search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NHRC"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது.
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விஷயத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கூறிய தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை முடித்து வைத்தது.



    துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் விசாரணை நடத்துவதற்கு ஒரு நபர் கமிஷன் அமைத்தது போன்றவை திருப்தி அளிப்பதாக மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.

    துப்பாக்கி சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    டெல்லியில் பட்டினியால் மூன்று சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #DelhiHungerDeaths #NHRC
    புதுடெல்லி:

    டெல்லியில் மந்தவாலி என்ற பகுதியில் மங்கள் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். ரிக்‌ஷா தொழிலாளியான இவருக்கு எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவருடைய மனைவியும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் இவர்களின் 8, 5, 2 வயது பெண் குழந்தைகள் பட்டினியால் தவித்தனர். 

    இதற்கிடையே மங்களின் ரிக்‌ஷா திருட்டு போய் விட்டது. வீட்டில் இருந்த உணவு பொருட்களும் தீர்ந்து போக அக்கம்பக்கத்தினரிடம் உணவு வாங்கி சிறுமிகள் சாப்பிட்டனர். பின்னர் அவர்களின் உதவியும் கிடைக்கவில்லை.

    இதனிடையே மங்கள் வேலைக்காக வீட்டை விட்டு சில நாட்களுக்கு முன்பு சென்றார். தந்தை, தாய் கவனிப்பு இல்லாததால் 3 சிறுமிகளும் பட்டினியால் தவித்துள்ளனர். இந்நிலையில், மயங்கிய நிலையில் 3 சிறுமிகளும் 24-ந் தேதி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். 



    சிறுமிகளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்தததில் சிறுமிகளின் வயிற்றில் உணவோ, தண்ணீரோ எதுவும் இல்லை. அவர்கள் சாப்பிட்டு 8 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். 

    சிறுமிகள் உணவின்றி இறந்த விவகாரம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #DelhiHungerDeaths #NHRC

    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவனின் முடியை வெட்டி மானபங்க படுத்தியதற்காக ஒடிசா அரசு 1 லட்ச ரூபாய் அபராதம் வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Odisha
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் சுந்தர்கர் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு மாணவன் முறையாக முடியை பராமரிகாததை கண்டித்து ஜெயஸ்மிதா சா என்ற ஆசிரியை மாணவனின் முடியை வெட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் வீட்டுக்கு செல்லாமல் எங்கோ ஓடி விட்டார்.

    இதுதொடர்பாக மாணவனின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மாணவனின் மன உளைச்சலுக்கு காரணமான அந்த ஆசிரியையை கைது செய்தனர். மேலும், மாணவரின் மன உளைச்சலுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் திரிபாதி என்பவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்தார்.

    இதுதொடர்பாக விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், ஒரு லட்ச ரூபாயை மாணவருக்கு வழங்குமாறு தலைமை செயலாளருக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

    தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவுப்படி, அபராதத்தொகை  வழங்கப்படாத நிலையில், இன்னும் 4 வார காலத்துக்குள் ஒரு லட்ச ரூபாயை வழங்கி, அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #Odisha
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணியில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 100-வது நாள் போராட்டத்தில் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுப்பதாக இருந்தது. அப்போது வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு நேரடி கள ஆய்வில் ஈடுபட்டது. அந்த குழு அளித்த அறிக்கையில், அதிகப்படியான மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக சுட்டிக்காட்டியதை அடுத்து ஆணையத்தின் 2 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    மிக முக்கியமான வழக்குகளை மட்டும் தான் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 2 பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதமே விசாரணை தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணைய மேற்கொண்ட விசாரணை இன்றுடன் முடிவடைந்தது. #Sterlite #SterliteProtest #NHRC
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந்தேதி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் டெல்லியில் இருந்து தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்கள் மற்றும் கலவரத்தில் சேதமான வாகனங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடமும், காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பலியானவர்கள் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி அவர்களை விசாரணை அலுவலகத்திற்கு வரவழைத்து விபரங்களை சேகரித்தனர். மேலும் விசாரணை அலுவலகத்திற்கு வராதவர்களிடம் நேரடியாக வீட்டிற்கு சென்று விபரங்கள் கேட்டனர்.


    நேற்று தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் 5-வது நாளாக விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது துப்பாக்கி சூடு நடந்த 22, 23-ந்தேதிகளில் பணியில் இருந்த டி.எஸ்.பி. களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரே நாளில் 9 டி.எஸ்.பி.க்கள் தங்களது வாக்குமூலங்களை எழுத்து பூர்வமாக அளித்தனர்.

    அதே வேளையில் மனித உரிமை ஆணையத்தில் மற்றொரு குழுவினர் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களுக்கு மீண்டும் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். மேலும் கலெக்டர் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்கள்.

    இன்று காலை 6-வது நாளாக விசாரணை நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    6 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் மனித உரிமை ஆணையத்திடம் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் எழுத்து பூர்வ வாக்குமூலம் அளித்துள்ளனர். 330-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.

    விசாரணை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், விசாரணை விபரங்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்ததையடுத்து தேசிய மனித உரிமை ஆணையக்குழுவினர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர். துப்பாக்கி சூடு சம்பந்தமான முழு விசாரணை அறிக்கையை விரைவில் அவர்கள் மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

    துப்பாக்கி சூட்டில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் அதற்கான கூடுதல் நடவடிக்கைகளை மனித உரிமை ஆணையம் மேற்கொள்ளும் என தெரிகிறது. #Sterlite #SterliteProtest #NHRC
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் இன்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததையடுத்து போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற வக்கீல் ஏ.ராஜராஜன் கோரிக்கை விடுத்தார். இதனை தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்றுக் கொண்டது.

    இதையடுத்து துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக தேசிய மனித உரிமை ஆணையத்தின் மூத்த காவல் கண்காணிப்பாளர் புபுல் தத்தா பிரசாத் தலைமையில் டி.எஸ்.பி. ராஜ்பிர் சிங், ஆய்வாளர்கள் லால் பகர், நித்தின்குமார், அருண் தியாகி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி வந்து விசாரணையை தொடங்கினர்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில், இக்குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். துப்பாக்கி சூட்டில் பலியான 8 பேரின் குடும்பத்தினரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. இன்று 3-வது நாளாக விசாரணை நடைபெற்றது. இதில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

    துப்பாக்கி சூட்டில் பலியான மணிராஜ், ஸ்னோலின், கிளாட்சன், சண்முகம், ஜெயராமன் ஆகியோரது குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் மற்றும் தாசில்தார் கண்ணன், சந்திரன், சேகர் உள்ளிட்ட அதிகாரிகளும் இன்று மனித உரிமை ஆணையம் முன்பாக ஆஜரானார்கள். அவர்களிடம் மனித உரிமை ஆணைய குழுவினர் பல்வேறு விவரங்களை கேட்ட‌னர்.

    வருகிற 7-ந்தேதி வரை 5 நாட்கள் இக்குழுவினர் தூத்துக்குடியில் முகாமிட்டு பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர். இதன் முடிவில் விசாரணை அறிக்கையை அவர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த விசாரணை நடத்துவதற்காக‌ தேசிய மனித உரிமை ஆணைய‌ சிறப்பு குழு இன்று தூத்துக்குடி வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் மோதல் உண்டானது.

    இதனால் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

    இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த வக்கீல் ஏ.ராஜராஜன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தொடர்பாக‌ தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடுமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடாமல் தமிழக அரசிடமும், டி.ஜி.பி.யிடமும் அறிக்கை கேட்டு உள்ளது.

    இந்த சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் விரைந்து செயல்படாவிட்டால் மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும். போலீசார் தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டு துப்பாக்கி சூடு நடந்த இடங்களை கள ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ‘மனுதாரர் இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைக்கலாம்’ என்று கூறியது. அத்துடன், ‘மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து மனுதாரர் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகி தனது வாதங்களை முன்வைத்தார்.

    அதனை பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், மூத்த போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மூன்று துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை கொண்டு உண்மை கண்டறியும் குழுவை தேசிய மனித உரிமை ஆணையத்தின் டைரக்டர் ஜெனரல் (புலனாய்வு) அமைக்க வேண்டும். இந்த குழு உடனடியாக தூத்துக்குடிக்கு சென்று, கடந்த 22-ந்தேதி அன்று நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து களத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    அந்த விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு 2 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. தூத்துக்குடியில் களஆய்வு நடத்தி ஒரு குழுவை அமைத்து உண்மை நிலையை தெரிவிப்ப‌தாக அறிவித்தது. அதன்படி மனித உரிமை ஆணையம் சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மூத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 பேர் இடம்பெற்று உள்ளனர்.

    அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சென்னை வருகிறார்கள். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகின்றனர். தொடர்ந்து, தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை பார்வையிடுகின்றனர்.

    தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து விசாரணை மேற்கொள்கிறார்கள். துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களையும் அவர்கள் பார்வையிடுகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள்.

    இதற்காக தூத்துக்குடியில் முகாமிட உள்ளனர். குழுவின் முழுமையான விசாரணை, ஆய்வு முடிந்ததும் ஆய்வு செய்த விவரங்கள், தேசிய மனித உரிமை ஆணையத்தில் 2 வாரங்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோயாளியிடம் நர்சு, ஊழியர்கள் லஞ்சம் கேட்டது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை அமைப்பின் பொதுச் செயலாளர் ஜாபர்அலி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எங்கள் அமைப்பை சேர்ந்த ஆணையப்பன் என்பவர் புற்றுநோய் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சமீபத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரிடம் நர்சுகள், தொழில்நுட்ப பணியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் ஆகியோர் சிகிச்சைக்காக பணம் கேட்டுள்ளனர்.

    அவர் பணம் கொடுக்காததால் சிகிச்சை அளிப்பதை வேண்டுமென்றே தாமதம் செய்கின்றனர். இதுபோன்ற குறைகளை களைவதற்காக மருத்துவ கண்காணிப்பு குழுவும் இந்த மருத்துவமனையில் இதுவரை அமைக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த மனித உரிமைகள் ஆணையத்தின் நீதிபதி டி.ஜெயசந்திரன் இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கமளிக்க கோரி மருத்துவக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
    ×