search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KS Alagiri"

    • சென்னை மாநகரத்தில் மட்டும் 17 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது.
    • மாநில அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடி நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    சுவாமிமலை:

    கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் வாக்குச்சாவடி கமிட்டியின் பாசறையை அமைத்து வருகிறோம்.

    சென்னை மாநகரத்தில் மட்டும் 17 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இந்தியாவில் வேறு எங்கும் இதுபோன்று மழை பெய்தால் எந்த ஒரு நகரமும் தாங்காது. சென்னையை பொருத்தவரை மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறமையாகவே கையாண்டுள்ளது.

    ரூ.4 ஆயிரம் கோடியை முறையாக செலவு செய்துள்ளனரா என்பதை அவர்களது தணிக்கை குழு முடிவு செய்யும். அதனை நம்மை போன்றவர்கள் முடிவு செய்ய முடியாது. இந்தியா கூட்டணி தற்போது பளிச்சென உள்ளது. மாநில அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடி நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மிச்சாங் புயல் நிவாரணமாக 1011.29 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியதாக பா.ஜ.க.வினர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.
    • மிச்சாங் புயல் இடைக்கால நிவாரண நிதியாக முதலமைச்சர் கேட்டது ரூ.5,060 கோடி.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பேரிடர் நிவாரண நிதியாக 7,532 கோடி ரூபாயை கடந்த 13.6.2023 அன்று 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளது . இதில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 450 கோடி ரூபாய் மட்டுமே. 6 மாதங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிவாரணத் தொகையை, ஏதோ புயல் பாதித்த பிறகு ஏதோ தமிழ்நாட்டுக்கு வழங்கியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்தியில் ஆளும் மோடி அரசும், இங்குள்ள பா.ஜனதாவும் முனைந்திருக்கிறார்கள். 70 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக அதிக கனமழை பெய்து பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு இதுவரை நிவாரண நிதி ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட 450 கோடி ரூபாயை மிச்சாங் புயல் நிவாரணத்துக்கு பொய் கணக்கு காட்டுகிறார்கள்.

    வழக்கமான மாநில அரசுக்கான பேரிடர் நிவாரணப் பங்கை, நிவாரண நிதி போன்று கணக்குக் காட்டி ஏமாற்றுகிறது மத்திய நிதித்துறை அமைச்சகம்.

    மிச்சாங் புயல் நிவாரணமாக 1011.29 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியதாக அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க.வினர் பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள்.

    நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டமும், மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடும் வெவ்வேறு. 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு மட்டுமே மிச்சாங் புயல் நிவாரணம் ஆகும். 561.29 கோடி ரூபாய் என்பது இனி வரும் காலத்தில் செய்யத் திட்டமிட்டுள்ள வெள்ள அபாய தடுப்புப் பணி திட்டத்துக்கான நிதியாகும்.

    மிச்சாங் புயல் இடைக்கால நிவாரண நிதியாக முதலமைச்சர் கேட்டது ரூ.5,060 கோடி. ஆனால் யானை பசிக்கு சோளப்பொறி போல் வெறும் 450 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழ்நாட்டை வழக்கம்போல் மத்திய அரசு வஞ்சித்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 5 மாநில தேர்தல் நடந்ததால் சற்று தொய்வாக இருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
    • தலைவர் பதவிக்காக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தலைவர் பதவியை பிடிக்க பலர் முயற்சி செய்தும் மேலிடம் இன்னும் எந்த சிக்னலும் காட்டவில்லை.

    ஆனால் அனைவரையும் அரவணைத்து இணக்கமாக செல்லும் உணர்வு படைத்தவரை தலைவராக நியமிக்க மேலிடம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், ஜோதி மணி ஆகிய நால்வரில் ஒரு வரை நியமிக்கலாம் என்றார். 5 மாநில தேர்தல் நடந்ததால் சற்று தொய்வாக இருந்த நிலையில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.


    தலைவர் பதவிக்காக முயற்சிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் டெல்லியில் காய் நகர்த்தி வருகிறார்கள். தலைவர் பதவி மீது தனக்கு ஆசையாக இருப்பதாக வெளிப்படையாகவே கார்த்தி ப.சிதம்பரம் கூறினார்.

    நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து பேசினார். அப்போது தனக்கு தலைவர் பதவி தந்தால் சிறப்பாக செய்வேன் என்று தெரிவித்துள்ளார். கர்நாட காவில் டி.கே.சிவகுமாரும், தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டியும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்சி நடத்தியதால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அதேபோல் தமிழ்நாட்டின் தலைமை பதவி எனக்கு வழங்கினால் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வர உழைக்க தயாராக இருப்பதாக கார்கேவிடம் உறுதியளித்துள்ளார். அதை கேட்டுக் கொண்ட கார்கே பார்க்கலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    • மக்கள் களநிலவரத்தை நன்கு அறிந்திருக்கிறார்கள்.
    • விமர்சனங்கள் உண்மை நிலையை புரிந்து கொண்ட மக்களிடம் எடுபடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் தீவிர கண்காணிப்பின் காரணமாக முறையான முன்னேற்பாடுகள், விரிவான கட்டமைப்பு தயாரிப்புகளால் வெள்ள பாதிப்பால் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டிருக்கிறது.


    கட்சி எல்லைகளைக் கடந்த மக்களின் ஆதரவோடு இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதில் எவர்மீதும் பழி போடுகிற படலத்தினால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. மக்கள் களநிலவரத்தை நன்கு அறிந்திருக்கிறார்கள். அதனால் இத்தகைய விமர்சனங்கள் உண்மை நிலையை புரிந்து கொண்ட மக்களிடம் எடுபடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது.
    • பிற மாநிலங்களில் பா.ஜனதா வென்றாலும் வாக்கு சதவீதம் என்பது மிகக்குறைந்த வித்தியாசம் தான்.

    சென்னை:

    4 மாநில தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    தெலுங்கானாவில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி உள்ளது. இந்தியா கூட்டணியில் முக்கியமான கட்சியாக இருப்பது காங்கிரஸ். தென்னிந்தியாவில் பா.ஜனதாவை நுழைய விடாமல் இந்தியா கூட்டணி அரணாக இருக்கிறது.

    பிற மாநிலங்களில் பா.ஜனதா வென்றாலும் வாக்கு சதவீதம் என்பது மிகக்குறைந்த வித்தியாசம் தான். அதுவும் பெரும் பண பலத்தால் சாதித்து இருக்கிறார்கள்.

    வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் அந்த அளவுக்கு அவர்களால் முடியாது. தென்னிந்தியாவை போல் வட இந்தியாவிலும் பா.ஜனதாவை நுழைய விடாத நிலையை மக்கள் உருவாக்குவார்கள். பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
    • அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு டாக்டரை வழக்கிலிருந்து விடுவிக்க ரூபாய் 3 கோடி பேரம் பேசி ரூபாய் 20 லட்சம் லஞ்சப் பணம் பெற்று காரில் தப்ப முயன்ற மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் 25 கி.மீ. தூரம் விரட்டி சென்று பலவந்தமாக மடக்கி கைது செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊழலை ஒழிக்க வந்த புனிதர்கள் போல் வேடம் தரித்து வந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

    அமலாக்கத்துறையோடு நெருங்கிய உறவு வைத்திருக்கிற அண்ணாமலை அதற்கான ஆதாரங்களை பெற்று குற்றச்சாட்டுகளை கூற தயாராக இருக்கிறாரா? அப்படி தயாராக இல்லையெனில் தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என கூறுவதோடு, பொது மன்னிப்பை அவர் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரமற்ற அவதூறான கருத்து தான் என்ற முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் இனியும் தொடருமேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடியை தீவிரமாக எதிர்க்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை வேகமாக செயல்படவில்லை.
    • 5 ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டால் சோர்வும், சுணக்கமும் இருக்கிறது. வேகமாக செயல்படுவதில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இது தொடர்பாக பலமுறை டெல்லி சென்றும் முறையிட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை டெல்லி மேலிடம் அந்த கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையில் நேற்று நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி சென்றார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலக வாயிலில் மகளிர் அணியினர் கருப்பு உடை அணிந்து அமர்ந்து இருந்தனர்.

    இதற்கிடையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறும்போது:-

    பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களை அழகிரி புறக்கணிக்கிறார். கூட்டங்களுக்கு எல்லோரையும் அழைப்பதில்லை. அவர் 5 ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டால் சோர்வும், சுணக்கமும் இருக்கிறது. வேகமாக செயல்படுவதில்லை. வேலை போன போலீஸ் அதிகாரி ஒருவரை பா.ஜனதாவுக்கு தலைவராக நியமித்துள்ளார்கள்.

    அவர் தினம் ஒரு பொய்யை சொல்லி வருகிறார். அதற்கு பதிலடி கொடுக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடியை தீவிரமாக எதிர்க்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை வேகமாக செயல்படவில்லை.

    எனவே புதிய தலைமை வேண்டும் என்று இரண்டு, மூன்று முறை டெல்லி மேலிடத்தில் கூறியிருக்கிறோம். கண்டிப்பாக மாற்றுவோம் என்றார்கள். கடந்த மாதமும் டெல்லியில் புகார் செய்தோம். அப்போதும் மாற்றுவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை மாற்றவில்லை.

    புதிய தலைமை தேவை என்பதை பலமுறை மேலிடத்தில் தெரிவித்தாகிவிட்டது. ப.சிதம்பரம், நான், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சட்டமன்றக் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை எல்லோருமே சொல்லி வந்துள்ளோம்.

    இவரை வைத்துதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் பாரத்தை வேறு யார் மீதாவது வைத்துவிட்டு வேலை செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா?
    • வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா? இதுவரை இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் மோடியின் கனவு கேள்விக்குறியாகவே இருக்க முடியும். ஆனால், அதற்குள்ளாக சமூக ஊடகத்தில் தவறான புள்ளி விவரத்தின் அடிப்படையில் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்டதாக செய்திகள் பரப்பப்பட்டது. இதன்மூலம் ஐந்து மாநில தேர்தல்களில் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது.

    விநியோகம் அல்லது சமத்துவமற்ற குறியீட்டின் அடிப்படையில் மட்டுமே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய முடியும். இந்த குறியீடு 0-100 என உலகப் பொருளாதாரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி சீனா மற்றும் ஜப்பானின் மதிப்பு 50 க்கும் மேல் உள்ளது. ஆனால், 21.9 மதிப்பு உள்ள இந்தியாவை விடப் பல மடங்கு அதிகமாக இந்த நாடுகளின் பொருளாதார பங்களிப்பு உள்ளது.

    5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தால் ஏழைகள், பணக்காரர்கள் என்று இந்தியா இரண்டாகப் பிளவுபடுமா? பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சிப் பாதையில் இணைக்கப்படாமலேயே மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. வளர்ச்சியில் சமநிலைத்தன்மை இல்லை. மோடி ஆட்சி என்பது யாருக்காக நடைபெறுகிறது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அதேநேரத்தில் வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் திருப்பூர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
    • திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்ப பெறப்பட்டது .

    திருப்பூர்:

    காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் திருப்பூர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இருந்து 4000 கோடி துணி வந்தடைந்திருக்கிறது.

    12.6 சதவீதம் காங்கிரஸ் ஆட்சியில் வரி விதிக்கப்பட்டது. அதனால் வங்கதேச துணிகள் வரவில்லை. ஆனால் பா.ஜ.க. வரி விதிக்காததால் வங்கதேச துணிகள் வருகின்றன. மத்திய அரசு இதனை சரி செய்ய வேண்டும். சீனாவில் இருந்து வருகிற பாலிஸ்டராலும் பிரச்சனை. பாலிஸ்டர் இங்கு அதிகளவில் கிடைப்பதில்லை. அதனை உற்பத்தி செய்பவர்கள் அதானி அம்பானி, வேறு யாருக்கும் உற்பத்தி செய்ய வாய்ப்பு இல்லை. இதனால் பாலிஸ்டரால் வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனையும் சரி செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, நெசவு தொழிலை அதிகமானோர் சார்ந்துள்ளனர். மத்திய அரசின் தவறான கொள்கையால் அவர்கள் பாதிப்படைந்துள்ளனர். கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அரசு கையில் தான் உள்ளது. மன்னர் காலத்திலும் மன்னர் கையில் தான் கோவில்கள் இருந்தன.

    கோவில்கள் அரசுக்கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சிறந்தது. சேகர்பாபு சைவ பழம் போல் தெரிகிறார். 5000 கோடிக்கு மேல் கோவில் சொத்துக்களை திரும்ப பெற்றுள்ளார். இதற்கு நிர்மலா சீதாராமன் பாராட்ட வேண்டாமா?

    தமிழக கவர்னருக்கு மாலைக்கண் நோய். அதனால்தான் தமிழகத்தில் தீண்டாமை என தெரிவிக்கிறார்.

    சட்டமன்றத்தின் மூலம் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டுமா உச்சநீதிமன்றம் சென்றுதான் நிறைவேற்ற வேண்டுமா என்பதைத்தான் நாங்களும் கேட்கிறோம்.

    தமிழக முதல்வர் சில நடவடிக்கைகள் தவறாக நடந்தால் திரும்ப பெறுகிறார். திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் திரும்ப பெறப்பட்டது .

    காவிரியை வைத்து கர்நாடகா பா.ஜ.க., தமிழக பா.ஜ.க. அரசியல் செய்கிறார்கள். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறிய கருத்து தொடர்பாக அவரிடம் பேசி சரி செய்வோம். பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சி மாநிலங்களில் மட்டும் சோதனைகள் நடந்தால் அரசியல் காரணமே தவிர வேறு இல்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலை காட்டிலும் கூடுதல் இடங்கள் கேட்போம்.

    சமீபத்தில் நடந்த கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு நடிகர், நடிகைகளை அழைத்தவர்கள் உலகக்கோப்பை வென்றவர்களை அழைக்கவில்லை.

    அந்த ஸ்டேடியம் சர்தார் வல்லபாய் படேல் பெயர் இருந்தது அதனை மோடி தன் பெயருக்கு மாற்றி கொண்டார்.

    நில அபகரிப்பு போல் ஸ்டேடியம் அபகரிப்பு இருக்கிறது. அமலாக்கத்துறை மணல் அள்ளும் விஷயத்தில் எந்த மாநிலத்திற்கு சென்று சோதனை செய்தது. தமிழகத்தில் மட்டும் அமலாக்கத்துறை முனைப்பு காட்டுவதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. அமலாக்கத்துறை பண பரிமாற்றத்தில் தான் கவனம் செலுத்த வேண்டும். மணல் பரிமாற்றத்தில் அல்ல. அமித்ஷா மகன் சொத்து மதிப்பு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஏன் அந்த பக்கம் செல்வதில்லை. அமலாக்கத் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஒருவர் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை என்றால் அவர் மீது தனிப்பட்ட வழக்கு ஏதேனும் நிலுவையில் இருக்க வாய்ப்பு உண்டு. 5 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும். தமிழகத்தில் அமோகமாக வெற்றி பெறும்.

    கவர்னர் வேண்டாம் என்றோ அதிகாரத்தை குறைக்க வேண்டும் என்பதோ காங்கிரஸ் கருத்தல்ல. மரபை மீறக்கூடாது என்று தான் சொல்கிறோம்.

    இழுக்கு ஆர்.என்.ரவிக்கு அல்ல தமிழ்நாடு கவர்னருக்கு தான். காங்கிரஸ் கட்சியில் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பது இல்லை. கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் தான் பிரதமர் குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

    • உண்மையில், ஏமாற்றப்பட்டதாகக் கூறும் புகார்தாரர் ஒருவர் கூட இல்லை.
    • தேர்தல் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் திசை திருப்ப, வஞ்சகம், பொய்களால் முன்கூட்டியே திட்டமிட்டு, ஜோடிக்கப்பட்ட நடவடிக்கை இது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மக்களின் குரலாக பண்டித ஜவஹர்லால் நேருவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த நேஷனல் ஹெரால்டு பத்திரிகை இன்றைய ஆட்சியாளர்களால் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் அடக்கு முறையை எதிர்த்து வெற்றி கண்ட நேஷனல் ஹெரால்டு இன்றைய ஆட்சியாளர்களின் பழிவாங்கும் போக்கு நிச்சயம் முறியடித்து காட்டும்.

    20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இருந்து 2004-ல் ஒன்றிய பா.ஜ.க. அரசை அகற்றி, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதை எவரும் மறுக்க முடியாது.

    ஆனால், அத்தகைய ஆட்சியை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் மீது ஏதாவது ஒரு வகையில் ஊழல் வழக்கில் சிக்க வைக்க மோடி அரசு பகீரத முயற்சிகளை மேற்கொண்டது.

    அதற்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில் 2014-ல் சுப்பிரமணியசாமி கொடுத்த புகாரை பயன்படுத்தி, பழிவாங்கும் நோக்குடன் நேஷனல் ஹெரால்டு மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

    எந்தவித முகாந்திரமும் இல்லாமல் பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான ரூபாய் 750 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    நேஷனல் ஹெரால்டு தொடர்புடைய அசோசியேட் ஜர்னல் லிமிடெட் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருப்பது 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் அடையப்போகும் தோல்விகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் பா.ஜ.க.வின் அவநம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. சில முன்னறிவிப்பு அல்லது முக்கிய குற்றத்தின் விளைவாக மட்டுமே பண மோசடி தடுப்பு நடவடிக்கை இருக்கும். அசையா சொத்தை மாற்றவில்லை. இந்த வழக்கில் பண பரிவர்த்தனை இல்லை. குற்ற நடவடிக்கை இல்லை. உண்மையில், ஏமாற்றப்பட்டதாகக் கூறும் புகார்தாரர் ஒருவர் கூட இல்லை. தேர்தல் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் திசை திருப்ப, வஞ்சகம், பொய்களால் முன்கூட்டியே திட்டமிட்டு, ஜோடிக்கப்பட்ட நடவடிக்கை இது.

    சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற எந்தவொரு கூட்டணியினராலும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க. அடையப்போகும் தோல்வியைத் தடுக்க முடியாது. அசையா சொத்துகளை அடமானம் வைத்தே கடன் பெறப்பட்ட நிலையிலும், பணப்பரிமாற்றத்தில் விதிமீறல் இல்லாத நிலையிலும், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அடையாளக் குரலாக, காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமாக திகழும் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் சொத்துகளை முடக்குவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இது ஒரு அப்பட்டமான சட்டவிரோத பழிவாங்கும் நடவடிக்கையாகும். இத்தகைய அற்பத்தனமான பழிவாங்கும் உத்தியை வைத்து எந்த வகையிலும் இந்திய தேசிய காங்கிரசை அச்சுறுத்த முடியாது. இதை சட்டரீதியாக காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தேர்தல் களத்தில் மோடியும், அமித்ஷாவும் பிரசாரம் செய்தால் வெற்றி என்கிறார்கள் பா.ஜனதாவினர்.
    • கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தலில் இருவரும் கை கோர்த்து பிரசாரத்துக்கு சென்றார்கள். ஆனால் ‘கை’ வென்றது.

    சென்னை:

    நேரு பிறந்த நாளையொட்டி கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு முகம் கொடுத்தவர் நேரு. ஒரு குண்டூசி கூட செய்ய முடியாத நிலையில் இருந்த இந்தியாவை உலகின் தொழிற்கூடமாக உருவாக்கினார்.

    ஒரு வேளை சோற்றுக்கு அமெரிக்காவை எதிர்பார்த்த நிலையில் ஐந்து ஆண்டு திட்டங்கள் மூலம் பசுமை நிறைந்த நாடாக உருவாக்கினார்.

    இதர பிற்பட்ட சமூகத்துக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறார் மோடி. சிறந்த கல்வி கற்பதும், வேலை செய்வதும் எல்லோருக்குமான வாய்ப்பாக இல்லாத காலகட்டத்தில் முதல் அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்து ஓ.பி.சி.க்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுத்து முன்னேற வைத்து சமூக நீதியை நிலை நாட்டினார்.

    தேர்தல் களத்தில் மோடியும், அமித்ஷாவும் பிரசாரம் செய்தால் வெற்றி என்கிறார்கள் பா.ஜனதாவினர்.

    கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தலில் இருவரும் கை கோர்த்து பிரசாரத்துக்கு சென்றார்கள். ஆனால் 'கை' வென்றது. அவர்கள் கைகளுக்கு செல்வாக்கு இல்லாமல் போனது. தோற்றார்கள் என்பது மட்டுமல்ல 33 தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தார்கள். இதுதான் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மக்கள் கொடுத்த பரிசு.

    இப்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மீண்டும் இதே நிலையை சந்திப்பார்கள். பல தொகுதிகளில் டெபாசிட்டை இழக்கும் வகையில் படுதோல்வியை சந்திப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதிய கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அல்ல.
    • ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பைகூட மத்திய அரசு எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது.

    சாதிவாரி கணக்கெடுப்பு...! பரவலாக பேசப்படுகிறது. பீகார் மாநிலத்தில் நடத்தி முடித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற குரல் ஒலித்து வருகிறது.

    அவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தமிழகத்தில் கிடைக்கப் போகும் பலன் என்ன? என்பது பற்றிய கேள்விக்கு விளக்கம் அளித்து உள்ளார்கள் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    இந்திய சமூக அமைப்பு 5 ஆயிரம் ஆண்டுகளாக சமசீரற்ற முறையில் இருந்தது. ஒரு தரப்பு உயர் சாதி என்று அதிகார செருக்கில் இருந்தது.

    இன்னொரு தரப்பு ஊருக்கு ஒதுக்குப்புறமாக யார் கண்ணிலும் படாமல் உரிமையற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். அன்றைய சமூக அமைப்பில் அதை நியாயம் என்று கூறி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    அவரவர் பிறந்த சமூகத்தின் அடிப்படையில்தான் வாழ வேண்டும். அது ஈஸ்வரன் கொடுத்த வரம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    நூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு சில சமூகத்தில் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்ற நிலை இருந்தது. பிறந்தது முதல் இறக்கும் காலம் வரை அப்படித்தான் வாழ வேண்டும். அதையும் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் அங்கீகரித்தார்கள். ஏற்றுக்கொண்டார்கள். இதைவிட காட்டுமிராண்டித்தனமான அநாகரீகமான, மானுடநெறி பிறழ்ந்த சமூக அமைப்பு இருக்க முடியாது.

    மிருகங்களுக்கு இடையே கூட இத்தகைய பாகுபாடு கிடையாது. பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கமும் இங்குதான் இருந்தது. வயதான கிழவருக்கு இளம்பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள். அவர் இறந்ததும் அவரது உடலோடு அந்த பெண்களையும் கட்டி வைத்து எரித்து விடுவார்கள். அந்த பெண் பத்தினியாகி விட்டார்.

    சிவலோக பதவி அடைந்துவிட்டார் என்று ஏற்றுக்கொள்வார்கள். இந்த காட்டுமிராண்டிதனத்தை ஒழிக்கத்தான் சீர்திருத்தவாதிகளும், புரட்சியாளர்களும் பாடுபட்டார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். மனித உணர்வுமிக்க சமூக நீதியை அவர்கள் நிலை நாட்டினார்கள்.

    அதேபோல்தான் இடஒதுக்கீடு முறையும். எல்லா சமூகங்களாலும் உடனடியாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உயர்ந்த நிலைக்கு சென்றுவிட முடியாது என்ற நிலை இருந்தது. அவர்களையும் கைதூக்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு முறை தேவைப்பட்டது.

    நமது அரசியல் சட்டத்தை இயற்றிய போது இடஒதுக்கீட்டை தலைவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.

    ஆனால் இட ஒதுக்கீடு அவசியம் என்ற குரல் முதன் முதலில் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியது. பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு சேவலை வழங்கியது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    அரசியல் சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று கோர்ட்டு சுட்டிக் காட்டியது. இதுதான் இடஒதுக்கீடு அவசியத்துக்கான பொறியாக அமைந்தது. தமிழகத்தில் தந்தை பெரியார் குரல் கொடுத்தார். அவர் அதிகாரத்தில் இல்லாததால் அந்த குரல் எட்ட வேண்டிய இடத்தை எட்டவில்லை.

    இந்த பிரச்சனை பெருந்தலைவர் காமராஜரின் காதுகளை எட்டியது. அவரும் அதன் நியாயத்தை உணர்ந்தார். பிரதமர் நேருவின் கவனத்துக்கு கொண்டு சென்று நியாயத்தை எடுத்து சொன்னார். இதனால் அரசியல் சட்டத்தை திருத்தி இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றார்.

    அதை ஏற்றுக்கொண்ட நேரு பாராளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா கொண்டு வர முடிவு செய்தார். ஆனால் அப்போது எம்.பி.க்களாக அதிக அளவில் இருந்த உயர் சாதியினரும், இடஒதுக்கீடு தேவையில்லை என்பதை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டவர்களும் அரசியல் சட்டம் இப்போதுதான் இயற்றப்பட்டுள்ளது. அதில் உடனடியாக திருத்தம் தேவையா? என்றவர்களும் இருந்தார்கள். இதை உணர்ந்த நேரு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். சுதந்திரம் பெற்றது அனைவருக்கும் சமநீதி, சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இப்போது அதற்கு சட்டத் திருத்தம் அவசியமாகிறது. எனவே உங்கள் மாநில எம்.பி.க்களை இந்த சட்டம் நிறைவேற வாக்களிக்க சொல்லுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதனால் அரசியல் சட்ட திருத்தம் நிறைவேறியது. இந்திய அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் சட்டத் திருத்தமும் அதுதான்.

    அப்போது சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரும் தேவையை உணர்ந்து சட்டத் திருத்தத்துக்கு ஒத்துழைத்தார். சட்டப்படி இடஒதுக்கீடு கிடைத்தாலும் சமூகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப துல்லியமாக இல்லை என்ற குரல் எழுந்தது. அனைத்து தரப்பு மக்கள், ஏழைகள் கீழ் நிலையில் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டை பெற முடியவில்லை.

    சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதிய கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அல்ல. சாதி ஒரு அடையாளம். அதுபோல் வாழ்க்கை கிடையாது. எந்த சாதியையும் ஆதிக்கம் செலுத்த ஜனநாயகம் அனுமதிக்காது.

    பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 63.14 சதவீதம் இருந்தும் அவர்களுக்கு கிடைக்கும் இடஒதுக்கீடு 27 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு.

    தமிழகத்திலும் இதே நிலைதான் இருக்கும். சில சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது. சிலருக்கு உயர்சாதி என்பதால் கிடைப்பதில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அவர்களுக்கு உரிய ஒதுக்கீடு கிடைக்கும். துல்லியமாக அனைத்து தரப்பினருக்கும் இடஒதுக்கீடு தேவை. அதற்கு சாதிவாரியான புள்ளி விவரம் அவசியம். எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல் கேட்டுக்கொண்ட பிறகு நாடு முழுவதும் இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

    ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பைகூட மத்திய அரசு எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×