search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bribe"

    • லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
    • 'சதி செய்தவர்களை கடவுள் காப்பாற்றட்டும்’ என்று எழுதியிருந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் செவ்வாபதியை சேர்ந்தவர் ஷாஜி(வயது51). இவர் சமீபத்தில் கேரள பல்கலைக்கழகத்தில் நடந்த பிரபலமான மார்க்கம்களி கலைவிழாவின் போட்டி நடுவர்களில் ஒருவராக இருந்தார்.

    அந்த போட்டியில் முடிவுகளை அறிவிக்க லஞ்சம் வாங்கியதாக ஷாஜி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஷாஜி உள்ளிட்ட 3 பேர் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. இதையடுத்து கலைவிழா போட்டி முடிவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மோகனன் குன்னும்மாள் நிறுத்தி வைத்தார்.

    மேலும் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணைக்காக ஷாஜி உள்ளிட்ட 3 பேரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கில் ஷாஜி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவர் உள்ளிட்ட 3 பேரையும் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

    இந்நிலையில் ஷாஜி தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் நேற்று இரவு பிணமாக கிடந்தார். இதனைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விசாரணை நடத்தினர்.

    அதில் ஷாஜி விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. காலை உணவு சாப்பிட்டுவிட்டு அறைக்குள் சென்ற ஷாஜி, அதன்பிறகு அறையை விட்டு வெளியே வரவில்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஷாஜி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அதில் தனது மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்திருக்கிறார். அவர் எழுதியிருந்த கடிதத்தில், 'நான் நிரபராதி, யாரிடமும் பணம் வாங்கவில்லை, நான் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்பது எனது அம்மாவுக்கு தெரியும். இதற்கு சதி செய்தவர்களை கடவுள் காப்பாற்றட்டும்' என்று எழுதியிருந்தார்.

    லஞ்ச புகாரில் சிக்கியவர் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புலம்பெயர்ந்தோர் பாதுகாவலராக இந்திய வருவாய் பணி அதிகாரி சேகர் பணிபுரிந்தார்.
    • சேகர் மீது, குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க ரூ.2 கோடிக்கு லஞ்சம் வழக்கு.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் மத்திய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 2007- 2009ம் ஆண்டுகளில் புலம்பெயர்ந்தோர் பாதுகாவலராக இந்திய வருவாய் பணி அதிகாரி சேகர் பணிபுரிந்தார்.

    சேகர் மீது, குடியுரிமை சான்றுக்கு அனுமதி வழங்க ரூ.2 கோடிக்கு லஞ்சம் பெற்று அதில் சொத்துக்கள் வாங்கியதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசு அதிகாரிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • லோகநாதன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
    • திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த அரசு திட்டப்பணிக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு லோகநாதன்தான் வழங்கி வந்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் போலீசார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் பணம் அதிகமாக புரளும் என்பதை கருத்தில் கொண்டு இந்த ரகசிய சோதனை நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் கணக்கு பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த அறையில் இருந்த துணை வட்டார வளர்ச்சி அதிகாரி (கணக்கு) லோகநாதன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200 இருந்தது.

    அந்த பணத்துக்கான கணக்கு விவரங்களை லோகநாதனிடம் கேட்டனர். அவரிடம் எந்தவித விவரமும் இல்லை. இதைத்தொடர்ந்து கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா கூறும்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கணக்கு பிரிவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200, துணை வட்டார வளர்ச்சி அதிகாரியான லோகநாதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த அரசு திட்டப்பணிக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு லோகநாதன்தான் வழங்கி வந்துள்ளார். அந்த காசோலையை வழங்குவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லோகநாதன் லஞ்சம் பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெகதீஸ்வரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
    • தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    இரணியல் அருகே கண்டன்விளை மட விளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருக்கு அதே பகுதியில் 7 சென்ட் விவசாய நிலம் உள்ளது.

    அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கு விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றி தரக்கோரி கல் குளம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். விண்ணப்பித்தை பரீசிலித்த கல்குளம் துணை தாசில்தார் ருக்மணி தரிசு நிலமாக மாற்ற ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெகதீஸ்வரி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ஜெகதீஸ்வரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

    ஜெகதீஸ்வரி அந்த பணத்துடன் கல்குளம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த துணை தாசில்தார் ருக்மணியிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ஹெக்டேர் தர்மராஜ் தலைமையிலான போலீசார் துணை தாசில்தார் ருக்மணியை கையும் களவுமாக பிடித்தனர்.

    பிடிபட்ட அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தாலுகா அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிலவற்றையும் கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

    மதியம் 1 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நடந்தது. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள துணை தாசில்தார் ருக்மணி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். ருக்மணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ருக்மணியை இரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

    நீதிபதி அவரை வருகிற 26-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து துணை தாசில்தார் ருக்மணி தக்கலை பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த லஞ்ச விவகாரத்தில் வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். துணை தாசில்தார் ருக்மணி கைது செய்யப்பட்டு ஜெயில் அடைக்கப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.

    • நரசிம்ம ரெட்டி 1984-ம் ஆண்டு ரூ.650 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
    • தற்போது ரூ.40,000 சம்பளமாக வாங்கும் நரசிம்ம ரெட்டிக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தது என விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் நரசிம்ம ரெட்டி (வயது 55). நெல்லூரில் உள்ள துணை வட்டாரப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

    நரசிம்ம ரெட்டி வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ரமாதேவி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நரசிம்ம ரெட்டி வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

    சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து 2 கிலோ தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் ரூ 1. 1 கோடி மதிப்பிலான இன்சூரன்ஸ் முதலீடுகள், ரூ. 10 லட்சம் மதிப்பிலான பாலிசி ஆவணங்கள், நெல்லூரில் வாங்கப்பட்டுள்ள 18 வீட்டு மனை பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.

    அவரது மேஜையில் இருந்து ரூ.7.5 லட்சம் மதிப்பிலான ரூ.2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டன.

    மொத்தம் ரூ.9 கோடி மதிப்பிலான பொருட்கள், பணம் கைபற்றப்பட்டுள்ளன.

    கூட்டுறவு வங்கிக் கிளைகளில் உள்ள அவரது லாக்கரை திறந்து சோதனை செய்தால் மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நரசிம்ம ரெட்டி 1984-ம் ஆண்டு ரூ.650 சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். தற்போது ரூ.40,000 சம்பளமாக வாங்கும் நரசிம்ம ரெட்டிக்கு எங்கிருந்து இவ்வளவு சொத்துக்கள் கிடைத்தது என விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் தனது அலுவலகம் மற்றும் சோதனை சாவடிகளில் லஞ்சமாக பெற்ற பணத்தை அதிக வட்டிக்கு கொடுத்து சொத்து சேர்த்ததாக தெரிவித்துள்ளார்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் கொடுத்தார்.
    • பாலமுரளி இதுவரை யார் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கி உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள காளையார் கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது சகோதரி ஜானகி. இவர்களுக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலம் கூட்டு பட்டாவாக இருப்பதால் தனது தம்பி பாலகிருஷ்ணனுக்கு பட்டா பிரித்து தர ஜானகி முடிவு செய்தார்.

    இதையடுத்து அந்த இடத்தின் பட்டாவை பிரித்து தர கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் இருவரும் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அவரும், நில அளவையரும் அந்த இடத்திற்கு சென்று நிலத்தை அளந்துள்ளனர். பின்னர் பாலமுரளி தனிப்பட்டா வழங்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் பணத்தை பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பாலமுரளியிடம் கொடுத்தார்.

    பணத்தை பெற்றுக்கொண்ட பாலமுரளி அதை சரிபார்த்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலமுரளியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். பாலமுரளி இதுவரை யார் யாரிடம் எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கி உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
    • விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் 2023-24-ம் ஆண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் முடிந்தது.

    இதில் முதல்கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பித்த பாடப்பிரிவு கிடைக்காதபோது, முதலில் கிடைத்த பாடப்பிரிவில் சேர்ந்துள்ளனர்.

    இதன் பின்னர் அடுத்தடுத்த கலந்தாய்வுகளின்போது அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் காலியிடம் இருந்ததால் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டு அந்த பாடப்பிரிவிற்கு மாறி உள்ளனர்.

    இவ்வாறு ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு மாறுவதற்காக தாவரவியல் துறை பேராசிரியர் ரவி, மாணவர்களிடம் கூகுள்பே மூலமும், ரொக்கமாகவும் பணம் வாங்கியதாக கடந்த 14-ந்தேதி குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத் தொடர்ந்து கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய செல்போன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் மூலம் முதலமைச்சரின் தனிப்பிரிவு, கல்லூரி கல்வி இயக்குனரகம், தமிழக டி.ஜி.பி ஆகியோருக்கு ஆன்லைன் மூலம் மாணவ-மாணவிகள் புகார் பதிவு செய்து உள்ளனர்.

    மேலும் பேராசிரியர் மற்றும் மாணவர்கள் பேசிய ஆடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இதையடுத்து கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் கலைச்செல்வி கடந்த வாரம் ஊட்டி அரசு கலைக் கல்லூரிக்கு நேரில் வந்து 30 மாணவ-மாணவிகள், 4 பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி முதல்வரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    இதன்பின்னர் விசாரணை அறிக்கையை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைத்தார்.

    இதற்கிடையே ஊட்டி அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதியில் இடம் கிடைக்க கல்லூரி முதல்வர் பணம் வாங்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனியிடம் ஒரு மாணவர் பிரவுன் கவரை வழங்குகிறார். அந்த கவரில் ரூ.10 ஆயிரம் பணம் இருந்ததாக சொல்லப்படுகிறது. மாணவரை பார்த்து சீக்கிரம் கொடுத்து விடுங்கள். அப்போது தான் இடம் கிடைக்கும் என கல்லூரி முதல்வர் கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இது தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி மற்றும் தாவரவியல் துறை பேராசிரியர் ரவி ஆகிய 2 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

    இதற்கான நடவடிக்கையை உயர்கல்வித்துறை எடுத்துள்ளது.

    • பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி தீபா (43) கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜெகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை நேற்று முன்தினம் கைது செய்து சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு கீழ் தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் முழுமையாக தள்ளு படி செய்து கடந்த 2021 ல் தமிழக அரசு உத்தரவிட்டது.
    • பேளுக்குறிச்சி கூட்டுறவு சடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் காரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கண்டறியப்பட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் கர்ணன், கடந்த 2 தினங்களுக்கு முன்பு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது-

    சேந்தமங்கலம் தாலுகா பேளுக்குறிச்சியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் கோவிந்தராஜ் (55) என்பவர் கடந்த 2021 ஆண்டு முதல் பொறுப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் 5 பவுனுக்கு கீழ் தங்க நகை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் முழுமையாக தள்ளு படி செய்து கடந்த 2021 ல் தமிழக அரசு உத்தரவிட்டது. 2021 மார்ச் 31-ந் தேதி வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் இந்த சலுகை என அரசு அறிவித்திருந்தது.

    பேளுக்குறிச்சி கூட்டுறவு சடன் சங்கத்தில் மொத்தம் 311 நகைக்கடன் காரர்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக கண்டறியப்பட்டனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் செயலாளராக (பொறுப்பு) பணியாற்றிய கோவிந்தராஜ் சங்க உறுப்பினர் யுவராணியிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் அவரது பெயரில் 29.1.2021 ந் தேதியில் 30 கிராம் தங்க நகையை வைத்து பெறப்பட்ட 99 ஆயிரம் கடனை தள்ளுபடி செய்து தருவதாக கூறி உள்ளார். மேலும் அதே சங்கத்தில் நகை கடன் பெற்றிருந்த கீர்த்தனா, சீனிவாசன், சந்திரா, பெருமாள், மற்றும் சிலம்பரசன் ஆகியோரிடமும் நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். மேலும் கந்த சாமி என்பவரிடம் நகைக்கடன் தள்ளுபடி செய்ய கடந்த 28.3.2022 அன்று ரூ.1500 லஞ்சமாக பெற்றுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த புகார் குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. சுபாஷினி விசாரணை நடத்தினார். இதையடுத்து கோவிந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இறங்கி உள்ளனர். 

    • லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலத்தின் உரிமையாளர் அப்துல்லா சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
    • லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி அப்துல்லா முன்பணத்தை வழங்குவதாக கூறி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரங்கநாதனிடம் கொடுத்தார்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள இலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சீவாடி ஊராட்சி. இதன் ஊராட்சி தலைவராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரங்கநாதன் உள்ளார்.

    சீவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சென்னையை சேர்ந்த அப்துல்லா என்பவர் நிலம் வாங்கி இருந்தார். அந்த நிலத்தை வீட்டுமனை பிரிவுகளாக மாற்றுவதற்காக ஊராட்சியின் அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார்.

    அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், அந்த வீட்டு மனை பிரிவாக மாற்ற அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ.25 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலத்தின் உரிமையாளர் அப்துல்லா சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    லஞ்சஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி அப்துல்லா முன்பணத்தை வழங்குவதாக கூறி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரங்கநாதனிடம் கொடுத்தார்.

    அதனை ரங்கநாதன் வாங்கியபோது மறைந்து இருந்த சென்னையில் இருந்து வந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • தனபால், அலுவலக கட்டணம் ரூ.121 என்றும், ஒரு வில்லங்க சான்றுக்கு ரூ. 1000 செலவாகும் எனவும் தெரிவித்துள்ளாா்.
    • உரையாடல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    அவிநாசி:

    திருப்பூா் மாவட்டம், அவிநாசி சாா்பதிவாளா் அலுவலகத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றி வந்தவா் தனபால். இவரது அலுவலகத்துக்கு வில்லங்க சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்த அவிநாசியை சோ்ந்த நபா், தலைமை எழுத்தா் தனபாலை அணுகி விண்ணப்பிப்பதற்கான தொகை குறித்து கேட்டுள்ளாா்.

    அதற்கு தனபால், அலுவலக கட்டணம் ரூ.121 என்றும், ஒரு வில்லங்க சான்றுக்கு ரூ. 1000 செலவாகும் எனவும் தெரிவித்துள்ளாா். மேலும் இந்த ஆவணத்தில் 20 தாள்கள் இருப்பதால் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வேண்டும் என கேட்டுள்ளாா். அப்போது அந்த நபா், 'வீட்டுக்கு சென்று பணத்தை எடுத்து வருகிறேன்' என தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றாா். இந்த உரையாடல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இது குறித்து அவிநாசி சாா்பதிவாளா் கூறுகையில், 'இது தொடா்பாக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உயா் அலுவலா்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம் என்றாா். இந்நிலையில் கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவா் சாமிநாதன், வைரலான வீடியோ பதிவின் அடிப்படையில் தலைமை எழுத்தா் தனபாலை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டாா். இது தொடா்பாக துறைரீதியான விசாரணை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை டாக்டரிடம் கொடுக்க சென்றனர்.
    • டாக்டர் ஷெர்ரி ஐசக் பணத்தை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். இதையடுத்து அவர் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    விபத்தில் அந்த பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதனால் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஷெர்ரி ஐசக்கை பெண்ணின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டனர்.

    அப்போது அவர், அறுவை சிகிச்சை செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் லஞ்சம் கொடுக்க மறுத்தனர். இதனால் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் டாக்டர் ஷெர்ரி ஐசக் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் லஞ்சம் கேட்பது குறித்து திருச்சூர் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜிம்பாலிடம் பெண்ணின் குடும்பத்தினர் புகார் செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை டாக்டரிடம் கொடுக்க சென்றனர்.

    ஒட்டுப்பாறையில் உள்ள டாக்டர் ஷெர்ரி ஐசக் நடத்தி வரும் தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கிருந்த டாக்டரிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தனர். அதனை டாக்டர் ஷெர்ரி ஐசக் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதையடுத்து முழங்குனத்துகாவில் உள்ள டாக்டரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்த ரூ15.25 லஞ்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. அவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய லஞ்சம் வாங்கி சிக்கிய டாக்டர் ஷெர்ரி ஐசக் தனது துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×