search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special team"

    • காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர்.
    • ஏடிஎம் கார்டு, பணம் ரூ. 5 ஆயிரம் மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.

    பல்லடம் :

    மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பஜூலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல்(35) இவர் தற்போது பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்துக் கொண்டு, தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வட மாநிலப் பெண் ஒருவர் வேலையில்லாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை இருந்தால் சொல்லுமாறும், தற்போது மிகவும் சிரமமாக இருப்பதால் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் அவருக்கு உதவி செய்வதற்காக அந்தப் பெண் வரச் சொன்ன சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் கொண்டு சென்று அங்கு உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து, அவரை அடித்து மிரட்டி ரூ.10லட்சம் பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறி ஷாஜி மண்டல் அழுதுள்ளார். மீண்டும் அவரை தாக்கிய கடத்தல்காரர்கள், அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு, பணம் ரூ. 5 ஆயிரம், மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக்கொ ண்டனர். பின்னர் திருப்பூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஷாஜி மண்டலின் ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ. 56 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டு, சீக்கிரமாக பணத்தை ரெடி செய், இது குறித்து புகார் செய்ய போலீசுக்கு போனால் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து தன்னை கடத்தி பணம் பறித்த பெண் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவரது மனைவி சுகுலா சர்தார்(35) என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, அவரும் இன்னும் 4 நபர்களும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சி.சி.டி.வி.காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் துரை ஓட்டி வந்த காரை பின் தொடர்ந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
    • இந்த கும்பல் இதுபோன்று மேலும் சில இடங்களில் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

    நெல்லை:

    பாளை மகாராஜாநகரை சேர்ந்தவர் தி.மு.க. பிரமுகர் பரமசிவ அய்யப்பன். இவரிடம் தியாகராஜநகரை சேர்ந்த துரை என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் பரமசிவ அய்யப்பன் கூறியதின் பேரில் துரை பாளையில் உள்ள 2 வங்கிகளில் இருந்து ரூ.17 லட்சத்தை எடுத்தார்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள வங்கிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.17 லட்சம் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் துரை ஓட்டி வந்த காரை பின் தொடர்ந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த கொள்ளையில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த கும்பல் என்பது தெரியவந்தது.

    கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரையும் அடையாளம் கண்ட போலீசார் அவர்கள் ஆந்திராவுக்கு தப்பி சென்றதையும் உறுதி செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர். அங்கு 2-வது நாளாக முகாமிட்டு போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இந்த கும்பல் இதுபோன்று மேலும் சில இடங்களில் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அவர்களை கைது செய்யும் போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளிலும் இன்று 2-வது நாளாக சிறப்பு குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    நெல்லை அடை மிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட பாறை சரிவில் 6 பேர் சிக்கினர். இதில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர்.
     
    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளிலும் ஆய்வு நடத்த கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி மாவட்டத்தில் உள்ள 55 குவாரிகளிலும் நேற்று ஆய்வு தொடங்கியது.

    இந்த குவாரிகளை ஆய்வு செய்வதற்காக   6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவினர் இன்று 2-வது நாளாக  குவாரிகளில் ஆய்வு நடத்தினர்.
     
    சப்-கலெக்டர் சந்திர சேகர் தலைமையிலான குழுவினரும்,  இதேபோல் கனிமவளத்துறை துணை இயக்குனர் சுமதி, உதவி இயக்குனர் பிரியா, புவியியலாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமையிலாக குழுவினரும் ஆய்வு செய்து வருகின்றனர்.

     இதற்கிடையே குவாரி விபத்தில் உயிரிழந்த 4 பேரில்   செல்வக்குமார், ராஜேந்திரன் ஆகியோரது உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.
     
    ஆயர்குளத்தை சேர்ந்த முருகன், இளைய நயினார்குளத்தை சேர்ந்த செல்வம் ஆகியோரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களது உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

    இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இன்று அவர்களது உடல்களை பெற்று செல்ல உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.   
     
    முன்னதாக குவாரி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 15 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான காசோலையை முருகன், செல்வம் ஆகியோரது  உறவினர்க–ளிடம் கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    அப்போது ஆர்.டி.ஓ. சந்திரசேகர், நெல்லை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன்,  தாசில்தார்கள் ஆவுடையப்பன், பால சுப்பிரமணியன், துணை தாசில்தார் மாரிராஜா,  ஆகியோர் உடனிருந்தனர்.
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்த விசாரணை நடத்துவதற்காக‌ தேசிய மனித உரிமை ஆணைய‌ சிறப்பு குழு இன்று தூத்துக்குடி வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் மோதல் உண்டானது.

    இதனால் ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

    இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த வக்கீல் ஏ.ராஜராஜன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சபரீஷ் சுப்பிரமணியன், டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘தூத்துக்குடியில் நடந்த சம்பவம் தொடர்பாக‌ தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடுமாறு கோரிக்கை வைத்தோம். ஆனால் தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடாமல் தமிழக அரசிடமும், டி.ஜி.பி.யிடமும் அறிக்கை கேட்டு உள்ளது.

    இந்த சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் விரைந்து செயல்படாவிட்டால் மேலும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடரும். போலீசார் தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிட்டு துப்பாக்கி சூடு நடந்த இடங்களை கள ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ‘மனுதாரர் இதுதொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைக்கலாம்’ என்று கூறியது. அத்துடன், ‘மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக முடிவெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து மனுதாரர் தேசிய மனித உரிமை ஆணையத்தை அணுகி தனது வாதங்களை முன்வைத்தார்.

    அதனை பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், மூத்த போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மூன்று துணை சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களை கொண்டு உண்மை கண்டறியும் குழுவை தேசிய மனித உரிமை ஆணையத்தின் டைரக்டர் ஜெனரல் (புலனாய்வு) அமைக்க வேண்டும். இந்த குழு உடனடியாக தூத்துக்குடிக்கு சென்று, கடந்த 22-ந்தேதி அன்று நடைபெற்ற துப்பாக்கி சூடு குறித்து களத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    அந்த விசாரணையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு 2 வாரங்களுக்குள் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. தூத்துக்குடியில் களஆய்வு நடத்தி ஒரு குழுவை அமைத்து உண்மை நிலையை தெரிவிப்ப‌தாக அறிவித்தது. அதன்படி மனித உரிமை ஆணையம் சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மூத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 பேர் இடம்பெற்று உள்ளனர்.

    அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சென்னை வருகிறார்கள். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகின்றனர். தொடர்ந்து, தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை பார்வையிடுகின்றனர்.

    தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து விசாரணை மேற்கொள்கிறார்கள். துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களையும் அவர்கள் பார்வையிடுகின்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள்.

    இதற்காக தூத்துக்குடியில் முகாமிட உள்ளனர். குழுவின் முழுமையான விசாரணை, ஆய்வு முடிந்ததும் ஆய்வு செய்த விவரங்கள், தேசிய மனித உரிமை ஆணையத்தில் 2 வாரங்களுக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    ×