என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assistant Commissioner"

    • நேற்று முன்தினம் சுரேஷ்குமார் மீண்டும் அங்கு சென்று இது தொடர்பாக பெண் உதவி ஆணையரிடம் பேசினார்.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் அங்கிருந்து வெளியில் வந்தார்.

    கோவை:

    கோவை ரத்தினபுரி சுபைதார் லே-அவுட்டை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது52). கட்டிட கான்ட்ராக்டராக உள்ளார்.

    இவரது சமூகத்திற்கு சொந்தமான கோவில் சூலூர் அடுத்த பாப்பம்பட்டியில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக நிலம், கட்டிடங்கள் உள்ளன.

    இந்த நிலையில் இந்த கோவிலை இந்துசமய அறநிலையத்துறைக்கு மாற்ற வேண்டும் என சுரேஷ்குமார் மற்றும் சிலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

    இதையடுத்து சுரேஷ்குமார், கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று, அங்கு உதவி ஆணையராக இருக்கும் இந்திரா(54) என்பவரை சந்தித்து, எங்கள் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    ஆனால் பலமுறை சந்தித்து பேசியும் இதற்கான நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

    இருப்பினும் சுரேஷ்குமார் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்துக்கு சென்று உதவி ஆணையர் இந்திராவை சந்தித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி வந்தார்.

    அப்போது இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ.3 லஞ்சம் தர வேண்டும் என கேட்டார். அதற்கு சுரேஷ்குமார் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து சென்றார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ்குமார் மீண்டும் அங்கு சென்று இது தொடர்பாக பெண் உதவி ஆணையரிடம் பேசினார். அப்போது ரூ.1½ லட்சம் கொடுங்கள். உடனே நடவடிக்கை எடுத்து விடுகிறேன் என தெரிவித்தார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்குமார் அங்கிருந்து வெளியில் வந்தார். பின்னர் நேராக கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்திற்கு சென்று போலீசாரிடம் இதுதொடர்பாக தெரிவித்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் கேட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி சுரேஷ்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1½ லட்சம் பணம் கொடுத்தனர்.

    அதனை வாங்கி கொண்ட சுரேஷ்குமார், பெண் உதவி ஆணையர் இந்திராவுக்கு போன் செய்து பணம் ரெடி பண்ணிவிட்டதாகவும், எங்கு வந்து தர வேண்டும் என கேட்டார்.

    அதற்கு இந்திரா, பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டில் உள்ள பர்னிச்சர் கடைக்கு வருமாறு தெரிவித்தார். அதன்படி நேற்று இரவு சுரேஷ்குமார் ரசாயனம் தடவிய ரூ.1½ லட்சத்தை பணத்தை எடுத்து கொண்டு அங்கு சென்றார்.

    பின்னர் பெண் உதவி ஆணையர் இந்திராவை சந்தித்தார். அப்போது அவர் தான் வைத்திருந்த மஞ்சள் நிற பேக்கை காண்பித்து அதில் பணத்தை வைக்குமாறு தெரிவிக்கவே, அவரும் அதில் வைத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆணையர் இந்திராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    முதலில் லஞ்சம் வாங்கியதை மறுத்த அவர், பின்னர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    இன்று காலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். முன்னதாக அவரை மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.

    • தொழிலாளர் நல நிதி சட்டம் 1972 பிரிவு 2(டி)-ன் படி தொழிற்சாலைகள் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்கு ரூ.20-ம், வேலை அளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து ரூ.60 வீதம் தொழிலாளர் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்
    • தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினால் தொழிலாளர் நலநிதி சட்டம் வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ் அந்த தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகப் பிரசன்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் நல வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தொழிலாளர் நல நிதி சட்டம் 1972 பிரிவு 2(டி)-ன் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்களில் ஐந்தும், அதற்குமேல் தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்கு ரூ.20-ம், வேலை அளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து ரூ.60 வீதம் தொழிலாளர் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதியை வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.

    2022-ம் ஆண்டில் குறைந்தது 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த வேலையளிப்பவர் கடமைப்பட்டவர் ஆவார். தொழிலாளர் நலநிதி செலுத்த தவறினால் தொழிலாளர் நலநிதி சட்டம் வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ் அந்த தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதி தொகையை வருகிற 31- ந் தேதிக்கு முன்பு The Seretary, Tamilnadu Labour Welfare Board, Chennai-600006 என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பார்முதலா 4 கார் பந்தயத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு இன்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

    சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டது.

    முன்னதாக இதற்காக மின்விளக்குகள் பொருத்துவது, பொதுமக்கள் போட்டியை கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைப்பது, போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    கார்பந்தய பகுதியை சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் ஓமந்தூரார் மருத்துவமனை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமாருக்கு இன்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து உடனடியாக அவரை மீட்ட போலீசார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் சிவக்குமார் உயிரிழந்தார்.

    இந்நிலையில், பணியின்போது உயிரிழந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும், சிவக்குமாரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    சென்னையில் உயர் அதிகாரிகள் நடத்திய அதிரடி லஞ்ச வேட்டையில் போக்குவரத்து போலீசார் பிடிபட்டு இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TrafficPolice
    சென்னை:

    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் முறைப்படி அபராதம் விதிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

    குறிப்பாக போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் செல்பவர்களை வழிமறித்து நிறுத்தி வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். காவல் துறையில் இது தீராத கறையாகவே படிந்துள்ளது.

    போக்குவரத்து போலீசாரின் இந்த முறைகேடான நடவடிக்கை காரணமாக பல இடங்களில் வாகன ஓட்டிகள் போலீசாருடன் மோதலில் ஈடுபடும் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறியுள்ளன.

    இதனை கருத்தில் கொண்டும், போக்குவரத்து போலீசார் மீது படிந்துள்ள லஞ்ச புகார் கறையை போக்க சென்னை போலீஸ் அதிகாரிகள் கடந்த மே மாதம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். 25 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த பணம் வசூலிக்கும் முறைக்கு முடிவு கட்டினர். ரொக்கமில்லா பணபரிவர்த்தனை மூலம் அபராதம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தினர்.

    புதிய திட்டத்தின்படி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டியிடம் ரொக்கமாக பணம் வாங்க கூடாது என்றும் அதனை மீறி பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், போக்குவரத்து கூடுதல் கமி‌ஷனர் அருண் ஆகியோர் போக்குவரத்து போலீசாருக்கு சுற்றறிக்கையும் அனுப்பி இருந்தனர்.

    புதிய நடைமுறையின்படி வாகன ஓட்டிகளிடம் வங்கி ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக பெரும் அளவில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பே.டி.எம்., அஞ்சலகம், இ-சேவை மையம் மூலமாகவும் அபராதம் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.


    சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் இதனை பின்பற்றியே வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

    இருப்பினும் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் இந்த விதிமுறையை மீறி முறைகேடாக வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து கூடுதல் கமி‌ஷனர் அருண் அதனை கண்காணிப்பதற்கு தனிப்படைகள் அமைத்தார். இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து போலீசார் பல இடங்களில் ரொக்கமில்லா பணபரிவர்த்தனையை மீறி லஞ்சமாக பொது மக்களிடம் இருந்து பணம் வாங்கியது தெரிய வந்தது.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 3 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் ஏட்டு, ஆகியோர் கையும் களவுமாக கேமரா மூலமாக சிக்கியுள்ளனர்.

    இந்த குற்றச்சாட்டுக்குள்ளான சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, முருகன், இருதயராஜ், ஏட்டு வெங்கடாசலம் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விவகாரத்தில் உதவி கமி‌ஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    அவர்கள் மீது விரைவில் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வெளியிட உள்ளார்.

    இதற்கிடையே லஞ்ச புகாரில் போக்குவரத்து போலீசார் சிக்கியது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.

    திருவொற்றியூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தென்னரசு, ஏட்டு வெங்கடாசலம், தண்டையார்பேட்டை போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் நேற்று முன்தினம் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை எல்லையம்மன் கோவில் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது ஏட்டு வெங்கடாசலம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை வழிமறித்துள்ளார். அவரிடம் ரூ.2 ஆயிரத்தை வாங்கி கொண்டு 1,800 ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார்.

    இதன் மூலம் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் இருந்து ரூ.200 லஞ்சமாக பெற்றது அம்பலமானது. இதனை தொடர்ந்து 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதே போல சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் இ-செலான் மூலம் ரூ.100 அபராதம் விதித்து விட்டு 200 ரூபாய் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களிலும் பரவியுள்ளது.

    லஞ்ச புகாரில் சிக்கியுள்ள அடையாறு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் இருதய ராஜ் விபத்து வழக்கு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் உயர் அதிகாரிகள் நடத்திய அதிரடி லஞ்ச வேட்டையில் போக்குவரத்து போலீசார் பொறியில் சிக்கியது போல பிடிபட்டு இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, இந்த நடவடிக்கை தொடரும். எனவே போக்குவரத்து போலீசார் பொது மக்களிடம் இருந்து ரொக்கமாக பணத்தை வாங்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
    ×