search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியங்கா காந்தி"

    • விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் பிரச்சனைகளை பிரதமர் கண்டுகொள்ளவில்லை.
    • இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார் பிரியங்கா காந்தி.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் சகாரன்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார்.

    அட்டூழியங்களுக்கும் அநீதிக்கும் எதிராக மக்கள் நிற்கிறார்கள். இதற்கு இந்த மாபெரும் கூட்டமே சான்று. தேர்தல் பத்திரம் ஒரு வெளிப்படையான திட்டம் என பிரதமர் மோடி கூறுகிறார். பிறகு ஏன் நன்கொடையாளர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டது? விவசாயிகள், பெண்கள், இளைஞர்களின் பிரச்சனைகளை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஊழல் செய்யாமல் தேர்தல் நடத்தினால் பா.ஜ.க. 180க்கும் குறைவான தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரியங்கா காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல. இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என கூறினார்.

    • வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தனது தொகுதியில் ரோடு-ஷோ சென்று ஆதரவு திரட்டினார்.
    • பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யும் போது, ராகுல் காந்தியும் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 20 தொகுதிகளிலும் மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    பெரும்பாலான தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 8 நாட்களே இருப்பதால், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சி இருந்துவரும் நிலையில், கேரளாவில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இதனால் அங்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் எதிரெதிராக இருந்து மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    கேரளாவில் வயநாடு, திருவனந்தபுரம், அட்டிங்கல், பத்தினம்திட்டா, மாவேலிக்கரை, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், சாலக்குடி, ஆலத்தூர், பாலக்காடு, கோழிக்கோடு, வடகரா, கண்ணூர், காசர்கோடு ஆகிய 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    அந்த தொகுதிகள் மட்டுமின்றி, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்த அன்று, தனது தொகுதியில் ரோடு-ஷோ சென்று ஆதரவு திரட்டினார். பின்பு அவர் தேர்தல் பிரசாரத்தை நேற்று மீண்டும் தொடங்கினார்.

    அவர் நேற்று வயநாட்டில் ரோடு-ஷோ சென்றது மட்டுமின்றி, கோழிக்கோடு கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டார். ராகுல் காந்தி கேரளாவில் தொடர்ந்து ஒரு வாரம் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    அவர் வயநாடு தொகுதியில் இன்று 2-வது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். மற்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் ஆதரவு திரட்டுகிறார்.

    இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரியங்கா காந்தி வருகிற 20-ந்தேதி கேரளா வருகிறார். அவர் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, சாலக்குடி ஆகிய தொகுதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    பிரியங்கா காந்தி பிரசாரம் செய்யும் போது, ராகுல் காந்தியும் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ராகுல் காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பிரியங்கா காந்தியும் கேரளா வர உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வருகிறார்.
    • பிரியங்கா கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் அங்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தமிழகத்தில் எல்லா கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. தலைவர்களும் முற்றுகையிட்டு வருகிறார்கள்.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி வருகிற 12-ந்தேதி வருகிறார். நெல்லை மற்றும் கோவையில் அவர் பிரசாரம் செய்கிறார்.

    அதை தொடர்ந்து வருகிற 15-ந் தேதி பிரியங்கா காந்தி தமிழகம் வருகிறார். சேலம் பகுதியில் அவரது பிரசாரத்துக்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் பிரியங்கா கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் அங்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    விமானத்தில் 15-ந்தேதி திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கரூர் செல்கிறார். கரூரில் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் ரோடு ஷோ செய்கிறார். இதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

    கரூர் பிரசாரத்தை முடித்துவிட்டு திருச்சி திரும்பும் பிரியங்கா அங்கிருந்து வேறு மாநில பிரசாரத்துக்கு செல்வதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    • ராபர்ட் வதேரா இதுவரை நேரடிடையாக அரசியலில் ஈடுபட்டது இல்லை.
    • சோனியா காந்தியின் குடும்பத்தை விமா்சிப்பதைத் தவிர, வேறெந்த பணியும் அவா் மேற்கொள்ளவில்லை.

    அமேதி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தவை. இந்திராகாந்தி காலத்தில் இருந்தே அங்கு காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்று வருகிறது.

    அமேதி தொகுதியில் கடந்த 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் ராகுல் காந்தி தொடா்ந்து வெற்றி பெற்றாா்.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தோ்தலில் ராகுலை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி ஸ்மிருதி இரானியை நிறுத்தியது. மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக சுமாா் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வியை தழுவினார்.

    வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் அமேதி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற் கொண்டு அந்த தொகுதியை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான தொகுதியாக மாற்றி இருக்கிறார்.

    இந்த நிலையில் தற்போதைய பாராளுமன்ற தோ்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சாா்பில் மீண்டும் ஸ்மிருதி இரானி களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடப் போவது யார் என்பது தொடர்ந்து சஸ்பென்சாக உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட காங்கிரஸ் அமேதி தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் உள்ளது

    கடந்த முறை தோல்வியை தழுவிய ராகுல் மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட மனு செய்து உள்ளார். அவர் அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து மீண்டும் போட்டியிடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அமேதியில் மே 20-ந்தேதி 5-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரியங்கா ரேபரேலி தொகுதியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே அமேதியில் பிரியங்காவின் கணவர் ராபர்ட்வதேராவை போட்டியிட செய்ய முயற்சி நடப்பது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக பேட்டியளித்த ராபா்ட் வதேரா, 'ஸ்மிருதி இரானியை தோ்வு செய்ததன் மூலம் தாங்கள் செய்த தவறை அமேதி தொகுதி மக்கள் இப்போது உணா்ந்து விட்டனா். சோனியா காந்தியின் குடும்பத்தை விமா்சிப்பதைத் தவிர, வேறெந்த பணியும் அவா் மேற்கொள்ளவில்லை.

    சோனியா குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா்தான் தங்கள் தொகுதியை மீண்டும் பிரதி நிதித்துவப்படுத்த வேண்டும் என அமேதி தொகுதி மக்கள் எதிா்பார்க்கின்றனா். நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்தால், அமேதி தொகுதியை தோ்வு செய்ய வேண்டும் என்று அந்த தொகுதி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வருகின்றன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம் என்றாா்.

    ராபர்ட் வதேரா இதுவரை நேரடிடையாக அரசியலில் ஈடுபட்டது இல்லை. அவர் மீது நில மோசடி வழக்குகள் உள்ளன. அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் அதிக விலைக்கு விற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

    அவர் தேர்தலில் போட்டியிட்டால் அந்த மோசடி புகார்களை பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் எழுப்புவார்கள் என்று கூறப்படுகிறது.

    • ராகுல் காந்தி ஒரே நாளில் 3 இடங்களில் பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பயண திட்டம் தயாரித்துள்ளனர்.
    • அடுத்த வார இறுதியில் இருந்து ஒவ்வொருவராக வர இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல், பிரியங்கா, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே ஆகிய மூவரும் வர இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது. அடுத்த வார இறுதியில் இருந்து ஒவ்வொருவராக வர இருக்கிறார்கள்.

    ராகுல் காந்தி ஒரே நாளில் 3 இடங்களில் பிரசார கூட்டங்களில் பேசும் வகையில் பயண திட்டம் தயாரித்துள்ளனர். ராகுல் செல்ல முடியாத இடங்களுக்கு பிரியங்காவும், அதேபோல் கார்கேவும் செல்வார்கள். தமிழகம் முழுவதும் இவர்கள் செல்லும் வகையில் பயண திட்டங்களை தயார் செய்து டெல்லி தலைமைக்கு அனுப்பி இருக்கிறார்கள். தலைவர்கள் வருகைக்கான தேதி உறுதியானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    • யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.
    • மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு பாரத ஒற்றுமை யாத்திரையை செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரையை 2023-ம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார்.

    அதன் பிறகு 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை' என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கி மும்பை தாராவி வழியாக சென்று அம்பேத்கர் சமாதியான சைத்ய பூமியில் நிறைவு செய்தார். இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.

    இன்று காலையில் ராகுல் காந்தி மும்பையில் நியாய சங்கல்ப் பாதயாத்ரா என்ற பெயரில் மணிபவன் முதல் ஆகஸ்டுகிராந்தி மைதானம் வரை நடைபயணம் மேற்கொண்டார்.


    இதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார்.


    இதே போல் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன் ஆகியோரும் மும்பை சென்றுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார், கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசிய பிறகு இன்று இரவே சென்னை திரும்புகிறார்.

    • அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.
    • இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மீட்கும் முக்கிய முகமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கருதப்பட்டார்.

    ஆனால் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரியங்காவின் செல்வாக்கு உத்தரபிரதே சத்தில் குறைய தொடங்கியது.

    காங்கிரசை தூக்கி நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அவருக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அதோடு உத்தரபிரதேசம் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பும் அளிக்கப்பட்டது. எனினும் அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.

    சோனியா காந்தியால் மட்டும் தனது ரேபரேலி தொகுதியை தக்க வைக்க முடிந்தது. இந்த நிலையில் பிரியங்கா மீண்டும் உத்தர பிரதேசம் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார். இந்த முறை அவரை ரேபரேலியில் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது.

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ரேபரேலி தொகுதி எம்.பி.யாக இருந்த சோனியா, தற்போது பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாகிவிட்டார். இத னால் பிரியங்காவை ரேபரேலியில் போட்டியிட வைக்க காங்கிரஸ் விரும்புகிறது.

    இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு பிரியங்கா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியால் தோற்கடிக்கப்பட்ட ராகுல்காந்தி, அங்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதற்கான அடிப்படை வேலைகளை காங்கிரசுக்காக ஒரு தனியார் நிறுவனம் அமேதியில் செய்து வருகிறது. இதன் அறிக்கையை பொறுத்து அமேதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ராகுல் முடிவு செய்வார்.

    உத்தரபிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ராகுலின் யாத்திரையில் அமேதி முக்கிய இடம் பிடித்தது. எனினும் கடந்த முறையை போல் அவர் போட்டியிடும் 2 தொகுதிகளில் ஒன்றாகவே அமேதி இருக்க வாய்ப்பு உள்ளது.

    உத்தரபிரதேசத்தின் 80 பாராளுமன்ற தொகுதி களில் 17 தொகுதிகளை பெற்று சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அமேதி தேர்தல் அமைப்பாளராக ராகுலுக்கு மிகவும் நெருக்கமான தேவானந்த மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 17 தொகுதிகளில் அமேதியும், ரேபரேலியும் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

    • திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.
    • தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.

    இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    அங்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை நேரில் சந்திக்கிறார்.

    • உ.பி.யின் அலிகாரில் இன்று நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரையில் பிரியங்கா பங்கேற்றார்.
    • இந்த யாத்திரையில் லோக்தளம் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். 

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஜமால்பூரில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இன்று கலந்து கொண்டார். இதில் லோக்தளம் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். 

    இந்த யாத்திரை அம்ரோஹா, சம்பல், புலந்த்சாஹர், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா வழியாக பதேபூர் சிக்ரி செல்கிறது. இதில் ராகுல் காந்தியுடன் திறந்த ஜீப்பில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அமர்ந்து கொண்டு தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தவாறு சென்றார். அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது:

    பா.ஜ.க. 10 ஆண்டாக ஆட்சியில் உள்ளது. ஜி20 மாநாடு போன்ற பல பெரிய நிகழ்வுகள் நடந்தன. இதுபோன்ற நிகழ்வுகளால் நாட்டின் மரியாதை கூடுகிறது என எல்லோரும் சொன்னார்கள். நாங்கள் கூட ஒப்புக்கொள்கிறோம்.

    நாட்டின் மரியாதையில் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் தொடர்பில்லையா? இளைஞர்களுக்கு வேலை இல்லை, விவசாயிகள் இன்னும் சாலையில் அமர்ந்திருக்கிறார்கள். பணவீக்கம் நாட்டு மக்களுக்கு சுமையாக இருக்கிறது. இதை எல்லாம் நான் சுட்டிக்காட்டி கேள்வி கேட்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.

    காங்கிரஸ், சமாஜ்வாதி இடையேயான தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில், யாத்திரை நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த யாத்திரை இந்தியா கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

    இன்று மாலை ஆக்ராவில் நடைபெற உள்ள யாத்திரையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க உள்ளார்.

    • ஆக்ராவில் நடக்கும் ராகுல் காந்தி பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்.
    • மார்ச் மாதம் முதல் வாரம் ராகுல் காந்தியின் பாத யாத்திரை மத்திய பிரதேசத்துக்கு செல்ல உள்ளது.

    லக்னோ:

    காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது இந்த பாத யாத்திரை உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ராகுல் காந்தியின் பாத யாத்திரை இன்று மொரதாபாத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார்.

    இருவரும் காரின் மேலே அமர்ந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். பொதுமக்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்தபடியும், கைகளை அசைத்தபடியும் சென்றனர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியிடம் பலர் ஆர்வமுடன் கை குலுக்கினர். பாதயாத்திரையை ஒட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதேபோல் சம்பல், அம்ரேகா, கத்ரஸ், அலிகர், ஆக்ரா, பதேப்பூர் சிக்கிரி மாவட்டங்களில் நடக்கும் பாத யாத்திரையிலும் பிரியங்கா கலந்துகொள்வார் என தெரிய வந்துள்ளது.

    ஆக்ராவில் நாளை நடக்கும் ராகுல் பாத யாத்திரையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொள்வார் என அறிவிக்கப் பட்டுள்ளது.

    இதையடுத்து, மார்ச் முதல் வாரம் ராகுல் காந்தியின் யாத்திரை மத்திய பிரதேசத்துக்குச் செல்ல உள்ளது. அந்த யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.
    • 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையிலான 11 பேர் கொண்ட குழு பிப்ரவரி 5-ந் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளை அறிந்து வருகின்றனர்.

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்-பாராளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ் நாட்டின் கருத்துக்கள் என்ற தலைப்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு கோரிக்கை மனுக்களையும் பெற்று வருகின்றனர்.

    பிப்ரவரி 5-ந் தேதி தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள், 6-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள், பிப்ரவரி 7-ந் தேதி மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், 9-ந்தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள், 10-ந் தேதி காலையில் கோவை, நீலகிரி, பிற்பகலில் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள், 11-ந் தேதி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர்.

    அடுத்தக்கட்டமாக 23-ந் தேதி வேலூர், ஆரணியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளனர். 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னையில் பொது மக்களை சந்திக்க உள்ளனர்.

    மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை எழுத்துப்பூர்வமாகவும், தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள், ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகளை அனுப்புவதற்கான முகவரிகளும் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பதிவீடுகளுக்கான காலக்கெடு பிப்ரவரி 25-ந் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் தி.மு.க. தேர்தல் அறிக்கை குழு மதிப்பீடு செய்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பார்வைக்கு கொண்டு சென்று அதன்பிறகு அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையாக தயாரிக்கப்பட உள்ளது.

    இப்போது வணிகர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், ஓட்டல் உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், மாற்று திறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள், மற்றும் பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரிலும், எழுத்துப்பூர்வமாக, தொலைபேசி வாயிலாக, சமூக ஊடகங்கள் வழியாக, ஆன்லைன் மூலமாகவும் தங்கள் கோரிக்கைகளை அளித்து வருகின்றனர்.

    இதுவரை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை சந்தித்துள்ளனர். 750-க்கும் மேற்பட்ட சங்கங்கள் மூலமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

    கோரிக்கைகள் தொடர்பாக தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் மக்களிடம் இருந்து வந்துள்ளதுடன், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்; சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது.

    தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு 500க்கும் மேற்பட்ட கடிதங்களும் பெறப்பட்டு உள்ளதாக இக்குழுவினர் தெரிவி்த்துள்ளனர்.

    • ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.
    • பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் கமல்ஹாசன் உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெறுமா என்பது மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளோடு தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.

    இரண்டாவது கட்ட பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாக கருதப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை இதுவரை தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு யாரும் அழைக்கவில்லை.

    இது தொடர்பாக தி.மு.க. முன்னணி தலைவர்கள் கூறும்போது, 'கமல்ஹாசன் கூட்டணியில் இருக்கிறாரா என்பது எங்களுக்கு தெரியாது. அது பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்து இருந்தனர். இதன் மூலம் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளாரா? என்கிற கேள்வி வலுப்பெற்றது.

    இந்த நிலையில் அமெரிக்கா சென்றிருந்த கமல்ஹாசன் தனது 19 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அவரிடம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அமெரிக்காவில் இருந்து செய்தியோடு நான் வரவில்லை.


    இனி தான் செய்தியை உருவாக்க வேண்டும். இரண்டு நாட்களில் உங்களை சந்திக்கிறேன். அப்போது அனைத்து விஷயங்களுக்கும் பதில் அளிக்கிறேன். நல்ல செய்தியை தருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதன் மூலம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படாமலேயே உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

    இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி 7-ம் ஆண்டு தொடக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது இதுவரையில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. கூட்டணியில் இருந்து அழைப்பு வராதது பற்றி விரிவாக விவாதிக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கமல்ஹாசன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்துவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். எனவே வரும் நாட்களில் அது போன்ற சந்திப்பு நடந்து தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இடம் பெறுவது உறுதி செய்யப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


    இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.வினர் கூறும் போது கூட்டணியில் ஏற்கனவே உள்ள கட்சிகளுக்கு இடங்களை பகிர்ந்து கொடுப்பதிலேயே பெரிய சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக சேர உள்ள கமல்ஹாசன் கட்சிக்கு எப்படி இடங்களைபகிர்ந்து கொடுப்பது என்பது பெரிய பிரச்சினையாகவே உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியை பொறுத்த வரையில் காங்கிரஸ் கட்சியுடன் அதிக நெருக்கமாக அந்த கட்சி உள்ளது அந்த கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.

    எனவே காங்கிரசுக்கு நாங்கள் ஒதுக்கும் இடத்தில் கமல்ஹாசன் ஒன்றோ அல்லது இரண்டு இடங்களையோ கேட்டு பெற்று போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் ஆலோசனை நடத்துகிறார். ஒருவேளை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இடம் கிடைக்காத பட்சத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி பாராளுமன்ற தேர்தல் களத்தில் பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் கமல்ஹாசன் உள்ளார். இந்த கேள்விகள் அனைத்துக்கும் நாளை நடைபெறும் கூட்டத்துக்கு பிறகு கமல்ஹாசன் விடை அளிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ×