search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரேமலதா"

    • அ.தி.மு.க. சார்பில் முறைப்படி பேச்சு வார்த்தைக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.
    • பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க.வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சி களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் தே.மு.தி. க.வும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது.

    அப்போது பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் அ.தி.மு.க.வுடனேயே கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து பேட்டி அளித்த பிரேமலதா, 14 தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. சீட்டை தரும் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக நேற்று மீண்டும் கருத்து தெரிவித்த பிரேமலதா கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளே பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதன்மூலம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிரேமலதா தயாராக இருப்பதாகவே கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தொகுதி பங்கீடு பற்றி பேச்சு நடத்துவதற்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் அடங்கிய குழுவை பிரேமலதா விரைவில் அமைக்க உள்ளார். இதன் பின்னர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை மீண்டும் கூட்டி ஆலோசனை நடத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.

    இந்த கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளது. மாவட்ட செயலாளர்கள் தொகுதி பங்கீட்டு குழு ஆகியோருடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்க உள்ளார். இதன் பிறகே அ.தி.மு.க. சார்பில் முறைப்படி பேச்சு வார்த்தைக்கு வருமாறு தே.மு.தி.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

    இந்த அழைப்பை ஏற்று தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு குழு, அ.தி.மு.க. குழுவுடன் பேச்சு நடத்த உள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் தே.மு.தி.க. வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.

    அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு நடத்த செல்லும்போது தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் தே.மு.தி.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.விடம் வழங்க உள்ளனர். இதனை பரிசீலித்த அ.தி.மு.க. உரிய தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    • இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை என பிரேமலதா தெரிவித்தார்.

    சென்னை:

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்க வந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்க்ளைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மாவட்ட செயலாளர்கள் சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்தனர்.

    பெரும்பாலானோர் தனித்துப் போட்டியிடுவோம் என கருத்து பகிர்ந்தனர்.

    இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. இனிமேல் கூட்டணி அமைத்துப் பேசுவோம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 14 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் தரும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும்.

    விஜய பிரபாகரனை ஒரு தொகுதியில் நிற்கவைக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர் என தெரிவித்தார்.

    • தே.மு.தி.க.வும் விருப்ப பட்டியல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பிரேமலதாவுடன் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே அந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அவரது ஆதரவாளர்களும், டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சியும் இடம் பெற்று இருக்கின்றன.

    என்றாலும் பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் தே.மு.தி.க. ஆகிய இரண்டும் இடம் பெறுமா? என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் ஓசையின்றி நடத்தி வருகிறார்கள். ஏ.சி.சண்முகம் போட்டியிடும் தொகுதியை உறுதி செய்து விட்டனர். அதுபோல ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தென் தமிழகத்தில் கொடுக்க வேண்டிய தொகுதிகளையும் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. சார்பில் 22 தொகுதிகள் கொண்ட ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல தே.மு.தி.க.வும் விருப்ப பட்டியல் கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதன் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.


    விஜயகாந்த் மரணம் அடைந்தபோது அடுத்தடுத்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியது பிரேமலதாவை நெகிழ்ச்சி அடையவைத்தது. மேலும் பத்ம விருது கொடுத்து விஜயகாந்தை கவுரவித்ததின் மூலம் மிகப்பெரிய அந்தஸ்தை பா.ஜ.க. தந்திருப்பதாக பிரேமலதா கருதினார்.

    இந்த நிலையில் பிரேமலதாவுடன் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைத்துக் கொள்ள பிரேமலதா ஒப்புக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.

    தே.மு.தி.க. சார்பில் பா.ஜ.க.விடம் பட்டியல் ஒன்று கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் தே.மு.தி.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் இடம் பெற்று உள்ளன. இது தொடர்பாக பிரேமலதாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது:-


    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது என்ற பட்டியலை பாரதிய ஜனதாவிடமும், அ.தி.மு.க.விடமும் கொடுக்கப்பட்டது. எந் தெந்த தொகுதிகளில் போட்டியிட தே.மு.தி.க. விரும்புகிறது என்ற விவரமும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது போல 4 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாராளுமன்ற மேல்-சபைக்கு ஒரு எம்.பி. இடம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா தரப்பில் இருந்து சாதகமான பதில் வந்து உள்ளது.


    இதையடுத்து தே.மு.தி.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (புதன் கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.

    கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் பிரேமலதாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து முடிவுகளை வெளியிடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தே.மு.தி.க. தரப்பில் கள்ளக்குறிச்சி, மதுரை உள்பட 4 தொகுதிகள் கேட்கப்படுகிறது. இதில் பிரேமலதாவின் இளைய சகோதரர் எல்.கே.சுதீஷ் கள்ளக்குறிச்சியில் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று தெரிகிறது.

    மதுரை தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் தே.மு.தி.க. வேட்பாளராக களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தே.மு.தி.க. அளித்துள்ள வேண்டுகோள்கள் அனைத்தையும் பா.ஜ.க. நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளது.

    இதன் காரணமாக தே.மு.தி.க. நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    • விஜயகாந்த் மீது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும் மிகுந்த பாசம் வைத்திருந்தனர்.
    • விஜயகாந்தின் எண்ணப்படியே பிரேமலதாவின் முயற்சியால் இந்த அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மரணமடைந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் தினமும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    விஜயகாந்த் மீது அவரது கட்சியினரும் பொது மக்களும் வைத்திருக்கும் அளவு கடந்த பாசம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. விஜயகாந்த் மீது அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரும் மிகுந்த பாசம் வைத்திருந்தனர்.

    உடல் நலக்குறைவால் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வெடுத்து வந்த நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜய காந்த்தை ஒரு தாய் போல இருந்து கவனித்துக் கொண்டார் என்றே கட்சியினர் அவரைப் பற்றி குறிப்பிடுவதுண்டு. விஜயகாந்தால் கடைசி காலத்தில் எந்த செயலையும் தனியாக செய்ய முடியாத நிலை இருந்து வந்தது.

    அப்போது அவருக்கு தோள் கொடுத்து துணையாக இருந்தது பிரேமலதாவும் அவரது குடும்பத்தினரும் தான்.

    விஜயகாந்த் உயிருடன் இருந்த போது அவருக்கு பணி விடைகள் செய்யும் வீடியோக்களையும் இதற்கு முன்பு பிரேமலதா வெளியிட்டுள்ளார். விஜய காந்த்துக்கு அவர் முடிவெட்டி டை அடித்து விடும் வீடியோ ஒன்று அவரது மரணத்திற்கு பிறகும் வைரலாக பரவியது. இப்படி விஜயகாந்தின் மீது வைத்திருந்த அன்பு, பாசம் காரணமாக அவரது பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் தொடங்க இருப்பதாக பிரேமலதா அறிவித்து உள்ளார்.

    விஜயகாந்தின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. விஜயகாந்தின் எண்ணப்படியே பிரேமலதாவின் முயற்சியால் இந்த அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பிரேம லதா தனது கணவர் விஜயகாந்தின் உருவத்தை வலது கையில் டாட்டுவாக வரைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    டாட்டூ கலைஞர் ஒருவர் பிரேமலதாவை அமர வைத்து அவரது வலது கையில் விஜயகாந்த் சிரித்த முகத்துடன் இருக்கும் உருவத்தை வரைந்துள்ளார். அதனை பிரேமலதா பார்த்து ரசிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.

    இந்த வீடியோவை தே.மு.தி.க.வினரும் பொது மக்களும் தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார்கள் இதன் மூலமாக தனது கணவர் விஜயகாந்த் மீது பிரேமலதா வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு மீண்டும் வெளிப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


    • தேமுதிகவின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து வருகிறது
    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு பிரேமலதா செல்லவில்லை

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்த விஜயகாந்த், தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவற்றிற்கு மாற்றாக கடந்த 2005 செப்டம்பர் 14 அன்று "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" (DMDK) எனும் புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சிக்கு முரசு சின்னம், தேர்தல் சின்னமாக கிடைத்தது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இக்கட்சியின் வாக்கு வங்கி சதவீதம், 2006 (சட்டசபை) - 8.38, 2009 (பாராளுமன்றம்) - 10.08, 2011 (சட்டசபை) - 7.88, 2014 (பாராளுமன்றம்) - 5.19, 2016 (சட்டசபை) - 2.39, 2019 (பாராளுமன்றம்) - 2.19 என தேர்தலுக்கு தேர்தல் குறைந்தவாறு உள்ளது.

    2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 29 சட்டசபை இடங்களை கைப்பற்றிய தேமுதிக, பதிவான வாக்குகளில் 6 சதவீதத்துக்கும் குறைவாக பெற்று, தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. அக்கட்சியின் சார்பில் வெற்றி பெறாததால் மாநில கட்சி அந்தஸ்தையும், முரசு சின்னத்தையும் இழக்கும் அபாய கட்டத்திற்கே வந்தது.

    சமீப சில வருடங்களாக அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், அக்கட்சியின் நிர்வாகிகளில் பலர் வேறு கட்சிகளுக்கு வெளியேறினர்; தொண்டர்களும் குறைய தொடங்கினர்.

    இந்நிலையில், டிசம்பர் 14 அன்று தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், பொது செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    தொடர்ந்து பிரேமலதா உரையாற்றும் போது, "பெண்களுக்கு அரசியல் ஒரு பெரும் சவால். ஜெயலலிதா சந்திக்காத சவால்களே இல்லை. விஜயகாந்திற்கு எம்.ஜி.ஆர்.தான் குரு; எனக்கு ஜெயலலிதாதான் ரோல் மாடல்" என குறிப்பிட்டார்.


    மேலும், மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு செல்லவில்லை. இந்த செயல் விமர்சகர்களால் முக்கியத்துவம் அளித்து பேசப்படுகிறது

    பல சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்ட "இரும்பு பெண்மணி" என அழைக்கப்பட்ட மறைந்த அதிமுகவின் பொது செயலாளர் ஜெயலலிதா ஒரு ஆளுமை மிக்க தலைவராக கருதப்பட்டவர். தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பக் கூடிய பெண் அரசியல் தலைவர்கள் இன்னும் உருவாகவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

    இப்பின்னணியில், பிரேமலதாவின் உரையும், மறைந்த அதிமுக தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப அவர் முன்னெடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    அதிமுகவின் பெரும் தலைவர்களை நினைவுகூர்ந்த அவரது பேச்சிலும், நினைவகங்களுக்கு செல்வதில் திமுகவை புறந்தள்ளுவதை போல் நடந்து கொண்டதும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன.

    பா.ஜ.க.வை உதறி விட்டு தேர்தலை சந்திக்க உள்ள அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தேமுதிக தயாராக உள்ளதாக அதிமுக தலைவர்களுக்கு மறைமுகமாக பிரேமலதா விடுக்கும் செய்தியாக சில விமர்சகர்கள் இதை கணிக்கின்றனர்.

    "கருப்பு எம்.ஜி.ஆர்." என ரசிகர்களால் அழைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். இடத்தை நிரப்ப விஜயகாந்த் முயன்றது போல், ஜெயலலிதாவிற்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி அதிமுகவின் வாக்கு வங்கியின் ஒரு பகுதியை அறுவடை செய்ய பிரேமலதா நினைக்கலாம் என்பது சில விமர்சகர்களின் கணிப்பு.

    இப்பின்னணியில், வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக எதிர்நோக்கப்படுகிறது.


    ஸ்டாலினே முதல்வர் வேட்பாளராக நிற்பாரா அல்லது தனது மகன் உதயநிதியை முன்னிறுத்துவாரா என்பது தெரியவில்லை.

    2017ல் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டு 2021 வரை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி களத்தில் இறங்க போகும் முதல் தேர்தல் இதுதான்.

    திமுகவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் என்ன சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதும் தற்போது தெளிவாகவில்லை.

    இவர்களுக்கு நடுவே தேமுதிக பொது செயலாளரின் கணக்குகள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக முதலமைச்சர், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி தஞ்சையில் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீருக்காக கர்நாடகத்தை நாடி இருக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 1968-ம் ஆண்டிலிருந்தே காவிரி நதிநீர் பிரச்சனை நடந்து வருகிறது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை உள்ளது. ஆனால் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை. ஆண்ட கட்சிகள், ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகள் இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது தான் உண்மை. இனிமேலாவது காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சோனியா காந்தியை சந்தித்து கர்நாடகாவை வலியுறுத்தி தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி பிரிந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லை. இந்த கூட்டணி பிரிவதற்கு இரண்டு கட்சிகளின் தலைவர்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் தான் காரணம். இது நிரந்தரமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன. நிச்சயம் ஒரு நல்ல தீர்வை தே.மு.தி.க எடுக்கும். உரிய நேரத்தில் தே.மு.தி.க நிலைப்பாடு என்ன என்பதை விஜயகாந்த் நிச்சயம் அறிவிப்பார்.

    தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை தான் செய்கிறார்களே தவிர அடுத்த தலைமுறைக்கான அரசியலை செய்வது கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரேமலதா விஜயகாந்த் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
    • காங்கிரஸ் வேட்பாளருக்கு தே.மு.தி.க. ஆதரவு அளிக்குமா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து தே.மு.தி.க. இன்று முடிவு செய்கிறது.

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. கடந்த சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறி டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் அந்த கட்சிக்கு தோல்வியே மிஞ்சியது.

    எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கூட்டணி பற்றி முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியிலேயே தே.மு.தி.க. இடம் பெற விரும்புவதாக கூறப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு பிரேமலதா ஆலோசித்து வருகிறார். எனவே காங்கிரஸ் வேட்பாளருக்கு தே.மு.தி.க. ஆதரவு அளிக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடாமல் புறக்கணித்து விட்டு யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்து விடலாமா? என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பிரேமலதா இறுதி முடிவு இன்று எடுத்து அறிவிக்க உள்ளார்.

    • கவர்னரின் கருத்துக்கு தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.
    • மக்கள் ஐ.டி. எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும்.

    மதுரை:

    சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளில் நடைபெறும் தே.மு.தி.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கட்சியின் பொருளாளர் பிரேமலதா இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும்? ஏதோ 5 ஆண்டுகள் தமிழகத்தில் கவர்னராக இருப்பதால் அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரியும்? கவர்னரின் கருத்துக்கு தே.மு.தி.க. தனது எதிர்ப்பை தெரிவிக்கிறது.

    மக்கள் ஐ.டி. எடுப்பதை மக்களிடம் கருத்து கேட்டு பின்னர் எடுக்க வேண்டும். ஆதார் மூலம் அனைத்து சலுகைகளும் மக்களிடம் சென்றடைகிறது. இந்த நிலையில் மக்கள் ஐ.டி. தேவையில்லை.

    முதலில் வெளிமாநிலத்தில் இருந்து எத்தனை பேர் இங்கே வேலை செய்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி ஐ.டி. எடுத்தால் என்ன ஆவது? இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கிறது. அப்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். தற்போது தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது நிறைவு பெற்றதும் கட்சியின் செயற்குழு-பொதுக்குழு கூட்டம் நடத்தி பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்து கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் வளர்ந்து வருகிறது.
    • சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதுகுறித்து வாய் திறக்காதது வியப்பாக இருக்கிறது.

    அவனியாபுரம்:

    மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா மதுரை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    விழா காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத வகையில் அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் குறைவாக இயக்கப்படுவதால் மக்கள் ஆம்னி பஸ்சுக்கு செல்கின்றனர்.

    ஆம்னி பஸ் கட்டணமும் கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து அமைச்சரிடம் கேட்டால் அது தொழில் என்றும், ஏழை மக்கள் என்றால் அரசு பஸ்சில் செல்லலாம். ஆம்னி பஸ்சில் செல்வது என்றால் கட்டணம் உயர்வாகத்தான் இருக்கும் என்றும் பேசுகிறார்.

    இதை சொல்வதற்கு அமைச்சர் எதற்கு? ஆம்னி பஸ்சில் பயணம் செய்தால் ரூ.4 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வளவு அதிக தொகையை கொடுத்து மக்கள் எப்படி பண்டிகையை கொண்டாடுவார்கள்?.

    ஓசி பஸ் பயணம் குறித்து அமைச்சர் பேசியதற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். அரசு பஸ்களில் இலவச பயணத்தை முற்றிலுமாக தமிழக பெண்கள் புறக்கணிக்க வேண்டும்.

    தமிழகத்தில் பெட்ரோல் குண்டு கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் இதுகுறித்து வாய் திறக்காதது வியப்பாக இருக்கிறது.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் வரவில்லை என்று தேர்தல் நேரத்தில் ஒரு செங்கலை வைத்துக்கொண்டு பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து இப்போது என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை?.

    எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மத்திய அரசின் அறிவிப்பு வெறும் அறிவிப்பாக உள்ளதே தவிர மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வந்ததாக தெரியவில்லை. மத்திய-மாநில அரசுகள் விரைவில் மருத்துவமனையை கட்டி முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ரத்த தான முகாமில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.
    • தொண்டர்கள், நிர்வாகிகளிடம் ரத்த வகையை கேட்டு தெரிந்து கொண்ட பிரேமலதா தனது பேச்சின் போது அதனை மறக்காமல் குறிப்பிட்டார்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழா கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா பங்கேற்று பேசியபோது தொண்டர்களுக்கும் கேப்டனுக்கும் இடையேயான உறவு ரத்த உறவு என்றும், இதனை யாராலும் பிரிக்க முடியாது என்றும், பெருமை பொங்க குறிப்பிட்டார்.

    பிறந்தநாளையொட்டி நடைபெற்ற ரத்த தான முகாமில் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். அப்போது அவர்களிடம் ரத்த வகையை கேட்டு தெரிந்து கொண்ட பிரேமலதா தனது பேச்சின் போது அதனை மறக்காமல் குறிப்பிட்டார். இங்கு ரத்த தானம் செய்த தே.மு.தி.க. தொண்டர்கள் பலரது ரத்தவகை ஓ பாசிட்டிவாகவும், பி. பாசிட்டிவாகவும் இருக்கு. கேப்டனின் ரத்த வகை ஓ பாசிட்டிவ். எனது ரத்த வகை பி. பாசிட்டிவ் இப்படி நாம் ஒரே ரத்தத்தை சேர்ந்தவர்கள். இது ரத்தத்தில் கலந்த உறவு. யாராலும் பிரிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

    பிரேமலதாவின் இந்த "ரத்த பாச பேச்சு" கட்சி தொண்டர்களுக்கு பூஸ்டாக மாறி இருப்பது என்னவோ உண்மைதான். அது கட்சிக்கு புது ரத்தத்தை பாய்ச்சுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தே.மு.தி.க. பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • தே.மு.தி.க.வின் வெற்றிக்காக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழாவை இன்று தே.மு.தி.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    ஆண்டுதோறும் வறுமை ஒழிப்பு தினமாக அவரது பிறந்தநாளை கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    தே.மு.தி.க. பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கட்சி அலுவலகத்தில் மருத்துவ முகாமும் நடைபெற்றது.

    இந்த முகாமில் பங்கேற்று பலர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எந்த நோக்கத்துக்காக தே.மு.தி.க. தொடங்கப்பட்டதோ அதனை அடைந்தே தீருவோம். தே.மு.தி.க.வின் வெற்றிக்காக தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். கேப்டன் நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    கேப்டனுக்கு ஏற்பட்டிருப்பது உடல் சோர்வுதான். 75-வது சுதந்திர தின நாள் அன்று தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேப்டனே விரும்பினார்.

    70-வது பிறந்த நாளான நாளை கேப்டனை நீங்களே சந்திக்கலாம். கேப்டன் பிறந்தநாளையொட்டி 70 வகையான நலத்திட்ட உதவிகளை தே.மு.தி.க.வினர் வழங்கி வருகிறார்கள். எதிர்காலத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு பிரேமலதா பேசினார்.

    இந்த விழாவில் தே.மு.தி.க. துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வி.சி.ஆனந்தன், செந்தில், கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ். பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான தொண்டர்களும் திரண்டிருந்தனர்.

    • மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும்.
    • சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    அவனியாபுரம்:

    தமிழக அரசின் மின்சார கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் இன்று தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து மதுரை வந்த பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு என்பது மக்களுக்கானது தான் என்பதை உணர்ந்து வரி விதிக்க வேண்டும். தொடர்ந்து வரி உயர்வால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அதுவும் கொரோனா காலத்திற்கு பின்பு மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரி உயர்வு அதுவும் பேக் செய்யப்பட்ட பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.வரி என்பது மக்களை கடுமையாக பாதிக்கும். ஒரு அரசு என்பது மக்களுக்கான அரசு என்பதை உணரவேண்டும்.

    மாணவி ஸ்ரீமதி இறந்து புதைத்த இடத்தின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் தொடர்ந்து மாணவிகள் மரண செய்தி வருவது வருத்தம் அளிக்கிறது. முதலில் மாணவிகளின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதனை கண்டுபிடிக்க வேண்டும். இதற்காக சி.பி.சி.ஐ.டி. விசாரணை செய்வதை விட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    மாணவிகள் கொலை செய்யப்பட்டனரா? அல்லது தற்கொலை செய்தார்களா? அப்படி தற்கொலை செய்தால் அதற்கான காரணம் என்ன என்பதனை அறிய தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது பல ஊழல் வழக்குகளை நடத்தியது. அதேபோல் தற்போது பா.ஜ.க. ஊழல் வழக்குகளை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஆளும் கட்சி ஆண்ட கட்சிகளில் இருந்து ஊழல் வழக்குகளை நடத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தே.மு.தி.க. நிர்வாகிகள் அழகர், கணபதி, பாலச்சந்தர், மணிகண்டன் உள்பட பலர் இருந்தனர்.

    ×