search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu-election2024"

    • மக்களைப் பிரித்தாலும் சூழ்ச்சி செய்யும் கட்சி வடக்கிலிருந்து வந்த பாஜக
    • அதிமுக என்னும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை பாஜக உணர வேண்டும்

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில்,

    "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்று சட்டமன்றத்தில் சிங்கமாக கர்ஜித்தாரே நம் அன்புத் தாய், அந்தத் தாயின் சபதத்தை நிறைவேற்ற 'நான் உழைப்பேன், உழைப்பேன், உழைத்துக்கொண்டே இருப்பேன்' என்று சபதம் எடுத்துக்கொண்டு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் இலட்சிய உணர்வோடு உழைத்து வருகிறீர்கள்.

    கழக உடன்பிறப்புகளே, உங்கள் நம்பிக்கைகள் எதுவும் வீணாகாது. உங்களுக்காக இங்கே ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நாடாளுமன்ற மக்களவையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் காலத்தைப் போலவே, மிகப் பெரிய கட்சியாக நாம் அமர்ந்திட உங்கள் உழைப்பும், கவனமும் இந்த பிரசாரத்தின் கடைசி நாட்களில் தேவைப்படுகின்றன.

    ஏராளமான ஊழல் பணத்துடனும், தேர்தல் நிதியாகத் திரட்டிய பெரும் பண மூட்டையுடனும் தீய சக்தியான திமுக தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறது.

    நமது இயக்கத்தை பிளவுபடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவுடன் இருக்கிறோம். வன்முறை வெறியாட்டங்களையும், வடக்கே இருந்து ஏவப்படும் விஷ அம்புகளையும், ஆளும் கட்சிக்கு இருக்கும் அதிகார மமதையில் நடத்தப்படும் அருவருக்கத்தக்க ஏற்பாடுகளையும், 1972-ல் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து நாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்? இத்தகைய கோழைத் தனங்களைத் தாண்டிதானே எண்ணற்ற வெற்றிகளை நாம் பெற்று வருகிறோம்?

    நாம் வம்பு சண்டைக்குப் போவதில்லை. ஆனால், வந்த சண்டையை விடுவதில்லை. நாம் அமைதியை நாடுபவர்கள். ஆனால், நமது அமைதியும், சாந்தமும் வீரத்தின் வேறு வடிவங்களே. அதிமுக என்னும் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை, நம்மை சீண்டிப் பார்க்கும் இந்த சிற்றறிவு மனிதர்கள் உணர்ந்துகொள்ளட்டும்.

    இந்த தேர்தலில் நமது அர்ப்பணிப்பும், உழைப்பும், ஈடுபாடும் பல மடங்கு இருக்க வேண்டும். துவளாமல், அஞ்சாமல், அயராமல் 'வெற்றி ஒன்றே' நம் இலக்காகக் கொண்டு தேர்தல் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.

    வெற்றி நமதே! 40-ம் நமதே. நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" என்று அவர் எழுதியுள்ளார்.

    • அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
    • மின்னணு எந்திரங்களை வருகிற 18-ந்தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் 19-ந்தேதி நடைபெற இருப்பதையொட்டி வாக்குப்பதிவுக்கான மின்னணு எந்திரங்கள் தொகுதி வரியாக ஒதுக்கப்பட்டு வேட்பாளரின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு சீல் வைத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

    சட்டசபை தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது அதற்கு அடுத்த படியாக உள்ள அதிகாரிகளுக்கு அவற்றை ஒதுக்கீடு செய்து பிரிக்கும் பணி இன்று நடைபெறுகிறது.

    சென்னையில் 16 இடங்களில் உள்ள பயிற்சி சென்டரில் இந்த பணிகள் இன்று நடைபெற உள்ளது.

    தேர்தல் நடைபெறும் சம்பந்தப்பட்ட வார்டு வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி தலைமை அலுவலர், தேர்தல் விவர குறிப்பேடு, முகவர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு, வாக்குப்பதிவு செய்யும் இடம் என உள்ளே வெளியே போன்ற இடங்களை குறிக்கும் போஸ்டர்கள், மெழுகு வர்த்திகள், சணல் கயிறு, வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கான கையேடு, வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்துவதற்கான பயிற்சி புத்தகம், மறைவு அட்டை, வாக்குச் சாவடி தலைமை அலுவலர் பயன்படுத்தும் உறைகள் உள்பட 80 பொருட்களை பிரித்து வைக்கும் பணி இன்று நடைபெறுகிறது.

    இந்த பணியை மாநகராட்சி ஆணையரான மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வையிடுகிறார்.

    இந்த பொருட்களுடன் மின்னணு எந்திரங்களை வருகிற 18-ந்தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதுவரை இந்த பொருட்கள் அந்தந்த மையத்தில் தாசில்தார் மேற்பார்வையில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அ.தி.மு.க. கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
    • பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இரட்டை இலை அமோக வெற்றி பெறும் என்று பேசினார்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் கிராமம் கிராமமாக கூட்டணி கட்சியினருடன் சென்று இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். கீழக்கரை, ஏர்வாடி இதம்பாடல், சிக்கல், மாரியூர், சாயல்குடி கிழக்கு ஒன்றியம் மற்றும் தரைக்குடி, சேதுராஜபுரம் உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.


    வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர். பி.உதயகுமார், அன்வர்ராஜா, மணிகண்டன். தேர்தல் பொறுளர்கள் மலேசியா எஸ். பாண்டியன், முன்னாள் எம். பி. நிறைகுளத்தான், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் மு.சுந்தரபாண்டியன், கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முனியசாமி பாண்டியன் தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னா, ஒன்றிய செயலாளர்கள் பிரவீன் குமார் ராஜேந்திரன், அந்தோனிராஜ், உள்பட அ.தி.மு.க. கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

    பிரசாரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயபெருமாள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. சென்ற இடமெல்லாம் இரட்டை இலைக்கு அதிக மவுசு உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் சுயேட்சைகள். பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இரட்டை இலை அமோக வெற்றி பெறும் என்று பேசினார். சாயல்குடி பகுதியில் அ.தி.மு.க. மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி வீடு, வீடாக சென்று பா. ஜெயபெருமாளுக்கு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். இது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    • 21-ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் மற்றும் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம்.
    • தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். சென்னையில் நேற்று அவர் ரோடு ஷோ நடத்தினார்.

    இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பிரதமர் மோடி வேலூரில் பிரசாரம் செய்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் இன்று நடந்தது.

    இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு வேலூர் பா.ஜ.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகம், திருவண்ணாமலை பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமன், நரசிம்மன் (கிருஷ்ணகிரி), பா.ம.க. வேட்பாளர்கள் சவுமியா அன்புமணி (தர்மபுரி), வக்கீல் பாலு (அரக்கோணம்), கணேஷ் குமார் (ஆரணி) ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    இதற்காக பிரதமர் மோடி சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    அங்கிருந்து காரில் கோட்டை மைதானத்திற்கு வந்தார். கோட்டை முன்பு அண்ணாசாலையில் திரண்டிருந்த பொதுமக்கள் மலர் தூவி கோஷம் எழுப்பியபடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    வேட்டி, சட்டை அணிந்து மேடைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

    பின்னர் முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணிவித்தனர். பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் செங்கோலை பரிசாக வழங்கினார்கள்.

    கூட்டத்தில் பிரதமர் மோடி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம். நான் உங்களிடம் தமிழில் பேசாமல் இருப்பதற்கு வருத்தம் தெரிவித்து எனது உரையை ஆரம்பிக்கிறேன்.

    வர இருக்கிற தமிழ் புத்தாண்டு தினத்திற்கு எனது வாழ்த்துகளை உங்கள் அத்தனை பேருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற ஆண்டு நமது அனைவருக்கும் வளர்ச்சி மிகுந்த ஆண்டாக அமைய எனது வாழ்த்துகளை பரிமாறிக் கொள்கிறேன்.

    உங்களுடைய அன்பு, ஆசீர்வாதம் எனக்கு தெரிகிறது. எனவே தமிழக மக்களின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணித்து எனது முழு திறமையையும் வெளிபடுத்துவேன். வேலூரில் கூடிய கூட்டம் புதிய சகாப்தம் படைக்கப் போவதை டெல்லி உள்ள தலைவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மிகப்பெரும் புரட்சியை உருவாக்கிய இடம் வேலூர்.

    இன்றைய கூட்டத்தின் மூலம் வேலூர் மீண்டும் ஒரு சரித்திரம் படைக்கும். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயரை எதிர்த்ததை போல் மீண்டும் ஒரு வரலாறு நிகழ உள்ளது. வீரம் நிறைந்த வேலூரில் இறைவன் ஜலகண்டேஸ்வரரர், கடவுள் முருகப் பெருமானை தாழ்பணிந்து வணங்குகிறேன்.

    2014-ம் ஆண்டுக்கு முன்னர் வளர்ச்சியே இல்லை. எந்த பத்திரிகையை புரட்டினாலும் ஊழல், முறைகேடு குறித்த செய்திகளே இருந்தன. இப்போது தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும், அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது.

    21-ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதம் மற்றும் தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம். உலக அரங்கில் இந்தியா இன்று வலிமையான நாடாக பார்க்கப்படுகிறது. அதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிகப்பெரியதாக உள்ளது.

    இந்தியா வல்லரசு ஆவதில் தமிழ்நாட்டின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். அதற்காக தமிழகம் கடுமையாக உழைக்கிறது.

    வேலூர் மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில் கொண்டு உதான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும். சென்னை, பெங்களூரு தொழில் துறை வழித்தடம் வேலூர் வழியாகத்தான் செல்கிறது. இதனால் வேலூர் வளர்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தி.மு.க. பெரும் தடையாக இருக்கிறது. அனைத்திலும் தி.மு.க. அரசியல் செய்கிறது.

    தி.மு.க. ஒரு குடும்பத்தின் கம்பெனியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தி.மு.க.வும் ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

    தமிழகத்தை தி.மு.க. பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. தி.மு.க.வின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. கொள்ளையடிப்பதிலும், ஊழலுக்கும் தி.மு.க. காப்பிரைட் வைத்துள்ளது.

    மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை தி.மு.க. ஊழல் செய்வதற்காக பயன்படுத்திக் கொள்கிறது. ஊழலின் ஒட்டுமொத்த அதிகார மையமாக தி.மு.க. அரசு உள்ளது. தி.மு.க. பழைய சிந்தனையிலேயே உள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை 5 மணியளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்ற கார்த்திகேயனை ஆதரித்து பேசுகிறார்.

    பொள்ளாச்சி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

    அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி நீலகிரி, கோவை பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொண்டார். நீலகிரி, காரமடை, கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

    அதனை தொடர்ந்து இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

    பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை 5 மணியளவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி என்ற கார்த்திகேயனை ஆதரித்து பேசுகிறார்.

    இதனையொட்டி அங்கு பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினர், பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கை வசதி உள்ளிட்டவையும் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி வரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் அ.தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.

    • இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரமாண்ட பிரசார கூட்டம் நடைபெற உள்ளது.
    • காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் சொல்வதை நம்பத் தேவையில்லை.

    கோவை:

    கோவை செட்டிப்பாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாளை மறுநாள் (12-ந் தேதி) பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்று பேச உள்ளனர்.

    பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் பிரமாண்ட பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய பிரகடனம் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்துக்கு பிறகு பெரிய திருப்பம் ஏற்படும்.

    சென்னையில் பிரதமரின் வாகன பிரசாரத்துக்கான விளம்பர பதாகை அகற்றப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி தான் நடக்க வேண்டும். எங்கள் தலைவர்கள் எல்லாம் மக்களை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திக்கின்றனர். ஆனால் பிரதமர் தமிழ்நாட்டில் ஏதாவது சாதித்து விடலாம், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என ரோடு ஷோ நடத்துகிறார்.

    தமிழக மக்களுக்கு இவரது உண்மை முகம் தெரியும். அதனால் தமிழக மக்கள் பிரதமரை ஆதரிக்க மாட்டார்கள். இந்தியாவிலேயே பெரிய ஊழலான தேர்தல் பத்திர ஊழல் ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிட்டது போன்றவை தொடர்பாக பிரதமர் பேச மறுக்கிறார். தேர்தல் நன்கொடை பத்திர விவகாரம் குறித்து மேட்டுப்பாளையத்தில் பிரதமர் பேச வேண்டும். பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோது காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க. என்ன செய்தது? சி.ஏ.ஏ., என்.சி.ஆர். வேளாண் சட்டம் ஆகிய மசோதாக்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருந்துள்ளது.

    காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் சொல்வதை நம்பத் தேவையில்லை. அனைத்துக்கட்சி தலைவர்களுடன் இணைந்து நாங்கள் செயல்படுவோம். சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி இல்லாமல் காவிரி விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. காவிரியில் அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை. கட்டுவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிக்கு 19 ஆயிரத்து 419 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • வாக்குச்சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்களாக 963 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள காவல் பணியாளர்கள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்கள் ஆகியோரை, வாக்குச்சாவடிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி கமிஷனருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் கமிஷனர் கபில் குமார் சி.சரட்கர், தேர்தல் பொது பார்வையாளர்கள் சுரேஷ், கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, முத்தாடா ரவிச்சந்திரா, தேர்தல் காவல் பார்வையாளர்கள், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உள்பட உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர், ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தேர்தல் பொதுபார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் முன்னிலையில் காவல்துறை பணியாளர்களையும், பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்களின் நேரடி கண்காணிப்பில் பணிபுரியவுள்ள நுண் பார்வையாளர்களையும் சட்டமன்றத் தொகுதிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி முதற்கட்டமாக நடைபெற்றது. மேலும், 5 வாக்குச்சாவடிகள் உள்ள மையத்திற்கு ஒரு போலீசாா், 5-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி உள்ள மையத்திற்கு 2 போலீசார் என மொத்தம் 9 ஆயிரத்து 277 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல, வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிக்கு 19 ஆயிரத்து 419 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 ஆயிரத்து 97 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 579 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்தது. தற்போது, 32 வாக்குச்சாவடிகள் கூடுதலாக பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

    அதன்படி, தற்போது வரை சென்னையில் பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. அதில் மிகவும் பதற்றமானவையாக 23 வாக்குச்சாவடிகள் உள்ளது. 769 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறது. கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு நுண் பார்வையாளர்களாக 963 பேர் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இதுவரையில் 11 லட்சத்து 56 ஆயிரத்து 524 பேருக்கு 'பூத் சிலிப்' கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 3 லட்சத்து 8 ஆயிரத்து 277 பேருக்கு 'பூத் சிலிப்' கொடுக்கப்பட்டுள்ளது. 85 வயதிற்கும் மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 82 பேர் நேற்று முன்தினம் தபால் வாக்களித்துள்ளனர். வாக்குச்சாவடி அமைந்துள்ள 944 இடங்களுக்கு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய 239 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் மாற்று வாக்கு எந்திரம் நிறுவப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளிலுள்ள 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு நேற்று முன்தினம் முதல் தபால் ஓட்டு வாங்கும் பணி தொடங்கிய நிலையில், அதற்காக தேர்தல் பணியாளர்கள் வீடு வீடாக சென்று தபால் ஓட்டு சேகரித்து வந்தனர். அதில் நேற்று முன்தினம் 82 பேரும், நேற்று 931 பேரும் 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களித்துள்ளனர்.

    • தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2024 பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும்.
    • பாராளுமன்றத் தேர்தலை ஒரு கட்சி குவித்து வைத்தக் கோடிகளைக் கொட்டி சந்திக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வெற்றியை ஈட்ட வேண்டும் என்பதற்காக தேர்தல் களத்தில் பாட்டாளி இளஞ்சிங்கங்களாகிய நீங்கள் உழைக்கும் உழைப்பு எனக்கே புதிய உத்வேகத்தை அளிக்கிறது.

    தமிழ்நாட்டு அரசியலில் சமூகநீதி நிழல் தரும் ஆலமரமாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது என்றால், அதன் வேர்களும், விழுதுகளும் நீங்கள் தான். நீங்கள் இல்லாவிட்டால் இந்த இயக்கம் இல்லை; இந்த இயக்கத்திற்கு கிடைத்த வெற்றிகளும் இல்லை. தமிழ்நாட்டில் 2024 பாராளுமன்றத் தேர்தலை ஒரு கட்சி குவித்து வைத்தக் கோடிகளைக் கொட்டி சந்திக்கிறது; இன்னொரு கட்சி குவித்துக் கொண்டிருக்கும் கோடிகளை வாரி இறைத்து எதிர்கொள்கிறது. அவர்களுக்கென்று சொல்லிக் கொள்ள சாதனைகளும் இல்லை; களப்பணியாற்ற உன்னைப் போன்ற சிங்கங்களும் இல்லை. அதனால், பணத்தை மட்டுமே முதன்மை ஆயுதமாக நினைத்து அந்தக் கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன.

    உன்னைப் போலவே தான் நான் என்னையும் துடிப்புடன் வைத்துக் கொள்ள முயல்கிறேன். உனக்கிருக்கும் அதே உற்சாகத்துடன் தான் கடந்த மார்ச் 24-ந்தேதி பரப்புரையைத் தொடங்கினேன்.

    85 வயது முதுமையால் ஏற்பட்ட தளர்ச்சியும், சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்பட்ட அயற்சியும், இவற்றால் ஏற்பட்ட குறைந்த ரத்த அழுத்தமும் என்னை ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியிருக்கின்றன. அதனால், கடந்த சில நாட்களாக பரப்புரைக்கு செல்லாத எனக்கு உன்னைப் போன்ற சிங்கக் குட்டிகளின் உழைப்பு தான் நம்பிக்கையும் உற்சாகமும் அளித்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏற்பட்ட புத்தெழுச்சியால் இரு நாள்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று மாலை திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் நடைபெறவிருக்கும் பரப்புரைக் கூட்டத்தில் விழுப்புரம் தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளேன்.

    தமிழ்நாட்டைப் பொறுத்த வரை 2024 பாராளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகும். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது தேசிய ஜனநாயகக் கூட்டணி தான்; மூன்றாவது முறையாக பிரதமராகப் போவது நமது நரேந்திர மோடி தான் என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. ஆனால், மத்தியில் அமைக்கப்படவிருக்கும் ஆட்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருந்து நாம் அளிக்க இருக்கும் பங்கு எவ்வளவு? என்பதை தீர்மானிப்பதற்குத் தான் வரும் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அத்தேர்தலின் மூலமான நமது பங்களிப்பு நாற்பதுக்கும் நாற்பதாக இருக்க வேண்டும் என்பதே எனது அவா.

    2021 தேர்தலில் 500 க்கும் கூடுதலான வாக்குறுதிகளை அளித்த ஒரு கட்சி, அவற்றில் 50 வாக்குறுதிகளைக் கூட நிறை வேற்றவில்லை. மாறாக, இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.60 ஆயிரம் கோடிக்கு மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, கிலோவுக்கு ரூ.12 வரை அரிசி விலை உயர்வு, மூன்றாண்டுகளில் 10 முறைக்கும் கூடுதலாக பால் விலை உயர்வு, தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு மளிகைப் பொருட்கள் விலை உயர்வு என ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தின் செலவுகளை மாதத்திற்கு ரூ.5000 முதல் ரூ.10000 வரை உயர்த்தியது தான் அந்தக் கட்சி அரசின் சாதனை. அதை நினைத்தாலே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இன்னொரு கட்சிக்கோ சமூக நீதியும் தெரியவில்லை, தன்னாட்சி தத்துவமும் புரியவில்லை. இலக்கும் இல்லாமல், பயணிக்கும் திசையும் தெரியாமல் கால் போகும் போக்கில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மக்களை ஏமாற்றும் முந்தையக் கட்சி வீழ்த்தப்பட வேண்டியதும், தேச நலனுக்கும், மாநில நலனுக்கும் பங்களிப்பு செய்யாத இரண்டாவது கட்சி வெற்றி பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும். அதற்காக இந்த மடலில் நான் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் அனைத்தையும் திண்ணைப் பரப்புரை மூலம் மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு எளிமையாக எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும்.

    தேர்தல் களத்தில் இன்று வரை நாம் தான் முதலில் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இதே நிலை தொடர வேண்டும். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. அந்த வகையில் வெற்றி தொட்டுவிடும் தொலைவில் தான் உள்ளது. இரு மாதங்களில் வெற்றி நம்வசமான பிறகு நாம் அனைவரும் ஒன்று கூடி அதை கொண்டாடி மகிழ்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு ஜென்ம சனி பிடித்துள்ளது.
    • பிரதமர் மோடி ஒரு அரசியல் கட்சித் தலைவரை கட்டிப்பிடித்தால் அந்தக் கட்சியே இரண்டாகி விடும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ. லியோனி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    டெல்லியிலிருந்து ஒரு தாடிக்காரர் தமிழ்நாட்டிற்கு 5 தடவை வந்து, ஐந்து காசுக்கு பிரயோஜனம் இல்லாத லேகியம் விற்றதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ராசி இல்லாதவர், அவருக்கு கட்டம் சரியில்லை என்கிறார். எடப்பாடி பழனிசாமி கடப்பாறையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம் குடித்தால் பிரச்சனை தீராது.

    எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு அ.தி.மு.க. தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. அ.தி.மு.க.வினர் தோல்வியால் சோகப்பாடல் பாடிக் கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி போர்டு இல்லாத பஸ் டிரைவர். எந்த ஊருக்கு எங்கு போகிறோம் என்று தெரியாமலே, அதனை ஓட்டி சென்று கொண்டிருக்கிறார்.


    மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ். இன்று ராமநாதபுரத்தில் பலாப்பழம் விற்றுக் கொண்டிருக்கிறார். இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் சேர்ந்து ஒரு கட்சியை நாசப்படுத்தி விட்டனர். பிரதமர் மோடி ஒரு அரசியல் கட்சித் தலைவரை கட்டிப்பிடித்தால் அந்தக் கட்சியே இரண்டாகி விடும்.

    தற்போது பா.ம.க. கட்சியை சேர்ந்த ராமதாசை கட்டிப்பிடித்திருக்கிறார். அரசியலை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி இலந்தைப் பழம் விற்க போகலாம். எடப்பாடி பழனிசாமிக்கு ஜென்ம சனி பிடித்துள்ளது. அது சாகும்வரை அவரை விடாது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஆதரவு தராவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு போய்விடுவாரா? பா.ஜ.க. வேட்பாளர் ராதிகா நல்ல நடிகை. முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாத அவரை பார்க்க வேண்டும் என்று சென்னைக்கு போனால், ஆறு காவலாளிகளை கடந்து தான் அவரையே பார்க்க முடியும். மறைந்த விஜய காந்திற்கு அரசு மரியாதை கொடுத்து நல்லடக்கம் செய்த தி.மு.க.வுக்கு தான் மனசாட்சி உள்ள தே.மு.தி.க.வினர் ஆதரவு கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசாரத்தில் அவர் பேசுகையில், பெண்களுக்காக தி.மு.க. அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது குறிப்பாக மகாலட்சுமி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி பெண்கள் வாழ்வில் வளம் சேர்க்க உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி நேரத்துக்கு நேரம்நிறம் மாறும் பச்சோந்தி ஆவார். அவர் எல்லோருக்கும் துரோகம் செய்தவர். மோடி தேர்தலுக்கு தேர்தல் தமிழ்நாட்டுக்கு வந்து கூளை கும்பிடு போடுவார் அவரை நம்பா தீர்கள் என்றார்.

    • தி.மு.க.வில் அப்பா அமைச்சர், மகன்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வாக உள்ளனர் என்பதனை நீங்கள் பார்க்க வேண்டும்.
    • டி.ஆர்.பாலு மனைவி சொத்து மதிப்பு 450 சதவீதம் அதிகரித்து உள்ளது.

    கடலூர்:

    கடலூரில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    அகில இந்திய அளவில் மோடி வழங்கக்கூடிய வாக்குறுதிகள், தமிழ்நாடு சம்பந்தமான வாக்குறுதி ஏப்ரல் முதல் வாரத்தில் வருகிறது. பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிடக்கூடிய தொகுதிக்கு தனி வாக்குறுதி வழங்கப்படும்.

    கேள்வி:-பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என கடும் விமர்சனம் எழுப்பி உள்ளார். ஆனால் தமிழகத்தில் பா.ம.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைப்பது தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை எழுப்புகிறது.

    பதில்-டாக்டர் சவுமியா அன்புமணி தர்மபுரியில் போட்டியிடுகிறார். சுற்றுச்சூழலுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து உள்ளார். மேலும் கட்சிக்கு வந்தவுடன் சீட்டு வாங்கவில்லை. தனி அங்கீகாரத்துடன் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதில் எப்படி தவறு சொல்ல முடியும். மேலும் பா.ம.க.வில் தனி திறமை உள்ள வேட்பாளர்கள் தான் போட்டியிடுகின்றனர்.

    மேலும் சிதம்பரம் தொகுதியில் முன்னாள் மேயரான பட்டியலின பெண் போட்டியிடுகிறார். இதன் மூலம் அவரை வெற்றி பெற செய்து உயர் பதவிக்கு கொண்டுவர போட்டியிட வைத்துள்ளோம். ஆனால் தி.மு.க.வில் அப்பா அமைச்சர், மகன்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வாக உள்ளனர் என்பதனை நீங்கள் பார்க்க வேண்டும்.

    கடலூரில் தி.மு.க. எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு உள்ளது. இதுதான் சாதனையாகும். இதன் காரணமாக தான் கடலூர் பாராளுமன்ற தொகுதியை கூட்டணிக்கு தி.மு.க. தள்ளிவிட்டு உள்ளனர். ஆகையால் தங்கர் பச்சானுக்கு போட்டி யாரும் இல்லை.

    கே-பா.ஜ.க.வுடன் உள்ள கூட்டணி கட்சிக்கு அவர்கள் விருப்பப்படும் சின்னம் வழங்கப்பட உள்ளதா குற்றச்சாட்டு உள்ளதே?

    ப:-தேர்தல் ஆணையத்திற்கு தனியாக விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி சார்பில் சின்னம் கிடைப்பதற்கு முன்னதாகவே பதிவு செய்யவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தில் யார் முன்னதாக சின்னம் கேட்டு பதிவு செய்கின்றார்களோ அவர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முதலில் அவர்களுக்கு தேவையான சின்னங்கள் தொடர்பாக கேட்டுள்ளனர். மேலும் இவர்கள் கேட்பதற்கு முன்பாக யாரும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு சின்னம் ஒதுக்கி உள்ளனர். மேலும் ஒரு இடத்தில் நிற்கக்கூடிய கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவாகும். தேர்தல் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக நீதிமன்றங்கள் தெளிவான விளக்கம் மற்றும் உத்தரவு வழங்கி உள்ளனர்.

    தற்போது நாம் தமிழர் கட்சி சீமான் ஒவ்வொரு முறையும் நடைபெறும் தேர்தலில் ஒவ்வொரு கட்சியினரும் புது புது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    அரசியலுக்கு வந்து விட்டால் களத்தில் உறவினர்கள், அண்ணன், தம்பி என்று பார்க்கக்கூடாது. இங்கு நிற்கக்கூடிய தங்கர் பச்சான் பலமான வேட்பாளராக உள்ளார். மேலும் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிற்க வைத்துள்ளனர். நான் ஐ.பி.எஸ். ஆக இருந்தபோது சொந்த பணத்தில் நிலம் வாங்கினேன். தற்போது அதனுடைய மதிப்பு 11 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் டி.ஆர்.பாலு மனைவி சொத்து மதிப்பு 450 சதவீதம் அதிகரித்து உள்ளது. நான் தேர்தலில் நிற்பது நல்ல அரசியலுக்காகவும், மாற்றத்திற்காகவும் நிற்கின்றேன். மேலும் கோயம்புத்தூரில் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கிடையாது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளேன். அங்குள்ளவர்களிடம் சவால் விட்டு உள்ளேன். ஆனால் மற்ற கட்சியினர் இதனை சொல்ல தயாராக உள்ளனரா? நேர்மையான அரசியலை நான் முன்னெடுத்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சதர்ன் கிரவுன் அரங்கத்தில் பா.ம.க. நாளை நிகழ்ச்சி.
    • ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.

    சென்னை:

    பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் க.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை தியாகராய நகரில் உள்ள ஜி.ஆர்.டி. விடுதியில் சதர்ன் கிரவுன் அரங்கத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
    • தி.மு.க. சார்பில் கமல்ஹாசனுக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.

    இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக சேர்ந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒன்று அல்லது 2 இடங்கள் கமல் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டு வந்தது.

    அதற்கேற்ற வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வந்தார். இதனால் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மூலமாக கமல் கட்சிக்கு குறிப்பிட்ட இடங்கள் கிடைக்கும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.


    ஆனால் காங்கிரஸ் கட்சியோ தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஒரு இடத்தைகூட கமல்ஹாசனுக்கு கொடுக்க முன்வரவில்லை. அதே நேரத்தில் மற்ற கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை விட்டு கொடுக்கவில்லை. இதனால் பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.

    காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசும்போதே கமல்ஹாசனுக்கும் சேர்த்து தொகுதிகளை பேசி இருக்கலாம் என்றும், ஆனால் திட்டமிட்டே காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது என்பதே அரசியல் நிபுணர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

    இப்படி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியே காரணம் என்கிற எண்ணம் அக்கட்சியினர் மத்தியில் பரவலாகவே இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தி.மு.க. சார்பில் கமல்ஹாசனுக்கு ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீண்ட இழு பறிக்கு பிறகு கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ளார்.

    இதையடுத்து தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசனோ தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுத்து உள்ளார்.


    இதைத்தொடர்ந்து காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளை தவிர்த்து மற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் கமல்ஹாசனின் சுற்றுப் பயண விவரம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது.

    வருகிற 29-ந்தேதி கமல்ஹாசன் தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். ஈரோடு தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அன்று பிரசாரம் செய்யும் கமல்ஹாசன் மறுநாள் (30-ந்தேதி) சேலத்திலும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் ஏப்ரல் 2-ந்தேதி திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரசாரம் செய்யும் கமல்ஹாசன் 3-ந்தேதி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பின்னர் ஏப்ரல் 6-ந்தேதி கமல்ஹாசன் சென்னையில் பிரசாரம் செய்கிறார். அன்று ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னைக்குட்பட்ட பகுதிகளில் பேசும் அவர் மறுநாளும் (7-ந் தேதி) சென்னையில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளிலேயே பிரசாரம் செய்கிறார்.

    இதன் பின்னர் 3 நாட்கள் கழித்து மதுரையில் 10-ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரித்து பேசும் கமல் 11-ந் தேதி தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    ஏப்ரல் 14-ந்தேதி திருப்பூரிலும், 15-ந்தேதி கோவையிலும் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த 2 தொகுதிகளிலும் கம்யூனிஸ்டு வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்கிறார்.

    இறுதி நாளான ஏப்ரல் 16-ந்தேதி பொள்ளாச்சியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசும் கமல்ஹாசன் அத்துடன் தனது பிரசாரத்தை முடிக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு முடிவடைந்த பிறகு தி.மு.க. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினார்கள். தற்போது அவர்களது தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்யும் வகையில் கமல்ஹாசன் தனது சுற்றுபயண திட்டத்தை வடிவமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 11 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்யும் வகையில் அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்ய மறுத்திருப்பது கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    ×