search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜல்லிக்கட்டு"

    • திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்கட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
    • மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையருகே உள்ள திம்மசந்திரம் கிராமத்தில் ஸ்ரீ சப்பளம்மாதேவி என்ற அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நடை பெறும் மாட்டுத் திருவிழா பிரபலமானது ஆகும்.

    200 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டுதோறும் தை மாத இறுதி வாரத்தில் தொடங்கும் இத்திருவிழாவில் நாட்டு மாடுகள், ஜல்லிக்காட்டு காளை வகை மாடுகள் அழைத்து வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

    விழாவில் மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திர, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

    இங்கு ஒரு ஜோடி மாடுகள் ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யபடுவதால் இந்த மாட்டுத் திருவிழாவை பலரும் எதிர்நோக்கி உள்ளனர். நேற்று நடைபெற்ற இந்த விழாவில் விவசாயிகள் ஆர்வமுடன் மாடுகளை வாங்கி சென்றனர். இந்த விழா 6 நாட்கள் வருகிற 11 - ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. தினமும் விஷேச பூஜைகளுடன் திருவிழா நடைப்பெற்றும், மாட்டு விற்பனையில் பல கோடி ரூபாய் வர்த்தகமும் நடைபெற உள்ளது.

    விழாவில், சப்பளம்மா கோவில் அறக்கட்டளை தலைவர் கஜேந்திரமூர்த்தி, துணை தலைவர் தியாகராஜன், கிருஷ்ணப்பா, முனிராஜ், மகேஷ், கெம்பண்ணா, நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும், சுற்று வட்டார கிராம முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • மொத்தம் 400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தஞ்சை அடுத்த மாதாக்கோட்டையில் பொங்கல் விழாவை முன்னிட்டு லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு மாதாக்கோட்டையில் இன்று காலை நடைபெற்றது.

    போட்டியை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார். முன்னதாக அவரது தலைமையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ஜல்லிக்கட்டை முன்னிட்டு காளைகள் திறந்துவிடப்படும் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    ஜல்லிகட்டில் பங்கேற்க தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் நேற்று இரவு முதலே தஞ்சைக்கு சரக்கு லாரி மூலம் அழைத்து வரப்பட்டன. இதேப்போல் மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர். மேலும் காளையை அடக்க வந்த வீரர்கள் மது அருந்தி உள்ளனரா? புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்ற வழக்கமான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    இதேப்போல் காளைகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் தலைமையில் கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மொத்தம் 400 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

    இதையடுத்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் துள்ளிக்குதித்து களத்துக்குள் வந்து சீறிப்பாய்ந்தது. காளைகள் வீரர்களை நோக்கி சீறி பாய்ந்தபோது சிலர் தரையில் படுத்து கொண்டனர்.

    காளைகள் களத்தில் நின்று விளையாடியதை பார்வையாளர்கள் மெய்மறந்து கண்டு ரசித்தனர். பலர் வீடுகளின் மாடியில் நின்று கண்டு ரசித்தனர். இதேப்போல் காளையை வீரர்கள் அடக்கும் போது கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

    களத்தில் நின்று விளையாடிய காளைகளை ஆக்ரோஷத்துடன் வீரர்கள் அடக்கினர்.

    காளைகளின் திமிலைப் பிடித்து அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேப்போல் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பரிசை பெற்றுக் கொண்டனர்.

    காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலருக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர். பலத்த காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. 

    • ஜல்லிக்கட்டு போட்டிய மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
    • காளைகளை வீரத்தீரத்துடன் அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, மிக்சி, பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தஞ்சை வல்லம் அடுத்த திருக்கானூர் பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதையொட்டி காளைகள் திறந்துவிடப்படும். வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    ஜல்லிகட்டில் பங்கேற்க தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் நேற்று இரவு முதலே தஞ்சைக்கு சரக்கு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. இதேப்போல் மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர். மேலும் காளையை அடக்க வந்த வீரர்கள் மது அருந்தி உள்ளனரா? புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்ற வழக்கமான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    இதேப்போல் காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மொத்தம் 310 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் துள்ளிக்குதித்து களத்துக்குள் வந்து சீறிப்பாய்ந்தது. சில காளைகள் வீரர்களை நோக்கி சீறி பாய்ந்தபோது சிலர் தரையில் படுத்து கொண்டனர். பலர் தங்களை காத்து கொள்ள தடுப்பு கம்பிகள் மீது ஏறி கொண்டனர்.

    காளைகள் களத்தில் நின்று விளையாடியதை பார்வையாளர்கள் மெய்மறந்து கண்டு ரசித்தனர்.

    இதேபோல் களத்தில் நின்று விளையாடிய காளைகளை வீரர்கள் ஆக்ரோஷத்துடன் அடக்கினர்.

    காளையை வீரர்கள் அடக்கும் போது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

    காளைகளை வீரத்தீரத்துடன் அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, மிக்சி, பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேப்போல் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பரிசை பெற்றுக் கொண்டனர்.

    காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலருக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர். பலத்த காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

    போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, திருக்கானூர்பட்டி பங்கு தந்தை தேவதாஸ் இக்னேசியர் மற்றும் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

    • கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.
    • தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியரசு தினத்தை யொட்டி 2 மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றியதை பெருமையாக நினைக்கிறேன். முந்தைய முதலமைச்சர் வரமாட்டார். இன்று முதலமைச்சர், அமைச்சர்கள் வந்தனர். மாலை விருந்துக்கும் வருவதாக சொன்னார்கள். கவர்னர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும்.

    தெலுங்கானாவில் பலமுறை அழைத்தும் முந்தைய முதலமைச்சர் வரவில்லை. கொள்கைகள்-கட்சிகள் மாறுபடலாம். ஆனால் அழைப்பு விடுத்தால் அன்போடு பங்கேற்க வேண்டும். அதுவே நல்லது. அனைத்து இடத்திலும் அரசியல் புக ஆரம்பித்தால் நட்பு இல்லாமல் போய்விடும்.


    தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள்.

    விருந்துக்கு வராததையே பெருமையாக கருதக்கூடாது. அவர்கள் வராததால் அதிர்ச்சியோ கவலையோ எனக்கு இல்லை. சாப்பிட வந்தால் மகிழ்ச்சி. அன்பை கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம். விருந்துக்கு வரவில்லை என சொல்வதையே நாகரீகமாக சில கட்சிகள் கருதுகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

    ஜல்லிக்கட்டு மீட்டுக் கொடுத்தது தி.மு.க. தான் என தமிழ முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மிக முயற்சி செய்தவர் பிரதமர் மோடி. 3 மத்திய மந்திரிகள் ஒரே நாளில் கையெழுத்திட்டு, ஜல்லிக்கட்டுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    தமிழகத்தில் ஆட்சியில் இருப்போரின் கூட்டணி ஆட்சிதான் கர்நாடகத்தில் உள்ளது. மேகதாது குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக முதலமைச்சர் நட்பு ரீதியாக சென்று தடுக்க வேண்டும். நட்பு ரீதியாக தடுக்கவில்லை என்றால் அவர்கள் நட்பு தப்பு ரீதியாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி.
    • பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.

    மதுரை கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் நடைபெற்ற முதல் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது.

    இதில், கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்த பூவந்தியை சேர்ந்த அபிசித்தருக்கு, ஜீப் உடன் ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் 10 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். 2ம் இடம் பிடித்த வீரர்கள் தமிழரசன், பரத்குமாருக்கு பைக் பரிசாக வழங்கப்படுகிறது.

    இதில், சின்னப்பட்டி தமிழரசன், விளாங்குடி பரத்குமார் தலா 6 காளைகளை அடக்கி 2ம் இடம் பிடித்தனர்.

    கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளையாக தேர்வான புதுக்கோட்டை கணேஷ் கருப்பையா களைக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

    சிறந்த காளையாக 2ம் இடத்தை திருச்சி அணைக்கரை வினோத் காளை பிடித்துள்ளது. தொடர்ந்து, சிறந்த காளையாக 3ம் இடத்தை பிடித்தது மதுரை அண்ணாநகர் பிரேம் காளை.

    • ஏறுதழுவுதலை தனது உயிராகக் கருதக்கூடிய மூர்த்தியை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்!
    • தமிழர்களின் பண்பாட்டை சரியாக அறிந்தவர்களாக, அந்தக் காலத்து கவர்னர்கள் இருந்திருக்கிறார்கள்.

    மதுரை:

    மதுரை, அலங்காநல்லூர், கீழக்கரையில், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    வீரதீர விளையாட்டு களத்தை திறந்து வைக்க வந்திருக்கிறேன். மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். போட்டி என்று வந்துவிட்டால், தோல்வியை தூள்தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது.

    தமிழர் பண்பாட்டு விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு சங்கம் வளர்த்த மதுரையில் இந்த மாபெரும் அரங்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசால் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. அதுவும், தமிழினத் தலைவர் கலைஞருடைய நூற்றாண்டு விழா கொண்டாடுகிற ஆண்டில் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

    பல்லாயிரம் ஆண்டு பெருமை கொண்ட நம்முடைய தமிழினம் கொண்டாடும் ஏறுதழுவுதலுக்கான அரங்கத்தை கட்டி எழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்கு கிடைத்திருக்கக்கூடிய பெருமை.

    திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்து, மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள்ளாக, மூன்று முக்கியமான கம்பீரச் சின்னங்களை இந்த மதுரையில் ஏற்படுத்தி இருக்கிறோம்.

    ஒன்று, தமிழினத்தினுடைய பழமையை சொல்கின்ற கீழடி அருங்காட்சியகம் மதுரைக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    இரண்டாவது, கலைஞரின் பெயரால் மாபெரும் நூலகம் பிரமாண்டமாக மதுரை மாநகரில் அறிவு மாளிகையாக அமைக்கப்பட்டிருக்கிறது.

    இப்போது மூன்றாவதாக, இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன அலங்காநல்லூரில் அமைக்கப்பட்டிருக்கிறது.

    இதை சொல்லுகின்ற நேரத்தில், 2015-ம் ஆண்டு அறிவித்து, இன்றைக்கு வரைக்கும் மதுரைக்கு மத்தியில் இருக்கக்கூடிய ஒன்றிய பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்படாத ஒரு திட்டம் இருக்கிறதே, அது உங்கள் ஞாபகத்திற்கு வந்தால், அதுக்கு நான் பொறுப்பில்லை.

    இந்த அரங்கத்தை கம்பீரமாகவும், அழகாகவும் அமைத்துக் கொடுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். அவருடைய சாதனைப் பட்டியலில், இப்போது இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கமும் சேர்ந்துவிட்டது.

    சென்னையில், கலைஞர் நினைவகமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இந்த விழாவை மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ளார் அமைச்சர் மூர்த்தி.

    தை மாதம் பிறந்தாலே மூர்த்தி, ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறிவிடுவார். கோட்டைக்கு கூட வராமல் ஜல்லிக்கட்டு மைதானத்திலேயே இருந்துவிடுவார். அந்தளவுக்கு ஏறுதழுவுதலை தனது உயிராகக் கருதக்கூடிய மூர்த்தியை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்!


    இங்கே அமைந்திருக்கும் இந்த பண்பாட்டுச் சின்னம், தமிழினத்தின் பண்பாட்டு மரபின் தொடர்ச்சி. சிந்து சமவெளி காலத்து முத்திரைகளிலேயே திமில் காளைகள் இருக்கிறது. அதில் காளைகளின் நேர்கொண்ட பார்வையை நாம் பார்க்கலாம்.

    பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்த ஓவியங்களில், திரண்டு தொங்கும் தாடை, அகன்று வளைந்த கொம்பு கொண்ட காளைகள் இருக்கிறது. ஏன், கீழடியில் திமிலுள்ள காளையின் முழு எலும்புக் கூடு கிடைத்திருக்கிறது. முல்லை நில மக்களுடைய வீர விளையாட்டாக இருந்திருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் இதைப் பற்றி உயர்வாக பாடப்பட்டிருக்கிறது.

    "எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர்" என்று ஏறுதழுவுதல் காட்சியை நம்முடைய கண்முன்னே கொண்டு வருவது கலித்தொகை. தை மாதம் தொடங்கி பொங்கலுக்காக முதல் மூன்று நாள், அரசு கருவூலத்தை தவிர மற்ற பொது அலுவலகங்களை மூட வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கவர்னர் அறிவித்திருக்கிறார்.

    தமிழர்களின் பண்பாட்டை சரியாக அறிந்தவர்களாக, அந்தக் காலத்து கவர்னர்கள் இருந்திருக்கிறார்கள். ஆண்டு தோறும் தை மாதம் ஏறுதழுவுதல் நடக்கும்போது அலங்காநல்லூரும், அவனியாபுரமும், பாலமேடும் உற்சாகத்தோடு காணப்படும்.

    இந்த பண்பாட்டுத் திருவிழா உலகம் முழுவதும் பேசப்படும் என்று தான், இந்த அரங்கத்தை அமைக்கின்ற முடிவை எடுத்தோம். தலைவர் கலைஞருக்கு ஏறுதழுவதல் போட்டி மேல், தனி பாசம் உண்டு! அதனால்தான், தன்னுடைய மூத்த பிள்ளையான முரசொலியின் சின்னமாக, ஏறுதழுவுதல் காட்சியை வைத்தார்.

    1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் ஏறு தழுவுதல் போட்டிகளை நடத்தியவர் கலைஞர். ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவற்றை 2006-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை செய்தபோது, பாதுகாப்பான முறையில் நாங்கள் நடத்துவோம் என்று உறுதி அளித்து, அனுமதியை பெற்றவர் தலைவர் கலைஞர்.

    2007-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோதும், தடையை நீக்குவதற்காக வலுவான வாதங்களை வைத்து வாதாடியதும் போட்டிகள் நடத்தலாம் என்று அனுமதியைப் பெற்றதும் கழக ஆட்சியில்தான்.

    ஆட்சி மாறியதும், 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த முடியாத சூழல் வந்தது. நம்முடைய இளைஞர்கள் சேர்ந்து, 'மெரினா தமிழர் புரட்சி' என்று சொல்கின்ற அளவிற்கு 2017-ல் மிகப்பெரிய மக்கள் போராட்டம் சென்னைக் கடற்கரையில் நடந்தது.

    அமைதி வழியில் போராடியவர்கள் மேல் வன்முறையை ஏவி கூட்டத்தை கலைத்தது அன்றைக்கு இருந்த அ.தி.மு.க. ஆட்சி. அவர்களே ஆட்டோக்களுக்கு தீ வைத்து கொளுத்தி, அந்த கொடுமையான காட்சியெல்லாம் அப்போது வெளியானது.

    தமிழ்நாடு முழுவதும் நடந்த போராட்டங்களுக்கு, அ.தி.மு.க. ஆட்சி அடி பணிந்தது. அதன் பிறகுதான் மீண்டும் ஏறுதழுவுதல் போட்டிகளை நடத்துகிற நிலை உருவானது. ஆனாலும், நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அனுமதி தருகிறோம் என்ற பெயரில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நாடகம் ஆடியது. ஆனாலும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டுதான் இருந்தது. அந்த வழக்கில், ஒன்றிய அரசு உச்சநீதி மன்றத்தில் என்ன சொன்னது தெரியுமா?

    'ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம் உள்ளிட்ட போட்டிகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. மாட்டு வண்டி பந்தயம், ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை. கிராமப்புற வீரர்களை ஊக்குவிக்கும், கேலோ இந்தியா உள்ளிட்ட எந்தத் திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை" என்று தெரிவித்தார்கள் ஒன்றிய அரசு தரப்பில்.

    நமது திராவிட மாடல் அரசு நீதிமன்றத்தில் என்ன சொன்னது? "ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு போட்டி இல்லை. அது உழவர்களின் வாழ்வோடும், பண்பாட்டோடும் கலந்தது. போட்டிகளை பாதுகாப்பாக நடத்துகிறோம். காளைகளை நமது குடும்பங்கள் கவனத்தோடு வளர்க்கிறோம்" என்று அழுத்தம் திருத்தமாக வாதங்களை வைத்தோம். திராவிட மாடல் அரசின் தீவிர முயற்சியால், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றத்தில் பெற்றோம்.


    இவ்வளவு தடைகளையும் தி.மு.க. அரசு உடைத்து எறிந்ததால்தான் இன்றைக்கு ஏறுதழுவுதல் போட்டி கம்பீரமாக நடக்கிறது. இந்த சாதனை வரலாற்றின் தொடர்ச்சியாக இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், காளைகள், ஏறுதழுவுதல் பற்றிய அருங்காட்சியகமும், நூலகமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    பல நூற்றாண்டிற்கு முந்தைய நூல்களும், ஓவியங்களும், புகைப்படங்களும் இங்கே இருக்கிறது. இதனை உருவாக்கித் தந்த தமிழ் இணையக் கல்விக் கழகத்துக்கு நன்றி.

    அன்னை தமிழ் நிலத்துக்கு பேரறிஞர் அண்ணா 'தமிழ்நாடு' என பெயர் சூட்டினார். தமிழுக்கு 'செம்மொழி' தகுதி பெற்று தந்தார் தலைவர் கலைஞர். இன்றைக்கு தமிழர் பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவுதலுக்கு, நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அரங்கம் அமைத்திருக்கிறோம். இந்த தருணத்தில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்ள விரும்புவது, "சாதிப் பிளவுகளும், மத வேறுபாடுகளும், தமிழர் ஒற்றுமையை சிதைக்க பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து, தமிழர் என்ற நமது அடையாளத்தோடு இதுபோன்ற பண்பாட்டுத் திருவிழாக்களை ஒற்றுமையாக நடத்துவோம்"

    இந்த அரங்கில், காளைகள் வீரமாக களம் இறங்கட்டும்! காளையர்கள் தீரமாக காளைகளை தழுவட்டும். தமிழர்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வோடு கண்டுகளிப்போம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் விரைவில் கலைஞர் நினைவகம் திறக்கப்பட உள்ளது.
    • திமுக அரசின் தீவிர முயற்சியால், நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற்றோம்.

    கீழக்கரை:

    மதுரை மாவட்டம் அலங்கநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக அரங்கத்தின் வாயிலில் அமைக்கப்பட்ட கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இதன்பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * ஏறுதழுவுதல் அரங்கத்தை கட்டியவர் ஸ்டாலின் என்று வரலாற்றில் இடம்பெற்றுவிட்டேன்.

    * மதுரையில் கீழடி, கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம் அமைந்துள்ளது.

    * சிந்து சமவெளி நாகரிகத்தில் திமில் கொண்ட காளைகள் இருந்தன.

    * மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். போட்டி என்று வந்துவிட்டால் தோல்வியை தூள் தூளாக்கும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் நிரூபித்து வருகிறது.

    * தை மாதம் வந்தாலே அமைச்சர் மூர்த்தி, ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறிவிடுவார்.

    * சென்னையில் விரைவில் கலைஞர் நினைவகம் திறக்கப்பட உள்ளது.

    * திமுக அரசின் தீவிர முயற்சியால், நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டிற்கு அனுமதி பெற்றோம்.

    * மத்திய அரசு மதுரையில் 2016-ல் அறிவித்து அடிக்கல் நாட்டிய பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதன்பின்னர் ஏறுதழுவுதல் அரங்கம் திறந்ததும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 மாடுகள் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

    • 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
    • ஜல்லிக்கட்டை நினைவு கூறும் வகையில் நுழைவு வாயிலில் காளை சிலை தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மதுரை மாவட்டம் கீழக்கரையில் 66.80 ஏக்கர் பரப்பளவில் ரூ.62.78 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் 77 ஆயிரத்து 683 சதுர அடியில் நிறைவடைந்துள்ளது. 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மைதான அரங்கிற்கு 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. அரண்மனை போல் இந்த அரங்கத்தின் முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை நினைவு கூறும் வகையில் நுழைவு வாயிலில் காளை சிலை தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் முதன்முறையாக கிரிக்கெட், கால்பந்து, ஆக்கி உள்ளிட்ட போட்டி களை மைதானத்தில் கேலரியில் அமர்ந்து பார்ப்பது போன்று இனிவரும் காலங்களில் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டையும் பார்த்து ரசிக்கும் வகையில் இந்த அரங்கம் உருவாகியுள்ளது.


    இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து ஜல்லிக்கட்டு மைதானத்தை அடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரங்கத்தை திறந்து வைத்தார். மேலும் ஜல்லிக்கட்டு காளை சிலையையும் திறந்து வைத்தார். இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த நூலகம், அருங்காட்சியங்கள், ஒலி-ஒளி காட்சி கூடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

    • ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்து பார்க்கிறார்.
    • மாற்றுத்திறனாளிகள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் ரூ.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை ரசித்து பார்க்கிறார்.

    இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டரிடம் நேரில் மனு அளித்தனர். அவர்கள் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் முதல் முறையாக பார்ப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.

    • அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மட்டுமே அரசு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.
    • மதுரை மாவட்டத்தில் 4 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மதுரை:

    பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் சிறப்பாக நடந்து முடிந்தன. அடுத்தகட்டமாக, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

    இதையொட்டி பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினை நாளை (24-ந்தேதி) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை வந்து கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கைத் திறந்து வைத்து புதிய அரங்கில் நடக்கும் போட்டியையும் தொடங்கி வைக்கிறார்.


    இதுவரை கம்புகளைக் கொண்டு அமைத்த கேலரிகளில் பொதுமக்கள் தொங்கிக் கொண்டும், பாதுகாப்பு இல்லாமலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒருவித பதற்றத்துடன் பார்த்து வந்தனர். கிரிக்கெட் மைதானம் போல் மிகப் பிரம்மாண்டமாக உயர்தொழில் கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அரங்கில் பார்வையாளர்கள் பிரமாண்ட கேலரிகளில் அமர்ந்து முதல்முறையாக நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க ஆவலாக உள்ளனர்.


    இதற்காக கீழக்கரை கிராமத்தில் 77,683 சதுர அடியில் இந்த அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பார்வையாளர்கள் அமர்ந்து கண்டுகளிக்கலாம். மேலும் இந்த அரங்கில் ஜல்லிக்கட்டு தொடர்பான பழங்கால கல்வெட்டுகள் மற்றும் அருங்காட்சியகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் வீரர்களுக்கு காயம் ஏற்படாத வண்ணம் தரையில் தேங்காய் நார்கள் பரப்பி விடப்பட்டுள்ளது.

    இதுவரை தமிழகத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மட்டுமே அரசு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியும் அரசு சார்பில் நடத்தப்படுவதால் இனி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் 4 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரடியாகப் பார்க்க முடியாத உள்ளூர், வெளியூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட, மாநில மக்கள், வெளிநாட்டினர் இந்த புதிய அரங்குக்கு வந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்கலாம்.


    கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர்களுக்கு கிடைக்கும் வசதிகளை போல் இந்த புதிய என்னென்ன வசதிகள் கிடைக்குமோ? அத்தனை வசதிகளும் இந்த புதிய ஜல்லிக்கட்டு அரங்கில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியச் சாலைகளில் இருந்து இந்த அரங்குக்கு வருவதற்கு பிரத்யேகமான புதிய இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    ஜல்லிக்கட்டு நடக்கும் நாட்களில் மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து கீழக்கரை கிராமத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

    • உதவி கலெக்டர் தெய்வநாயகி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    • பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விராலிமலை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதில் 650 காளைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் திரளான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

    இங்கு காலை 8 மணிக்கு போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து உதவி கலெக்டர் தெய்வநாயகி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மேலும் தொடக்க விழாவுக்கு தி.முக மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் தனித்தனியாக திரண்டு இருந்தனர்.

    அப்போது வி.ஐ.பி. களில் முதல் ஆளாக தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் வருகை தந்தார். உடனே போட்டிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    அப்போது தி.மு.க. தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

    அமைச்சர் வந்த பின்னர் தான் போட்டி தொடங்க வேண்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வினர் தொகுதி எம்எல்ஏ விஜயபாஸ்கர் தான் ஆகவே அவர் போட்டியை தொடங்கி வைக்கலாம் என்றனர்.

    இதனால் விழா மேடையில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    பின்னர் அதைத் தொடர்ந்து உதவி கலெக்டர் தெய்வநாயகி போட்டியை தொடங்கி வைத்தார்.

    1¼ மணி நேரம் தாமதமாக போட்டி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ.முத்துராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    • ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஜல்லிகட்டு போட்டியினை ராஜவயல், வடமலாப்பூர் குருக்களையாப்பட்டி ஆகிய 3 கிராமத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நடத்துவர்.

    இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அனுமதியும் அரசிடம் பெறப்பட்டது. மேலும் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர், காளை அடக்கும் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து இதற்கான பெயர் பதிவும் தொடங்கி நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் கொண்டு வரப்பட்ட காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை, காளை பிடிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கோவில் ஜல்லிகட்டு காளைகளுக்கு கற்பூரம் ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து ஜல்லிகட்டை தொடங்கி வைத்தார். அவருடன் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    முதலில் ஊர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.

    இவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட 800 காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. தனித்தனியாக குழுக்களாக பிரிக்கப்பட்ட 250 காளையர்கள் களத்தில் காளைகளை அடக்க களமாடினார்கள். ஜல்லிகட்டு போட்டியை காணவந்த பொதுமக்கள் இதனை கண்டு மெய் சிலிர்த்து கைத்தட்டி, விசில் அடித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

    காளைகளை பிடிக்கும் போது காயம் பட்ட வீரர்கள் உடனடியாக அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிறப்பாக களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும், எதற்கும் அஞ்சாமல் காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த ஜல்லிகட்டு போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    ×