search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வக்கீல் வேலு கார்த்திகேயன்
    X
    வக்கீல் வேலு கார்த்திகேயன்

    குட்கா ஊழல் விவகாரம்- தினகரன் கட்சி வக்கீலிடம் சிபிஐ அதிரடி விசாரணை

    குட்கா விவகாரத்தில் தினகரன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியான வக்கீல் வேலு கார்த்திகேயனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். #GutkhaScam #Gutkha #CBI
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் மீண்டும் பூதாகரமாகி உள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு செங்குன்றம் அருகே உள்ள குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கு பிறகே குட்கா ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில் ஒவ்வொரு மாதமும் அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் குறித்து பட்டியல் போடப்பட்டு இருந்தது.

    அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயரும் குட்கா விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். முன்னதாக குட்கா வழக்கில் குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் 3 பேர் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆவர். இவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    குட்கா ஊழல் வழக்கில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதன் பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் அமைதி காத்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குட்கா விவகாரத்தை சி.பி.ஐ. மீண்டும் கையில் எடுத்துள்ளது.

    அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சம்மன் அனுப்பி சி.பி.ஐ. அலுவலகத்துக்கு வரவழைத்த அதிகாரிகள் அவரிடம் 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் அளித்த தகவல்களை மையமாக வைத்து அமைச்சர் விஜயபாஸ்கரையும் விசாரணை வளையத்துக்குள் சி.பி.ஐ. கொண்டு வந்தது. முன்னாள் அமைச்சரான ரமணாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ரகசியமாக ஆஜரான விஜயபாஸ்கரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு அதிகாரிகள் திணற அடித்தனர்.

    இதன் எதிரொலியாகவே இன்னொரு உதவியாளரான சீனிவாசன் வீட்டில் நேற்று சோதனை நடத்தப்பட்டு உள்ளது. சென்னை வளரசவாக்கத்தில் உள்ள சீனிவாசனின் வீட்டில் நேற்று சோதனை நடத்திய போலீசார் சில ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் குட்கா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தினகரன் கட்சியைச் சேர்ந்த நிர்வாகியான வக்கீல் வேலு கார்த்திகேயனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக விசாரணை நடத்தி உள்ளனர்.


    குட்கா ஊழல் வழக்கில் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு வேலு கார்த்திகேயன் ஜாமீன் வாங்கி கொடுத்துள்ளார்.

    இதையடுத்து தஞ்சை மாதாக்கோட்டை சாலை வங்கி ஊழியர் காலனியில் வசித்து வரும் வேலு கார்த்திகேயன் வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜேந்திரனுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தது எப்படி? ராஜேந்திரனுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? அமைச்சர் விஜயபாஸ்கரோ அல்லது அவரது உதவியாளர்கள் யாரும் ராஜேந்திரனை ஜாமீனில் எடுக்கும் படி கூறினார்களா? சென்னையை சேர்ந்த ராஜேந்திரனை உங்களுக்கு எப்படி தெரியும்? என்பது உள்ளிட்ட கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.

    அதற்கு வேலு கார்த்திகேயன் சென்னை வக்கீல் நண்பர் மூலம் ராஜேந்தினுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தேன் என கூறி உள்ளார்.

    3 மணி நேரம் விசாரணைக்கு பின்னர் வக்கீல் வேலு கார்த்திகேயன் வீட்டில் இருந்து சில ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

    வக்கீல் வேலு கார்த்திகேயன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வக்கீல் பிரிவு மாநில செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

    டெல்லியில் இருந்து வந்து இருந்த சி.பி.ஐ. அதிகாரிகளே சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது சோதனையை முடித்துக் கொண்டு நேற்று இரவே டெல்லி புறப்பட்டு சென்றனர்.

    குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வரும் விசாரணை அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GutkhaScam #Gutkha #CBI #Vijayabaskar
    Next Story
    ×