என் மலர்
நீங்கள் தேடியது "ஆரோக்கியம்"
- தேங்காய் சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
- தேங்காய்க்கு இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும் தன்மை உண்டு.
சமையலுக்கு தேங்காய் உடைக்கும்போது அதிலிருக்கும் தண்ணீரை பருகாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறு வயதில் பலரும் ருசித்திருப்பார்கள். தேங்காய் துருவும்போது சிறிதளவு எடுத்து ருசிக்கவும் செய்வார்கள். பொதுவாக தேங்காயில் சுவை மட்டுமல்லாமல் எண்ணிலடங்கா மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள். தினமும் 40-50 கிராம் பச்சை தேங்காயை சாப்பிட்டு வந்தால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதில்லை. வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிடும்போது இதயம், தலைமுடி, சருமம், வயிறு போன்றவற்றிற்கு நன்மைகள் கிடைக்கும். இதை பச்சையாக சாப்பிடுவதால் செரிமான அமைப்பு பலப்படுத்தப்படுகிறது. உடலில் நிறைந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, செரிமானப் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.
தேங்காய் சரும ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அதை தினசரி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சருமம் எப்போதும் இளமையான தோற்ற பொலிவில் மிளிரும். இதன் காரணமாகத் தான் முடி மற்றும் சருமப் பராமரிப்பு பொருட்களில் தேங்காய் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய்க்கு இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும் தன்மை உண்டு. உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கச் செய்யும். இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் நல்ல கொழுப்புகளை அதிகரிப்பதுடன், ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும். அதேசமயம், அதிகப்படியாக தேங்காய் சாப்பிடுவது வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும் என்பதால் அளவுடன் சாப்பிடுவது நல்லது.
- கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும்.
- மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.
இன்று கல்லீரலுக்கென்றே சிறப்பு சிகிச்சை பிரிவுகள் நிறைய ஏற்படுத்தப்பட்டுள்ளன. காரணம் அந்த அளவிற்கு கல்லீரல் பாதிப்பு பரவலாகக் காணப்படுகின்றது.
கல்லீரல் மனித உடலின் சக்தி மையம் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. உணவை செரிக்கும் முக்கியமான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நச்சுகளை வெளியேற்றுகின்றது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகின்றது என 500-க்கும் மேற்பட்ட கல்லீரல் பணியினைச் சொல்லலாம்.
கல்லீரல் சத்தமில்லாது உடல் பணியினைச் செய்கிறது.
கல்லீரல் வயிற்றின் வலது பக்கத்தில் விலா எலும்புக்களுக்கு அடியில் அமைந்துள்ளது பெரிய உறுப்பு. இதனை பெரிய தொழிற்சாலை என்றே சொல்லலாம்.
* பித்த நீரினை உற்பத்தி செய்கின்றது. ரத்தத்தில் நச்சுகளை நீக்குகின்றது. ரத்தம் உறைவதற்கான புரதங்களை உருவாக்குகின்றது. ஹார்மோன் அளவினை சீர்படுத்துகின்றது. ஊட்டசத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள், குளுகோசினை சேமிக்கின்றது.

கமலி ஸ்ரீபால்
இத்தகு கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடல் என்னாவது? பொதுவில் மது, வைரஸ் தொற்று ஏ. பி. சி, கொழுப்பு கல்லீரல் நோய், மருந்துகளின் பக்க விளைவுகள், மரபணு கோளாறுகள், தவறான உணவு பழக்கங்கள் இவை பாதிப்பிற்கு முக்கிய காரணம் ஆகின்றன.
கல்லீரல் பாதிப்பினால் மஞ்சள் காமாலை-தோல், நகம், கண்கள் மஞ்சளாக இருக்கும். பிலிரூபின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும்.
* வயிறு வலி, வீக்கம், வலது பக்க மேல் வயிற்றில் வலி, வீக்கம், கல்லீரல் வீக்கம் அல்லது திரவம் சேருவதால் ஏற்படும் பாதிப்பு.
* அதிக சோர்வு, எப்போதும் பலவீனமாய் உணர்வது. எப்போதும் பலவீனமாக இருத்தல், கல்லீரல் ஆற்றல் உற்பத்தியை பாதிக்கின்றது.
* அரிப்பு- விடாமல் உடலில் அரிப்பு, பித்த அமிலம் தோலில் சேருவதால் அரிப்பு ஏற்படுகின்றது.
* அயர்ந்த சிறுநீர்- சிறுநீர் பழுப்பு நிறமாக இருக்கும். பிரிரூபின் சிறுநீரில் கலக்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்றது.
* மன குழப்பம்- கவனக்குறைவு, மறதி இருக்கும், நச்சுகளின் பாதிப்பால் ஏற்படுகிறது.
* பசியின்மை, எடை குறைதல்- ஊட்டச்சத்தினை உறிஞ்சுவதில் குறைபாடு.
* எளிதில் சிராய்ப்பு ஏற்படும். ரத்தக்கசிவு, ரத்த போக்கு ஏற்படலாம், ரத்த உறைதல் குறைபாட்டால் ஏற்படுகின்றது.
கல்லீரல் பிரச்சினை பிரிவுகள்
* வைரஸ் தொற்றில் ஏ, பி, சி பிரிவுகள் உள்ளன. ஏ பிரிவு அசுத்தமான உணவு. நீரால் பரவுகின்றது. மஞ்சள் காமாலை, வயிற்றுப் பிரட்டல் ஆகியவை இருக்கும்.
* வைரஸ் பி, சி பிரிவு ரத்தம், உடல் திரவங்கள் மூலம் பரவலாம். முதலில் அறிகுறிகள் கூட காட்டாமல் இருக்கலாம். ஆனால் இவை கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு வரைக் கூட ஏற்படுத்தலாம்.
* கொழுப்பு கல்லீரல்- இது இரு பிரிவு படும். ஆல்கஹால் சார்ந்தது. அடுத்தது ஆல்கஹால் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு. இதற்கு நீரிழிவு நோய், உடல் பருமன், கொழுப்பு உணவு ஆகியவை காரணம் ஆகின்றன. வயிற்று வலி, சோர்வு ஆகிய வெளிப்பாடுகள் இருக்கும்.
* சிரோசிஸ்- இது கல்லீரலில் வடுக்களை ஏற்படுத்துவது ஆகும். மது, வைரஸ், பிற நோய்கள் இதற்கு காரணமாக இருக்கலாம். வயிறு வீக்கம், கால் வீக்கம், குழம்பிய மனம் போன்றவை காணப்படும்.
* கல்லீரல் புற்றுநோய்- இது கடுமையான ஆபத்தான நிலை. வைரஸ் பி, சி, சிரோசிஸ் இவை காரணமாக அமையலாம். எடை குறைந்து மெலிந்து இருப்பர், மஞ்சள் காமாலை, வயிற்று வலி பாதிப்பு இருக்கும்.
* ஆட்டோ இம்யூன் கல்லீரல் நோய்கள்- உட லின் நோய் எதிர்ப்பு அமைப்பு கல்லீரலைத் தாக்குவதால் ஏற்படும் பாதிப்பாகும். எதனையும் ஆரம்ப காலத்தில் கண்ட றிந்து சிகிச்சை அளிப்பது நல்லது.
* ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, வைரஸ் சோதனை, பிலிரூபின் சோதனை ஆகியவை அவசியம்.
* இமேஜிங்ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகள் கல்லீரல் அளவு, வீக்கம், பாதிப்பு இவற்றினை அறிய உதவும்.
* பயாபசி-புற்றுநோய் பாதிப்பினை உறுதி செய்யும் பரிசோதனை முறையாகும்.
வரும்முன் தடுப்போம் மூலமாக கல்லீரலை எப்படி பாதுகாக்கலாம்?
* மது அருந்துவதை தவிர்ப்பது சிரோசிஸ் பாதிப்பினை வெகுவாய் குறைக்கும்.
* சத்தான உணவு- காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்ற கொழுப்பு சத்து குறைந்த உணவுகள் ஆகியவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பினைத் தவிர்க்கும்.
* சுத்தத்தினை கடை பிடித்தல். ரத்த பரிமாற்றம், தரமான ஊசிகள் போன்றவை அவசியம்.
* உடற்பயிற்சி அவசியம். உடல் பருமன், சர்க்கரை கட்டுப்பாடு, இவற்றுக்கு உறுதுணையாய் இருக்கும்.
* முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.
* வைரஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பச்சை காய்கறிகள், கீரை வகைகள், புரோகலி, காலி பிளவர் மற்றும் மீன், பருப்பு வகைகள், முட்டை வெள்ளைக்கரு மற்றும் 2 முதல் 3 லிட்டர் நீர் அன்றாடம் குடித்தல் மற்றும் அதிக சர்க்கரை, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றினை தவிர்த்தல் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.
(செரிமானத்தில் கல்லீரல் பங்கு என்பது மிக முக்கியமானது. பித்த நீரை உருவாக்குகின்றது. கொழுப்பு செரிமானத்திற்கு இது முக்கியமானது.
* ரத்தத்தில் நச்சுத் தன்மையினை நீக்குகின்றது.
* வளர்சிதை மாற்றங்களுக்குப் பொறுப்பானது.
* நஞ்சு, மருந்து, சுற்றுப்புற சூழலால் உடலில் சென்று தீங்கு விளைவிக்கும் பொருட்கள். இவைகளை ரத்தத்தில் இருந்து நீக்குகின்றது.
* கல்லீரல் செல்கள் உடலுக்கு தேவையான பல புரதங்களை உற்பத்தி செய்கின்றன.
* ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த உதவும். ஆஞ்சியோ டென்சினோஜன் என்ற ஹார்மோனை வெளியிடுகின்றது. மேலும் பல செயல்கள் பற்றி முன்பே அறிந்தோம்.
கல்லீரல் ஆரோக்கியம் வாழ்வின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தேவை ஆகும்.
ஆரோக்கியமான கல்லீரல் உடலை காக்கும் அமைதியான தேவதை.
- உப்பு குறைபாடு செல்களை குறிப்பாக மூளை செல்களை பாதிப்படைய செய்யும்.
- அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும்.
உப்பு - இது தாது உப்புகளில் ஒன்று. உப்பு சத்து உடலில் குறையும்போது தலைவலி, வயிற்று பிரட்டல், சோர்வு, தசை பிடிப்பு, குழப்பம், வலிப்பு, கோமா நிலை போன்றவை ஏற்படலாம்.
உப்பு குறைபாடு செல்களை குறிப்பாக மூளை செல்களை பாதிப்படைய செய்யும்.
பண்டை காலம் முதல் இன்றுவரை அநேகரும் நம்நாட்டில் உப்பளங்களில் இருந்து தயாரிக்கப்படும் கல் உப்பு, கடல் உப்பினை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.
கடல் உப்பில் சோடியம் குளோரைடு உள்ளது. இது உடலில் நீர் சத்து, ரத்த அழுத்தம் இவற்றினை சீர்செய்ய உதவுகிறது. மேலும் இது அதிக சுத்தகரிப்பு முறை, பதப்படுத்துதல் இவை இல்லாததால் பொட்டாசியம், இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்களும் உடையது. இந்த காரணங்களினால் இதை உயர்ந்ததாக குறிப்பிடுபவரும் உண்டு. ஆனால் இந்த மற்ற தாதுக்களின் பலனை பெற நாம் அதிகளவில் உப்பினை எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் இந்த தாதுக்களை மற்ற உணவு பொருட்களில் இருந்தும் பெற முடியும். சோடியம் உடலின் நீர் சத்து சம நிலைக்கு முக்கியமானது. இது குறையும் போது உடலில் நீர்சத்து குறைதல், ரத்த அழுத்தம் மாறுபடுதல் ஆகியவை ஏற்படலாம். உப்பு அதிகம் உட்கொள்வதும், குறைந்து உட்கொள்வதும் ரத்த அழுத்த பாதிப்பினை ஏற்படுத்தும்.
குளோரைட் வயிற்றில் தேவையான அளவு ஆசிட் சுரக்க அவசியம் ஆகின்றது. சோடியம் குளோரைடில் உள்ள குளோரைட் சிறிது சத்துக்களை உறிஞ்சி உடலுக்கு அனுப்ப உதவுகின்றது. ஆக அளவான உப்பு செரிமானத்திற்கு உதவும். உப்பு கலந்த நீரில் குளிப்பது சரும வறட்சி, வீக்கத்தினை நீக்கும். கடல் உப்பில் மக்னீசியம் சத்து அதிகம் இருப்பதால் சரும பாதிப்புகளுக்கு நல்லது.
அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே சிப்ஸ், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்கு தீனி போன்றவற்றினை தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றது.
* பொதுவில் உயர் ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, சிறுநீரக நோய் உள்ளவர்களை அவருக்கேற்ற அன்றாட உப்பின் அளவினை டாக்டர் பரிந்துரைப்பார்.
'அதிக உப்பு அமைதியாய் கொல்லும்' என்பர்.
அயோடின் சேர்க்கப்பட்ட உப்பு இன்று பரவலாக பழக்கத்தில் உள்ளது.
* தைராய்டு ஹார்மோன் நோய் இயங்க உதவும்.
* அயோடின் குறைபாட்டினைத் தவிர்க்க உதவும்.
* எலும்பு, மூளை வளர்ச்சிக்கு உதவும்.
* குறைந்த அயோடின் உணவு அறிவுறுத்தப்படுபவர்கள் அயோடின் கலந்த உப்பினை தவிர்ப்பது அவசியம்.
வளர்ந்தவர்கள் 2,300 மி.கி.க்கு குறைந்த அளவு சோடியம் உணவில் சேர்க்கலாம். 1500 மி.கி. என்பது மிகச் சிறந்தது. இது ஒரு டீஸ்பூன் (5 கி) உப்பு அளவு எனலாம். ஆனால் நாம் உண்ணும் உணவில் மிக அதிக அளவு உப்பு உள்ளது.
ரெடிமேட் உணவுகள், பாக்கெட் உணவுகளில் அதிக அளவு உப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே வீட்டில் சமைத்து அளவான உப்பு சேர்த்து உண்ண பழக வேண்டும்.
- நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட பாய் மூன்று ஆண்டுகள் வரை தனது இயற்கை தன்மையை இழக்காது.
- கால மாற்றத்திற்கேற்ப பாய்களும் பயன்படுத்துவதற்கேற்ப உருமாற்றமடைந்து கொண்டிருக்கின்றன.
நம் முன்னோர்கள் பாயில் படுத்து உறங்கும் வழக்கத்தை பின்பற்றி வந்தனர். ஆனால் இந்த நவீன காலத்தில் பலரும் பஞ்சு மெத்தையில் உறங்குவதை விரும்புகின்றனர். பாயின் மகிமையை உணர்ந்து அதில் உறங்கும் வழக்கத்தை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். பாய் உடலில் உருவாகும் அதிகமான சூட்டை உள்வாங்கி, உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது.
கட்டிலின் மெத்தையை விட தரையில் பாய் விரித்து உறங்குவது உடல் உஷ்ணத்தை போக்கும். வாதத்தை கட்டுப்படுத்தும். நினைவுத்திறனை மெருகேற்றும். உடலுக்கு சீரான ஓய்வையும், நிம்மதியான உறக்கத்தையும் அளிக்கும். மன அமைதியை மேம்படுத்தும். பாயில் தூங்குவது மார்பக தசைகள் தளர்ந்து விரிவடைய வழிவகை செய்யும்.
நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட பாய் மூன்று ஆண்டுகள் வரை தனது இயற்கை தன்மையை இழக்காது. கால மாற்றத்திற்கேற்ப பாய்களும் பயன்படுத்துவதற்கேற்ப உருமாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. பஞ்சு மெத்தைகள் அறிமுகமாவதற்கு முன்பு, நமது முன்னோர்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கையான பாய்களையே நம்பியிருந்தனர்.
'பாய் இல்லா சீர்வரிசை கிடையாது' என்ற முதுமொழி, தமிழர்களின் வாழ்வில் பாயின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
- உணவு சாப்பிடுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன.
- உணவினை எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
சாப்பிடுதல் என்பது வெறும் வழக்கமான சம்பிரதாயம் அல்ல. இன்று உடம்புக்கு இந்த அளவு உணவு தேவை, அதனால் நீங்கள் அவ்வளவு சாப்பிடுகிறீர்கள். நாளை அவ்வளவு தேவைப்படாமல் இருக்கலாம். ஒருவர் சாப்பிட வேண்டும்தான், ஆனால் அந்த உணவு நமக்கு அளிக்கும் ஊட்டத்தில் மகிழ்ந்து நம் உயிருக்கும் உணவுக்குமான தொடர்பை நன்றியுடன் உணர்ந்து சாப்பிட வேண்டும்.
இது சாப்பிடுவதில் இருக்கும் இன்பத்தை குறைப்பதற்காக அல்ல. உணவை உண்பதில் உள்ள உண்மையான ஆனந்தமே, இன்னொரு உயிர் உங்கள் உயிருடன் ஒன்றி கலந்து நீங்களாகவே ஆகிறது என்பதை உணர்ந்து உண்பதுதான் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். யோக கலாச்சாரத்தில் எப்பொழுதும் உங்கள் கால்களை மடக்கி அமரவும், ஒரு சக்தி வடிவம் இருக்கும் திசைநோக்கி கால்களை நீட்டாதிருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
உணவு சாப்பிடுவதற்கென்று சில வரைமுறைகள் இருக்கின்றன. எந்த நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும், எந்த உணவை முதலில் பரிமாற வேண்டும், இலையை எவ்வாறு மூட வேண்டும் போன்ற பல விஷயங்களை இதில் கவனிக்க வேண்டும். அவ்வாறு உணவு சாஸ்திர முறைப்படி சாப்பிடும்போது குடும்பத்தில் செல்வ செழிப்பு, மகிழ்ச்சி போன்றவை தானாகவே ஏற்படும்.
சாப்பட்டினை நமக்கு யாராவது பரிமாற வேண்டும். இலையில் முதலில் காய்கறி, அப்பளம் போன்றவற்றை வைத்துவிட்டே சாதத்தை பரிமாற வேண்டும். எடுத்த உடனேயே சாதத்தை பரிமாறக்கூடாது. அதைப்போல வத்தல், கீரையை முதலில் பரிமாறக் கூடாது.
உணவினை எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டு உணவு உண்ணும் போது நமக்கு நன்மை பயக்கும். கிழக்கு நோக்கி அமர்ந்து சாபிட்டால், ஆயுள் வளரும். மேற்கு திசை நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், பொருள் சேரும். தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால், புகழ் வளரும். வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது. நோய்தான் வரும்.

பசிக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்பொழுது நோய் சேரும். சாப்பிடுவதற்கு முன்பு கை, கால், வாய் ஆகியவற்றை நன்றாகக் கழுவிவிட்டு சாப்பிட அமர வேண்டும். சாப்பிடும்போது உணவில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். வேறு வேலைகள் எதுவும் செய்துக்கொண்டே உணவை உண்ணக்கூடாது. குறிப்பாக செல்போன், டி.வி. பார்த்துக்கொண்டே சாப்பிடக்கூடாது. இது தரித்திரத்தை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.
சாப்பிடும்பொழுது வீட்டின் கதவு மூடியிருக்க வேண்டும். வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. சூரியன் உதயமாகும்போதும், அஸ்தமனத்தின்போதும் சாப்பிடக்கூடாது. இதுபோன்ற உணவு சாஸ்திரத்தை பின்பற்றி நீண்ட ஆயுள், செல்வ செழிப்பு பெற்று வாழலாம்.
- தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது.
- வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.
தயிர் குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளலாம். சில்லென்று இல்லாமல் எப்போதும் சாதாரண இயற்கை நிலையில் எடுத்துக் கொள்வது நல்லது. தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
* தயிர்-கால்சியம், புரதம், பி12, பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்து நிறைந்தது.
* தயிர் கால்சியம் பாஸ்பரஸ் எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானது.
* தயிரில் ஆரோக்கியமான புரோபயாடிக் (நல்ல குடல் பாக்டீரியாக்கள்) ஏராளமாக உள்ளன. வைட்டமின் பி சத்து கொண்டது.
* தயிர் கொலஸ்ட்ராலை குறைக்கும். உயர்ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தும்.
* இருதய ஆரோக்கியதற்கு நல்லது.
* வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு தயிர் நல்லது.
* உடல் பருமன் குறையும்.
* குடல் புற்றுநோய் அபாயம் குறையும்.
* அதிகம் அடர்ந்த தயிராக இல்லாமல் கொழுப்பு சத்து குறைவான பாலில் தயாரிக்கும் தயிர் நல்லது.
- நார்ச்சத்தை சர்க்கரை மூலக்கூறுகளாக உடைக்க முடியாது.
- செரிமான அமைப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் துணை புரியும்.
மனித உடலால், நார்ச்சத்தை ஜீரணிக்க முடியாது. ஏனெனில் உணவு நார்ச்சத்து என்பது தாவர அடிப்படையிலான உணவுகளில் காணப்படும் சிக்கலான கார்போஹைட்ரேட் வகையை சேர்ந்ததாகும். பெரும்பாலான கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரை மூலக்கூறுகளாக உடைக்கப்பட்டு விடும். ஆனால் நார்ச்சத்தை சர்க்கரை மூலக்கூறுகளாக உடைக்க முடியாது. அதேவேளையில் குடலில் வாழும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நார்ச்சத்தை நொதித்து தங்களுக்கான உணவாக மாற்றிக்கொள்ளும். அப்படி நார்ச்சத்து நொதிக்கப்படும்போது செரிமானத்துக்கும் உதவி செய்யும். ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும்.
இந்த நார்ச்சத்திலும் இரண்டு வகை உண்டு. ஒன்று கரையக்கூடிய நார்ச்சத்து. மற்றொன்று கரையாத நார்ச்சத்து. இதில் கரையக்கூடிய நார்ச்சத்து தண்ணீரில் கரைந்து ஜெல் போன்ற பொருளை உருவாக்கும். அந்த ஜெல் உடலில் கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் அளவை குறைக்க உதவும். கரையாத நார்ச்சத்தானது தண்ணீரில் கரையாது. இருப்பினும் செரிமான அமைப்பின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலை தடுக்கவும் துணை புரியும்.
நார்ச்சத்தை உடலால் ஜீரணிக்க முடியாது என்பதற்காக அதனை குறைவாக உட்கொள்வது நல்லதல்ல. உடலில் நார்ச்சத்து அளவு குறையும்போது குடலில் வாழும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். அதனால் குடல் ஆரோக்கியம் கெடும்.
- ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சார்ந்த நோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.
- தினமும் 50 முறை குதித்து அன்றைய நாளை தொடங்குவது உடலுக்கு புத்துயிர் அளிக்கும்.
தினமும் எளிதாக மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, குதிப்பது. 'ஜம்பிங் ஜாக்ஸ்' என்று அழைக்கப்படும் இது, இதயத்துக்கும், ஒட்டுமொத்த உடல் நலத்திற்கும் சிறந்த, எளிய பயிற்சி வடிவமாகும். தினமும் காலையில் 50 முறை இந்த குதிக்கும் பயிற்சியை தொடர்ந்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
எலும்புகளை வலிமையாக்கும்
குதிக்கும்போது உடலிலுள்ள பல தசைகளின் செயல்பாடுகள் தூண்டப்படும். குறிப்பாக கால்கள், கைகள், தொடை உள்ளிட்ட தசை பகுதிகளின் இயக்கம் ஒருங்கிணைக்கப்படும். தசைகள் மற்றும் எலும்புகளின் வலிமையை மேம்படுத்த உதவும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்யும். குதிக்கும் பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வது நீண்டகால எலும்பு ஆரோக்கியத்திற்கு வித்திடும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சார்ந்த நோய் பாதிப்புகளை தடுக்க உதவும்.
இதய தசைகளை வலுப்படுத்தும்
குதிக்கும் பயிற்சியில் ஈடுபடும்போது இதய துடிப்பு அதிகரிக்கும். அதனால் ரத்த ஓட்டம் மேம்படும். இதய தசைகள் நெகிழ்வடையும். இந்த பயிற்சியை தினமும் மேற்கொள்வது இதயம் திறம்பட செயல்பட உதவிடும். இதய நோய் அபாயமும் குறையும்.
மன நிலையை மேம்படுத்தும்
தினமும் 50 முறையோ அல்லது அதற்கு மேலோ குதிக்கும் வழக்கத்தை பின்பற்றுவது எண்டோர்பின் ஹார்மோன்களை வெளியிட தூண்டும். இது மனதுக்கு நல்ல உணர்வுகளை தரும் ஹார்மோன் என்பதால் மன நிலையை மேம்படுத்தும். மன அழுத்தம் குறைவதற்கு வழிவகுக்கும். கவனிக்கும் திறனை அதிகரிக்க செய்யும்.
உடல் எடை மேலாண்மையை நிர்வகிக்கும்
உடற்பயிற்சி கண்ணோட்டத்தில் தினமும் 50 முறை குதிக்கும் பயிற்சி செய்வது உடல் எடையை சீராக நிர்வகிக்க உதவும். அதேவேளையில், சமச்சீரான உணவு பழக்கத்தையும் பின்பற்ற வேண்டும். கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், நாள் முழுவதும் உடல் ஆற்றலை அதிகரிக்கவும் இந்த பயிற்சி உதவிடும்.
என்ன நடக்கும்?
இந்த எளிய பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பது இதயம், தசைகள், எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்கும். தினமும் 50 முறை குதித்து அன்றைய நாளை தொடங்குவது உடலுக்கு புத்துயிர் அளிக்கும். மனதளவில் புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக உணரக்கூடும்.
எப்படி குதிப்பது?
குதிக்கும்போது முதலில் நிமிர்ந்த நிலையில் நிற்க வேண்டும். அப்போது கைகள் இரண்டும் இருபுறமும் தொடைப்பகுதியை தொட்டிருக்க வேண்டும். பின்பு இரு கால்களையும் சற்று அகலமாக விலக்கி வைக்க வேண்டும். அப்போது இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கைகூப்பியபடி நிற்க வேண்டும்.
பின்பு கைகளை தளர்த்தி தொடை பகுதியையொட்டி வைக்க வேண்டும். அப்போது கால்கள் இரண்டையும் ஒன்று சேர்த்த நிலைக்கு கொண்டு வந்து இயல்புக்கு திருப்ப வேண்டும். பின்பு கால்களை அகலமாக விலக்கியும், கைகளை உயர்த்தியும் மீண்டும் இயல்புக்கு திரும்புவதுமாக பயிற்சி செய்ய வேண்டும்.
- கேரட்டை விட சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
- கேரட்டில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும்.
கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இவை இரண்டும் சுவையான, ஆரோக்கியமான காய்கறிகளாக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. இயற்கையான இனிப்புச்சுவை கொண்ட இந்த இரண்டு வேர் காய்கறிகளும் எளிதாக சமைப்பதற்கும், ருசிப்பதற்கும் ஏற்றவை. கண் பார்வையை மேம்படுத்தும், இதயத்தை பாதுகாக்கும் 'ஆரோக்கிய சக்தி மையங்களாக' இவை கருதப்படுகின்றன. இருப்பினும் கண்களுக்கும், இதயத்துக்கும் இவை வழங்கும் நன்மைகள் வேறுபடுகின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோமா?
கண் ஆரோக்கியம் காக்கும்
கேரட், கண் ஆரோக்கியம் காக்கும் பிரபலமான காய்கறியாக அறியப்படுகிறது. இதில் இருக்கும் அதிக அளவிலான பீட்டா-கரோட்டின் வைட்டமின் ஏ உற்பத்திக்கு உதவிடும். கண் பார்வை திறனுக்கு வைட்டமின் ஏ முக்கியமானது. சர்க்கரை வள்ளிக்கிழங்கிலும் பீட்டா-கரோட்டின் அதிக அளவில் உள்ளது. அதன் ஆரஞ்சு நிறமே அதற்கு சான்றாக அமைந்திருக்கிறது.
கேரட்டை விட சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இரவு நேர பார்வையிழப்பு தன்மை ஏற்படுவதை தடுப்பதிலும், ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறப்புற்று விளங்குகிறது. குறிப்பாக உணவில் வைட்டமின் ஏ குறைவாக எடுத்துக்கொள்ளும் நபர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்வது சிறந்தது.
கண் செல்களை பாதுகாக்கும்
கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டிலும் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், ஆக்சிஜனேற்ற அழுத்தம் காரணமாக ஏற்படும் கண் செல்களின் சேதத்தை தடுக்க உதவுகின்றன. கேரட்டில் லூட்டின், ஜியாசாந்தின் போன்ற சேர்மங்கள் உள்ளன. குறிப்பாக ஊதா நிற சர்க்கரைவள்ளிக்கிழங்கு வகைகளில், ஆந்தோசியானின் அதிகம் உள்ளன. அவை நீண்ட கால கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரத்த அழுத்தத்தை காக்கும்
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவில் உள்ளடங்கி இருக்கும் பொட்டாசியம், உடலில் அதிகமாக சேரும் சோடியத்தை சமநிலைப்படுத்தக்கூடியது. அதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவிடும். கேரட்டிலும் பொட்டாசியம் உள்ளது. ஆனால் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு முன்னிலை வகிக்கிறது.
கொழுப்பை கட்டுப்படுத்தும்
கேரட்டில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். செரிமான மண்டலத்தில் சேமித்துவைத்து, ஆரோக்கியமான கொழுப்பை தொடர்ந்து பயன்படுத்த வழிவகை செய்யும்.
அழற்சியை குறைக்கும்
இதய நோய்கள் ஏற்படுவதற்கு அழற்சி முக்கிய காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள சேர்மங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகளும் அழற்சியால் ஏற்படும் சேதங்களை தடுக்க துணைபுரிகின்றன.
ரத்த நாளங்களை பாதுகாக்கும்
கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இரண்டும் ரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படாமல் காக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளன. குறிப்பாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரத்த நாளங்களை நெகிழ்வாக வைத்திருக்க உதவும். கேரட் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை குறைக்க வித்திடும்.
சாப்பிட எது எளிது?
கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம். எங்கும் எடுத்து சென்று எப்போதும் சாப்பிடலாம் என்பதால், தினசரி உணவில் கேரட்டை சேர்ப்பது மிகவும் எளிது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல. அதிக ஸ்டார்ச் உள்ளடக்கம் காரணமாக வாயு, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் வேகவைத்து சாப்பிடுவதே நல்லது.
எது சிறந்தது?
கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டுமே கண், இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. எனினும் கேரட்டில் கண் ஆரோக்கியத்திற்கு நேரடியாக பயனளிக்கும் ஊட்டச்சத்துகள் அதிகம் காணப்படுகிறது. இதயத்தை பாதுகாக்கும் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிகம் உள்ளன.
கண் ஆரோக்கியத்திற்கு கேரட் சிறந்த தேர்வாக இருந்தாலும், இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு முன்னணியில் இருக்கிறது. எனவே இரண்டையும் சமநிலையாக உணவில் சேர்த்துக்கொள்வதே முழுமையான ஆரோக்கியத்தை பேணுவதற்கு சிறந்த வழியாகும்.
- உங்கள் உடம்பு மட்டும்தான் நீங்கள் வாழும் வரைக்கும் நிலையான உங்களுக்குரிய விலாசம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
- உங்களைத் தவிர வெளி ஆட்கள் வேறு யாரும் உங்கள் உடம்புக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது.
வாழ்வில் கடைசி வரை உங்களுடன் கூட வரும் உண்மையான துணை யார் என்று நினைக்கிறீர்கள்?
அம்மா?
அப்பா?
மனைவி?
கணவன்?
மகன்?
மகள்?
நண்பர்கள்?
இவர்கள் யாரும் இல்லை. உங்கள் உண்மையான வாழ்க்கைத் துணை, உங்கள் உடம்புதான். உங்கள் உடம்பு செயல்படுவதை நிறுத்திவிட்டால் உங்களுடன் யாரும் இருக்கப் போவதில்லை.
பிறப்பிலிருந்து இறப்பு வரை உங்களுடன் இருக்கப் போவது உங்கள் உடம்பே. உங்கள் உடம்புக்காக நீங்கள் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் உடம்பு உங்களைப் பார்த்துக்கொள்ளும்.
நீங்கள் என்ன உண்கிறீர்கள், என்ன உடற்பயிற்சி செய்கிறீர்கள், எந்த அளவுக்கு உடலுக்கு ஓய்வு தருகிறீர்கள், மன அழுத்தத்தை எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்துத்தான் உங்கள் உடம்பு உங்களைப் பாதுகாக்கும்.
உங்கள் உடம்பு மட்டும்தான் நீங்கள் வாழும் வரைக்கும் நிலையான உங்களுக்குரிய விலாசம் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
உங்களைத் தவிர வெளி ஆட்கள் வேறு யாரும் உங்கள் உடம்புக்கு பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அந்த உடம்பில், மூச்சுப் பயிற்சி-நுரையீரல்களுக்கு தியானப் பயிற்சி-மனதுக்கு யோகாசனப் பயிற்சி- முழு உடம்புக்கு நடைபயிற்சி-இதயத்துக்கு சிறந்த உணவு- செரிமான உறுப்புகளுக்கு நல்ல எண்ணங்கள்- ஆன்மாவுக்கு நற்செயல்கள்- உலகுக்கு இதை உணர்ந்து வாழும்போது வாழ்க்கை வளமாகும், இனிமையாகும்.
- இரண்டு சமையல் முறைகளும் கடினமான நார்ச்சத்துக்களை உடைப்பதன் மூலம் காய்கறிகள் எளிதில் ஜீரணிக்க உதவும்.
- தண்ணீரைப் பயன்படுத்தாதபோது ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும்.
காய்கறிகளை நீராவியில் வேகவைப்பது, நீரில் கொதிக்கவிட்டு வேகவைப்பது இதில் எந்த முறையில் சமைப்பது சிறந்தது என்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது. இந்த இரு சமையல் முறையும் சுவை, நிறம், ஊட்டச்சத்துக்கள் விஷயத்தில் குறிப்பிடத்தக்க மாறுபாடுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? எந்த முறையில் சமைப்பது காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க உதவிடும் என்பது குறித்து பார்ப்போம்.
காய்கறிகளை நீரில் வேகவைக்கும்போது என்ன நடக்கும்?
காய்கறிகளை நீரில் கொதிக்கவைத்து சமைப்பது எளிய மற்றும் வழக்கமான சமையல் முறையாகும். தண்ணீரில் காய்கறிகளை மூழ்கவைத்து 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள் வேகவைப்பது நல்லது. இந்த சமையல் முறை தொந்தரவு இல்லாதது. ஒரே சமயத்தில் வேறு சமையல் வேலைகளிலும் ஈடுபட ஏதுவானது. இருப்பினும் நீரில் கொதிக்க வைக்கும் செயல்முறையின்போது பல ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் இழக்கக்கூடும். அதனால் காய்கறிகளை வேகவைத்த தண்ணீரை வீணாக்காமல் சூப் தயாரிக்கலாம். குழம்பில் ஊற்றிவிடலாம். அப்படி செய்யும்போது மட்டுமே ஊட்டச்சத்துக்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
நீரில் கொதிக்கவிட்டு வேகவைத்த காய்கறிகள் பெரும்பாலும் மென்மையாக மாறும். கொதிக்க வைக்கும்போது காய்கறிகளின் செல் சுவர்கள் உடைந்து அதன் இயற்கையான சுவை தன்மை வெளியேறக்கூடும். இருப்பினும் உருளைக்கிழங்கு, பீட்ரூட் போன்ற மாவுச்சத்து நிறைந்த காய்கறிகளை நீரில் வேகவைப்பதே சரியானது. அவை ஜீரணிக்க எளிதாகவும் மாறும்.
எந்த முறை அதிக ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும்?
இரண்டு சமையல் முறைகளும் கடினமான நார்ச்சத்துக்களை உடைப்பதன் மூலம் காய்கறிகள் எளிதில் ஜீரணிக்க உதவும். அதே வேளையில், நீராவி முறை அதிக நன்மை தரும். இது செரிமானத்திற்கு உகந்த சேர்மங்களை அப்படியே தக்கவைத்துவிடும். குறிப்பாக முட்டைக்கோஸ், காலிபிளவர் மற்றும் புரோக்கோலி போன்ற காய்கறிகளை நீராவியில் சமைப்பதே சிறந்தது. அவற்றை தண்ணீரில் வேகவைப்பது சில ஊட்டச்சத்துக்களை குறைத்துவிடும்.
ஆயுர்வேதத்தில் நீராவியில் சமைக்கும் முறையே சிறந்ததாக மதிப்பிடப்படுகிறது. இது உணவில் இருக்கும் உயிர் சக்தியை பாதுகாக்க உதவுகிறது. உணவை இலகுவாகவும், புத்துணர்ச்சியுடனும், அதிக ஆற்றலுடனும் வைத்திருக்கும்.
நீராவி-கொதிக்கவைத்தல்: முக்கிய வேறுபாடுகள்
ஊட்டச்சத்து தக்கவைப்பு: நீராவியில் வேகவைக்கும்போது மிக குறைவான வைட்டமின்களே இழக்கப்படுகின்றன. நீரில் கொதிக்க வைக்கும்போது வைட்டமின்கள் தண்ணீரில் கசிந்து விடும். அந்த தண்ணீரைப் பயன்படுத்தாதபோது ஊட்டச்சத்துக்கள் வீணாகிவிடும்.
அமைப்பு: நீராவியில் வேகவைப்பது, காய்கறிகளை உறுதியாகவும், மிருதுவாகவும், வண்ணமயமாகவும் தக்கவைத்துவிடும். அதே நேரத்தில் தண்ணீரில் கொதிக்க விடும்போது, காய்கறிகள் மென்மையாக மாறும்.
சுவை: இயற்கையான மற்றும் இனிப்பு சுவைகளை தக்கவைக்க நீராவி சமையல் உதவும். கொதிக்க வைப்பது, காய்கறிகளை லேசானதாக மாற்றும்.
நேரம் - எளிமை: கொதிக்கவைக்கும் முறையுடன் ஒப்பிடும்போது நீராவியில் சமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.
காய்கறிகளை நீராவியில் வேகவைக்கும்போது என்ன நடக்கும்?
கொதிக்கும் நீரில் இருந்து வெளிப்படும் நீராவி மூலம் காய்கறிகளை சமைக்கும்போது தண்ணீருடன் நேரடி தொடர்பு இல்லாமல் வேகும். அந்த நீராவி காய்கறிகளின் எல்லா பகுதியிலும் சமமாக பரவி நன்றாக வேக தொடங்கும். காய்கறிகளை மென்மைத்தன்மைக்கு மாற்றுவதோடு சுவையும் குறையாமல் பார்த்துக்கொள்ளும். தண்ணீருடன் நேரடி தொடர்பு இல்லாததால் காய்கறிகளில் பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்படும். குறிப்பாக நீரில் கரையும் வைட்டமின்களான பி-காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி போன்றவை தக்கவைக்கப்படும். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் இருப்பதற்கு இதுதான் காரணம். உதாரணமாக கேரட் நிறம் பளிச்சென்று மாறும். புரோக்கோலி மொறுமொறுப்பு தன்மையை தக்கவைத்துக்கொள்ளும். மேலும் நீராவியில் வேகவைப்பது காய்கறிகளின் இயற்கையான இனிப்புத்தன்மையை மீட்டெடுக்கவும் உதவிடும். நீராவியில் வேகவைக்கும்போது தண்ணீரில் சில துளி எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இது கலோரிகளை கூடுதலாக்காமல் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்த துணைபுரியும்.
- சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் கொள்வார்கள்.
- மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது உணர்ச்சிகள் அதிகமாக வெளிப்படும்.
மன நல பிரச்சனை எந்த நேரத்திலும், எந்த வயதிலும் ஏற்படலாம். அது எப்படி உண்டாகும்? என்னென்ன அறிகுறிகளை வெளிப்படுத்தும்? அதனை எப்படி கையாள வேண்டும்? என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து செயல்பட்டால் மன நலனை பேணி பாதுகாக்கலாம். இல்லாவிட்டால் மன நோயாக மாறி மன நலனில் மட்டுமல்ல உடல் நலனிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன நோய்க்கு வித்திடும் ஆரம்ப அறிகுறிகள் குறித்து பார்ப்போம்.
கவனம் செலுத்துவதில் சிரமம்
எந்த விஷயத்திலும் கவனம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படும். மோசமான செயல்திறன் கொண்டிருப்பார்கள். தொடர்ந்து கவனச்சிதறலுடன் செயல்படுவார்கள். அல்லது அவர்களுக்கு வழங்கப்படும் வேலையில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.
உடல் ரீதியான மாற்றம்
மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது பலருக்கும் பசியின்மை உண்டாகும். சாப்பாடு மீது விரக்தி ஏற்படும். சிலரோ வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். மன நலன் பாதிப்புக்குள்ளாகி வாந்தி எடுக்கவும் செய்வார்கள்.
மனநிலை மாற்றம்
சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் கொள்வார்கள். இயல்பாக பேசினால் கூட கோபத்தை கொப்பளித்துவிடுவார்கள். கோபம் அவர்களிடத்தில் தொடர்ந்து குடிகொண்டிருக்கும். எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைவார்கள். தனிமையை நாடுவார்கள். எந்த செயலிலும் ஆர்வத்தோடு ஈடுபடமாட்டார்கள். இதற்கு முன்பு விரும்பி செய்த விஷயங்களை கூட தவிர்ப்பார்கள்.
மதுப்பழக்கம்
எந்தவொரு பிரச்சனையையும் மன ரீதியாக எதிர்கொள்ள தைரியமில்லாமலோ, மனதுக்குள்ளேயோ விவாதித்து அதுபற்றி பிறரிடம் பேசத் தயங்குவதோ மன நல பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடும். அதில் இருந்து மீள மது, போதை பழக்கத்தை நாடுவது நாளடைவில் அதற்கு அடிமைப்படுத்திவிடும்.
அதிக உணர்ச்சி நிலை
மன நலம் பாதிப்புக்குள்ளாகும்போது உணர்ச்சிகள் அதிகமாக வெளிப்படும். அதிகப்படியான பயம் எட்டிப் பார்க்கும். கவலைகள் ஆக்கிரமித்து பயத்தை அதிகப்படுத்தும். மனத்தெளிவு இல்லாமல் குழப்பம் குடிகொள்ளும். பதற்றமும் பற்றிக்கொள்ளும்.
உடல் வலி
மன நோயின் ஆரம்ப அறிகுறிகள் சிலருக்கு உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். நாள்பட்ட தலைவலி, வயிற்றுப்போக்கு, தசை வலி, கை, கால் வலி என உடல் ரீதியான வலிகளை எதிர் கொள்வார்கள்.

நடத்தை
பிளேடு கொண்டு கைகளை கீறுதல், கத்தியைக்கொண்டு வெட்டுதல் போன்ற காயத்தை ஏற்படுத்தும் பொறுப்பற்ற நடத்தை, தற்கொலை பற்றிய சிந்தனை தலைதூக்குதல் போன்ற செயல்பாடுகள் மன நோயின் அறிகுறியாக கருதப்படும்.
மாற்றங்கள்
அன்றாட நடவடிக்கைகளில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுதல், காரணமே இல்லாமல் சண்டையிடுதல், வாக்குவாதம் செய்தல், அச்சுறுத்துதல், மற்றவர்களுக்கோ அல்லது தனக்கோ தீங்கு விளைவித்தல் போன்ற செயல்பாடுகளையும் கொண்டிருப்பார்கள்.
நீங்கள் எவ்வாறு உதவ முடியும்?
உங்கள் அன்புக்குரியவர்கள் மன நல பிரச்சனைக்கு ஆளாகி இருந்து, இது போன்ற அறிகுறிகளுடன் செயல்பட்டால் அவர்களை நிதானத்துடன் கையாள வேண்டும். அன்பாக, பாசமாக வழி நடத்த வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளித்தாலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
இணைந்து பணியாற்றுங்கள்
குடும்பத்தினர், நண்பர்கள், உடன் வேலை செய்யும் சக ஊழியர்களுடனான தகவல் தொடர்பை எளிதாக்குங்கள்.
நண்பர்கள், குடும்பத்தினரின் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள். அவர்களின் கருத்துகளில் நிறை, குறை இருந்தால் அவர்கள் மனம் நோகாதபடி சுட்டிக்காட்டுங்கள்.
உங்கள் நலம் விரும்பிகளுடன் இணைந்து பணியாற்றுங்கள். இலக்குகளை நிர்ணயித்து திட்டமிடுங்கள். மனதுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்காமல் செயல்படுங்கள்.
தவிர்க்கும் வழிமுறைகள்
எதிர்மறை எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது. உங்கள் கவலைகளை நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தொடர்ந்து மன அழுத்தம் இருந்தாலோ, மன நலன் பாதிப்புக்குள்ளாகி நிம்மதியை இழந்தாலோ மன நல நிபுணரிடம் கவுன்சலிங் பெற வேண்டும்.
உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்கள் கூறும் கருத்துகளை நன்கு கவனியுங்கள். அவர்களிடம் பேசவோ, உங்களின் நிலை பற்றி அறிய கேள்வி கேட்கவோ தயங்காதீர்கள்.






