search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Secretary"

    • புதுவை குடிமைப்பணி அதிகாரியாக பதவி உயர்வை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கியுள்ளார்.
    • கலை பண்பாட்டு துறை இயக்குனராக பணியாற்றி வரும் கலியபெருமாள் கூடுதல் பொறுப்பாக பாரதியார் பல்கலைக்கூட உறுப்பினர் செயலராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பல்வேறு துறைகளில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த இளங்கோவன், ராஜு, கலியபெருமாள், வருவாய்த்துறையில் தாசில்தாராக பணியாற்றி வந்த குமரன் மற்றும் சவுந்தரி ஆகிய 5 பேருக்கும் புதுவை குடிமைப்பணி அதிகாரியாக பதவி உயர்வை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வழங்கியுள்ளார்.

    பதவி உயர்வு பெற்ற இளங்கோவன் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனராகவும், ராஜு காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், சமூக நலத்துறை இயக்குனராக பணியாற்றியவரும் குமரன் பதவி உயர்வு பெற்ற நிலையில் அவருக்கு கூடுதலாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராகவும், கலை பண்பாட்டு துறை இயக்குனராக பணியாற்றி வரும் கலியபெருமாள் கூடுதல் பொறுப்பாக பாரதியார் பல்கலைக்கூட உறுப்பினர் செயலராகவும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் பதவி உயர்வு பெற்ற சவுந்தரி புதுவை மாநில பேரிடர் மேலாண்மை முகமையும் துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னர் தமிழிசை உத்தரவின் பேரில் இதற்கான ஆணையை தலைமை செயலர் ராஜீவ் வர்மா மேற்பார்வையில் அரசு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

    • தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்த உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர்.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி மண்டலம் -4 வார்டு எண் 38, பிருந்தாவன் அவென்யூவில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்த உறுதி மொழியினை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னைய்யா ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் மாநகரில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா , நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னைய்யா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    • சுதந்திர தினத்தன்று ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பிரச்சனை நடைபெறாத வகையில் நடவடிக்கை.
    • கிராம சபை கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம், கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது தேசிய கொடியை ஏற்றுவதற்கு அவரது சாதியை காரணமாக காட்டி அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்த ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தத்தை தேசியக்கொடி ஏற்ற வைத்தார்.  


    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

    முதலமைச்சர் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்திற்கு தலைமைச் செயலாளர் இன்று நேரில் சென்று ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களோடு நேரடியாக கலந்துரையாடினார்.

    தொடர்ந்து பல்வேறு துறை அரசு அலுவலர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் 75-வது சுதந்திர தின விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்றுவது குறித்தும், அதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    சுதந்திர தினத்தன்று இவ்வூராட்சியில் எவ்வித பிரச்சனைகளும் நடைபெறாத வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதை தலைமைச் செயலாளர் உறுதி செய்து, தேசிய கொடிகளை உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து, ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், தலைமைச் செயலாளர் , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் தேசிய கொடியை ஏற்றினார். தேசிய கொடிக்கு அனைவரும் மரியாதை செலுத்தினர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்.
    • நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்குகளில் ஐகோர்ட்டு உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை.

    சென்னை:

    நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.

    சென்னை வேளச்சேரி, தரமணி, உள்ளிட்ட இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

    இந்த செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு, சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் இருந்தால், அவற்றை சட்டப்படி அகற்ற வேண்டும். இது குறித்து கடந்த மார்ச் 31-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கை தாக்கல் செய்ய அரசுத்தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

    இதையடுத்து வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ஆக்கிரமிப்புகளை அகற்ற பிறப்பித்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்.

    நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்குகளில் ஐகோர்ட்டு உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை.

    இதுபோன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்ட போதும், உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்துவதில்லை.

    எனவே, ஐகோர்ட்டு உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிடுவதுடன், கடைசி உத்தரவை அமல்படுத்தும் வரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்.

    சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், ஊதியம் பெற அனுமதிக்க முடியாது.

    அனைத்து வழக்குகளின் விசாரணையையும் 10 நாட்களுக்கு தள்ளி வைக்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    • துணை ெபாதுச் செயலாளர் பதவி ராஜன்செல்லப்பாவுக்கு கிடைக்குமா? என்று தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    • இவர் ஆரம்பம் முதல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    திருப்பரங்குன்றம்

    அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும், அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனும் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டனர்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. துணைப்பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தென் மாவட்ட முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கும் நிலையில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.வுக்கு இந்த பதவி வழங்கப்படும் என தொண்டர்கள் எதிர்பார்கின்றனர்.

    இவர் ஆரம்பம் முதல் எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    மேலும் 2019-ம் ஆண்டு அ.தி.மு.க.விற்கு ஒற்றை தலைமையே வேண்டுமென முதலில் குரல் கொடுத்தவர் ராஜன் செல்லப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் அ.தி.மு.க.வில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாவட்ட செயலாளராகவும் மதுரை மாநகர மேயராகவும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்த நிலையில் தற்போது அந்தப் பதவி இவருக்கு கிடைக்கும் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    குட்கா விவகாரத்தில் வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய கடிதத்தை தமிழக தலைமை செயலாளரும், டி.ஜி.பி. அலுவலகமும் பெற்றதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. #Gutkha #GutkhaScam
    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் தடையை மீறி குட்கா விற்கப்பட்டு வருகிறது.

    குட்கா விற்பனையை தங்கு தடையின்றி செய்வதற்காக அரசியல்வாதிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்னையைச் சேர்ந்த குட்கா தயாரிப்பாளர்கள் ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது. குட்கா தயாரிப்பாளர்களின் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கிய டைரி மூலம் இந்த தகவல் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும், போலீஸ் டி.ஜி.பி.க்கும் ரகசிய கடிதம் அனுப்பினார்கள். தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் “குட்கா விற்பனைக்காக அமைச்சருக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும்” என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி இருந்தனர்.

    அதுபோல 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி போலீஸ் டி.ஜி.பி.க்கு எழுதப்பட்ட கடிதத்தில், “குட்கா விற்க லஞ்சம் வாங்கிய இரு போலீஸ் உயர் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் ஆகஸ்டு 13-ந்தேதி வருமான வரித்துறை சார்பில் டி.ஜி.பி.க்கு மேலும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், “தமிழகத்தில் நாங்கள் சோதனை நடத்த குறிப்பிட்ட இடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டதும், உடனடியாக அந்த தகவலை போலீசார் அந்தந்த தொழில் அதிபர்களிடம் சொல்லி விடுகிறார்கள்” என்று கூறப்பட்டிருந்தது.

    ஆனால் இத்தகைய கடிதங்கள் எதுவும் வரவில்லை என்று கோர்ட்டில் தமிழக அரசு கூறியது. இதையடுத்து வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய ஆவணங்களை கண்டுபிடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் குட்கா ஊழல் வழக்கு கடந்த ஆண்டு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    கோப்புப்படம்

    இதற்கிடையே வருமான வரித்துறையினர் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு சசிகலா அறையில் வருமான வரித்துறை எழுதியிருந்த ரகசிய ஆவணம் ஒன்று சிக்கியது. இதனால் வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய ஆவணங்கள் விவகாரத்தில் மர்மம் நிலவியது.

    குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுத்தடுத்து விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். அடுத்தக்கட்டமாக போலீஸ் உயர் அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய கடிதத்தை தமிழக தலைமை செயலாளரும், டி.ஜி.பி. அலுவலகமும் பெற்றதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.

    குட்கா விற்பனையாளர்களிடம் இருந்து அமைச்சர் லஞ்சம் பெற்றதற்கான ஆவணம் அனுப்பிய வருமான வரித்துறையின் கடிதத்தை தலைமை செயலகத்தில் உள்ள உதவி நிர்வாக அதிகாரி ஒருவர் பெற்றுள்ளார். அதுபோல டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை டி.ஜி.பி. அலுவலக முகாம் சூப்பிரண்டு ஒருவர் பெற்றுள்ளார்.

    இதன் மூலம் டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமை செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் கடிதங்கள் வந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அனுப்பிய கடிதங்கள், ஆவணங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது.

    குட்கா ஊழல் வழக்கில் இந்த புதிய ஆதாரம் அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீதான பிடியை மேலும் இறுக செய்துள்ளது. #Gutkha #GutkhaScam
    வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #TNGovt #TNGovtEmployees
    சென்னை:

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் நாளை (8-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (9-ந் தேதி) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    இந்த போராட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து 13 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுத்துறைகளில் பணியாற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பெரும்பாலான தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் ஆகியவை 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. இதேபோல், போக்குவரத்து, மின்வாரிய சங்கங்களும் பங்கேற்க இருப்பதாக உறுதியளித்து உள்ளன.

    போராட்டம் தொடர்பாக, மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் துரைப்பாண்டியன், ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

    2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில், பா.ஜ.க. தொழிற்சங்கமான பி.எம்.எஸ். தவிர அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்துகொள்ள இருக்கின்றன. தமிழ்நாட்டில் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 9 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், 3 லட்சம் ஆசிரியர்களும் பங்கேற்கின்றனர்.

    இதேபோல், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். போக்குவரத்து ஊழியர்களும் பங்கேற்பதால், பஸ் போக்குவரத்து பாதிக்கப்படும். ஆட்டோக்களும் ஓடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலை நிறுத்த போராட்டத்தால், அரசு மற்றும் வங்கிப் பணிகள் பாதிக்கப்படுவதுடன், பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.

    இந்த நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசின் அனைத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், தலைமைச் செயலக செயலாளர்கள், அனைத்து துறை தலைமை நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.



    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மத்திய அரசின் பல்வேறு தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 8-ந் தேதி(நாளை), 9-ந் தேதி(நாளை மறுநாள்) ஆகிய இருதினங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளன. இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத சில சங்கங்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.

    வழக்கமான அலுவலக பணிகள் பாதிக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தமிழக அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானதாகும்.

    எனவே, அனைத்து துறை தலைமை நிர்வாகிகளும், மாவட்ட கலெக்டர்களும் தங்களுக்கு கீழ் பணியாற்றும் அலுவலர்களுக்கு இதுகுறித்து தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்த வேண்டும்.

    8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அலுவலகத்துக்கு வராதவர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது. மருத்துவ விடுப்பை தவிர்த்து சாதாரண விடுப்பு போன்ற எந்த விடுப்பும் இந்த இருதினங்களிலும் அனுமதிக்கக்கூடாது.

    உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக அனைத்து துறை தலைமை நிர்வாகிகளும், மாவட்ட கலெக்டர்களும் இருதினங்களும் பணிக்கு வராதவர்கள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #TNGovt #TNGovtEmployees
    புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து வருகிற 26-ந்தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் புதுவை அரசு ஊழியர்கள் பங்கேற்கக் கூடாது என்று தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #PondicherryGovtEmployees
    புதுச்சேரி:

    புதிய பென்‌ஷன் திட்டத்தை எதிர்த்து நாளை மறுநாள் (திங்கள்கிழமை) நாடு தழுவிய போராட்டத்தை நடத்த அரசு ஊழியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளது.

    இந்த போராட்டத்தில் புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் விடுமுறை எடுத்து அரசு ஊழியர் சங்கங்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

    இதில் மாநில கோரிக்கையை முன்வைத்து கூட்டுறவு சங்கங்களும் போராட்டம் நடத்த தயாராகி வருகிறது. இதனால் அரசு பணிகள் முழுமையாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து அரசு துறைகளுக்கும் தலைமை செயலாளர் அஸ்வினி குமார் உத்தரவின்பேரில் நிர்வாக சீர்திருத்தத்துறை அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

    வருகிற 26-ந்தேதி அரசு ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அறிகிறோம். இதை சட்டப்படி ஏற்க முடியாது.

    எனவே அன்றைய தினம் அவசர காலமின்றி யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது. அன்றைய தினம் மதியம் 12 மணிக்குள் எத்தனை ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர்? எத்தனை பேர் பணிக்கு வரவில்லை என்ற விபரத்தையும் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #PondicherryGovtEmployees
    தூத்துக்குடியில் நீர் மாசுபாடு குறித்து மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய நீர்வளத்துறைக்கு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியுள்ளார். #Thoothukudi #Sterlite #GirijaVaidyanathan
    சென்னை:

    தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை மிகப்பெரிய போராட்டம் மற்றும் உயிர்பலிக்கு பிறகு மூடப்பட்டது. ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியில் வேதாந்தா நிறுவனம் ஈடுபட்டுள்ள நிலையில், ஆலையை திறக்க விட மாட்டோம் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடியில் நீர் மாசுபாடு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து மத்திய நீர்வளத்துறை தூத்துக்குடியில் ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தூத்துக்குடியில் நீர்வளத்துறையின் ஆய்வு தேவையற்றது என குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆய்வு நடத்தியது வீணானது எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தூத்துக்குடியில் தற்போதுதான் அமைதி நிலை திரும்பி உள்ள நிலையில், மத்திய நீர்வளத்துறையின் இந்த ஆய்வால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், ஆய்வறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் கடிதத்தில் எழுதியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, நிலத்தடி நீர் தொடர்பான மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமானதாக இல்லை எனவும், ஆய்வின் முடிவுகள் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாக உள்ளதாகவும் கிரிஜா வைத்தியநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாகவே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாகவும், தமிழக அரசை கேட்காமல், நீர் வளம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கிரிஜா வைத்தியநாதன் மத்திய நீர்வளத்துறைக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #Thoothukudi #Sterlite #GirijaVaidyanathan
    போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 28-ந்தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
    சென்னை

    மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்துடன் மத்திய அரசு கொண்டு வர உள்ள சாலை பாதுகாப்பு மசோதாவை கண்டித்து அகில இந்திய போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் நாடு முழுவதும் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 7-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது.

    இதற்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த கூட்டமைப்பில் தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்பட கட்சிகளை சேர்ந்த 10 தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.

    இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த விளக்க கூட்டம் சென்னை பல்லவன் இல்லம் அருகே நேற்று நடைபெற்றது.

    கூட்டமைப்பின் தலைவரும், தொ.மு.ச. பொதுச்செயலாளருமான சண்முகம் தலைமையில், பொருளாளர் நடராஜன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் பேசியதாவது:-

    மத்திய அரசின் சாலை பாதுகாப்பு மசோதாவில் பஸ் நடத்துனர் லைசென்சு பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசும் நடத்துனர் இல்லாத பஸ்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு மசோதாவில் போக்குவரத்து தொழிலை நசுக்கும் பல்வேறு அபாயங்கள் உள்ளது. எனவே நாடு முழுவதும் ஆகஸ்டு 7-ந்தேதி நடைபெற உள்ள வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும்.

    மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்டு 28-ந்தேதி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவனின் முடியை வெட்டி மானபங்க படுத்தியதற்காக ஒடிசா அரசு 1 லட்ச ரூபாய் அபராதம் வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு மாணவன் முறையாக முடியை பராமரிகாததை கண்டித்து ஜெயஸ்மிதா சா என்ற ஆசிரியை மாணவனின் முடியை வெட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் வீட்டுக்கு செல்லாமல் எங்கோ ஓடி விட்டார்.

    இதுதொடர்பாக மாணவனின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவனின் மன உளைச்சலுக்கு காரணமான அந்த ஆசிரியையை கைது செய்தனர். மேலும், மாணவரின் மன உளைச்சலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் திரிபாதி என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்தார்.

    இதுதொடர்பாக விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், ஒரு லட்ச ரூபாயை மாணவருக்கு வழங்குமாறு தலைமை செயலாளருக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

    தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுப்படி, அபராதத்தொகை  வழங்கப்படாத நிலையில், இன்னும் 4 வார காலத்துக்குள் ஒரு லட்ச ரூபாயை வழங்கி, அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Odisha
    டெல்லி கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். #AnilBaijal #AnshuPrakash #RajivGauba
    புதுடெல்லி:

    டெல்லி மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவது, அதிகாரிகளை மாற்றுவது போன்ற விஷயங்களில் கவர்னர் அனில் பைஜாலுக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த அதிகாரம் கவர்னருக்கு இல்லை, மாநில அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ஆனாலும் கோர்ட்டு தீர்ப்பில் சில விஷயங்களை ஏற்க மறுப்பது ஏன்? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னருக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.

    இந்நிலையில் டெல்லி கவர்னர் அனில் பைஜால், தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷ் ஆகியோர் நேற்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபாவை சந்தித்து 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்கள். அதிகாரிகளை இடமாற்றுவது தொடர்பான அதிகாரம் குறித்தே அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ஆலோசனை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த கவர்னர், எனக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான உறவு நன்றாகவே உள்ளது என்றார்.  #AnilBaijal #AnshuPrakash #RajivGauba #tamilnews 
    ×