என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபராதம்"

    • பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.
    • காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகரில் வீடுகளில் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள் அதனை சரியாக பராமரிக்க முடியாத சூழலில் தெருக்க ளில் விட்டுவிடுகிறார்கள்.

    இது போன்ற வளர்ப்பு நாய்கள் தெரு நாய்களிடம் இருந்து விலகியே இருக்கும். அந்த நாய்களோடு ஒன்றோடு ஒன்று கலக்காது.

    இப்படி கைவிடப்படும் வளர்ப்பு நாய்களை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து கொன்றுவிடும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

    வளர்ப்பு நாய்களை சாலைகளில் அழைத்துச் செல்லும்போது அவை ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிப்பதும் தொடர்கிறது.

    வளர்ப்பு நாய்களுக்கு பலர் உரிய முறையில் தடுப்பூசிகளை போடாத காரணத்தால் ரேபிஸ் நோய் தாக்குதலுக்குள்ளாகி நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.

    இதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பலரும் தங்களது வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தி அதனை பதிவு செய்யாமலேயே உள்ளனர்.

    இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கடிவாளம் போடும் வகையில் மாநகராட்சி சார்பில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்த மைக்ரோ சிப் பொருத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் சென்னையில் இன்று 6 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த முகாமில் பொதுமக்கள் பலர் பங்கேற்று தங்களது வீடுகளில் உள்ள வளர்ப்பு நாய்களை அழைத்து வந்து மைக்ரோ சிப்களை பொருத்திச் சென்றனர்.

    இன்றைய முகாமில் பங்கேற்ற மாநகராட்சி அதிகாரிகள் இணையதளத்தில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்வது குறித்தும் விளக்கம் அளித்தார்கள். மைக்ரோசிப் பொருத்தும்போது கொடுக்கப்படும் ஆவணங்களின் அடிப்படையில் எளிதாக பதிவு செய்ய முடியும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

    வருகிற 24-ந் தேதிக்குள் நாய்களை பதிவு செய்து மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செல்ல பிராணிகள் வளர்ப்போர், இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இணைய தளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என்கிற குற்றச்சாட்டுகளையும் நாய்களை வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.

    செல்ல பிராணிகள் பதிவுக்கு சிறப்பு முகாம்களை நடத்தினால் வசதியாக இருக்கும் என, பலரும் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்தே இன்று முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

    இதுகுறித்து, சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் செல்ல பிராணிகள் பதிவுக்கான நடைமுறையில் சிக்கல்கள் உள்ளதால், அவற்றை வளர்ப்போர், எளிதில் பதிவு செய்து பயன்பெறும் வகையில், 'மைக்ரோசிப்' பொருத்தி ஆவணங்கள் வழங்கவும், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தவும், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வருகிற 16 மற்றும் 23-ந் தேதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்கள், உரிமையாளர்களால் கைவிடப்பட்டு சென்னையில் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் சென்னை மாநகர சாலைகளில் ஆதரவின்றி சுற்றி வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவற்றையெல்லாம் தடுக்கும் வகையில் தான் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • மோசமான சாலைகளால் விபத்து ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
    • நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 ஆயிரத்து 500 இடங்கள் விபத்து ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் வரையிலான நிலவரப்படி 63 லட்சம் கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலை வசதி இருக்கிறது. இதில், 1 லட்சத்து 46 ஆயிரத்து 204 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை, 1 லட்சத்து 79 ஆயிரத்து 535 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலை மற்றும் 60 லட்சத்து 19 ஆயிரத்து 723 கிலோ மீட்டர் இதர சாலைகள் ஆகும். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் வருகின்றன.

    தேசிய நெடுஞ்சாலைகள் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டணத்தை தனியார் சுங்க கட்டணம் அமைத்து வாகன ஓட்டிகளிடம் வசூலித்துக்கொள்கிறார்கள். சுங்க கட்டணம் வசூலித்துக்கொள்கிறார்களே தவிர, நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வாகன ஓட்டிகளிடம் இருந்து வருகிறது. மோசமான சாலைகளால் விபத்து ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

    நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 ஆயிரத்து 500 இடங்கள் விபத்து ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுபோன்ற இடர்களை தவிர்க்க தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கும் விதிகளில் மாற்றம் கொண்டுவர சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை முடிவெடுத்துள்ளது. அதாவது தேசிய நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட 500 மீட்டர் தொலைவில் 2-வது தடவையாக விபத்து நடந்தால் சம்பந்தப்பட்ட காண்டிராக்டருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    விபத்து நடந்த மறு ஆண்டு மீண்டும் விபத்து பதிவானால் காண்டிராக்டருக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் ஒப்பந்த பணிகளை எடுத்த காண்டிராக்டர்கள் மாதத்துக்கு ஒரு முறை கட்டுமான பணிகளின் நிலை குறித்து டிரோன்கள் மூலம் எடுத்த படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • 2 போக்குவரத்து போலீசார் வாலிபரை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு அபராதம் விதித்தனர்.
    • விதிமுறைகளை மீறிய போலீசாருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வாலிபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் குரல் எழுப்பினர்.

    மும்பையை அடுத்த தானே நகரில் உள்ள வாக்ளே எஸ்டேட் பகுதியில் சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அந்த பகுதியில் பணியில் இருந்த 2 போக்குவரத்து போலீசார் வாலிபரை தடுத்து நிறுத்தி ஹெல்மெட் அணியாததற்காக அவருக்கு அபராதம் விதித்தனர். பின்னர் 2 போலீசாரும் தாங்கள் வந்த ஸ்கூட்டரில் ஏறி அங்கிருந்து கிளம்ப தொடங்கினர். அப்போது போக்குவரத்து போலீஸ்காரர் ஓட்டிய ஸ்கூட்டரில் நம்பர் பிளேட் தெளிவில்லாமல், எண்கள் அழிந்து இருந்ததை வாலிபர் கண்டார்.

    சட்டம் அனைவருக்கும் ஒன்று தானே!, பொதுமக்களுக்கு ஒரு நீதி, அதிகாரத்தில் உள்ள போலீசாருக்கு ஒரு நீதியா? என பொங்கி எழுந்த வாலிபர் அந்த போலீஸ்காரரிடம் தட்டிக்கேட்டார். ஆனால் அவர் அலட்சியமாக ஸ்கூட்டரில் கிளம்பி சென்றார். உடன் இருந்த போலீஸ்காரரும் பின்னால் அமர்ந்து பயணித்தார். கடுப்பான வாலிபர் ஸ்கூட்டரை துரத்தி சென்று, அதை பின்னால் பிடித்து இழுத்து தடுத்து நிறுத்தினார். பின்னர் விதிமுறையை மீறிய உங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என போலீசாருடன் அந்த வாலிபர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே போலீசாரை நோக்கி தனது செல்போனில் வீடியோவும் எடுக்க தொடங்கினர். இதை வேடிக்கை பார்த்தவர்களும் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    விதிமுறைகளை மீறிய போலீசாருக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று வாலிபருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் பலரும் குரல் எழுப்பினர். இந்த விவகாரம் உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்றது. இதுகுறித்து தானே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ்காரருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல வாலிபருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இரு தரப்பின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மேல் விசாரணை நடந்து வருகிறது என்றார். இருப்பினும் வாலிபருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் சலசலப்பையும், பொதுமக்கள் மத்தியில் விறுவிறுப்பையும் எகிற செய்துள்ளது.



    • இதுகுறித்த வழக்கு விசாரணை இன்வெர்னஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
    • விசாரணை முடிந்த நிலையில் காப்பகத்துக்கு ரூ.22 கோடி அபராதம் விதித்தது.

    எடின்பர்க்:

    ஸ்காட்லாந்தின் இன்வெர்னஸ் நகரில் தனியார் முதியோர் காப்பகம் அமைந்துள்ளது. இது நாடு முழுவதும் சுமார் 200 கிளைகளைக் கொண்டுள்ளது.

    இந்தக் காப்பகத்தில் இருந்த கேம்பல் என்ற மூதாட்டி கடந்த 2022-ம் ஆண்டு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஆனால் காப்பக ஊழியர்கள் யாரும் அவருடன் இல்லை. இதனால் சில மணி நேரம் கழித்து அவர் உயிரிழந்தார்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை இன்வெர்னஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் அந்தக் காப்பகத்துக்கு சுமார் 22 கோடி ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    • ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    சென்னை:

    நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்திற்காக சில விதிகளை ரெயில்வே வாரியம் விதித்துள்ளது. குறிப்பாக, ரெயில்களில் விபத்து ஏற்படுத்தும் வகையிலான பொருட்களை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

    அந்தவகையில், ரெயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்களான அடுப்புகள், எரியக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள், கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலம், டீசல், பெட்ரோல், சிகரெட் போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை உள்ளது. இந்த தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஆனால், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பயணிகள் பட்டாசு உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    ரெயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்துச்செல்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும், எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்களை ரெயிலில் எடுத்து செல்லாமல் பயணிக்க வேண்டும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் இந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதால், ஒவ்வொரு ஆண்டும் முன்னதாகவே ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'ரெயில்களில் பட்டாசு உள்பட தீ விபத்து ஏற்படுத்தும் பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. இதுகுறித்து பெரும்பாலான பயணிகளுக்கு விழிப்புணர்வு இருப்பதால் ரெயில்களில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் எடுத்து செல்வதில்லை. சிலர் பண்டிகை காலங்களில் விதிமுறைகளை மீறி பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து வருகின்றனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிறது.

    எனவே, தடையை மீறி பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்று, முதல் முறையாக பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்' என்றார்கள்.

    • பஸ்சில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் உள்ளதாக ஊட்டி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • சோதனை சாவடிகளில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே நீலகிரியின் சுற்றுச்சூழல் காக்கப்படும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில் உள்பட 19 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி, நீலகிரிக்கு பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகிறதா? என்பது குறித்து அவ்வப்போது அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் வைத்திருப்போருக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், கா்நாடக மாநிலம் சிக்மகளூர் நகராட்சி ஆணையாளர், நகராட்சி கவுன்சிலா்கள் மற்றும் சிக்மகளூர் சட்டப்பேரவை உறுப்பினா் கொண்ட குழு நீலகிரியில் திடக்கழிவு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அண்மையில் ஊட்டிக்கு வந்தனர். அவா்கள் வந்த பஸ்சில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் உள்ளதாக ஊட்டி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்தப் பஸ்சில் நகராட்சி நகா்நல அலுவலா் சிபி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அதில் 1 லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் 60 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாட்டில் ஒன்றுக்கு ரூ.100 வீதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், கூடலூா், நாடுகாணி சோதனை சாவடிகளை கடந்து தண்ணீா் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    இது சோதனைச் சாவடியின் குறைபாட்டை காட்டுகிறது. சோதனை சாவடிகளில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே நீலகிரியின் சுற்றுச்சூழல் காக்கப்படும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாக்காளர் பட்டியல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • விளம்பர நோக்கத்துடன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், வெங்கட சிவக்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''2024-ம் ஆண்டு நடந்த 17-வது பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையில் சேர்த்து மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காமல், ராகுல் காந்தியை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்புவது ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும் என்பதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும். அனைத்து தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியல் தரவுகளை, பொதுமக்கள் பார்வைக்கு இணையத்தில் பி.டி.எப். வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும். வாக்காளர் பட்டியல் மோசடி புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணைகள் குறித்த முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

    இந்த பொது நல வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்து, வாக்காளர் பட்டியல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. விளம்பர நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தள்ளுபடி செய்கிறோம்'' என்று உத்தரவிட்டனர்.

    • ஏழு முறை போக்குவரத்து விதிகளை மீறியிருப்பது பதிவாகி உள்ளது.
    • போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் 50 சதவீத தள்ளுபடியை கர்நாடக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

    கர்நாடக முதல்வர் சித்தராமையா போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

     பெங்களூருவில் பொருத்தப்பட்டுள்ள சமீபத்திய புலனாய்வு போக்குவரத்து மேலாண்மை அமைப்பு (ITMS) கேமராக்களில், சித்தராமையா 2024 முதல் ஏழு முறை போக்குவரத்து விதிகளை மீறியிருப்பது பதிவாகி உள்ளது.

    ஏழு விதிமீறல்களில் ஆறு, முதல்வர் வாகனத்தின் முன் இருக்கையில் பயணித்தபோது சீட் பெல்ட் அணியாததற்காக இருந்தன. மேலும் வானம் அதிவேகமாக இயக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.  இவை அனைத்தும் நகரின் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் உள்ள கேமராக்களில் பதிவாகியுள்ளன. 

    விதிகளை மீறியதற்காக அவருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் 50 சதவீத தள்ளுபடியை கர்நாடக அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. எனவே ரூ.2,500 அபராத தொகையை சித்தராமையா செலுத்தியுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  

    • துருக்கியில் அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லவே அனுமதி உள்ளது.
    • சாலை விதிகளை மதிக்காத போக்குவரத்து மந்திரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அங்காரா:

    துருக்கி நாட்டின் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் அப்துல் காதீர் உரலோக்லு. சொகுசு கார் ஒன்றை அங்காரா சாலையில் அவர் ஓட்டிக்கொண்டு சென்றார்.

    அப்போது அவர் கார் ஒலிபெருக்கியில் பாடல் கேட்டபடியும், நாட்டின் அதிபர் எரோடகனின் பிரசாரத்தைக் கேட்டபடி சென்றார். மேலும், காரை மணிக்கு 180 முதல் 200 கி.மீட்டர் வேகத்தில் இயக்கினார். இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    இந்நிலையில், நாட்டின் போக்குவரத்துத்துறை மந்திரியே சாலை விதிகளை மதிக்காமல் காரை இயக்கியதற்கு விமர்சனங்கள் எழுந்தன.

    அங்கு அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லவே அனுமதி உள்ள நிலையில் அவர் அந்த வீடியோவை உடனடியாக நீக்கினார். தொடர்ந்து அப்துல் காதீருக்கு ரூ.20 ஆயிரம் (9 ஆயிரம் லிராக்கள்) அபராதம் விதிக்கப்பட்டது.

    • சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு ஓட்டலில் யாராவது உணவை வீணாக்கினால், அவர்கள் ரூ.20 அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

    உணவு வீணாவதைத் தடுக்க இந்த புதுமையான முடிவை எடுத்துள்ளது. உணவை வீணாக்குவதற்கு அபராதம் விதித்து கையால் எழுதப்பட்ட உணவக அறிவிப்பு கார்டு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் இதே போன்ற விதி இருந்தால் உணவு வீணாவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். உணவு வீணாவதைத் தடுப்பதற்கான ஒரு முன்னோக்கிய படி.

    உணவை வீணாக்கக்கூடாது என்பது சரிதான் ஆனால் ஒருவர் எப்படி தங்களுக்குப் பிடிக்காத உணவை உண்ணும்படி கட்டாயப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் வாடிக்கையாளர்கள் பொறுப்புடன் செயல்பட ஊக்குவிக்கும் நோக்கில் உணவகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

    • தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
    • ஆதாரங்கள் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.

    திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

    டாஸ்மாக்கில் நடந்ததாக கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். சோதனையின்போது தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். இதை எதிர்த்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஜுன் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர்.

    மேலும், சோதனை தொடர்பாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். மேலும், கைப்பற்றிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன்களை திரும்ப ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத் துறைக்கு ரூ.30,000 அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    ஏற்கனவே 2 முறை அவகாசம் வழங்கிய பின்னரும் பதில் மனுத் தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத் துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

    • ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காருக்கு அபராதம் மற்றும் வரி தொகைக்கான ரசீதை அதிகாரிகள் வழங்கினர்.
    • 2021-ம் ஆண்டு முதல் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் மாநிலத்தில் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

    பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காரும், அமீர் கான் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும் பெங்களூரு நகரில் சில ஆண்டுகளாக இயங்கி வந்தன.

    இதில் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காரை பெங்களூரு வசந்தம் நகரில் வசிக்கும் தொழிலதிபர் கே.ஜி.எப். பாபு ஒரு திரைப்பட நடிகரிடமிருந்து வாங்கியிருந்தார்.

    அப்போது, வாங்குபவர் 15 நாட்களுக்குள் ஆவணங்களை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என்று ஒரு கடிதம் வழங்கப்பட்டது.

    இருப்பினும், வாங்கிய பிறகு கே.ஜி.எப். பாபு அதை தனது பெயரில் பதிவு செய்யவில்லை. மேலும் இந்த காருக்கு உரிய வரி செலுத்தாமலும் ஓட்டி வந்தார்.

    இது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து போக்குவரத்து இணை ஆணையர் ஷோபாவின் வழிகாட்டுதலின் கீழ் அதிகாரிகள் வசந்தம் நகரில் உள்ள தொழிலதிபர் கே.ஜி.எ.ப் பாபுவின் வீட்டில் சோதனை நடத்தினர்.

    அங்கு நிறுத்தி வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காருக்கு அபராதம் மற்றும் வரி தொகைக்கான ரசீதை அதிகாரிகள் அவரிடம் வழங்கினர்.

    உரிய கட்டணம் செலுத்தாமல் 2021-ம் ஆண்டு முதல் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் மாநிலத்தில் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக அமிதாப் பச்சனுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த கார் தற்காலிகமாக பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×