search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DGP TK Rajendran"

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போன் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். #DGP #Cellphone #Police
    சென்னை:

    கடந்த ஆண்டு நவம்பர் 17-ந் தேதி அன்று போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் பிரிவுகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்களது பணிநேரத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்து இருந்தார்.

    அந்த சுற்றறிக்கையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சமீபத்தில் சட்டசபை கூட்டம் நடந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் செல்போனை பயன்படுத்தினார்கள்.

    செல்போனை பயன்படுத்திய 6 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர், மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.



    இதற்கிடையே, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பணி நேரங்களில் போக்குவரத்து போலீசார் செல்போனை பயன்படுத்துகிறார்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தார்.

    செல்போனை பணி நேரங்களில் பயன்படுத்தும் போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து விளக்கம் கேட்டிருந்தார்.

    இந்தநிலையில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் பிரிவுகளுக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்தார்.

    அந்த சுற்றறிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் செல்போனை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது என்றும், அதைமீறி செயல்படும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் போலீசாருக்கு இந்த விதிமுறை பொருந்தும். முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, போராட்ட சம்பவங்களில் பாதுகாப்பு, திருவிழா பாதுகாப்பு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி ஆகியவற்றில் ஈடுபடும் போலீசார் கண்டிப்பாக செல்போனை எடுத்து செல்லக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #DGP #Cellphone #Police

    பணி நீட்டிப்புக்கு எதிரான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, டி.ஜி.பி.யாக டி.கே.ராஜேந்திரன் செயல்படுவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. #HCMaduraiBench #DGP #TKRajendran
    மதுரை:

    மதுரை மீனாம்பாள் புரத்தைச் சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

    குட்கா ஊழலில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனராக இருந்த டி.கே. ராஜேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போதைய டி.ஜி.பி. அசோக்குமாருக்கு வருமான வரித்துறையினர் பரிந்துரை கடிதம் அளித்துள்ளனர்.

    பின்னர் டி.கே. ராஜேந்திரன் தமிழக டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். அவரை டி.ஜி.பி. பதவியில் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து கடந்த 30.6.2017 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

    வழக்கு விசாரணையின்போது, டி.கே. ராஜேந்திரனுக்கு குட்கா ஊழலில் உள்ள தொடர்பு பற்றி வருமான வரித்துறையினர் அளித்த அறிக்கை மாயமாகி விட்டது என்று அப்போதைய தமிழக தலைமை செயலாளர் ராம மோகனராவ் மதுரை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சசிகலாவின் அறையில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


    அதில் குட்கா ஊழலில் டி.கே. ராஜேந்திரனுக்கு தொடர்பு இருந்தது குறித்து வருமான வரித்துறையினர் அனுப்பிய கடிதங்கள் சிக்கி உள்ளன. அரசு அதிகாரிகளுக்கு இடையே நடந்த இந்த தகவல் பரிமாற்றம், எந்தவித சம்பந்தமும் இல்லாத சசிகலாவின் அறைக்கு சென்றது எப்படி? டி.கே. ராஜேந்திரனை டி.ஜி.பி. பதவியில் நீட்டிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகவே அவருக்கு எதிரான ஆவணங்கள் மறைக்கப்பட்டு உள்ளன. பதவி நீட்டிப்பு விவகாரத்தில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது.

    குடிமைப்பணிகள் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான விதிமுறைகள், டி.கே.ராஜேந்திரன் வி‌ஷயத்தில் மீறப்பட்டு உள்ளன.

    எனவே டி.கே.ராஜேந்திரனை தமிழக டி.ஜி.பி.யாக பணி நீட்டிப்பு செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என்று உத்தரவிட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு குழு ஏற்படுத்திட வேண்டும். இந்தக்குழு நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்திடவும் உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு போலீஸ் சட்டவிதிகள் 2013-ன் படி புதிய டி.ஜி.பி.யை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு கடந்த மாதம் 20-ந்தேதி விசாரணைக்கு வந்தது.

    முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் தலைமை செயலகம், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன், முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ், வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கும், கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பின்னர் இந்த வழக்கை ஜனவரி 2-ம் தேதிக்கு (இன்று) நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பணி நீட்டிப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

    மேலும் இது தொடர்பாக வருமான வரித்துறைக்கு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு சென்று சேரவில்லை என தெரிகிறது. எனவே மீண்டும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை வருகிற 21-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.  #HCMaduraiBench
    தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று காவல்துறை தலைவரான டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உடனே பதவி விலக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DMK #MKStalin #Thoothukudi #Sterliteprotest
    சென்னை:

    தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று 100 நாட்களுக்கு மேலாக அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று நடத்திய பேரணியில் தீவிரவாதிகளை சுட்டுக்கொல்வது போல் நவீன துப்பாக்கிகளை வைத்து காவல் துறையினர் 11 பேரை சுட்டுத் தள்ளி உள்ளனர். மேலும் பல பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடுகின்றனர்.

    காவல் துறையின் காட்டுமிராண்டித் தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்று காவல்துறை தலைவரான டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உடனே பதவி விலக வேண்டும்.


    டி.கே.ராஜந்திரன் ஏற்கனவே குட்கா ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டவர். இவர் மீது சி.பி.ஐ. விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் துப்பாக்கிசூடு நடந்துள்ளதால் தார்மீக பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

    தூத்துக்குடியில் இவ்வளவு சம்பவங்கள் உயிர் பலிகள் ஏற்பட்டும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்க்கவில்லை. தென்மாவட்ட அமைச்சர்களை கூட அனுப்பி வைக்கவில்லை.

    தூத்துக்குடியில் அமைதி திரும்ப எந்த அமைச்சர்களும் முயற்சி எடுக்கவில்லை. இது இந்த அரசின் கையாலாகாததனமாகும். இந்த விசயத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு முதல்-அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

    அமைச்சர் ஜெயக்குமார், தங்களது பதவி மற்றும் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள துப்பாக்கிசூடு தவிர்க்க முடியாதது என கூறி உள்ளார். அங்கு பலியானது மனித உயிர்கள். அங்கு பேரணி நடைபெறுவது காவல் துறைக்கு முன் கூட்டியே தெரியும். அவர்கள் எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே இந்த ஆட்சியில் அமைச்சர் ஜெயக்குமார் போன்றோர் இப்படித்தான் உளறிக் கொண்டிருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #Thoothukudi #Sterliteprotest
    ×