search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாடு முழுக்க 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் உள்ள 102 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் துணை ராணுவ படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், ஒரு மாதத்திற்கும் மேலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட துணை ராணுவ வீரர்களுக்கு திருத்தணி போலீஸ் சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

    இதற்காக கோழிக்கறி வறுவல், கோழிக்கறி கிரேவி மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகள் தடபுடலாக சமைக்கப்பட்டு, துணை ராணுவ வீரர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த துணை ராணுவ வீரர்களுக்கு போலீசார் அசைவ விருந்து வைத்த சம்பவம் பொது மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. 

    • 2 வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது.
    • வீடியோக்களை பார்க்கும் பக்தர்களும், பொதுமக்களும் அவர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகின்றனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில் வளாகத்துக்குள் பெண் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து கருமாரி அம்மன் படத்திற்கு கீழே நாற்காலி போட்டு அமர்ந்துகொண்டு சமூக வலைத்தளங்களில் வரும் மீம்ஸ் ரீல்ஸ் போல வடிவேலு நடித்த படத்தின் காமெடி காட்சிக்கு நடித்துள்ளனர். அங்கிருந்த பக்தர்கள் வேடிக்கை பார்த்ததை கூட அவர்கள் பொருட்படுத்தாமல், நடிகர் வடிவேலு, கோவிலில் தான் பார்த்த வேலையை ராஜினாமா செய்வதுபோல் வசனம் பேசி கோவில் பணியாளர்கள் நடித்தனர்.

    மேலும் அதே கோவில் வளாகத்தில் மற்றொரு வீடியோவில் 'இது போல சொந்தம் தந்ததால், இறைவா வா நன்றி சொல்கிறோம், உனக்கேனும் சோகம் தோன்றினால், இங்கே வா இன்பம் தருகிறோம்' என்ற பாடலுக்கு கோவில் பணியாளர்கள் நடனம் ஆடியுள்ளனர். கோவில் வளாகத்திற்குள் கருவறை அருகே இத்தகைய காட்சிகளில் நடித்துள்ளனர்.

    இந்த 2 வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோக்களை பார்க்கும் பக்தர்களும், பொதுமக்களும் அவர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பக்தர்கள் புனிதமாக கருதும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் கருவறை அருகே இதுபோன்ற அநாகரிகமாக நடந்து கொண்ட இவர்கள் மீது அறநிலையத்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று.
    • விழாவின் 3-ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. வழக்கமாக தை மற்றும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்தநிலையில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, தினமும் காலை, மாலை இரு வேளையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் சமேதராய் ஸ்ரீதேவி பூதேவி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் 3-ம் நாளான இன்று கருட சேவை நடைபெற்றது.

    இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கோபுர தரிசனமும், 6 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற்றது. இந்த கருடசேவையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, பூந்தமல்லி, ஊத்து க்கோட்டை, திருத்தணி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு வீரராகவ பெருமாளை தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான வருகிற 21-ந் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. 23-ந் தேதி தீர்த்தவாரியும், 24-ந்தேதி இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லாக்கில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.

    • பாலகணபதி பேசும் போது, கடந்த முறை வெற்றி பெற்றவர் தொகுதிக்கு எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை.
    • கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் சென்று ஆதரவு திரட்டினர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி காக்களுர், கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தொடுகாடு, மப்பேடு, கூவம், பேரம்பாக்கம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு சுட்டெரிக்கும் வெயிலில் வீதி வீதியாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது காக்களுர் பகுதியில் உள்ள டீக்கடையில் பொது மக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி பேசும் போது, கடந்த முறை வெற்றி பெற்றவர் தொகுதிக்கு எந்த திட்டமும் செயல்படுத்த வில்லை.

    வளா்ச்சி திட்ட பணியும் மேற்கொள்ளவில்லை. எனவே எனக்கு ஒருமுறை வாய்ப்பு அளித்தால் தொகுதி மக்களோடு இருந்து மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். எனவே எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    வேட்பாளருடன் மாவட்ட பொது செயலாளர் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், மண்டல் தலைவர் ராஜேந்திரன், தரவு மேலாண்மை மாநில செயலாளர் ரகு, கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமி காந்தன், காக்களூர் மோகன், அமமுக மாவட்ட செயலாளர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சீனன், மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் தியாகு, முன்னாள் ஒன்றிய செயலாளர் விநாயகம், வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் பலராமன், கிளை செயலாளர் பார்த்திபன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் சென்று ஆதரவு திரட்டினர்.

    • பழவேற்காடு பகுதியில் சிறிய துறைமுகம் அமைக்கப்படும் என்றார்.
    • கவிதா மனோகரன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர் .

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பெரிய மாங்கோடு, சின்ன மாங்கோடு, புதுகுப்பம், கோட்டைக்குப்பம், ரெட்டி பாளையம், கம்மார்பாளையம், பெரும்பேடு, சோம்பட்டு, கொல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று கை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.

    அப்போது பேசிய வேட்பாளர் சசிகாந்த் செந்தில், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி, பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பயின்றவர்களுக்கு தொழில் பயிற்சியுடன் ரூ.1 லட்சம் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன். ஊரக வேலை திட்டத்தை போல, நகர்ப்புற வேலை உறுதி திட்டம் அமல்படுத்த முயற்சி செய்வேன். மீனவ குடும்பத்தினருக்கு அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மீன் பிடிப்பதற்கு படகுகள், வலைகள், இன்ஜின்கள் மானிய விலையில் வழங்கப்படும்.

    பழவேற்காடு பகுதியில் சிறிய துறைமுகம் அமைக்கப்படும் என்றார். வேட்பாளருடன் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகர், டி .ஜே. கோவிந்தராஜன், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, துணை தலைவர், பரிமேலழகர், தமிழ்ச்செல்வி பூமிநாதன், காங்கிரஸ் மாநில செயலாளர் சம்பத் வட்டார தலைவர் ஜெயசீலன், புருஷோத்தமன், பழவை ஜெயராமன், கடல் தமிழ்வாணன், ரவி, தி.மு.க நிர்வாகிகள் அவை தலைவர் பகலவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சம்பத், மாவட்ட துணை அமைப்பாளர் முரளி, கவுன்சிலர் வெற்றி, அன்பு, தமின்சா, ரமேஷ் பழவேற்காடு அலவி,பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, தலைவர் கவிதா மனோகரன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர் .

    • நகைக்கடைக்குள் காரில் வந்த 4 மர்ம நபர்கள் நுழைந்தனர்.
    • மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற நகைகளின் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.

    திருவள்ளூர்:

    ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடைக்குள் இன்று காரில் வந்த 4 மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் கடைக்குள் இருந்த பிரகாஷை மிரட்டி, அவரது கை, கால்களை கட்டி போட்டனர்.

    இதையடுத்து துப்பாக்கிமுனையில் அவரை மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற நகைகளின் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுபேட்டை போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.
    • வருகிற 21-ந்தேதி தெய்வயானை திருக்கல்யாணம்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. தினந்தோறும் வள்ளி தெய்வ யானை சமேதராய் உற்சவர் முருகன் காலை, மாலை என இருவேளைகளிலும் புலி வாகனம், சிங்க வாகனம், வெள்ளி நாக வாகனம், ஆட்டுக்கிடாவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தேர்வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந்தேதி தெய்வயானை திருக்கல்யாணம் மிக சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சித்திரை பிரம்மோற்சவ தொடக்க விழாவையொட்டி இன்று அதிகாலையில் மூலவர் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மூலவருக்கு தங்க கவசம், பச்சைக்கல் மரகத மாலை. அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்டா ஆறுமுகசாமி கோவிலில் இருந்து 1008 பால்குடங்கள் எடுத்து வந்தனர். இதில் கோவில் இணைஆணையர் ரமணி,அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதர், அறங்காவலர்கள் உஷாரவி,மோகனன். சுரேஷ் பாபு, நாகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புறப்பட்டு படிக்கட்டுகள் வழியாக மலைக் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து காவடி மண்டபத்தில் சண்முகர் கடவுளுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    • கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.
    • நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படையாக திகழ்கிறது. தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். மேலும் கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். 

    இந்த நிலையில் இன்று கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாள் என்பதால் திருத்தணி கோவிலுக்கு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவும் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பக்தர்கள் சரவண பொய்கை திருக்குளத்தில் புனித நீராடி படிக்கட்டு வழியாக நடந்து சென்றும் சுவாமியை வழிபட்டனர். கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக திருத்தணி நகரம், அரக்கோணம் சாலை, மலைப்பாதையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    • மத்தியிலும், மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.
    • தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது கடுமையாக எதிர்க்கும் கட்சி அதிமுகதான்.

    திருவள்ளூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக கூட்டணி என்பது மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணி. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாநில கட்சிகளை புறக்கணிக்கின்றனர்.

    திமுக எம்.பி.க்கள் தமிழக மக்களுக்காக என்ன செய்தனர்? முதல்வர் திட்டங்களை கூறி வாக்கு கேட்காமல், எங்களை விமர்சிக்கிறார்.

    இரட்டை வேடம் போடும் கட்சி திமுக. அதிமுகவையும், என்னையும் விமர்சிப்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையாக இருக்கிறது.

    திமுக மற்றும் கூட்டணியில் உள்ள 38 எம்பிக்கள் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. மத்தியில் காங்கிரஸூடன் கூட்டணியில் இருந்த திமுக 14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் ?

    மத்தியிலும், மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.

    தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது கடுமையாக எதிர்க்கும் கட்சி அதிமுகதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோடை காலைத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பனை ஓலை விசிறி தயாரித்து விற்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஒரு ஜோடி விசிறியின் விலை ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை, திருத்தணி உள்ளிட்ட பல இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட பழங்கள், குளிர்பானத்தை தேடி மக்கள் செல்கிறார்கள். இதனால் சாலையோரங்களில் ஏராளமான திடீர் குளிர்பான கடைகள் முளைத்து உள்ளன.

    திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதியில் மலைகள் சூழ்ந்து உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகலில் வெயில் கொளுத்துவதால் வெப்பத்தினால் மக்கள் தவித்து வருகிறார்கள். வீட்டில் உள்ள மின் விசிறிகளில் இருந்து அனல் காற்று வீசுவதால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பனை ஓலை விசிறிகளை தேடி மக்கள் திரும்பி உள்ளனர். வெயிலுக்கு இதமான குளிர்ந்த காற்று தரும் பனை ஓலை விசிறிகளை திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சிக்கு உட்பட்ட வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தில் அதிக அளவில் செய்யப்பட்டு வருகின்றன.

    கோடை காலைத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பனை ஓலை விசிறி தயாரித்து விற்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு ஜோடி ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இதுகுறித்து பனை ஓலை விசிறி செய்யும் பெண் ஒருவர் கூறும்போது, விசிறி செய்வதற்கு கோடைகாலம் தொடங்குவதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னரே பனை ஓலைகளை மரங்களில் இருந்து வெட்டி எடுத்து வந்து உலறவைப்போம்.

    தற்போது அதிகரித்து வரும் வெயிலினால் ஏற்படும் புழுக்கத்தில் இருந்தும், அனல் காற்றில் இருந்தும் பொதுமக்கள் தப்பிக்க இந்த பனை ஓலை விசிறிகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். ஒரு ஜோடி விசிறியின் விலை ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பகுதியில் தயாரிக்கப்படும் விசிறிகள் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், வாலாஜா, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சில்லரை விற்பனையாகவும், மொத்த விற்பனையாகவும் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் பனை ஓலை விசிறி விற்பனை அதிகளவு இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

    • மாவட்ட நிர்வாகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதால் செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
    • திருவள்ளூர் தொகுதி வாக்காளர்கள் கை கொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல்களை கட்டி உள்ள நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பணத்தை வாரி வழங்கி வருகிறார்கள்.

    இந்த பணத்தை வைத்தே கட்சி நிர்வாகிகள் தங்களுடன் வருபவர்களுக்கு செலவு செய்கிறார்கள். மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களிடம் இது போன்ற பணம் மொத்தமாக வழங்கப்பட்டு பின்னர் பிரித்து கொடுக்கப்படுகிறது.

    ஒவ்வொரு கட்சியிலும் பொறுப்பில் இருப்பவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி அதனை கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு கொடுத்து செலவு செய்ய சொல்லி வருகிறார்கள் .

    கூட்டத்துக்கு ஆட்களை சேர்ப்பது பிரசாரத்துக்கு வருபவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது என அத்தனை செலவுகளும் இந்த பணத்தை வைத்தே செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் ரூ.4 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.

    வேட்பாளரிடம் சென்று 500 ரூபாய் கட்டுகளாக பணத்தை வாங்கிய அந்த மாவட்ட நிர்வாகி கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு பணத்தை பிரித்துக் கொடுக்காமல் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குறிப்பிட்ட கட்சியின் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் இது பற்றி கட்சியின் மாவட்ட தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இந்த தகவலை தங்களது பகுதியில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களிலும் பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    கட்சியின் பெயர் மாவட்ட செயலாளர் ஆகியோரது பெயரையும் படத்தையும் வெளியிட்டு வேட்பாளரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றவர் தலைமறைவாகி விட்டார். கட்சி நிர்வாகிகள் யாருக்கும் அவர் பணத்தை பிரித்து கொடுக்க வில்லை என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

    தங்களது கட்சியின் பெயரை குறிப்பிட்டு நாங்கள் பணத்திற்காக வேலை செய்பவர்கள் இல்லை இருப்பினும் மாவட்ட நிர்வாகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதால் செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    இதற்கு மேல் பணம் கொடுப்பதாக இருந்தால் அவரிடம் கொடுக்க வேண்டாம் என்றும் தங்களிடம் தனித்தனியாக பணத்தை கொடுத்து விடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.

    இந்த விவகாரம் திருவள்ளூர் தொகுதி முழுவதும் பரபரப்பான பேச்சாக மாறியிருக்கிறது. தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை கட்சி நிர்வாகி சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து இருக்கும் சம்பவத்தை பார்த்து திருவள்ளூர் தொகுதி வாக்காளர்கள் கை கொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளும் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறார்கள்.

    • பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை.
    • பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பண பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிரசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பூந்தமல்லி அருகே கோளப்பன்சேரி சோதனை சாவடியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுத்து செல்லப்படும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் கட்டுகட்டாக ரூ.2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரம் பணம் இருந்தது. ஆனால் இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகு பணம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே மாலை 6 மணிக்கு மேல் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்ப வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்த நிலையில் இரவில் உரிய ஆவணங்களை இல்லாமல் பணத்தை கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×