search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்
    X

    தஞ்சை அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

    • ஜல்லிக்கட்டு போட்டிய மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார்.
    • காளைகளை வீரத்தீரத்துடன் அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, மிக்சி, பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூா்:

    தஞ்சை வல்லம் அடுத்த திருக்கானூர் பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதையொட்டி காளைகள் திறந்துவிடப்படும். வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன. அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

    ஜல்லிகட்டில் பங்கேற்க தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் நேற்று இரவு முதலே தஞ்சைக்கு சரக்கு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. இதேப்போல் மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர். மேலும் காளையை அடக்க வந்த வீரர்கள் மது அருந்தி உள்ளனரா? புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்ற வழக்கமான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

    இதேப்போல் காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மொத்தம் 310 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 700 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

    இந்த ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் துள்ளிக்குதித்து களத்துக்குள் வந்து சீறிப்பாய்ந்தது. சில காளைகள் வீரர்களை நோக்கி சீறி பாய்ந்தபோது சிலர் தரையில் படுத்து கொண்டனர். பலர் தங்களை காத்து கொள்ள தடுப்பு கம்பிகள் மீது ஏறி கொண்டனர்.

    காளைகள் களத்தில் நின்று விளையாடியதை பார்வையாளர்கள் மெய்மறந்து கண்டு ரசித்தனர்.

    இதேபோல் களத்தில் நின்று விளையாடிய காளைகளை வீரர்கள் ஆக்ரோஷத்துடன் அடக்கினர்.

    காளையை வீரர்கள் அடக்கும் போது பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

    காளைகளை வீரத்தீரத்துடன் அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, மிக்சி, பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேப்போல் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பரிசை பெற்றுக் கொண்டனர்.

    காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் சிலருக்கு அங்கேயே மருத்துவ குழுவினர் முதலுதவி அளித்தனர். பலத்த காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.

    போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, திருக்கானூர்பட்டி பங்கு தந்தை தேவதாஸ் இக்னேசியர் மற்றும் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர்.

    Next Story
    ×