search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொடைக்கானல்"

    • மதிய வேளையில்கூட முகப்புவிளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது.
    • வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இறுதியில் காணப்படும் வெப்பநிலை தற்போது நிலவி வருகிறது.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் தாக்கமாக தேனி, திண்டுக்கல் மாவட்டத்திலும் 2 நாட்கள் கனமழை பெய்தது. அதன்பிறகு மழை குறைந்து விட்டுவிட்டு சாரல்மழையாக பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் நேற்று காலை முதலே அடர்ந்த பனிமூட்டமும், சாரல்மழையும் பெய்து வருகிறது.

    இதனால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சூரிய ஒளியே இல்லாத அளவிற்கு நகர்முழுவதும் பனிமூட்டம் நிலவி வருகிறது. மலைச்சாலையில் எதிரில் நடந்து வருபவர்களும், வாகனங்களும் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் உள்ளது. இதனால் மாலை, இரவு நேரங்களை போல மதிய வேளையில்கூட முகப்புவிளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது.

    பனிப்பொழிவால் கொடைக்கானலில் சாலையோர வியாபாரிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்ப்டடு வஉள்ளது. முக்கிய வீதிகளில் உள்ள கடைகளும் பகுதியளவு மட்டுமே திறந்துள்ளது. ஏரிச்சாலையில் வியாபாரிகள் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். நகரில் சராசரி வெப்பநிலை 25 டிகிரி செல்சியசுக்கு குறைவாக உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் இறுதியில் காணப்படும் வெப்பநிலை தற்போது நிலவி வருகிறது.

    இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அன்றாடம் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். திண்டுக்கல் நகரிலும் கடந்த 2 நாட்களாக கொடைக்கானலை போன்ற சூழலே நிலவி வருகிறது. கடும் பனிமூட்டம் மற்றும் சாரல்மழையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    • குளிர்சீசன் என்பதால் பூங்காவில் உள்ள பூச்செடிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன.
    • சிலுவை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே உள்ளது. பிரையண்ட் பூங்காவில் பூச்செடி நாற்றுகளை நடவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குளிர்சீசன் என்பதால் பூங்காவில் உள்ள பூச்செடிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக டிசம்பர் மாதத்தில் சிலுவை பூக்கள் பூக்கும். அதன்படி தற்போது சிலுவை பூக்கள் பூத்து குலுங்குவது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.

    எபிடன்ரோபியம், சீசஸ்கிராஸ் என்று தாவரவியல் பெயர் கொண்ட இந்த சிலுவை மலர்கள் குளிர்பிரதேசங்களில் மட்டும் பூக்கக்கூடியதாகும். சிகப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பூத்துக்குலுங்கும். இந்த சிலுவை மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். செட்டியார் பூங்கா மற்றும் தனியார் தோட்டங்களிலும் நடவு செய்யப்பட்ட சிலுவை பூக்கள் பூத்து குலுங்குகிறது.

    இந்த வார இறுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதனைதொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு முன்னேற்பாடுகள் ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் செய்யப்பட்டு வருகின்றன. 

    • நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்தன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை கொட்டி வருகிறது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதுடன் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது. நகரின் மத்தியில் உள்ள நட்சத்திர ஏரியும் நிரம்பிவிட்டது.

    இன்று காலை வரை கொட்டித் தீர்த்த கனமழையால் மேல்மலை கிராம சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கொடைக்கானலில் இருந்து வானியல் ஆய்வு மையத்துக்கு செல்லும் சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சாலை மன்னவனூர், பூம்பாறை ஆகிய மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான பகுதியாகும். நிலச்சரிவு ஏற்பட்டதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. நிலச்சரிவை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதும் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் சீரமைப்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதே போல் இரவு முழுவதும் நீடித்த மழையால் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையான அப்சர்வேட்டரி செம்மண் மேடு பகுதியில் இன்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நேரம் மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்ட பணியாளர்களால் போக்குவரத்து சீரானது.

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, கே.சிபட்டி, குப்பம்மாள்பட்டி, ஆடலூர், பன்றிமலை, பெரியூர், பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே மண்சரிவு, மரக்கிளைகள் விழுந்தன. இதேபோல் பெரும்பாறை அருகே உள்ள மஞ்சள்பரப்பு-மூலக்கடைஇடையே மலைப்பாதையில் மரக்கிளை முறிந்து விழுந்தது.

    இதனால் அப்பகுதியில் உள்ள 5 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்தன. இதனால் மூலக்கடை, புல்லாவெளி, மீனாட்சி ஊத்து பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா, உதவிசெயற் பொறியாளர் மாணிக்கம், அய்யம்பாளையம் உதவிமின் பொறியாளர் செல்லகாமாட்சி ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சாய்ந்து கிடந்த மின் கம்பங்களை அவர்கள் அப்புறப்படுத்தினர். அப்பகுதியில் இன்று மின் வினியோகம் சீராகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல் ஆங்காங்கே மலைபாதையில் முறிந்து விழுந்த மரங்களை அப்பகுதி மக்களே அகற்றி வருகின்றனர். தற்போது மழை குறைந்திருந்தாலும் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று கொடைக்கானல் தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று மாணவ-மாணவிகள் சாரல் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். 

    • கேரளாவில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
    • சுற்றுலாப் பயணிகள் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும், உலக நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

    வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்திருந்த நிலையில், தற்போது கேரளாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களான தூண்பாறை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கேரள சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    கொடைக்கானலில் காலை முதல் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் வாகனங்களை செலுத்தி வருகின்றனர். மலைச்சாலை முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.

    கடும் பனி மூட்டத்தால் சுற்றுலாத்தலங்களில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காணமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதும் குளுகுளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர். 

    • 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊருக்குள் வர பாதை வசதி கிடையாது.
    • 400 வருடங்களுக்கு மேலாக ஒரே கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர்.

    கொடைக்கானல் அருகே உள்ளது வெள்ளக்கவி கிராமம். முற்றிலும் மலைவாழ் மக்கள் வசித்து வரும் இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 400 வருடங்களுக்கு மேலாக ஒரே கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் விநாயகர், பாலசுப்பிரமணி, வைரவன், பூம்பாறைபட்டியான், கருப்புச்சாமி, வேட்டைக்காரன், அம்மன், பூதநாச்சியார், கன்னிமார்சாமி ஆகிய தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர்.

    இந்த கோவில் இப்பகுதி மக்களின் அனைத்து சுக, துக்கங்களிலும் பங்கெடுத்து வருவதாக நம்பி வருகின்றனர். காலையில் வேலைக்குச்செல்லும் தொழிலாளர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரும் கோவிலில் வழிபட்டுதான் தங்கள் பணியை தொடங்குகின்றனர்.

    தங்கள் வீட்டில் திருமணம், காதணி விழா உள்ளிட்ட எந்த விஷேசங்கள் நடந்தாலும் இந்த கோவிலில் தான் அதனை நடத்துகின்றனர்.

    இதுபோன்ற சமயங்களில் கிராமத்தில் உள்ள ஒருவர்கூட விடுபடாமல் அனைவரும் ஆஜராகி விடுகின்றனர். இந்த கோவிலில் வருடத்தில் 2 முறை வழிபாடு நடத்தப்படுகிறது. அந்த விழா காலங்களில் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினரிடமும் வரிவசூல் செய்யப்படுகிறது. ஒருவாரம் நடைபெறும் திருவிழா சமயங்களில் யாரும் காலில் செருப்பு அணிவது கிடையாது. வேலைக்குச் சென்றாலும், பள்ளிக்கு சென்றாலும், வேறு பணிக்கு சென்றாலும் செருப்பு அணியாமலேயே செல்கின்றனர்.

    வெளியூர் நபர்கள் வந்தால் அவர்களுக்கும் இதே கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. செருப்பை ஊருக்கு வெளியில் விட்டு பிறகுதான் உள்ளே வரவேண்டும். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊருக்குள் வர பாதை வசதி கிடையாது. கரடுமுரடான ஒத்தையடி பாதையில் மக்கள் நடந்து செருப்பு அணியாமல் வந்துள்ளனர். தற்போது இந்த ஊருக்கு மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. தங்கள் ஊருக்கு சிமெண்ட் சாலை அல்லது தார்ச்சாலை அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அது விரைவில் நிறைவேறும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து வெள்ளக்கவி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் ஊருக்கு திருவிழா சமயங்களில் யார் வந்தாலும் செருப்பு அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு பல ஆண்டுகளாக உள்ளது. வெளியூர்காரர்கள், போலீஸ்காரர்கள் வந்தாலும் எங்கள் கட்டுப்பாட்டை எடுத்துக்கூறி அவர்களது காலணியை ஊருக்கு வெளியே அகற்றிவிட்டு வர சொல்கிறோம். திருவிழா சமயங்களில் பொதுமக்கள் வழங்கும் வரி பணத்தைக் கொண்டே சாமிக்கு அனைத்து பூஜைகளும் செய்கிறோம்.

    மேலும் எங்கள் காவல் தெய்வமாக கடவுளுக்கு ஆடு, கோழி, சேவல் போன்றவற்றை பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்திகிறோம்.

    ஊருக்குள் வாழும் மக்களிடையே எந்த பேதமுமின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். எங்களது இந்த ஒற்றுமைக்கு ஊர் காவல் தெய்வங்களே காரணமாக உள்ளது என்று அனைவரும் நம்புகிறோம். இதனாலேயே கட்டுப்பாடுகள் கடைபிடித்து திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்றனர்.

    • கோடை சீசன் காலத்தில் ஒரு கோடி மலர்கள் பூத்துக்குலுங்கும்.
    • சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தை தடுக்க குளிர் சீசனில் பூக்கும் பூச்செடிகளை நடும் பணி தொடங்கியுள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி அருகே அமைந்துள்ள பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளின் மிகச்சிறந்த தேர்வாக உள்ளது.

    இங்கு கோடை சீசன் காலத்தில் ஒரு கோடி மலர்கள் பூத்துக்குலுங்கும். தற்போது குளிர் சீசன் தொடங்கியுள்ள நிலையில் பூங்காவில் குறைந்த அளவு பூக்களே உள்ளன. எனினும் சுற்றுலா பயணிகளின் ஏமாற்றத்தை தடுக்க குளிர் சீசனில் பூக்கும் பூச்செடிகளை நடும் பணி தொடங்கியுள்ளது.

    பொதுவாக குளிர் சீசனில் சில வகை பூக்கள் மட்டுமே பூக்கும் என்பதால் அதற்கு ஏற்றாற்போல மலர்பாத்திகளை தயார் செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பாத்தி அமைக்கும் பணி முடிவடைந்தபிறகு மலர் நாற்றுகள் நடப்படும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சீசனுக்கு தகுந்தவாறு விதவிதமான மலர்கள் பூத்துக்குலுங்கும். தற்போது காஸ்மோஸ் மலர்கள் என்படும் பிங்க் நிற பூக்கள் பூத்து குலுங்குகின்றன. 8 இதழ்கள் கொண்ட இந்த மலர்கள் 143 பூக்கள் என்றும், ஐ லவ் யூ பூக்கள் என்றும் அழைக்கப்படும். இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவதால் அதன்முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    குறிப்பாக கொடைக்கானல் வரும் காதலர்கள் இந்த பூக்களை அதிகம் விரும்பி புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.

    • காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் காணப்படுகிறது.
    • சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரங்களில் குறைந்த அளவு வெயில் மற்றும் மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் காலை நேரங்களில் பனிமூட்டத்துடன் குளிர்ந்த சூழல் காணப்படுகிறது.

    மாறுபட்ட இந்த சூழ்நிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று பகல் முழுவதும் மேகமூட்டம் நிலவிய நிலையில் அவ்வப்போது மழை பெய்து பின்னர் இரவில் கனமழையாக கொட்டி தீர்த்தது.

    இன்று காலை முதல் கடுமையான பனிமூட்டமும், சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லாத நிலையில் மாணவ-மாணவிகளும் சிரமத்துடனேயே பள்ளிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன. காலை நேரத்தில் நீண்டநேரம் இதேபோல் பனிமூட்டம் நிலவியதால் ஏரிச்சாலையில் ஒரு சில இடங்களில் தீமூட்டி குளிர்காய்ந்தும் வந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு இந்த சீதோஷ்ண நிலை ரம்மியமாக இருந்தாலும் வாகன ஓட்டிகள் தவிப்புக்கு உள்ளாகினர்.

    • செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பூக்கக்கூடிய மஞ்சள் வண்ண போயின் சியானா மலர்கள் அதிக அளவில் பூத்துக்குலுங்குகின்றன.
    • மர வகைகளைச் சேர்ந்த இந்த மலர்கள் கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் அதிக அளவில் பூத்துள்ளன.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் பல்வேறு வண்ண வண்ண மலர்கள் அந்தந்த சீசனுக்கு ஏற்றவாறு பூத்துக்குலுங்கும்.

    இந்நிலையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பூக்கக்கூடிய மஞ்சள் வண்ண போயின் சியானா மலர்கள் அதிக அளவில் பூத்துக்குலுங்குகின்றன. பெடோபோரம் டூபியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த மலர்கள் மலைப்பகுதிகளில் மட்டுமே மலரக்கூடிய வகைகளாகும். ஆண்டுக்கு ஒருமுறை செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மலைப்பகுதிகளில் மட்டுமே பூக்கக்கூடிய இந்த மலர்கள் தற்போது பெரும்பாலான இடங்களில் பூத்துக்குலுங்குகிறது.

    மர வகைகளைச் சேர்ந்த இந்த மலர்கள் கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் அதிக அளவில் பூத்துள்ளன. இரண்டாம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மலைச்சாலைகளில் பூத்துள்ள மஞ்சள் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இந்த பூக்கள் பூத்துள்ளதால் அதன் முன்பு சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    இந்த பூக்கள் மேலும் சில நாட்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் என்று தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.

    • கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    • சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலை காண வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

    இதனால் பல்வேறு சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் தற்போது கொடைக்கானலில் மேகமூட்டத்துடன் கூடிய இதமான சீதோசனம் நிலவி வருகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையையொட்டி இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட், தூண்பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர். அவ்வப்போது பெய்த சாரல் மழை சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது.

    கடந்த சில நாட்களாக மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மன்ன வனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், எழு ம்பள்ளம் ஏரியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வாங்கி சென்றனர். தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தொடர் விடுமுறையையொட்டி இனி வரும் நாட்களில் மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
    • புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

    தமிழகத்தில் தற்போது காலாண்டு விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி என தொடர் விடுமுறை வருவதன் காரணமாக புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக கொடைக்கானலில் இரவு நேரத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக, சுற்றுலாவை அனுபவிக்க செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

    • தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கின.
    • கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் 3 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அருவிகள் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து சென்றனர். இதனிடையே வனத்துறைக்கு கட்டுப்பட்ட பேரிஜம் ஏரி, மோயர் பாயிண்ட், குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று 2-வது நாளாக கொடைக்கானல் நகர் மற்றும் மலை கிராமங்களில் கன மழை பெய்தது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவி வருகிறது.

    தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    கொடைக்கானல் மேல்மலை, தாண்டிக்குடி, கீழ்மலைப்பகுதிகளில் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் கடும் சிரமத்தை மக்கள் சந்தித்தனர்.

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஊருக்கு வெளியே 6 கி.மீ தூரத்தில் உள்ள இந்த பள்ளிக்கு காலை 9 மணிக்கு வரும் அரசு பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகின்றனர். கனமழை காரணமாக இப்பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் 2 ணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இங்கு வரும் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டது.

    காலாண்டுத் தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளிக்கு செல்ல தயார் நிலையில் இருந்த மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனையடுத்து தனியாருக்கு சொந்தமான லாரிகளில் மாணவ-மாணவிகள் ஏறி மாற்று வழியில் பள்ளிக்கு சென்றனர். ஒரு சில மாணவிகள் கூட்ட நெரிசலில் லாரியில் செல்ல தயங்கி மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் தேர்வை புறக்கணிக்கும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது பூம்பாறை செல்லும் வழித்தடத்தில் மரங்கள் முறிந்து விழுந்ததால் அரசு பஸ் இயக்க முடியவில்லை. மரங்கள் வெட்டி அகற்றியபின் பஸ் இயக்கப்படும் என்றார்.

    மேல்மலை கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழனி மலை 450 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் சென்றிட 697 படிகள் உள்ளன.
    • மலை மீது உட்பிரகாரத்தில் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது.

    இத்தலத்தின் மலை மீதிருக்கும் திருக்கோயிலில் உள்ள மூலவர் தண்டாயுதபாணியின் திருமேனி நவபாஷாணங்களை கொண்டு போகரால் உருவாக்கப்பட்டதாகும்.

    பழனி மலை 450 அடி உயரம் கொண்டது. இதன் மீது ஏறிச் சென்றிட 697 படிகள் உள்ளன.

    மலை மீதிருக்கும் தண்டாயுதபாணியை வழிபடும் முன்பாக மலையடிவாரத்தில் வீற்றிருக்கும் பாத விநாயகரை வணங்கிய பின் அடுத்து கிரிவலம் வரவேண்டும்.

    கிரிவல சுற்று சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவுடையது. இதன் இருபுறமும் கடம்ப மரங்களும், பிற மரங்களும் உள்ளன.

    மலை மீது உட்பிரகாரத்தில் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது.

    இங்குதான் போகர் சமாதி நிலையில் இருந்தாராம்.

    இங்கிருந்து முருகப் பெருமானின் சன்னதிக்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது.

    இறுதியாக இதனுள் சென்ற போகர் மீண்டு வரவேயில்லை. .

    இப்போதும்அவர் அச்சுரங்கப் பாதையினுள் தான் உள்ளார்.

    அவர் பூஜித்து வந்த புவனேஸ்வரியம்மன் சிலை இன்னும் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    ×