என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "gaja storm"
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த செருவாவிடுதி கிராமம் ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் திருப்பதி (வயது 35).
இந்த நிலையில் கடந்த மாதம் கஜா புயலால் திருப்பதிக்கு சொந்தமான தோப்பில் இருந்த தென்னை மரங்கள் முறிந்து விழுந்து சேதமானது. அந்த சமயத்தில் தென்னை மரத்தின் அடியில் சிக்கி திருப்பதியின் தந்தை சின்னையன் (75) பரிதாபமாக இறந்தார்.
பிறகு மறுநாள் தான் சின்னையனின் உடலை கண்டு மீட்டனர். தந்தையின் உடலை பார்த்து திருப்பதி கதறி அழுதார்.
இதன்பின்னர் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் நரேந்திரனை திருப்பதி சந்தித்து, தனது தந்தை தென்னை மரம் விழுந்து பலியானதற்கு நிவாரண தொகையான ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று முறையீட்டார்.
அதற்கு வி.ஏ.ஓ. தனக்கு 3 சதவீதம் கமிஷனாக தரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் , இதுகுறித்து ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார், புயல் நிவாரண கண்காணிப்பு அதிகாரி ஆகியோருக்கு கடந்த 23-ந் தேதி மனு அனுப்பினார். ஆனால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது கூட்டத்துக்கு திருப்பதி வந்தார். திடீரென அவர் கலெக்டரிடம், கஜா புயல் நிவாரணம் வழங்க வி.ஏ.ஓ. லஞ்சம் கேட்கிறார். புயலால் தென்னை மரங்களை இழந்து விட்டதால் என்னால் லஞ்சம் வழங்க இயலாது.
எனவே எனது தந்தை இறந்ததற்கு நிவாரணம் வழங்காவிட்டால் நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார்.
இதை கேட்டு கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அங்கு நின்ற போலீசார் , திருப்பதியை வெளியே அழைத்து சென்றனர்.
கலெக்டர் முன்பு வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #relief #gajacyclone
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறுவதாக இருந்த குரூப்-2 முதன்மைத் தேர்வுகளை மூன்று மாதங்கள் முன்பாக, வரும் பிப்ரவரி மாத இறுதியில் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத காவிரி டெல்டா மாணவர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களை கடந்த நவம்பர் 16-ந்தேதி தாக்கிய கஜா புயல் அப்பகுதிகளை சிதைத்து விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். அத்துடன் போட்டித்தேர்வுகளுக்கு படிப்பதற்காக மாணவர்கள் வைத்திருந்த புத்தகங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமாகிவிட்டன. அவர்களால் உடனடியாக போட்டித்தேர்வுக்கு தயாராக முடியாது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இதே நிலைமை தான் காணப்படுகிறது.
குரூப்-2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை பிப்ரவரி மாதத்திற்கு பதிலாக மே மாதத்தில் நடத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே மே மாதத்தில் தேர்வு நடத்த பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Group2Exam #AnbumaniRamadoss
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் , கைகளில் தென்னங்கன்றுகளுடன் கலந்து கொண்டு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் மனு கொடுத்தார்.
கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் சேதமாகி உள்ளது. இதனால் விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தென்னை மரங்கள் அதிகமாக சேதமானதால் தேங்காய் விலை அதிகமாகும் சூழ்நிலை உள்ளது. இதனை சரிசெய்ய விவசாயிகளுக்கு புதிய தென்னங்கன்றுகளை தமிழக அரசு வழங்க வேண்டும். வீடு மற்றும் விவசாய பயிர் சேதங்களை விரைவாக கணக்கெடுத்து உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மத்திய அரசிடம் ரூ.15 ஆயிரம் கோடி கேட்டது. அதனை உடனடியாக மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
அதற்கு முன்பு இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன், டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போது, இலவசமாக மண்எண்ணை வழங்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது மக்கள் மண்எண்ணையை அதிகம் பயன்படுத்துவதில்லை. எனவே மக்களுக்கு கியாஸ் அடுப்பு, சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் மோடி வந்து பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண பொருட்களை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ArjunSampath
சென்னை தலைமை செயலகத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று சந்தித்தார். அப்போது, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்து கழகங்கள் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனங்களின் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 13 கோடியே 15 லட்சத்து 23 ஆயிரத்து 395 ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஹர்மந்தர் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதே போன்று, அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி, அவரது கணவர் விஜயகுமார் ரெட்டி மற்றும் மகன் கார்த்திக் ரெட்டி ஆகியோரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினர். அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும், சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் செயலாளர் விக்ரந்த் யாதவ் மற்றும் அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயண் ஆகியோர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 74 லட்சத்து 62 ஆயிரத்து 221 ரூபாய்க்கான காசோலையை சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். அவர்களுடன் வக்கீல்கள் ஆர்.பாலசுப்பிரமணியா, சி.பரமசிவம், வினோத் கன்னா, சியாமளா ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
ஆர்.எம்.கே. குழும கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். இந்த சந்திப்பின்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ஆர்.எம்.கே. குழும கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் இளமஞ்சி பிரதீப் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் பாலு (வயது 38). இவர் சென்னையில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கவிதா (37). இவரும் சென்னையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர்கள் சென்னை ஆவடியில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகள் இசனா பாலு (7).
கணவன், மனைவி 2 பேரும் சென்னையில் வசித்து வருவதால், இசனா பாலு சத்தியமங்கலத்தில் உள்ள தனது பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வருகிறாள். மேலும் அவள் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இசனா பாலுவுக்கு 3 வயது இருக்கும்போது இருதய பாதிப்பு இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. மேலும் 10 வயது ஆகும்போது 2-வது தடவையாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வந்தனர். விழாவுக்கு தனது பாட்டி பூங்கோதையுடன் வந்த இசனா பாலு தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் வழங்கினார். அப்போது சிறுமியின் பாட்டி பூங்கோதை கூறுகையில், ‘இவள் (இசனா பாலு) எனது பேத்தி. இவளுக்கு ஏற்கனவே இருதய ஆபரேஷன் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இன்னொரு ஆபரேஷன் செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தன்னுடைய இருதய ஆபரேஷன் செலவுகளுக்காக உண்டியலில் கடந்த 2 ஆண்டுகளாக பணம் சேர்த்து வந்தாள். தற்போது கஜா புயல் நிவாரணத்துக்காக பலரும் நிதி வழங்குவதை தெரிந்து கொண்டு அவள் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் முழுவதையும் அமைச்சரிடம் வழங்குகிறாள்,’ என்றார். உண்டியலில் ரூ.950 இருந்தது.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், ‘இந்த சிறுமியின் 2-வது இருதய ஆபரேஷனுக்கான மருத்துவ செலவை அரசு ஏற்கும்,’ என்றார். #GajaStorm
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, நிவாரண பொருட்களை வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணை தலைவர் எம்.என்.ராஜா, மாநில செயலாளர் கரு.நாகராஜன், ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களுக்காக நாங்கள் உண்மையான சேவை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை அரசியலாக்க பல எதிர்க்கட்சிகள் முயன்று வருகிறது. மேகதாது அணையை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று நதிநீர் ஆணையம் கூறியிருக்கிறது.
மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்கவே இல்லை. ஆனால் அதற்குள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆய்வுக்கு அனுமதி கொடுத்ததை நீங்கள் அணை கட்டியதை போல முன்னிறுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் துணை முதல்-அமைச்சராக (மு.க.ஸ்டாலின்) இருந்த போது மீத்தேன் ஆய்வுக்கு கையெழுத்து போட்டீர்களே. மீத்தேன் எடுப்பதற்கு தான் கையெழுத்திட்டீர்களா? என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.
புல் முளைக்காத இடத்தில் தாமரை எப்படி மலரும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் மீது வீசப்படும் சேற்றை வைத்து, தாமரையை மலர செய்வோம். சேற்றில் செந்தாமரை வளரும். ஏன் தாமரை மலராதா? அவர்களுக்கு ஏன் பதற்றம் வருகிறது என்று தெரியவில்லை. குளத்திலும் தாமரை மலரும், களத்திலும் தாமரை வளரும். இதில் நீங்கள் எந்த கவலையும் பட வேண்டாம். தாமரை மலருவதற்காக நான் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP
நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை கடந்த மாதம் 18-ந்தேதி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பார்வையிட சென்றபோது அவரது காரை சிலர் வழிமறித்து அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி மனோகரன்(வயது 53), கவியரசன்(30), ராமச்சந்திரன்(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். நேற்று வீரசேகரன்(30), அவரது தம்பி பன்னீர்செல்வம்(29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் சென்ற காரை சிலர் வழிமறித்து தாக்குவதும், அமைச்சரின் காரை நோக்கி ஒரு வாலிபர் அரிவாளால் வெட்ட பாய்ந்து செல்வது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது.
அந்த சமயத்தில் அமைச்சரின் கார் வேகமாக பின்னோக்கி சென்றதால், அவர்கள் அமைச்சர் காருடன் வந்த மற்றொரு காரை அடித்து நொறுக்குவது போலவும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ காட்சி தற்போது நாகை மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GajaCyclone #OSManian
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள அக்கச்சிப்பட்டி, பந்துவக்கோட்டை கிராமங்களில் கஜா புயலால் பாதித்த பொதுமக்களை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
எங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறோம். பொதுமக்களின் பாதிப்புகள் குறித்து அரசிடம் தகவல் தெரிவிப்போம். சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பொது மக்களை இதுவரை சந்திக்காமல் இருப்பது குறித்தும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை பாதிக்கப்பட்ட தனி ஒருவரால் ஈடு செய்ய முடியாது. அதற்கு கண்டிப்பாக பலர் உதவ வேண்டும். புயலின் போது வீடு இழந்த பொதுமக்களை, பள்ளியில் தங்கிக்கொள்ள அனுமதி அளித்த நிர்வாகிகளுக்கும், அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்கிய ஆசிரியர்களுக்கும் நன்றி.
வகுப்புகளில் படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறினை ஏற்படுத்தி கூடாதென்பதற்காகத்தான் பள்ளி வளாகத்திற்குள் வராமல், வெளியே ரோட்டில் நின்று பேசி கொண்டிருக்கிறேன். எனவே பள்ளிக்குள் வராமல் இருந்ததை எவரும் தவறாக நினைத்து கொள்ள வேண்டாம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக வருகை தர இருந்த கமலுக்காக, பந்துவாக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்புறமிருந்த போர்டிக் கோவை கட்சியினர் தற்காலிக மேடையாக மாற்றியிருந்தனர்.
அந்த பகுதிக்கு வந்த கமல், பள்ளிக்குள் அரசியல்வாதிகள் நுழைந்து மாணவர்களின் படிப்புக்கு இடையூறினை ஏற்படுத்தக்கூடாது என்று கூறி உள்ளே செல்ல மறுத்து விட்டார். பின்னர் சாலையோரத்தில் தனது காரை நிறுத்தி அதில் ஏறி நின்று பொதுமக்களிடம் பேசினார். #KamalHassan #GajaCyclone
சென்னை:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த வாரம் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு உதவிகளை செய்தார். மீண்டும் புயல் பாதித்த பகுதியை பார்வையிட சென்றுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளை மீண்டும் பார்வையிடுவதற்காக எங்களுடைய குழுவை சார்ந்தவர்கள் இப்போது திருச்சி செல்கிறோம்.
அங்கு ஏற்பட்ட பாதிப்பு மிக மோசமான ஒரு பாதிப்பு. அதில் இருந்து அந்த மக்கள் மீண்டு வருவதற்கு சில ஆண்டுகள் ஆகலாம்.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டி கொடுப்பதாக அறிவித்துள்ளது. அந்த வீடுகள் கட்டி முடித்து ஒப்படைப்பதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம். அதுவரையில் அந்த மக்கள் தார்ப்பாய்களின் கீழ் அகதிகளாக குடியிருக்க வேண்டுமா?
எனவே இதை எல்லாம் முழுமையாக அறிந்து ஆய்வு செய்வதற்காக எங்கள் குழு தற்போது செல்கிறது.
மத்திய அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் இல்லை என்று சொல்லி உள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்த டெல்டா பகுதிகள் தான் நாட்டில் அனைவருக்கும் சோறு போடுகிறது. எனவே நாட்டிற்கு சோறு கொடுக்கும் ஒரு முக்கியமான பகுதி இது.
புயல் பாதித்த பகுதியை தேசிய பேரிடராக அறிவிப்பதுதான் சரியாக இருக்கும். எனக்கு தெரிந்தது எல்லாம் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதுதான். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
பிரதமர் இவ்வளவு பெரிய பாதிப்பை நிச்சயமாக வந்து பார்த்து இருக்க வேண்டும். ஒன்றுபட்டு அதற்காக குரல் கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam #GajaStorm
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்