search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumavalavan"

    • பறக்கும் படையினர் வாகனத்தை சோதனையிட்டனர்.
    • திருமாவளவன் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான அங்கனூர் அருகே பிரசார வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என்றனர்.

    இதனை கேட்ட திருமாவளவன் தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்று கூறி அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்.

    இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தின் முன்புறம், உள்புறம் ஆகியவற்றை சோதனையிட்டனர். வாகனத்தில் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் திருமாவளவன் மீண்டும் வாகனத்தில் ஏறிச் சென்று அங்கனூருககு புறப்பட்டு சென்றார். திருமாவளவன் எம்.பி.யின் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 4 கலைஞர்கள் இரவு, பகலாக உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்துள்ளனர்.
    • சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு பானை பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    இந்தியா கூட்டணியில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

    அவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பானை சின்னத்தை மக்களிடம் கொண்டுசென்று சேர்க்க புதுச்சேரியை சேர்ந்த பழங்குடியினர் விடுதலை இயக்க மாநில செயலாளர் ஏகாம்பரம் முடிவு செய்தார்.

    இதற்காக வில்லியனூரை சேர்ந்த துரை என்ற சிற்ப கலைஞரிடம் 6 பானைகள் செய்ய ஆர்டர் செய்தார்.

    4 கலைஞர்கள் இரவு, பகலாக உழைத்து பைபரால் ஆன 6 பானைகளை செய்துள்ளனர். இந்த பானைகள் ஒவ்வொன்றும் 7 அடி உயரம், 6 அடி அகலம் கொண்டவையாகும்.

    இந்த மெகா சைஸ் பானைகள் சிதம்பரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு பானை பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் வேட்பாளர் ரவிக்குமார் பிரசாரம் செய்யவும் பானைகள் தயாராகி வருகிறது.

    • கட்சி என்கிற வரையறை கோடுகளை எல்லாம் கடந்து இங்கு வந்திருக்கிறேன்.
    • நற்பணி செய்தவர்கள் அனைவரும் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்.

    புதுச்சேரி:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்துக்கு வந்தார்.

    அங்கிருந்து கார் மூலம் சிதம்பரம் சென்று அங்கு திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்னர் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    முன்னதாக புதுச்சேரி விமான நிலையம் வந்த கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நானும் மக்களில் ஒருவன் என்பதால் என் நிலைதான் அவர்களுக்கும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மாற்றம் என்பதல்ல, இப்போது முக்கியம், நம்முடைய குடியுரிமை, அரசியலமைப்பு உட்பட எல்லாவற்றையும் தற்காத்து கொள்ளும் நேரம் இது.

    கட்சி என்கிற வரையறை கோடுகளை எல்லாம் கடந்து இங்கு வந்திருக்கிறேன். இந்தியன் என்பதும், தமிழன் என்பதும்தான் இன்று எனக்கு பிரதானமாக தெரி கிறது. நற்பணி செய்தவர்கள் அனைவரும் இன்று நாட்டுப்பணி செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கமல்ஹாசனை வரவேற்க மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள் விமான நிலையத்தில் திரண்டு, பேரணியாக அழைத்துச்செல்ல திட்டமிட்டனர். ஆனால் லாஸ்பேட்டை போலீசார் தேர்தல் நன்னடத்தை விதிகளை சுட்டிக்காட்டி, பேரணியாக சென்றால் வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரித்தனர்.

    • ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும்போது அதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிரெய்லர் ரிலீஸ் செய்வார்கள். நான் வெறும் டிரெய்லர் தான்.
    • இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும்.

    சிதம்பரம்:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். சிதம்பரம் தொகுதியில் இன்று அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    இது பிரசார கூட்டம் போல தெரியவில்லை. இது நன்றி அறிவிப்பு விழா போலவும், வெற்றி விழா போலவும் தெரிகிறது. அந்த அளவுக்கு உங்களுடைய எழுச்சி இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் உறுதியாகி விட்டது. ஒன்றிய பா.ஜனதா அரசு தங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் கேட்ட சின்னத்தை உடனே கொடுத்தது. ஆனால் இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் என்ன சின்னம் கேட்டாலும் கொடுக்க முடியாது, அதற்கு பதிலாக வேறு சின்னம் தான் கொடுப்போம் என்று அலைக்கழித்தது. ஆனால் திருமாவளவன் மிகப்பெரிய சட்டப்போராட்டத்தை நடத்தி பானை சின்னத்தை வாங்கி விட்டார்.

    பானை சின்னத்தை வாங்கியதிலேயே நாம் பாதி வெற்றி பெற்றுவிட்டோம். இன்னும் நாம் பாதி வேலைதான் செய்யவேண்டும். அந்த வேலையை செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

    கடந்த முறை நரேந்திர மோடியை ஓட ஓட விரட்டியடித்தது போல, இந்த முறை அதைவிட அதிகமாக ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும்.

    கடந்த முறை திருமாவளவன் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏனென்றால் கடைசி நிமிடத்தில் தான் பானை சின்னத்தை ஒதுக்கினார்கள். இந்த முறை நாம் கேட்டவுடன் பானை சின்னம் ஒதுக்கியிருந்தால் ஒரே நாள் செய்தியில் முடிந்திருக்கும். ஆனால் இந்த முறை சட்டப்போராட்டம் நடத்தியதால் இந்த பானை சின்னம் தேசிய அளவில் பிரபலமாகி விட்டது. எனவே இந்த முறை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை கொடுக்க வேண்டும்.

    கடந்த சட்டசபை தேர்தலின் போது இங்கு பிரசாரத்துக்கு வந்திருந்தேன். அப்போது நமது கூட்டணி கட்சி வேட்பாளர் 17 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவற விட்டுவிட்டார். இனிமேல் அந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். அப்படி செய்தால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.

    டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருமாவளவன் அங்கு சென்று விட்டார். அதை நேற்று இரவு அவர் என்னிடம் சொன்னார். எனவே அவரது தம்பியாக நான் இங்கு பிரசாரத்துக்கு வந்துள்ளேன். இந்த முறை 2 தொகுதிகள் கொடுத்தால் திருமாவளவன் நமது கூட்டணியை விட்டு பிரிந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்று விடுவார், பா.ஜ.க.வுடன் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று அரசியல் விஞ்ஞானிகள் நிறைய பேர் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் திருமாவளவன் மன உறுதியோடு இருந்து அ.தி.மு.க. கூட்டணியாக இருந்தாலும் சரி, பா.ஜ.க. கூட்டணியாக இருந்தாலும் சரி அது கொள்ளை கூட்டணி, தமிழக மக்களை ஏமாற்றுகின்ற கூட்டணி, தி.மு.க. கூட்டணிதான் கொள்கை கூட்டணி, சமூக நீதிக்காக போராடுகிற கூட்டணி என்று கூறி நமது கூட்டணியில் உள்ளார். தி.மு.க. 22 இடங்களில் போட்டியிடுகிறது. ஆனால் தி.மு.க.வின் வெற்றியை விட நான் மிக மிக முக்கியமான வெற்றியாக கருதுவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெற்றியைத்தான்.

    இப்போது எங்கு பார்த்தாலும் பிங்க் பஸ்தான். அதன் உரிமையாளர்கள் பெண்கள் தான். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் மாதம் 900 ரூபாய் சேமிக்கிறீர்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. இந்த 3 வருடத்தில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ள திட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பயனாளியாவது இருப்பார்கள்.

    ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகும்போது அதற்கு 10 நாட்களுக்கு முன்பு டிரெய்லர் ரிலீஸ் செய்வார்கள். நான் வெறும் டிரெய்லர் தான். நமது கழகத்தலைவர் தான் மெயின் பிக்சர். அவர் வருகிற 6-ந்தேதி வருகிறார். அவர் தனது சாதனைகளை, திட்டங்களை எல்லாம் சொல்வார். உங்களிடம் அதிகமாக கேள்விகளை கேட்பார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. பற்றி கேள்விகள் கேட்பார். பின்னர் அவர் அடுத்த தொகுதிக்கு சென்று விடுவார்.



    எனவே நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பெடுத்துக்கொண்டு தேர்தல் வரை பிரசாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். பிரதமர் மோடி 10 வருடங்கள் இந்தியாவை ஆட்சி செய்துள்ளார். ஆனால் இந்தியாவுக்கு ஏதாவது செய்தாரா? 2016-ம் ஆண்டு திடீரென்று நடு ராத்திரியில் எழுந்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னார். ஏ.டி.எம்.மில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் நின்று இறந்து போனார்கள்.

    பிரதமருக்கு நாம் வைத்திருக்கக்கூடிய புது பெயர் 29 பைசா. இது செல்லாக்காசு தான். ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு பிரதமர் மோடியும் செல்லாக்காசாகி விடுவார்.

    இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படும். கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தரப்படும். ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 ரூபாய்க்கு கொடுப்போம். ஒரு லிட்டர் டீசல் விலை 65 ரூபாய்க்கு கொடுப்போம். தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த 24-ந்தேதி விடுதலை சிறுத்தை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • வழக்கறிஞர்கள் மகேந்திரன், பார்வேந்தன் ஆகியோர் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்த மாதம் 20-ந்தேதி கடிதம் கொடுத்தது.

    கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு இருந்தனர்.

    தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக செயல்படும் விடுதலை சிறுத்தை கடந்த கால தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவீதத்தை அதில் குறிப்பிட்டு இந்த தேர்தலில் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். அதனை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 21-ந்தேதி ரத்து செய்து தகவல் தெரிவித்தது.

    தொடர்ந்து கடந்த 24-ந்தேதி விடுதலை சிறுத்தை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பானை சின்னம் ஒதுக்குவது தொடர்பான கோரிக்கை மனு ரத்து உத்தரவை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது. இதனால் இந்த வழக்கு நேற்று முடித்து வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைக்கு பானை சின்னம் வழங்க முடியாது என்று அந்த மனுவை ரத்து செய்தது.

    இதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று மீண்டும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் மகேந்திரன், பார்வேந்தன் ஆகியோர் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். அதனை ஏற்று டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி இதனை அவசர வழக்காக விசாரிக்க முன் வந்துள்ளார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் கேட்ட சின்னம் ஒதுக்காத நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருப்பது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
    • அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அரியலூர்:

    இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் கட்சி தலைவரான தொல்.திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.


    அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனக்கு அசையும் சொத்து ரூ.2 கோடியே 7 லட்சத்து 97 ஆயிரத்து 93 உள்ளது என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.28 லட்சத்து 62 ஆயிரத்து 500 என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக அவர் அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் அதில் சிதம்பரமும் ஒன்று.
    • தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்.

    அரியலூர்:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வி.சி.க தலைவர் திருமாவளவன் அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:-

    தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க., கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்பாளர் தாக்கல் செய்திருக்கிறோம்.

    30-ம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கூறியிருக்கிறார்.

    தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை, பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது. எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல் நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்.

    நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன், உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன், தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள். மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராக தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் அதில் சிதம்பரமும் ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.
    • தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா 3-வது முறையும் ஆட்சி அமைத்தால், இதுதான் கடைசி தேர்தல் என்கிற சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதை காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, வருகிற தேர்தல் மூலம் இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் மக்கள் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன.

    வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு தேர்தலில் நிற்பதற்கு கூட வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. அதனால் பிரதமர் அசாமுடன் திரும்பி வந்து விட்டார். இச்சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் மிகவும் அமைதியாக பெரிய அளவில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.


    எனது பிரசாரம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி தொடங்கி 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

    மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும். இதன் அடிப்படையில் எங்களது பிரசாரம் அமையும்.

    தமிழகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு பிரதமர் வந்து பேசுகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது. எனவே, தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.
    • தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்களின் பேராதரவு உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் பேராதரவை கொடுக்க காத்திருக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.

    சிதம்பரம் தொகுதியில் வருகிற 25-ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். முதலமைச்சர்களை கைது செய்யும் புதிய நடைமுறையை அரசியலில் பா. ஜனதா கையாண்டு வருகிறது. பழிவாங்கும் வெறியோடு பா.ஜ.க. செயல்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜனதா தோல்வி பயத்தில் இது போன்று செய்து வருகிறது.

    தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த முறை 40-க்கு 40தையும் வெல்வோம். தேர்தல் முடிவுகள் வரத் தான் போகிறது. அப்போது மக்கள் பா.ஜனதாவிற்கு எவ்வளவு மதிப்பெண் போட போகிறார்கள் என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
    • மராட்டியத்தில் ஒரு தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அந்த கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தை தவிர மேலும் 4 மாநி லங்களிலும் போட்டியிடுகிறது. தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மராட்டியம் ஆகிய 4 மாநிலங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. இந்த 4 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

    கேரளாவில் 5 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 6 தொகுதிகளிலும், தெலுங்கானாவில் 10 தொகுதிகளிலும், மராட்டியத்தில் ஒரு தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் ஆந்திராவிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.
    • இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன் வந்து பதவி விலக வேண்டும்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு கவர்னர் விதித்தத் தடைகளையெல்லாம் மீறி சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் காரணமாக பொன்முடி மீண்டும் உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.

    உச்சநீதிமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளிப்பது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு மாறாக நடந்து கொள்வது, கவர்னருக்கான மரபுகளை மீறி அரசியல் ரீதியாகத் தலையிடுவது என்று தமிழ்நாடு கவர்னர் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    'ஆளுநருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா? என்று கேட்ட உச்ச நீதிமன்றம், "ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். முதல்-அமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்தில் தலையிட்டு உள்ளார்.

    அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாகப் பின் பற்றவில்லை" என்றெல்லாம் கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்து இருக்கிறது. இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன் வந்து பதவி விலக வேண்டும்.

    ஆளுநர் பதவி விலகாவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை.
    • தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

    இதன்படி சிதம்பரத்தில் 6-வது முறையாக அக்கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்ட தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிதம்பரம், விழுப்புரம் 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்று இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    சிதம்பரம் தொகுதியில் 6-வது முறையாக போட்டியிடுகிறேன். இந்த முறையும் பாராளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு களம் காண்கிறேன்.

    அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக ராகுல் காந்தி மேற்கொண்ட 2 கட்ட இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாட்டை பாசிச சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்கான தேர்தலாக இது அமைந்துள்ளது. 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் கண்கூடாக எந்த வளர்ச்சியையும் காணவில்லை.

    மக்களை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுபடுத்தி அதனை நிலைப்படுத்த நினைக்கிறார்கள். அகில இந்திய அளவில் ஒரு அமைதிப் புரட்சி நிகழ இருக்கிறது. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு அது பிரதானமான தேவையாக இல்லை.

    பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை மக்களின் வேட்கையாக இருக்கிறது. தேர்தல் யுத்தம் நடப்பது காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் அல்ல. மக்களுக்கும், சங்பரிவாருக்கும் நடக்கும் யுத்தம் தான் இந்த தேர்தல் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் அமையும்.

    இ.வி.எம். மிஷினை தில்லுமுல்லு செய்து வெற்றி பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. அதற்கு ஒரே தீர்வு 100 விழுக்காடு மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எப்படியாவது பாரதிய ஜனதா 2-வது பெரிய சக்தியாக வந்துவிட வேண்டும் என்று பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் காலூன்றி இங்கும் வட இந்திய மாநிலங்களில் இருப்பதைப் போன்ற வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்துவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் தி.மு.க., அ.தி.மு.க. வேறு அணிகளில் தேர்தலை சந்தித்தாலும் சமூக நீதி என்று ஒரு புள்ளியில் அணி திரண்டு இருக்கிறோம்.

    இந்த மாபெரும் கருத்தியல் யுத்தத்தில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். அகில இந்திய அளவில் நாட்டையும் அரசமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும்.

    இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சின்னங்களில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன். 2 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளும் சிறுத்தைகளின் தொகுதிகள் தான் என்ற அடிப்படையில் களப்பணியாற்றுவோம்.

    பா.ம.க. எப்பொழுதும் சாதிய மதவாத அரசியலில் திளைத்துக் கிடக்கிறார்கள், ஓ.பி.சி. , எம்.பி.சி. மக்களுக்கு எதிரான நிலைப்பாடாகவே பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருப்பதை பார்க்கிறேன்.

    ஓ.பி.சி., எம்.பி.சி. மக்களை பாட்டாளி மக்கள் கட்சி கைவிட்டாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். நாளையில் இருந்து மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இன்னும் பா.ஜ.க., அ.தி. மு.க. ஒரு கூட்டணியாக இன்னும் உருவாகவில்லை. தி.மு.க. ஏற்கனவே கூட்டணியை கட்டமைத்து தேர்தலுக்கு தயாராக உள்ளது.

    பா.ஜ.க. கூட்டணி தன்னோடு சேர்ந்த கட்சிகளில் ஊடுருவி அவர்களை நீர்த்துப்போக செய்வது அனைவரும் அறிவார்கள். இந்த நிலையில் பா.ஜ.க. வுடன் பா.ம.க. கூட்டணி சேர்ந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    கலைஞர், ஜெயலலிதா போன்ற கவர்ச்சிமிகு தலைவர்கள் இல்லை என்ற நம்பிக்கையில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று பகிரங்க முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு இடம் கொடுக்க வாய்ப்பில்லை.

    பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை. மோடி, அமித்ஷாவுடன் கருத்தியல் ரீதியாக முரண் ஏற்பட்டு கூட்டணியில் இருந்து பிரிந்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கவில்லை, உள்ளூர் தலைவர் அண்ணாமலையுடன் கருத்து முரண் ஏற்பட்டு தான் தேர்தலை தனித்தனியாக சந்திக்கின்றனர்.

    சிறுபான்மையினர் வாக்குகளை ஒட்டு மொத்தமாக தி.மு.க. அணி பெற்றுவிடாமல் தடுப்பதற்கு அ.தி.மு.க. பிரிந்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனை உணர்ந்து சிறுபான்மையின மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×