search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gutkha scam"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரணமா ஆகிய இருவருக்கும் சிக்கல் ஏற்படும்.
    • குட்கா ஊழல் நெட்வொர்க்கில் மேலும் பல பிரபலங்கள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கும் சி.பி.ஐ. நடவடிக்கை ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா, பான் மசாலா போன்ற பாக்கு வடிவிலான போதை பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்து அறிவித்துள்ளது.

    கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கிறது. என்றாலும், தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குட்கா ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் உள்ள குட்கா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அவர்களது குடோன்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம் ஏராளமான ஆவணங்கள் மற்றும் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

    அந்த டைரியில் சென்னையில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்வதற்காக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல்கள் இடம்பெற்று இருந்தன. இதையடுத்து அந்த டைரி தகவலை டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

    அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்று வந்தது. குட்கா பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அ.தி.மு.க. அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதையடுத்து குட்கா விற்பனையில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று இருப்பதாகவும் எனவே இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் அப்போதைய எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

    அதன் பேரில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அதிரடி சோதனைகளையும் மேற்கொண்டனர்.

    அடுத்தடுத்து நடந்த அதிரடி நடவடிக்கைகளால் குட்கா விற்பனையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமானது. குறிப்பாக அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர்கள் டி.கே.ராஜேந்திரன் மற்றும் உளவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

    குறிப்பாக சென்னை புறநகரில் குட்கா, பான் மசாலா போதை பொருட்களை இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும் லஞ்சம் கொடுக்கப்பட்ட வகையில் சுமார் ரூ.40 கோடி பணம் கைமாறி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. 2 ஆண்டுகளில் இந்த தொகை வழங்கப்பட்டதாகவும் டைரி தகவல் மூலம் தெரியவந்தது.

    சி.பி.ஐ.யை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்கள். பணப் பரிமாற்றம் நடந்தது பற்றி அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அதன் பிறகு அவர்கள் குட்கா தயாரிப்பாளர்களின் வீடுகளில் ஆய்வு செய்து ஆவணங்களை கைப்பற்றி , சுமார் ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கினார்கள். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 2018-ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீது முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

    2-வது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ. தயாராகி இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த வழக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் இருந்தது. இந்த நிலையில் தற்போது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தயாராகி உள்ளனர்.

    டெல்லி சி.பி.ஐ.யின் 3-வது லஞ்ச ஒழிப்பு பிரிவின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் குட்கா ஊழல் தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, மற்றும் ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகிய முன்னாள் போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    சி.பி.ஐ.யிடம் இருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்படும் என்று தெரிகிறது. தமிழக அரசின் பரிந்துரைகள் உள்ளடங்கிய பதிலாக அது இருக்கும் என்று கூறப்படுகிறது.

    முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் மத்திய அரசின் ஒப்புதல் அவசியமாகும். இதை கருத்தில் கொண்டு சில பரிந்துரைகளை அளித்து தமிழக அரசு கடிதம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு கொடுக்கும் ஒப்புதலைத் தொடர்ந்து சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கும் என்று தெரிகிறது.

    சி.பி.ஐ. அடுத்த கட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரணமா ஆகிய இருவருக்கும் சிக்கல் ஏற்படும். ஆனால் குட்கா ஊழல் நெட்வொர்க்கில் மேலும் பல பிரபலங்கள் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கும் சி.பி.ஐ. நடவடிக்கை ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    ரூ.90 கோடி குட்கா ஊழல் வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) ஓய்வுபெற இருந்த ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு மன்னர் மன்னன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது.
    சென்னை:

    தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பிய ரூ.90 கோடி குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் தொழில்அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 8 பேர் மீது சி.பி.ஐ. போலீசார் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.




    குட்கா ஊழல் அரங்கேறியபோது சென்னை செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் உதவி போலீஸ் கமிஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன் மீது இந்த வழக்கில் முக்கியமாக புகார் கூறப்பட்டது. அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    மன்னர் மன்னன் தற்போது மதுரை ரெயில்வே போலீசில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். அவர் இன்று (வெள்ளிக்கிழமை) பணியில் இருந்து ஓய்வுபெற இருந்தார். இந்தநிலையில் குட்கா ஊழல் புகாரில் சிக்கிய மன்னர் மன்னன் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

    மன்னர் மன்னன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டது தமிழக போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்காவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திண்டுக்கல், மே.15-

    திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்காவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    திண்டுக்கல் அருகில் உள்ள தாடிக்கொம்பு அருணா மீனாட்சிநகரில் உள்ள ஒரு வீட்டில் குட்கா, புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரமோகன் மற்றும் தாடிக்கொம்பு போலீசார் அருணா மீனாட்சிநகரில் உள்ள சங்கர் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    இதில் ரூ.10லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் சங்கரின் உறவினரான தாடிக்கொம்பு வடக்குத்தெருவை சேர்ந்த மணிகண்டன்(வயது37) என்பவர் இப்பொருட்களை கொண்டு வந்து பதுக்கி வைத்து சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் பதுக்கி வைத்திருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் பாதுகாப்புடன் எடுத்துச்சென்றனர். இதுகுறித்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    * * * குட்கா பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்.

    குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக தேர்தல் டி.ஜி.பி.யிடம் 2-வது முறையாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    குட்கா, பான்பராக் போன்ற பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்டிருந்தாலும் அனைத்து கடைகளிலும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் 2016-ம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். ஆனாலும் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தினார்கள்.

    முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்பட முக்கிய பிரமுகர்கள் சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    தற்போது தேர்தல் டி.ஜி.பி.யாக உள்ள அசு தோஷ் சுக்லாவிடமும் கடந்த 8-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனராக சில மாதங்கள் பணியில் இருந்த நேரத்தில் குட்கா ஊழல் வழக்கில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.

    இதனால் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அசு தோஷ் சுக்லாவை வரவழைத்து 2-வது முறையாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

    குட்கா முறைகேடு குறித்து தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GutkhaScam #MaduraiHCBench
    மதுரை:

    மதுரையைச் சேர்ந்த கதிரேசன் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், குட்கா முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    அப்போது காவல் துறையினர், உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினருக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலரின் விவரங்கள் இருந்தன.

    இதுகுறித்து அப்போதைய தலைமை செயலர் ராமமோகனராவ், அப்போதைய டிஜிபி அசோக் குமார் ஆகியோரிடம் வருமானவரித்துறை முதன்மை ஆணையர் ஒரு கடிதம் அளித்தார். அதில், குட்கா முறைகேட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருந்தார்.

    இந்த கடிதத்தை டிஜிபி, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

    இந்நிலையில் குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி நான் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தேன். அந்த விசாரணையின் போது, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தரப்பில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், குட்கா முறைகேட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான எந்த ஆவணமும் அரசு அலுவலகங்களில் இல்லை என கூறியிருந்தார். இதனை ஏற்று எனது வழக்கை லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


    இந்த நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அப்போது குட்கா முறைகேட்டில் டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வருமான வரித்துறையினர் அளித்த சில ஆவணங்கள் சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டன. இதனை வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்துள்ளார். எனவே அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் சீலிட்ட உறையில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கு 22-ந் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

    அதன்படி இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    இந்த நிலையில் குட்கா முறைகேடு குறித்து தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பிய ஆதாரத்தை சீலிட்ட கவரில் வருகிற 28-ந் தேதி வருமான வரித்துறையினர் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். #Gutkha #GutkhaScam #MaduraiHCBench
    குட்கா விவகாரத்தில் வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய கடிதத்தை தமிழக தலைமை செயலாளரும், டி.ஜி.பி. அலுவலகமும் பெற்றதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. #Gutkha #GutkhaScam
    சென்னை:

    தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் தடையை மீறி குட்கா விற்கப்பட்டு வருகிறது.

    குட்கா விற்பனையை தங்கு தடையின்றி செய்வதற்காக அரசியல்வாதிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்னையைச் சேர்ந்த குட்கா தயாரிப்பாளர்கள் ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது. குட்கா தயாரிப்பாளர்களின் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கிய டைரி மூலம் இந்த தகவல் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும், போலீஸ் டி.ஜி.பி.க்கும் ரகசிய கடிதம் அனுப்பினார்கள். தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் “குட்கா விற்பனைக்காக அமைச்சருக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும்” என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி இருந்தனர்.

    அதுபோல 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி போலீஸ் டி.ஜி.பி.க்கு எழுதப்பட்ட கடிதத்தில், “குட்கா விற்க லஞ்சம் வாங்கிய இரு போலீஸ் உயர் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் ஆகஸ்டு 13-ந்தேதி வருமான வரித்துறை சார்பில் டி.ஜி.பி.க்கு மேலும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், “தமிழகத்தில் நாங்கள் சோதனை நடத்த குறிப்பிட்ட இடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டதும், உடனடியாக அந்த தகவலை போலீசார் அந்தந்த தொழில் அதிபர்களிடம் சொல்லி விடுகிறார்கள்” என்று கூறப்பட்டிருந்தது.

    ஆனால் இத்தகைய கடிதங்கள் எதுவும் வரவில்லை என்று கோர்ட்டில் தமிழக அரசு கூறியது. இதையடுத்து வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய ஆவணங்களை கண்டுபிடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் குட்கா ஊழல் வழக்கு கடந்த ஆண்டு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

    கோப்புப்படம்

    இதற்கிடையே வருமான வரித்துறையினர் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு சசிகலா அறையில் வருமான வரித்துறை எழுதியிருந்த ரகசிய ஆவணம் ஒன்று சிக்கியது. இதனால் வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய ஆவணங்கள் விவகாரத்தில் மர்மம் நிலவியது.

    குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுத்தடுத்து விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர். அடுத்தக்கட்டமாக போலீஸ் உயர் அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய கடிதத்தை தமிழக தலைமை செயலாளரும், டி.ஜி.பி. அலுவலகமும் பெற்றதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது.

    குட்கா விற்பனையாளர்களிடம் இருந்து அமைச்சர் லஞ்சம் பெற்றதற்கான ஆவணம் அனுப்பிய வருமான வரித்துறையின் கடிதத்தை தலைமை செயலகத்தில் உள்ள உதவி நிர்வாக அதிகாரி ஒருவர் பெற்றுள்ளார். அதுபோல டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை டி.ஜி.பி. அலுவலக முகாம் சூப்பிரண்டு ஒருவர் பெற்றுள்ளார்.

    இதன் மூலம் டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமை செயலாளருக்கும், டி.ஜி.பி.க்கும் கடிதங்கள் வந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அனுப்பிய கடிதங்கள், ஆவணங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது.

    குட்கா ஊழல் வழக்கில் இந்த புதிய ஆதாரம் அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீதான பிடியை மேலும் இறுக செய்துள்ளது. #Gutkha #GutkhaScam
    பணி நீட்டிப்புக்கு எதிரான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரன் செயல்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. #HCMaduraiBench #DGP #TKRajendran
    மதுரை:

    மதுரை மீனாம்பாள் புரத்தைச் சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

    குட்கா ஊழலில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த டி.கே. ராஜேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போதைய டி.ஜி.பி. அசோக்குமாருக்கு வருமான வரித்துறையினர் பரிந்துரை கடிதம் அளித்துள்ளனர்.

    பின்னர் டி.கே. ராஜேந்திரன் தமிழக டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். அவரை டி.ஜி.பி. பதவியில் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து கடந்த 30.6.2017 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

    வழக்கு விசாரணையின்போது, டி.கே. ராஜேந்திரனுக்கு குட்கா ஊழலில் உள்ள தொடர்பு பற்றி வருமான வரித்துறையினர் அளித்த அறிக்கை மாயமாகி விட்டது என்று அப்போதைய தமிழக தலைமை செயலாளர் ராம மோகனராவ் மதுரை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சசிகலாவின் அறையில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


    அதில் குட்கா ஊழலில் டி.கே. ராஜேந்திரனுக்கு தொடர்பு இருந்தது குறித்து வருமான வரித்துறையினர் அனுப்பிய கடிதங்கள் சிக்கி உள்ளன. அரசு அதிகாரிகளுக்கு இடையே நடந்த இந்த தகவல் பரிமாற்றம், எந்தவித சம்பந்தமும் இல்லாத சசிகலாவின் அறைக்கு சென்றது எப்படி? டி.கே. ராஜேந்திரனை டி.ஜி.பி. பதவியில் நீட்டிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அவருக்கு எதிரான ஆவணங்கள் மறைக்கப்பட்டு உள்ளன. பதவி நீட்டிப்பு விவகாரத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது.

    குடிமைப்பணிகள் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான விதிமுறைகள், டி.கே.ராஜேந்திரன் வி‌ஷயத்தில் மீறப்பட்டு உள்ளன.

    எனவே டி.கே.ராஜேந்திரனை தமிழக டி.ஜி.பி.யாக பணி நீட்டிப்பு செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என்று உத்தரவிட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு குழு ஏற்படுத்திட வேண்டும். இந்தக்குழு நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்திடவும் உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு போலீஸ் சட்டவிதிகள் 2013-ன் படி புதிய டி.ஜி.பி.யை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு கடந்த மாதம் 20-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

    முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் தலைமை செயலகம், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ், வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கும், கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பின்னர் இந்த வழக்கை ஜனவரி 2-ம் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பணி நீட்டிப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

    மேலும் இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு சென்று சேரவில்லை என தெரிகிறது. எனவே மீண்டும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.  #HCMaduraiBench
    குட்கா ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ஆகியோரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin #GutkhaScam #VijayaBaskar
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குட்கா ஊழல் தொடர்பாக டைரியில் இடம் பெற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் அதே பதவியில் தொடர்ந்து நீடிப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் நிர்வாகத்திற்கு அவமானகரமாகவும் இருக்கிறது.

    இப்போது அமைச்சருக்கு சம்மன் அனுப்பி இரு நாட்கள் சி.பி.ஐ முன்பு பலமணிநேர விசாரணைக்கு ஆஜரான பிறகும் எந்தவித நாணமுமின்றிப் பதவியில் தொடருகிறார் என்பது பொதுவாழ்வில் தூய்மை, அலுவலகப் பணிகளில் நேர்மை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை சுக்கு நூறாக உடைத்துப் போட்டிருக்கிறது.

    அது மட்டுமின்றி இன்னொரு பக்கம் ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு தொடர்பாக கைப்பற்றப்பட்ட 89 கோடி ரூபாய் லஞ்ச பட்டியல் வழக்கிலும் விஜயபாஸ்கர் பெயரை சேர்க்காமல் அவரை சென்னை மாநகர காவல்துறை ஆணையரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் தப்ப விட்டுள்ளார்கள்.

    அதையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. இப்படி அடுத்தடுத்து ஆர்.கே.நகர் வழக்கு, குட்கா வழக்கு போன்றவற்றில் சிக்கியுள்ளவர்களைக் காப்பாற்றும் உள்நோக்கத்துடன் அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருவது ஒரு புறமிருக்க, உச்சநீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை எடுத்துக் கொண்ட சி.பி.ஐ அமைப்பும் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை எப்படியாவது காப்பாற்ற நினைக்கிறதோ என்ற வலுவான சந்தேகம் எழுந்திருக்கிறது.

    இந்த வழக்கினை விசாரித்து வந்த சி.பி.ஐ அதிகாரிகள் திடீரென்று மாற்றப்பட்ட போது அவர்களை மீண்டும் அதே பதவிகளில் நியமிக்க வேண்டும் என்று தி.மு.க.வின் சார்பில் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் இருப்பதால் சி.பி.ஐ விசாரணை எந்த திசை நோக்கி நகருகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

    டி.ஜி.பி வீடு சி.பி.ஐ அதிகாரிகளால் சோதனையிடப்பட்டும் இன்று வரை அவர் விசாரணைக்காக அழைக்கப்படாததும், குட்கா டைரியில் இடம்பெற்றுள்ள அவர் தமிழக காவல் துறைக்கு இன்னும் தலைமை தாங்குவதும், பயிரை மேய்ந்த வேலியைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

    புகழ் பெற்ற தமிழ்நாடு காவல்துறையின் பெருமைக்கு சிறுமை சேர்த்திடும் பேரிழுக்கு என்பது மட்டுமின்றி, ஒட்டு மொத்த காவல்துறை அமைப்பில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் உருக்குலைவதற்கும் காரணமாக அமைந்து வருகிறது. லஞ்ச ஊழல் தடுப்புத்துறை முறையாக இந்த வழக்கை விசாரிக்காது என்றுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சி.பி.ஐ விசாரணை கோரப்பட்டது.

    அப்படி உச்சநீதிமன்றமே சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ அமைப்பின் விசாரணை ஒட்டுமொத்த “குட்கா” டைரி விவகாரத்தை இப்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் அரைகுறையாக முடித்து விட்டு, அமைச்சர், டி.ஜி.பி. போன்றோரை தப்பவிடும் நோக்கில் அமைந்துள்ளதோ என்ற நியாயமான கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.


    இந்நிலையில் சி.பி.ஐ. ரெய்டு நடத்திய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டு உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ள இந்த விசாரணை சிறிதும் தடம் மாறி விடாமல் சட்டப்படி நேர்மையான பாதையில் செல்வதற்கேற்றபடி எச்சரிக்கையுடன் பாதுகாத்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் சி.பி.ஐ அமைப்பிற்கு இருக்கிறது என்றும், அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் விடுவிக்கும் நோக்கில் விசாரணையின் பாதை தலைகீழாக மாறுமேயானால் தி.மு.க. உச்சநீதிமன்றத்தை மீண்டும் நாடுவதற்குத் தயங்காது என்றும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    ஊழல் புகாருக்கு உள்ளாகியிருக்கும் முதல்-அமைச்சர், “குட்கா அமைச்சரை” ராஜினாமா செய்யச் சொல்வார் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், இருவரும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும்பறவைகள். ஆகவே சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும்.

    குட்கா ஊழல் வழக்கின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பொறுப்பில் இருக்கும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தலை சிறந்த தமிழகக் காவல்துறை அப்பழுக்கற்ற, ஊழல் கறைபடியாத தலைமையின் கீழ் முறையாகச் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #DMK #MKStalin #GutkhaScam #VijayaBaskar
    குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயலாளர், டிஜிபி டிகே ராஜேந்திரன், சசிகலாவுக்கு நோட்டீசு அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #GutkhaScam #Sasikala #RamaMohanaRao
    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரி அதிகாரிகள் சென்னையில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்தனர்.

    அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்து ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டது.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றவர்களின் பட்டியல் இருந்ததாக தகவல்கள் வந்தது.

    அந்த பட்டியலில் தமிழக அமைச்சர், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டி.கே. ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து விசாரித்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தண்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குட்கா ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கடந்த 28.7.2017 அன்று உத்தரவிட்டது.

    இதேபோல சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் குட்கா ஊழல் பற்றிய விசாரணையை சி.பி.ஐ. தற்போது மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். அவரது பணிக்காலம் முடிந்தபிறகு 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு 30.6.2017 அன்று அரசாணை பிறப்பித்து உள்ளது.

    அவருக்கு பதவி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தின் காரணமாக, குட்கா ஊழல் பிரச்சினையில் அவர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படவில்லை என்று அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகனராவ் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    தற்போது போயஸ் கார்டனில் சசிகலாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் குட்கா ஊழல் குறித்து வருமான வரித்துறையினரின் அறிக்கை கைப்பற்றப்பட்டு உள்ளது.

    அதில் தற்போதைய டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பெயர் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அவரின் பதவியை சட்டவிரோதமாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக, முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் டி.கே.ராஜேந்திரனின் டி.ஜி.பி. பதவி நீட்டிப்பை ரத்து செய்யவேண்டும். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.



    வழக்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் தலைமை செயலகம், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ், டி.ஜி.பி., வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலக அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் சசிகலாவை எதிர் மனுதாரராக சேர்த்து அவருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #GutkhaScam #Sasikala #RamaMohanaRao
     
    சம்மன் அனுப்பப்பட்டதால் விஜயபாஸ்கர் குற்றவாளி அல்ல என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #TNMinister #Jayakumar #Vijayabaskar #DMK
    ராயபுரம்:

    ராயபுரத்தில் உள்ள பள்ளியில் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா கலந்து கொண்டனர்.

    முன்னதாக அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் நடைபாதை அமைக்கப்படும். கூட்டணி அமைக்க இது உரிய நேரம் அல்ல. கூட்டணி குறித்து கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். இதுபற்றி ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.

    தமிழகத்தில் தாமரை மலரும் என்று கூறுவது அவர்களது ஆர்வம். இதனை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இரட்டை இலைதான். மற்றவர்களுக்கு இடம் இல்லை.

    தமிழ் இனத்தை எதிர் காலத்தில் அழிக்க காங்கிரசுடன் தி.மு.க. கைகோர்க்கிறதா? குற்றவாளியை தண்டிக்க வேண்டியது நீதிமன்றம்தான். ஒரு வழக்கில் சம்மன் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அது பெரிய வி‌ஷயம் அல்ல. சம்மன் அனுப்பியதால் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றவாளி அல்ல.


    ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தி.மு.க.வினர் டீக்கடை, பிரியாணி கடை என்று ஒரு கடை விடாமல் அடாவடியில் ஈடுபடுகிறார்கள்.

    பொழுது விடிந்தால், ஒரு கடை விடாமல் மன்னிப்பு கேட்பதே மு.க.ஸ்டாலினின் வேலையாய் போய்விட்டது. கலைஞர் சிலைத்திறப்பு நிகழ்ச்சிக்கு மின்சாரத்தை சென்னை மாநகராட்சியிடம் இருந்து திருடி எடுத்துள்ளனர். அதற்கு ஆதாரம் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். (அப்போது அமைச்சர் ஜெயக்குமார் செல்போனில் உள்ள வீடியோ ஆதாரத்தை காண்பித்தார்).

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் என்ன செய்தார்கள்? அவர்கள் பேசுவதை ஏற்கமுடியாது. மூடிய ஆலையை திறக்க வாய்ப்பே இல்லை. உள்ளத்தில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுவது நாங்கள் அல்ல.

    கஜா புயல் நிவாரண தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற தமிழக அரசு போராடி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Jayakumar #Vijayabaskar #DMK
    குட்கா விவகாரத்தில் தினகரன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியான வக்கீல் வேலு கார்த்திகேயனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். #GutkhaScam #Gutkha #CBI
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் மீண்டும் பூதாகரமாகி உள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு பிறகே குட்கா ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில் ஒவ்வொரு மாதமும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் குறித்து பட்டியல் போடப்பட்டு இருந்தது.

    அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயரும் குட்கா விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். முன்னதாக குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் 3 பேர் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆவர். இவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    குட்கா ஊழல் வழக்கில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதன் பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அமைதி காத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குட்கா விவகாரத்தை சி.பி.ஐ. மீண்டும் கையில் எடுத்துள்ளது.

    அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சம்மன் அனுப்பி சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வரவழைத்த அதிகாரிகள் அவரிடம் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் அளித்த தகவல்களை மையமாக வைத்து அமைச்சர் விஜயபாஸ்கரையும் விசாரணை வளையத்துக்குள் சி.பி.ஐ. கொண்டு வந்தது. முன்னாள் அமைச்சரான ரமணாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ரகசியமாக ஆஜரான விஜயபாஸ்கரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு அதிகாரிகள் திணற அடித்தனர்.

    இதன் எதிரொலியாகவே இன்னொரு உதவியாளரான சீனிவாசன் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டு உள்ளது. சென்னை வளரசவாக்கத்தில் உள்ள சீனிவாசனின் வீட்டில் நேற்று சோதனை நடத்திய போலீசார் சில ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் குட்கா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தினகரன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியான வக்கீல் வேலு கார்த்திகேயனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தி உள்ளனர்.


    குட்கா ஊழல் வழக்கில் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு வேலு கார்த்திகேயன் ஜாமீன் வாங்கி கொடுத்துள்ளார்.

    இதையடுத்து தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியில் வசித்து வரும் வேலு கார்த்திகேயன் வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேந்திரனுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தது எப்படி? ராஜேந்திரனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? அமைச்சர் விஜயபாஸ்கரோ அல்லது அவரது உதவியாளர்கள் யாரும் ராஜேந்திரனை ஜாமீனில் எடுக்கும் படி கூறினார்களா? சென்னையை சேர்ந்த ராஜேந்திரனை உங்களுக்கு எப்படி தெரியும்? என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    அதற்கு வேலு கார்த்திகேயன் சென்னை வக்கீல் நண்பர் மூலம் ராஜேந்தினுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தேன் என கூறி உள்ளார்.

    3 மணி நேரம் விசாரணைக்கு பின்னர் வக்கீல் வேலு கார்த்திகேயன் வீட்டில் இருந்து சில ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

    வக்கீல் வேலு கார்த்திகேயன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வக்கீல் பிரிவு மாநில செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில் இருந்து வந்து இருந்த சி.பி.ஐ. அதிகாரிகளே சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது சோதனையை முடித்துக் கொண்டு நேற்று இரவே டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வரும் விசாரணை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GutkhaScam #Gutkha #CBI #Vijayabaskar
    குட்கா ஊழல் வழக்கு விசாரணையில் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன் ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #GutkhaScam #CBI

    சென்னை:

    தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

    இதன் பிறகும் கடைகளில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனை சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த குட்கா குடோனை வருமானவரித்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த சோதனையில் குட்கா விற்பனை தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சிக்கின.

    சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது. யார்-யாருக்கு எவ்வளவு லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டது என்பதை ஒரு டைரியில் எழுதி வைத்திருந்தனர்.

    சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், புழல் உதவி கமி‌ஷனராக பணியாற்றிய மன்னர் மன்னன், செங்குன்றத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் ஆகியோரது பெயர்கள் குட்கா விவகாரத்தில் அடிபட்டது.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆரம்பத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில் ஐகோர்ட்டு குட்கா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது.

    சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக குட்கா வழக்கில் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். குடோன் அதிபர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் யாருக்கும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. பலமுறை 6 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

     


    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சி.பி.ஐ. அதிகாரிகள் குட்கா ஊழல் தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் கடந்த வாரம் தொடர்ச்சியாக 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

    அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதை ஏற்று கடந்த 2 நாட்களாக நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அவர் ஆஜராகி வருகிறார்.

    அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சரமாரியாக கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். குட்கா ஊழல் முறைகேட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறித்து விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக நடந்த விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

    குட்கா விவகாரத்தில் முதலில் முன்னாள் அமைச்சர் ரமணாவின் பெயர் இடம்பெறாமலேயே இருந்து வந்தது.

    திடீரென அவரும் விசாரணை வளையத்துக்குள்  கொண்டு வரப்பட்டுள்ளார். வணிக வரித்துறை அமைச்சராக இருந்த ரமணாவுக்கு குட்கா முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற்று வருகிறது.

    இன்று 3-வது நாளாக விஜயபாஸ்கரும், ரமணாவும் மீண்டும் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டி.ஜி.பி. ராஜேந்திரன் மற்றும் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. புகாருக்குள்ளான மற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. இதுவரையில் யாரும் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை.

    தற்போது அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அடுத்தக்கட்டமாக போலீஸ் அதிகாரிகளிடம் மீண்டும் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

    புகாருக்கு உள்ளான போலீஸ் அதிகாரிகளில் இன்ஸ்பெக்டர் சம்பத்துக்கு மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அதை ஏற்று அவரும் விசாரணைக்காக ஆஜரானார்.

    ஆனால் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனர் மன்னர் மன்னன் ஆகியோர் விசாரணைக்காக சி.பி.ஐ. அலுவலகத்துக்கு இதுவரை வரவழைக்கப்படவில்லை.

    எனவே விரைவில் இவர்கள் 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், சி.பி.ஐ. அதிகாரிகளின் கைது வளையத்துக்குள் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

    விஜயபாஸ்கர், ரமணாவிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பின்னர் குட்கா வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் குட்கா விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. #GutkhaScam #CBI

    ×