறவே இல்லையா.

    இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் எண்ணமும்கூட. மோடி அதை நிறைவேற்றும் பொழுது கருணாநிதியின் ஆசி விண்ணில் இருந்து மோடிக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

    இந்திய கூட்டணியை பொறுத்தவரை அவர்கள் தோல்வியை எப்போதோ ஒப்புக்கொண்டு விட்டார்கள். அவர்கள் எண்ணம் 400 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி கிடைக்கக் கூடாது என்பதுதான்.பாரதிய ஜனதா 300 தொகுதிகளுக்கு மேல் தாண்ட கூடாது என்று நினைக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வருகிற 15-ந்தேதி காஞ்சிபுரத்தில் வேன் பிரசாரத்தில் ஈடுபடும் எடப்பாடி பழனிசாமி, மாலையில் மத்திய சென்னை, வேட்பாளரை ஆதரித்து புரசைவாக்கம் தானா தெருவில் பேசுகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தலைநகர் சென்னையில் பிரசாரம் செய்ய இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை இப்போதே கட்சி நிர்வாகிகள் பார்க்க தொடங்கிவிட்டனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த வாரம் 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி ஒவ்வொரு வேட்பாளர்களும் வீதிவீதியாக சென்று பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா, நாம் தமிழர் கட்சி இடையே 4 முனை போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் கடந்த மாதத்தில் இருந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் நடைபயிற்சி சென்றும் மாலையில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றும் பேசி வருகிறார்.

    கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து பிரசாரம் செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாரம் ஒருமுறை சென்னை வந்து செல்கிறார். 12-ந்தேதி வரை வெளியூர் பிரசாரத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற திங்கட்கிழமை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.

    15-ந்தேதி திருவள்ளூர் வடசென்னை, 16-ந்தே காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் (கர சங்கால் மைதானம்), 17-ந்தேதி தென்சென்னை, மத்திய சென்னை தொகுதியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.

    இதே போல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்தே பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் தனது பிரசாரத்தை திருச்சியில் தொடங்கி ஒவ் வொரு தொகுதி வாரியாக சென்று பேசி வருகிறார். காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 29-ந்தேதி மதுராந்தகம் ஹைவே அருகே நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்தில் பேசினார். அதன் பிறகு வெளியூர்களுக்கு சென்று பேசி வருகிறார்.

    வருகிற 15-ந்தேதி காஞ்சிபுரத்தில் வேன் பிரசாரத்தில் ஈடுபடும் எடப்பாடி பழனிசாமி, மாலையில் மத்திய சென்னை, வேட்பாளரை ஆதரித்து புரசைவாக்கம் தானா தெருவில் பேசுகிறார். அதன் பிறகு அன்றிரவு 7 மணியளவில் தென் சென்னை தொகுதிக்கான சைதை சின்னமலை வேளச்சேரி ரோட்டில் பேசுகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் தலைநகர் சென்னையில் பிரசாரம் செய்ய இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை இப்போதே கட்சி நிர்வாகிகள் பார்க்க தொடங்கிவிட்டனர்.

    இதே போல் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பா.ஜனதா கட்சியில் புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். விமானத்தில் ஏறும்போது பேட்டி கொடுப்பார். இறங்கும்போதும் பேட்டி கொடுப்பார்.
    • பேட்டி கொடுத்து தலைவர் மக்களை ஈர்க்க பார்க்கிறார். இன்று தலைவர்கள் பல வழிகளில் மக்களை சந்திப்பார்கள்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் கடல்போல் காட்சி அளிக்கிறது. பொள்ளாச்சி நகரம் குலுங்கும் வகையில் மக்கள் வெள்ளம் கூடியிருக்கின்றன. இது தேர்தல் பிரசாரம் கூட்டம் அல்ல. வெற்றி விழா கூட்டம்போல் காட்சியளிக்கிறது. வேட்பாளரின் வெற்றி இந்த எழுச்சியில் இருந்து பார்க்கப்படுகிறது.

    மு.க.ஸ்டாலின் அதிமுக 2, 3-ஆக போய்விட்டது என்று கூறுகிறார். பொள்ளாச்சி வந்து பாருங்கள். அதிமுக எப்படி இருக்கிறது என்று தெரியும். ஒன்றாக இருக்கிறது என்பது மக்கள் வெள்ளமே சாட்சி.

    அம்மா மறைவிற்குப் பிறகு அதிமுக-வை மு.க. ஸ்டாலின் உடைக்க, முடக்க முயற்சி செய்தார். ஆனால் உங்கள் ஆதரவோடு அனைத்தும் தவுடுபொடியாக்கப்பட்டது.

    எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழக மக்களுக்கு இறைவன் கொடுத்த கொடை. நம்முடைய தலைவர்கள் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தார்கள். சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்ந்தார்கள். கூட்டுப் பொறுப்போடு தேர்தல் என்ற போரில் எதிரிகளை ஓடஒட விரட்டி வெற்றிக் கொடிகளை நாட்டுவோம்.

    மத்தியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்துவிட்டு செல்கிறார்கள். இதனால் என்ன பயன்?. வருகிறீர்கள். அதனால் ஒரு திட்டத்தை கொடுத்து மக்கள் நன்மை பெற்றிருந்தால் ஒரு பிரயோஜனம் உண்டு. அதைவிட்டு நேராக வருகிறர்கள். ரோட்டில் செல்கிறார்கள். அதோடு கதை முடிந்து விட்டது.

    மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா?. தமிழ்நாட்டு மக்கள் என்ன சாதாரண மக்களா?. அறிவுத்திறன் படைத்தவர்கள். எது சரி? தவறு? என எடைபோட்டு தீர்ப்பு அளிக்கக்கூடிய மக்கள் தமிழக மக்கள். இந்த ஏமாற்று வேலைகள் ஒன்றும் தமிழகத்தில் எடுபடாது.

    பா.ஜனதா கட்சியில் புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். விமானத்தில் ஏறும்போது பேட்டி கொடுப்பார். இறங்கும்போதும் பேட்டி கொடுப்பார். பேட்டி கொடுப்பதுதான் அவருடைய வேலை. பேட்டி கொடுத்து தலைவர் மக்களை ஈர்க்க பார்க்கிறார். இன்று தலைவர்கள் பல வழிகளில் மக்களை சந்திப்பார்கள்.

    ஆனால் இந்த தலைவர் டெக்னிக்கலாக அவ்வப்போது பேட்டி கொடுத்து மக்களை நம்பவைத்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார். அது அதமிழகத்தில் எடுபடாது. இங்கு உழைக்கின்றவர்களுக்குதான் மரியாதை உண்டு. மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக., எவ்வளவு பேட்டிகளில் கொடுத்தாலும் ஒன்றும் எடுபட போவதில்லை.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    • மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள்.
    • தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீள, நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக.

    சென்னை:

    ஈகைப் பெருநாளான ரமலான் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அய்யூப் நேற்று இரவு 8 மணியளவில் அறிவித்தார்.

    இதற்கிடையே கோவை-சாரமேடு கரும்பு கடை மற்றும் குமரி-வேர் கிளம்பி பகுதிகளில் பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து இஸ்லாமியர்களில் சிலர் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள். தமிழ்நாட்டில் உள்ள பல நகரங்களில் கொண்டாடப்பட்டது.

    தமிழ்நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் நாளை ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள்.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    நோன்புக் கடமைகளை முடித்து, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளைக் கொண்டாடும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபியடிகள். கல்வியை ஆண், பெண் இருவருக்கும் சமமாக்கியது, நீதி மற்றும் அமைதியை வலியுறுத்தியது, ஏற்றத்தாழ்வை அறவே எதிர்த்தது, சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் வலியுறுத்தியது என அவர் காட்டிய வழி அனைவரும் பின்பற்றத்தக்கதாகும். இல்லாதோருக்கு உதவுவதையும் அனைவரிடத்தும் அன்பு செலுத்துவதையும் போதித்தவர் நபிகள் நாயகம்.

    அவரது வழியில் வாழ்ந்து வரும் இசுலாமியத் தோழர்களின் நலன் காக்கும் அரசாகக் கழக அரசு திகழ்ந்து வருகிறது. 2007-ல் சிறுபான்மையினர் நல இயக்குநரகம் உருவாக்கியது, மீலாதுநபிக்கு அரசு விடுமுறை, இசுலாமியர்களுக்கு 3.5 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு என எத்தனையோ சாதனைகளைச் செய்த தலைவர் கலைஞரின் வழியில், எல்லார்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டைக் கொண்ட நமது திராவிட மாடல் அரசும் அவர்களது கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

    அதன்படியே, சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசின் வாழ்நாள் அங்கீகாரம், மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழை நிரந்தரச் சான்றிதழாக வழங்க அரசாணை, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு, இனி 5 லட்சம் வரை கல்விக்கடன்.

    இஸ்லாமிய மக்களுக்கான அடக்கஸ்தலங்கள் (கபர்ஸ்தான்) இல்லாத மாவட்டத் தலைநகரங்களில் தேவைப்படும் நிலத்தை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கையகப்படுத்தி மாநகராட்சி, நகராட்சி சார்பில் கபர்ஸ்தான் அமைப்பதற்கு நிருவாக ஒப்புதல் வழங்கி அரசாணை என எண்ணற்ற அறிவிப்புகளை அண்மையில் வெளியிட்டிருக்கிறோம்.

    இதற்கெல்லாம், முத்தாய்ப்பாக ஒன்றிய பா.ஜ.க அரசு நிறுத்திவிட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கான உதவித் தொகை, தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் வக்ப் வாரியம் மூலம் வழங்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறோம்.

    இசுலாமியரைப் பாகுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இப்படி, இசுலாமியர்களின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு, அவர்களின் உரிமைகளுக்காக என்றும் முன்னிற்கும் பெருமிதத்தோடு, உரிமையோடு இசுலாமியத் தோழர்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் இஸ்லாமிய மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறுபான்மை மக்களின் நலன் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதையும்; கழகம் என்றென்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதையும் இந்த இனிய தருணத்தில் பெருமையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தீமைகள் ஒழிந்து நன்மைகள் மீள, நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக.

    மேலும் வாழ்த்து தெரிவித்த தலைவர்கள் விவரம் வருமாறு:-

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சசிகலா, திருநாவுக்கரசர் எம்.பி., பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ×