search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "diet"

    • குளிர்ச்சி வயதானவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது.
    • குளிர்த்தன்மை காரணமாக ரத்த நாளங்கள் சுருங்கும்.

    குளிர்காலத்தில் நிலவும் அதிக குளிர்ச்சி வயதானவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. குளிர்த்தன்மை காரணமாக ரத்த நாளங்கள் சுருங்கும். அதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படக்கூடும். குளிர் அதிகமாக இருக்கும் வேளையில் உடலின் வெப்பநிலையை சீராக தக்கவைக்க இதயம் கடினமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். குளிர்காலத்தில் இதயத்தின் நலனை பேணுவதற்கு ஒருசில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது.

     உடற்பயிற்சி:

    உடல் எடை அதிகரிக்கும்போது இதயம், நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளிட்டவை அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. அதனால் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும் திறன் குறையக்கூடும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் நலனை சீராக பராமரிக்கலாம். அதேவேளையில் கடினமான உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்க வேண்டும். அவை இதய செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்திவிடக் கூடாது. ஏனெனில் குளிர்காலத்தில் கடினமான உடற்பயிற்சிகளை செய்யும்போது இதயத்திற்கு ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும். அதனை பூர்த்தி செய்ய முடியாத பட்சத்தில் இதயம் பாதிப்புக்குள்ளாகிவிடும். மாரடைப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடக்கூடும்.

    மன ஆரோக்கியம்:

    குளிர்காலத்தில் இரவு நீண்டும், பகல் பொழுது குறைந்தும் விடுவதால் உடல் இயக்கம் அதிகரிக்கும். அதனால் சோர்வாக உணரலாம். சூரிய ஒளி போதுமான அளவு கிடைக்காதபட்சத்தில் வைட்டமின் டி குறைபாடும் ஏற்படும். அதனால் மனச்சோர்வும் உண்டாகும். அத்தகைய பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்படி வைட்டமின் மாத்திரைகள் உட்கொள்ளலாம்.

     உணவு பழக்கம்:

    குளிர்காலத்தில் நொறுக்குத்தீனிகள், எண்ணெய் பலகாரங்களை சாப்பிடுவதற்கு ஆர்வம் அதிகரிக்கும். அவை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்காது. ஊட்டச்சத்துமிக்க உணவுகளையே அவசியம் சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஆரோக்கியம்:

    குளிர்ச்சியான காலநிலையின்போது உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக சென்றடைய இதயம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அத்துடன் உடல் முழுவதும் ஆக்சிஜனை செலுத்துவதற்கும் இதயம் இரண்டு மடங்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதில் தொய்வு ஏற்படும்போது இதய தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல் நேரும். இதன் காரணமாக ரத்த உறைவு, பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

     வெந்நீர், சூப் பருகுவது நல்லது. கீரை வகைகள், பருவகால பழங்கள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளடக்கியசமச்சீர் உணவை உண்ணுங்கள். மது, புகைப்பழக்கத்தை அறவே தவிருங்கள். கார்பனேற்றப்பட்ட பானங்கள் பருகுவதையும் தவிர்த்துவிடுங்கள்.

    • சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை குறைத்துவிடலாம் என்று கருதுகிறார்கள்.
    • உணவில் பல்வேறு வகைகளை சாப்பிட முடியும்.

    உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் எப்படியாவது உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்று பல்வேறு உணவுக்கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையை குறைப்பதற்கு உண்ணும் உணவில் மாற்றங்கள் செய்வது சரியானதுதான்.

    சிலர் சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடையை குறைத்துவிடலாம் என்று கருதுகிறார்கள். சிலரோ சாதம் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடும் என்று அதனை அறவே தவிர்க்கிறார்கள். உடல் எடை குறைவதற்கு அரிசி சாதம் அவசியம் என்பது சிலருடைய கருத்தாக இருக்கிறது.

    சப்பாத்திக்கு பதிலாக தினை, கேழ்வரகு, கம்பு,சோளம், வரகு, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு தயார் செய்யப்படும் தோசை, இட்லி, ரொட்டி உள்ளிட்டவற்றை உட்கொள்வது நல்லது என்பது சிலருடைய வாதமாக இருக்கிறது. அதனால் எதை சாப்பிட்டால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும்? சாதம் சாப்பிட வேண்டுமா? வேண்டாமா? சப்பாத்தியை சாப்பிடலாமா? அல்லது சிறுதானியங்களில் தயாரிக்கப்படும் ரொட்டியை சாப்பிடலாமா? என்ற குழப்பம் நிறைய பேரிடம் இருக்கிறது.

    உணவியல் நிபுணர் பூனம் துனேஜாவின் கருத்துப்படி, அரிசி மற்றும் ரொட்டி இவை இரண்டின் ஊட்டச்சத்து மதிப்புகளில் பெரிய வித்தியாசம் உள்ளது. இருப்பினும் உடல் எடை இழப்புக்கு இரண்டும் பயனுள்ளதாக இருக்கும். வாரத்தில் 4 நாட்கள் ரொட்டி சாப்பிட்டால், 2 நாட்கள் சாதம் சாப்பிட வேண்டும் என்கிறார்.

    ``இந்த வழிமுறையை பின்பற்றினால் உணவில் பல்வேறு வகைகளை சாப்பிட முடியும். ஒவ்வொரு நாளும் ஒரு சிறுதானியத்தை உட்கொள்ளலாம். அதிலும் கம்பு, தினை, கேழ்வரகு, சோளம் உள்ளிடவற்றை கொண்டு தயார் செய்யப்படும் ரொட்டியை சாப்பிடுவது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருக்கும் என்பதால் இன்சுலின் அளவு வேகமாக அதிகரிக்காது. மேலும் இந்த வகை ரொட்டியில் அதிக நார்ச்சத்தும், புரதச்சத்தும் நிரம்பி இருக்கும். அதனால் இந்த ரொட்டி சத்து மிக்கது.

    சீராக உடல் எடையை குறைக்க உதவும். அதேபோல் பழுப்பு அரிசியை சாப்பிடலாம். வெள்ளை அரிசியை உட்கொள்வதாக இருந்தால் குக்கரில் வேகவைக்காமல் பாத்திரத்தில் கொதிக்கவிட்டு வேகவைத்து கஞ்சியை வடிகட்டிய பிறகு சாதத்தை உட்கொள்ளலாம்.

    இருப்பினும் அரிசி, ரொட்டி இரண்டையும் உட்கொள்ளும் அளவில் கவனம் தேவை. ரொட்டியில் குளூட்டன் இருக்கும். அரிசியில் அது இருக்காது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அரிசி சாதம் சாப்பிடுவதை விட ரொட்டி அதிகம் சாப்பிடுவதுதான் பயனுள்ளதாக இருக்கும்.

    அதிலும் நீரிழிவு நோயால் கடும் பாதிப்புக்கு ஆளானவர்கள் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. அதனை சாப்பிட்டு எடை குறையும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்புள்ளது'' என்கிறார்.

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மருத்துவ நிபுணர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு அரிசி, ரொட்டி இவை இரண்டையும் உட்கொள்ளலாம்.

    • எலும்பு தேய்மானம் பொதுவாக 40 வயதிற்கு மேல் ஏற்படுகிறது.
    • அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் இயற்கையான சேதமாகும்.

    பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.

    எலும்பு தேய்மானம் பொதுவாக 40 வயதிற்கு மேல் ஏற்படுகிறது. இது அன்றாட பயன்பாட்டினால் ஏற்படும் இயற்கையான சேதமாகும். ஒவ்வொருவரின் உடலமைப்பின் தனித்தன்மையின் படியும், மூட்டுகளை பயன்படுத்தும் முறைகளை பொறுத்தும் மாறுபடும்.

    உதாரணத்திற்கு மூட்டு எலும்பின் அடர்த்தி மற்றும் கனிமச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கும் உடற்பருமன், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும் கரடுமுரடான பாதைகளில் அதிகமாக நடப்பவர்களுக்கும் மூட்டு தேய்வு அதிகமாக ஏற்படுகிறது.

    தடுக்கும் முறைகள்:

    1) உடற்பருமனை குறைக்க வேண்டும்.

    2) புரதச்சத்து மற்றும் கனிமச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 3) கரடுமுரடான பாதைகளில் நடப்பதையும், படிகளில் அடிக்கடி ஏறி இறங்குவதையும் தவிர்க்க வேண்டும்.

    4) உபநோய்கள் (அதிக உடற்பருமன் மற்றும் சர்க்கரை நோய்) இருப்பவர்கள் அதற்கான சிகிச்சையை முறையாக எடுக்க வேண்டும்.

    5) அன்றாட பழக்க வழக்கங்களில் மூட்டுகளை மடக்கி உட்காராமல் நாற்காலியில் உட்கார வேண்டும். மேற்கத்திய கழிவறை முறையை உபயோகிக்க வேண்டும்.

     பொதுவாக, 13 வயதில் ஒரு பெண் குழந்தை, பூப்பெய்தும் பருவத்தில், சிகப்பரிசி, கேழ்வரகு புட்டு , எள் உருண்டை, கருப்பட்டி, நல்லெண்ணெய், உளுந்தங்களி, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்றவற்றை கொடுக்கத் தொடங்க வேண்டும். இதை தினமும் கொடுக்க முடியவில்லை என்றாலும், மாதவிடாய் நேரத்திலாவது, நான்கு நாள்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருவது நல்லது.

    இதே வயதில்தான், ஆண்பிள்ளைகளும் அடுத்தக்கட்டத்தை நோக்கி வளர்ச்சி அடைய தொடங்குகிறார்கள். எனவே, அந்த வயதிலிருந்தே அவர்களுக்கும் இந்த உணவுளை எல்லாம் கொடுக்கத் தொடங்கினால், அவர்களும் உடலில் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். பெரும்பாலானவர்கள், மூட்டுவலி என்றதுமே வலி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள தொடங்குகிறார்கள்.

    அப்படியில்லாமல், காலை எழுந்தவுடன், இஞ்சி, சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து கொதிக்க வைத்த நீரை காலை, மாலை இரு வேளை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அல்லது காலை டீ குடித்தால், மாலை வேளையில் காய்களுடன் இஞ்சி, சீரகம், மிளகு எல்லாம் சேர்த்து ஒரு சூப் மாதிரி செய்து குடித்து வரலாம். அடுத்து கேழ்வரகு சார்ந்த உணவுகள், களியாகவோ, முருங்கைக்கீரை சேர்த்து அடையாகவோ, புட்டாகவோ, கஞ்சியாகவோ, தோசையாகவோ செய்து காலை வேளையில் சாப்பிட்டு வரலாம்.

     தோசைக்கு மாவு அரைக்கும்போது, சிகப்பரிசியும் சேர்த்து தோசை மாவு தயாரித்து அதில், இட்லியாகவோ, தோசையாகவோ செய்து சாப்பிட்டு வரலாம். சிகப்பரிசி அவல் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம். அதுபோன்று எள்ளு சேர்த்த உணவுகள், கொள்ளு வேக வைத்து சுண்டலாக செய்து சாப்பிடுவது, அல்லது எள்ளு, கொள்ளு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு பொடியாக திரித்து வைத்துக் கொண்டு, சாதத்தில் போட்டு சாப்பிடுவது, இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடுவது போன்றவற்றை செய்யலாம்.

    பச்சைபயறை முளைக்கட்டியோ, வேக வைத்தோ, கூட்டு வைத்தோ செய்து சாப்பிட்டு வரலாம். வெந்தயம், சீரகம், தனியா வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, சாம்பார், கோதுமை தோசை, ராகி அடை செய்யும்போது சிறிது தூவி சாப்பிட்டு வரலாம்.

    மிளகு அதிகளவில் சேர்த்துக் கொள்ளலாம். சாமை, வரகு, தினை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். பாதாம் ஊற வைத்து தோல் நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது. பால் சார்ந்த உணவுகளான மோர், தயிர் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

    கால்சியம் மாத்திரைகள் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, ரத்தக்குழாய் திக்காவது அல்லது ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவது அல்லது குதிகாலில் கூடுதலாக எலும்பு வளர்வது போன்றவை ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. எனவே, முடிந்தளவு மாத்திரைகளை தவிர்த்துவிட்டு, உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.

    அதேபோன்று கால்சியம் சத்துடன் கண்டிப்பாக, வைட்டமின் டி சத்தும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்து சூரிய ஒளியில் அதிகளவு இருக்கிறது. அது கிடைக்க, காலை 9 மணிக்குள் அல்லது மாலை 3-5- க்குள் சிறிதுநேரம் வெயில்படும்படி 20 நிமிடம் நிற்பது நல்லது. இப்படி வெயிலில் நிற்பதற்கு முன்பு, சிறிதளவு தண்ணீர் குடித்துவிட்டு போய் நிற்பது மேலும் சிறந்தது.

     பச்சை காய்கறிகள், பிரண்டை, முடக்கற்றான் இவையெல்லாம் வாரத்திற்கு 2 நாள்கள் சேர்த்து வருவது மிகவும் நல்லது. இது இரண்டும் முடக்குவாதத்திற்கு நல்ல நிவாரணம் தரும். முருங்கைக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவற்றையும் அதிகம் சாப்பிட்டு வரலாம். இதைத் தொடர்ந்து எடுத்து வரும்போது, மேற்கொண்டு எலும்பு தேய்மானம் ஆவது தடுக்கப்படும். மூட்டுகளுக்கும் பலம் கிடைத்து வலி குறையும்.

    • ரத்த கொழுப்பு அதிகமானால் இதயத்தில் அடைப்புகளை உண்டாக்கும்.
    • சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பின்பற்றுவது நல்லது.

    இதய அடைப்புக்கு முக்கியமான காரணம் கொழுப்பு தான். ஆரோக்கியமான உடலுக்கு கொழுப்பு கட்டாயம் தேவை. ஆனால் ரத்த கொழுப்பு அளவுக்கு அதிகமானால் இதயத்தில் அடைப்புகளை உண்டாக்கும்.

    கீழ்க்கண்ட சித்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பின்பற்றுவது நல்லது.

    1) பூண்டு 5 பல், சிறிதளவு கொள்ளு, ஒரு சிட்டிகை பெருங்காயம் இவைகளை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்து மாலை நேரங்களில் சாப்பிடலாம்.

    2) இலவங்கப்பட்டை, ஏலம், செம்பருத்தி பூ, வெந்தயம் இவைகளை பொடி செய்து அதில் சிறிதளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீர் போல குடிக்கலாம்.

    3) கோடம் புளி சிறிதளவு எடுத்து சீரகத்துடன் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

    4) ஏலாதிச் சூரணத்துடன் குங்கிலியப் பற்பம் கலந்து, வெந்நீரில் காலை, இரவு என இருவேளை குடித்து வந்தால் கொழுப்பின் அளவு குறையும்.

    5) இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்க பூண்டு சாறு, புதினா சாறு, எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு இவைகளை சம அளவில் எடுத்து சூடாக்கி, ஆற வைத்து அதனுடன் சம அளவு ஆப்பிள் வினிகர் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் தினசரி காலை 5 மி.லி. எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும்.

    6) வெண்தாமரை மலர் இதழ், செம்பருத்தி மலர் இதழ், மருத மரப்பட்டை, சீரகம், இலவங்கப்பட்டை இவைகளை பொடித்து அதில் ஒரு கிராம் வீதம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வர வேண்டும்.

    தடுப்பு முறைகள்:

    சின்ன வெங்காயம், பூண்டு இவை கெட்ட கொழுப்பைக் கரைக்கும் தன்மையுடையதால் இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, சைக்கிளிங், நடைப்பயிற்சி, நீச்சல், பேட்மிண்டன் போன்ற ஏதாவதொரு பயிற்சியை உங்கள் உடல் திறனுக்கு ஏற்ப செய்ய வேண்டும். ஆரோக்கியமான உணவு வகைகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள் சாப்பிட வேண்டும். மூன்று வெள்ளைகளை அளவுடன் எடுத்தால் வாழ்நாள் அளவு கூடும். அவை, தீட்டிய வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, உப்பு.

    • உணவு பழக்கத்தை தவறாக கடைபிடிக்கிறீர்கள்.
    • சர்க்கரை மிக அதிக கலோரிகளை கொண்டது.

    இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் பொதுவான ஒன்றாகி விட்டது. உடல் பருமனை குறைக்க சிறந்த வழி, சில வெள்ளை உணவுகளை ஒதுக்கி வைப்பதாகும்.

    கடுமையான உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை குறையவில்லை என்றால், நீங்கள் உணவு பழக்கத்தை தவறாக கடைபிடிக்கிறீர்கள் என்று அர்த்தம். மிக முக்கியமாக சில வெள்ளை உணவுகளை உங்கள் டயட்டில் இருந்து முற்றிலுமாக அகற்றினால், உடல் பருமன் வேகமாக குறையும்.

    என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லை என்றால் அதற்கு தவறான உணவுப்பழக்கமே காரணம். மிக முக்கியமாக சில வெள்ளை உணவுகளை உங்கள் டயட்டில் இருந்து முற்றிலுமாக அகற்றினால், உடல் பருமன் வேகமாக குறையும்.

    மைதா ஊட்டசத்து இல்லாத காப்போஹைட்ரேட் நிறைந்த மாவு. மைதாவால் செய்யப்பட்ட உணவுகளான பரோட்டா, பிரட்டுகள் என அனைத்துமே, நார்ச்சத்து புரதம் எதுவுமே இல்லாதவை. இவை கலோரிகள் அதிகம் கொண்டவை. எனவே இதனை விலக்குவது மிக அவசியம்.

    உடல் பருமன் குறைய வேண்டும் என்றால் சர்க்கரையை விலக்காமல் சாத்தியமில்லை. சர்க்கரை மிக அதிக கலோரிகளை கொண்டது. எனவே சர்கக்ரை உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக வெல்லம் எடுத்துக் கொள்ளலாம்

    உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் உணவுப்பட்டியல்

    முதல் நாள்

    தினமும் காலை டீ, காபி, பால் போன்றவை குடிக்காமல் வெள்ளரி தண்ணீர் குடிக்க வேண்டும். காலை உணவாக ஒரு கிண்ணம் ஓட்ஸ் கஞ்சியில் பால் சேர்த்து சாப்பிடலாம். மதிய உணவாக ஒரு சிறிய கப் பருப்பு, ஏதாவது ஒரு கப் காய்கறி, ஒரு சப்பாத்தி மற்றும் ஒரு கப் சாதம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவாக ஒரு சப்பாத்தி மட்டும் சாப்பிட வேண்டும். பசி அடங்கவில்லை என்றால் பழம் அல்லது ஒரு டம்ளர் மோர் குடிக்கலாம்.

    இரண்டாவது நாள்

    காலை உணவாக 2 சோளமாவு தோசை, அரை கப் தயிர்சேர்த்து சாப்பிடுங்கள். மதிய உணவிற்கு ஒரு சிறிய கிண்ணம் அளவுக்கு பருப்பு, ஒரு சப்பாத்தி, காய்கறி ஒரு கப் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவிற்கு இரண்டு சப்பாத்தி மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மூன்றாவது நாள்

    காலை உணவாக ஒரு கப் பழங்கள் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மதிய உணவிற்கு பன்னீருடன் காய்கறிகள் மட்டும் ஒரு கப் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவாக ஒன்று அல்லது 2 சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம்.

    நான்காவது நாள்

    காலை உணவாக 2 ஆம்லேட் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். மதியத்திற்கு ஒரு கப் காய்கறி மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவாக அரை கப் சாதம் எடுத்துக்கொள்ளலாம்.

    ஐந்தாம் நாள்

    காலை உணவிற்கு காய்கறி உப்புமா, மதியத்திற்கு காய்கறி அல்லது பன்னீரால் சேர்க்கப்பட்ட சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவிற்கு ஒரு சப்பாத்தி மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

    • சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள்.
    • பிரசவத்திற்கு பின் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.

    பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். அதிலும் சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். சிசேரியன் செய்த பிறகு உடல் இயக்கமின்றி அதிக நேரம் படுக்கையில் இருப்பது தொப்பை உண்டாக காரணமாகிவிடுகிறது.

    மேலும் வயிற்றில் இருந்த குழந்தையின் வெற்றிடத்தில் காற்று நிரம்புவதாலும், வயிற்றில் கொழுப்பு சேருவதாலும் தொப்பை ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடும். பிரசவத்திற்கு பின் வயிற்றில் கொழுப்பு சேர்வதாலும் தொப்பை ஏற்படுகிறது.

     அந்த காலத்தில் பிரசவத்திற்கு பின்பு பெண்களின் வயிற்றில் இறுக்கமாக, துண்டை கட்டி வைப்பார்கள். கால்களையும் சேர்த்து அமரச்சொல்வார்கள். இதன் மூலம், தளர்வான பிறப்புறுப்பின் வழியே காற்று உட்செல்வது தடுக்கப்பட்டு, எத்தனை குழந்தைகள் பெற்றெடுத்தாலும் வயிறு ஒட்டிய நிலையில் அக்கால தாய்மார்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.

    கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் தவிர்த்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தொப்பை, உடல் பருமன் பாதிப்புக்கு வழிவகுத்துவிடும். பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் சோர்வும், அதனால் ஏற்படும் பசியும் உண்ணும் உணவின் அளவை அதிகப்படுத்திவிடும்.

    தாய்ப்பால் கொடுப்பதற்காக சத்தான உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட வேண்டியிருக்கும். அந்த உணவுகளாலும் உடல் எடை கூடும். குழந்தை பிறந்து ஒரு ஆண்டை கடந்த பிறகோ, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகோ உடல் பருமனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட தொடங்கிவிட வேண்டும்.

    சரியான உணவுப்பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு அவசியம் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளும், யோகாசனங்களும் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் உடல் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்துவர வேண்டும். அதில் அலட்சியம் காண்பிக்கக்கூடாது.

    ஏனெனில் குழந்தை ஒரு வயதை தாண்டிய பின்னரும் எடை குறைப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால் தோற்றப் பொலிவில் மாறுதல் உண்டாகிவிடும். பின்னர் பழைய தோற்றத்திற்கு திரும்புவது கடினமான விஷயமாகிவிடும்.

    இப்போது வயது வித்தியாசமின்றி பலரும் தொப்பை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். எண்ணெய் அதிகம் சேர்ந்திருக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடுவதும் தொப்பைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    இனிப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட இனிப்பு பலகாரங்கள் அதிகம் சாப்பிடுவதும் தொப்பைக்கு வித்திடும். கார்போஹைட்ரேட் அதிகம் கலந்த உணவுகள், புரதம், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் சாப்பிடுவதாலும் தொப்பை ஏற்படக்கூடும். பெண்களுக்கு தொப்பை அதிகம் இருந்தால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வரக்கூடும். தொப்பை உருவாகுவதற்கு முதன்மை காரணம் கொழுப்புதான். தண்ணீருக்கு பதிலாக அவ்வப்போது வெந்நீர் பருகுவது தொப்பையை கரைக்க உதவும்.

    • இளமை தோற்றத்துடன்தான் காட்சி அளிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது.
    • வயதையும், தோற்ற பொலிவையும் மரபணுவும், சுற்றுச்சூழல் காரணிகளும் பாதிக்கலாம்.

    முதுமை பருவத்தை எட்டினாலும் கூட இளமை தோற்றத்துடன்தான் காட்சி அளிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. அதற்காக அழகு சாதன பொருட்களை சார்ந்திருப்பது மட்டும் பயனில்லை. உணவுப்பழக்கமும், வாழ்க்கை முறையுமே இளமை தோற்றத்தை தக்க வைக்க துணைபுரியும்.

    சருமத்தின் வயதையும், தோற்ற பொலிவையும் மரபணுவும், சுற்றுச்சூழல் காரணிகளும் பாதிக்கலாம். உணவு, தூக்கம், மனஅழுத்தம் போன்றவை சருமத்தின் தோற்றத்தை நிர்ணயிக்கின்றன. சில உணவு பழக்கங்கள் முதுமைக்கு முன்கூட்டியே வித்திடக்கூடும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    சர்க்கரை:

    அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது கிளைகேஷன் எனப்படும் செயல்முறைக்கு வழிவகுக்கும். அதில் உள்ளடங்கி இருக்கும் சர்க்கரை மூலக்கூறுகளும், சருமத்தில் உள்ள கொலாஜன்களும் பிணைக்கப்படும். அவை சருமத்தை கடினமாக்கும். அதனால் தோல் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும்.

    பதப்படுத்தப்பட்ட- பொரித்த உணவுகள்:

    இந்த உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளும், அதிக அளவு சோடியமும் கலந்திருக்கும். அவை உடலில் வீக்கத்திற்கு வழிவகுக்கும். அதே பழக்கத்தை தொடரும்போது நாள்பட்ட அழற்சிக்கு வித்திடும். கொலாஜன் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி தோல் வயதாவதை துரிதப்படுத்தும்.

    மதுப்பழக்கம்:

    மது அருந்துவது சருமத்தை நீரிழப்பு செய்து சரும வறட்சிக்கும், சுருக்கங்களை ஏற்படுத்தும் கோடுகளுக்கும் வழி வகுத்துவிடும். காபி அதிகம் பருகுவதும் நீரிழப்புக்கு வித்திடும். மந்தமான, வறண்ட மற்றும் வயதான தோற்றமுடைய சருமத்தை ஏற்படுத்தும். இந்த பழக்கங்களை தவிர்த்தாலே முதுமையை தாமதப்படுத்திவிடலாம்.

    முதுமைக்கான காரணங்கள்:

    * செலரி, சிட்ரஸ் பழங்கள் போன்ற சில உணவு பொருட்கள் சருமத்தை அதிக உணர்திறன் கொண்டதாக மாற்றும் சோராலென்ஸ் எனப்படும் சேர்மங்களை கொண்டிருக்கின்றன. அவற்றை சாப்பிட்டு கடுமையான சூரிய ஒளி படும் பகுதியில் நேரத்தை செலவழித்தால் விரைவில் வயதாகும் அறிகுறிகள் எட்டிப்பார்க்க தொடங்கும்.

    * சர்க்கரை அதிகம் கலந்த உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உடலில் அழற்சியை ஏற்படுத்தும். நாளடைவில் தோலின் வயதை விரைவுபடுத்திவிடும். இதன் விளைவாக சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

    * சில உணவுகள், அதிக வெப்பத்தில் சமைக்கப்படும்போது ப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. இவை சரும செல்களுக்கு தீங்கு விளைவித்து, வேகமாக சருமம் முதிர்ச்சி நிலையை அடைய வைக்கின்றன.

    • அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடம்.
    • ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள்.

    உலக அளவில் அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது. ஐ.நா.வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின் மதிப்பீடுகளின்படி ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள். அங்கு வசிக்கும் ௧௪௫௦ பேரில் ஒருவர் 100 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார் என்பதை அந்நாட்டு சுகாதார அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.

    ஜப்பானியர்கள்தான் உலகிலேயே கட்டுக்கோப்பான உடல்வாகுவுடன் கூடிய ஆரோக்கியமான மக்களாக அறியப்படுகிறார்கள். அதன் பின்னணி ரகசியம் என்ன தெரியுமா? உடற்பயிற்சியும், உணவுப்பழக்கமும்தான். மற்ற நாட்டவர்களிடம் இருந்து வேறுபடும். அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும், அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும் பழக்கவழக்கங்கள் பற்றியும் பார்ப்போம்.

    கடல் உணவுகளும், இறைச்சி வகைகளும் ஜப்பானியர்களின் உணவு பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதே அளவுக்கு காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் பூமிக்கு அடியில் விளையும் வேர் காய்கறிகள்தான் அவர்களின் தேர்வாக இருக்கிறது. காய்கறிகள் மீதான அவர்களின் நாட்டம் ஆரோக்கியத்தை பேணுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

    கராத்தே, டேக் வாண்டோ, ஜூடோ, அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகளின் பிறப்பிடமாக ஜப்பான் அறியப்படுகிறது. அந்த கலைகளின் முக்கியத்துவத்தை ஜப்பானியர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுகிறார்கள். தற்காப்பு கலை வடிவில் மூதாதையர்கள் கடைப்பிடித்த உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் தவறாமல் பின்பற்றுகிறார்கள்.

    உடலை வலுவாக்கும் பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். ஜப்பானில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டேக் வாண்டோ பயிற்சி பெற்றுள்ளனர் என்று ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அளவுக்கு அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.

    ஜப்பானியர்கள் 5 வகையான உணவு தயாரிக்கும் முறைகளை பின்பற்றுகிறார்கள். முதல் முறைக்கு 'நமோ' என்று பெயர். அதற்கு பச்சையாக உண்பது என்று பொருள். சில காய்கறிகள், உணவு பதார்த்தங்களை பச்சையாக சாப்பிடும் வழக்கத்தை தொடர்கிறார்கள். இரண்டாவது முறை 'நிரு' எனப்படுகிறது. இது உணவு பொருட்களை துல்லியமாக சமைக்கும் சமையல் கலையாகும்.

    உணவை சரியான பதத்தில் வேகவைத்து சுவையை கூட்டுகிறார்கள். அடுத்து, வறுத்தல் முறையை 'யாகு' என்று குறிப்பிடுகிறார்கள். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றியோ அல்லது சிறு தீயில் நேரடியாக உணவு பொருட்களை வறுத்தெடுத்தோ ருசிக்கிறார்கள். நான்காவது முறையான 'மூசு' நீராவி மூலம் சமைக்கும் செயல்முறையை கொண்டது.

    ஐந்தாவது முறைக்கு 'அஜெரு' என்று பெயர். இது அதிக வெப்பநிலையில் உணவு பொருட்களை வறுத்தெடுக்கும் முறையாகும். இந்த உணவுப்பழக்கங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுடல் அழகை பேண வழிவகை செய்கின்றன.

    ஜப்பானியர்கள் கிரீன் டீ பருகும் பழக்கத்தை தவறாமல் பின்பற்றுகிறார்கள். காலையிலும், மதிய உணவுக்கு, முன்னும் பின்னும் அவர்களின் விருப்பமான பானமாக இது பரிமாறப்படுகிறது.

    ஜப்பானியர்கள் தங்கள் உணவில் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை தவறாமல் சேர்த்துக்கொள்கிறார்கள். அவை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

    • யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும்.
    • யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும்.

    யூரிக் அமிலம் என்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும். இந்த யூரிக் அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

    * உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் ஹைப்பர்யூரிசிமியா என்ற நிலை ஏற்படும்.

    * யூரிக் அமிலம் அதிகரிப்பதன் பொதுவான அறிகுறிகளில் கீல்வாதம் முக்கியமான ஒன்று.

    * இது மூட்டுகளில் வலி, சிவந்து போவது மற்றும் விறைப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் ஒரு மூட்டுவலி.

    * யூரிக் அமிலம் உடலில் அதிகரித்தால் சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.

    * மேலும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், காய்ச்சல் போன்றவையும் யூரிக் அமில அதிகரிப்பின் விளைவுகளாக இருக்கலாம். மருத்துவர்கள் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை கணக்கிட சில சோதனைகளை செய்கின்றனர்.

    * யூரிக் அமில அளவின் அடிப்படையில் மருந்துகள், உணவு முறை, தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்

    * யூரிக் அமில அதிகரிப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைக்கு மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்தது.

    • காலைநேரங்களில் பொதுவாக எல்லோருக்கும் பித்தம் அதிகமாக இருக்கும்.
    • ஆவாரை கஷாயம் மிகவும் நம் உடலுக்கு முக்கியமானது.

    காலைநேரங்களில் பொதுவாக எல்லோருக்கும் பித்தம் அதிகமாக இருக்கும். எனவே பித்தத்தை குறைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நாம் அதற்கு நேர்மாறாக பித்தத்தை அதிகரிக்கும் காபியை காலைநேரங்களில் அதிகம் எடுத்துக்கொள்கிறோம்.

    விருப்பமான உணவுகள், மசாலா உணவுகள் பேன்றவற்றை சாப்பிடலமா சாப்பிட்டால் ஜீரணமாகுமா நெஞ்சு கறிக்குமா எதுக்களித்துக்கெண்டே இருக்குமா இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குவது பித்தம்.

    காலையில் சாப்பிடக்கூடிய கஷாயம் பித்தத்தை குறைப்பதாக இருந்தால் அது சிறப்பு. கரிசலாங்கன்னி, மொசுமொசக்கை, திரிகடுகம், ஆவாரம்பூ கசாயம். நெல்லிக்காய் குடிநீர் இந்த வகையான கஷாயங்களை காலையில் குடித்து வந்தால் பித்தம் குறையும்.

    உணவுமுறைகள்

    ஆவாரை கஷாயம் மிகவும் நம் உடலுக்கு முக்கியமானது. அவாரம்பூ குடிநீர் உடலுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. பித்தம் அதிகரிப்பதனால் வரக்கூடிய முதல் நோய் சர்க்கரை நோய். பித்தம் அதிகரித்து இருக்கும் போது கபம் அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். ஆவாரம்பூ தேநீர் குடித்து வருபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

    இஞ்சித் துண்டை தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும். இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு, தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

    பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

    ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

    விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம். அகத்திக்கீரை சாப்பிட்டு வந்தால் பித்தக்கோளாறுகள் அகலும். பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

    கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும். நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

    எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும். அரச மரக்குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

    • பொதுவாக உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம்.
    • முறையான உடற்பயிற்சியின் மூலமே இதனை குறைக்க முடியும்.

    பொதுவாக உடல் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஒருதடவை உடல் எடை அதிகரித்துவிட்டால் அதனை குறைப்பது கடினம் தான். அப்படி முழு உடல் எடையை குறைப்பதே அவ்வளவு கடினம் என்றால் உடலில் உள்ள ஒரு பாகத்தின் எடையை குறைப்பது என்பது அவ்வளவு சாதாரணமானதல்ல.

    முறையான உடற்பயிற்சியின் மூலமே இதனை குறைக்க முடியும். ஒரு பயிற்சியை செய்வதற்கு முன்பு நாம் அதனை கடைசிவரைக்கும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் நாளாக நாளாக நமக்கு ஒரு சோம்பேறித்தனம் வந்திடுகிறது. இதனால் அது நமக்கு கைகொடுக்க முடியாமல் போய்விடுகிறது.

    இந்த தொடை சதை என்பது நம் உடலில் உள்ள ஒரு பகுதிதான். இதில் சிலருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். அதாவது குடும்ப அமைப்பாகவோ கூட இருக்கலாம். இது ஒன்றுடன் ஒன்று உரசுவதால் அவர்கள் நடப்பதற்கே மிகவும் பயப்படுவார்கள். அதனால் அதை குறைப்பதற்கு முதலில் என்ன வழி என்றால் உணவு முறைதான் இதற்கு சிறந்த தீர்வு. உணவுமுறைகளால் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும்.

    முறையான உணவு பழக்கவழக்கங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். காரம் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. வறுத்தது, பொறித்தது, மசாலா பொருட்கள் ஆகியவற்றை தவிர்த்துவிட வேண்டும். அதிகமாக காய்கறிகள், கீரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு முக்கியமான விஷயம் என்னவென்றால் உடற்பயிற்சிகள் தான். இந்த தொடை தசைகள் மிகவும் பெரியதாக இருக்கிறது என்றால் அதற்கென்று கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு ஸ்கிப்பிங், சைக்கிளிங் ஆகியவற்றின் மூலம் இந்த தசைகளை குறைக்க முடியும்.

    தசைகளை இறுகச்செய்யக்கூடிய யோகாசனங்களான படுத்துக்கொண்டே சைக்கிளிங் செய்வது, பட்டர்பிளை எக்சசைஸ். இதில் பட்டர்பிளை எக்சசைஸ் தொடையில் உள்ள தசைகளை இறுகச்செய்வதற்கு மிகவும் ஏற்றது. அல்லது சூரிய நமஸ்காரம் செய்யலாம். அல்லது இதற்கென்றே பிரத்தியேகமாக இருக்கக்கூடிய உடற்பயிற்சி என்னவென்றால் ஸ்குவாட். இந்த ஸ்குவாடை முறைப்படி செய்து வந்தால் நிச்சயமாக தசைகள் சுருங்க ஆரம்பிக்கும்.

    ஒரு சேரில் கையை நீட்டி அமர்ந்து இருப்பதுபோல் சேரே இல்லாமல் அமர்ந்த நிலையில் கைகளை நீட்டி அமர்ந்து இருப்பது ஸ்குவாட். இந்த பயிற்சியை ஆரம்பத்தில் எடுப்பது கடினமாக தான் இருக்கும். ஆரம்பத்தில் கால்கள் மிகவும் வலியாக இருக்கும். எனவே கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி செய்ய வேண்டும். இதுபோன்ற உடற்பயிற்சிகளின் மூலம் இந்த தொடை தசைகளை குறைக்க முடியும். நல்ல சாப்பாடு, நல்ல உடற்பயிற்சியும் தான் தொடையில் உள்ள தசையினை குறைக்க ஒரே வழி.

    • உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும்.
    • கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    தற்போது பெரும்பாலான பெண்களின் கவலையை அதிகரிப்பது அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைதான். இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பை நோய்கள், பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய், கீல்வாதம், பக்கவாதம், மனி அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும். இதை தவறாக புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.

    காலை உணவை தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் முரண்பாடு ஏற்படும். இது உடல் பருமன் பிரச்சினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும், மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.

    முதலில் எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள். துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதச்சத்து. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவுமுறையை பின்பற்ற வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'டி' மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் அவசியமானதாகும் இவை நிறைந்த உணவுகளை தினசரி உணவுப் பட்டியவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    காலை உணவாக முழு தானியங்கள் பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கதிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தினமும் போதுமான அளவு தண்ணிர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு சீரான தூக்கமும் முக்கியமானது. இவற்றோடு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால் உடல் எடை எளிதாக குறையும்.

    ×