search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ariyalur"

    மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து அரியலூரில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 61 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரியலூர்:

    நாமக்கல்லில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கவர்னருக்கு கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. வினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் அண்ணாசிலையில் இருந்து தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில், கட்சியினர் ஊர்வலமாக அரியலூர் பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் பஸ்நிலைய வாசலில் அமர்ந்து தமிழக கவர்னரை கண்டித்தும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலை செய்ய கோரியும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 61 தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனை வரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர். மறியல் போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் துரைராஜ், இளைஞர் அணி தலைவர் இளையராஜா, ஒன்றிய செயலாளர்கள் கென்னடி, சவுந்தர், நகர செயலாளர் முருகேசன், கதிரவன், ராஜேந்திரன், விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தேரடி வரை சாலையின் ஓரத்தில் நடைமேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் அண்ணா சிலையில் இருந்து தேரடி வரை சாலையின் ஓரத்தில் பாதசாரிகளுக்காக நடைமேடை அமைக்க வேண்டும். அந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி பஸ் நிலைய பகுதிகளில் உள்ள சாலைகளிலும் நடைமேடை அமைக்க வேண்டும்.

    மேலும் நடைமேடைகளில் தடுப்பு கம்பிகளும் அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்து அரியலூர் நகரை அழகு படுத்த நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    அரியலூரில் வெளிநாடு செல்வதற்காக விசா, விமான டிக்கெட் எடுத்ததில் ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
    தாமரைக்குளம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த அல்போன்ஸ், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ஜியாவுல்ஹக் ஆகியோர் சேர்ந்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தனர். இவர்களிடம் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த கதிர்வேல் மனைவி செல்வி என்பவர் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தார். இந்தநிலையில் அல்போன்ஸ், ஜியாவுல்ஹக் ஆகியோர் மூலம் 35 பேரை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப செல்வி முடிவு செய்தார். இதற்காக 35பேரிடம் தலா ரூ.1லட்சம் வாங்கி, அதனை அல்போன்ஸ், ஜியாவுல்ஹக்கிடம் கொடுத்துள்ளார்.

    இதையடுத்து அவர்கள் கடந்த 5.2.2018 அன்று 35பேரும் ஹாங்காங்கில் வேலைக்கு செல்லும் வகையில் விசா, விமான டிக்கெட் எடுத்து செல்வியிடம் கொடுத்துள்ளனர். அதனை செல்வி ஆய்வு செய்து பார்த்த போது அவை போலி விசா, போலி டிக்கெட் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்திய 2பேரையும் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

    இது குறித்து அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் செல்வி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராவல்ஸ் உரிமையாளர் அல்போன்சை கைது செய்தனர். தலைமறைவான ஜியாவுல்ஹக்கை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews
    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே திருமண வாழ்க்கையில் மன உளைச்சல் அடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை மகன் பழனிவேல் (வயது 27), விவசாயி.

    இவருக்கும் தேளூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரது மகள் மணிமாலாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஏற்கனவே மணிமாலாவுக்கு பலருடன் தொடர்பு இருந்துள்ளது.

    இதனால் திருமணம் நடந்த நாள் முதல் பழனிவேலுக்கும், மணிமாலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், அவ்வப்போது மணிமாலா மாயமாவதும் தொடர் கதையாக இருந்தது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

    இந்தநிலையில் மணி மாலா கடந்த மாதம் விக்கிரமங்கலம் அருகே உள்ள நாயக்கன்காடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரிடம் இருந்து முறைப்படி விவாகரத்து எதுவும் பெறாமல் அவர் திருமணம் செய்து கொண்டதால் பழனிவேல் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரண்டாவது கணவர் மணிகண்டனை பிரிந்த மணிமாலா மீண்டும் முதல் கணவரான பழனிவேலிடம் குடும்பம் நடத்த ரெட்டி பாளையம் கிராமத்திற்கு வந்தார்.

    ஆனால் அவரை பழனிவேலின் தந்தை பிச்சை பிள்ளை துரத்தினார். என் மகனுடன் குடும்பம் நடத்த நீ தகுதியானவர் இல்லை, இனிமேல் இங்கு வராதே என்று கூறி திருப்பி அனுப்பினார். தனது மண வாழ்க்கை பாழாய்போய் விட்டதே என்று பழனிவேல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்தநிலையில் தன்னை ஏமாற்றி திருமணம் செய்தததால் கடனாளி ஆகிவிட்டதாகவும், மணிமாலாவிடம் இருந்து திருமண செலவு ரூ.2 லட்சத்தை திரும்ப பெற்றுத் தருமாறும் மணிகண்டன் விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் முதல் கணவரான பழனிவேலை அழைத்து விசாரித்தனர். மேலும் ரூ.2 லட்சம் பணத்தையும் நீயே தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான பழனிவேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் பழனிவேல் குறித்து எந்த தகவலும் இல்லை.

    இந்த நிலையில் இன்று காலை ரெட்டிபாளையம் பகுதியில் தனியார் சிமெண்டு ஆலை அருகே உள்ள ஒரு புளியமரத்தில் பழனிவேல் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் ரெட்டிபாளையம் பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீசார் பழனிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பழனிவேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனையில் யாராவது அவரை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    அரியலூரில் புதுப்பெண் இறந்தது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    அரியலூர் எருத்துகாரன் பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பெரியசாமி என்பரது மகள் வெற்றி செல்விக்கும் (வயது23)பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தைதொடர்ந்து வெற்றி செல்வி மணிகண்டனிடம் ரூ1.20 லட்சம் கடனாக பெற்றார். ஆனால் வாங்கிய கடனை வெற்றி செல்வி திருப்பி கொடுக்க வில்லை.

    மணிகண்டன் பணத்தை திருப்பி கேட்ட போது வெற்றி செல்வி மற்றும் அவரது தந்தை பெரியசாமி, தாய் தமிழரசி ஆகிய 3 பேரும் மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து மணிகண்டன் கயர்லாபாத் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. 

    இதைத் தொடர்ந்து மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் கோர்ட்டின் உத்திரவு படி கயர்லாபாத் போலீசார் வெற்றிசெல்வி, பெரியசாமி, தமிழரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந் நிலையில் கடந்த 29-5-18 அன்று வெற்றி செல்வியை மணிகண்டன் கடத்தி சென்று திருமணம் செய்தார். இருவரும் எருத்து காரன்பட்டியில் குடும்பம் நடத்தி வந்தனர். இந் நிலையில் வெற்றிசெல்வி வீட்டில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்தும் அரியலூர் போலீசார் விரைந்து சென்று வெற்றி செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வெற்றி செல்வியின் தந்தை பெரியசாமி அரியலூர் போலீசில் எனது மகளை மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் சேகர் அவரது மனைவி பரிமளா, மாரிமுத்து அவரது மனைவி வேவுகரசி ஆகிய 5 பேர் சேர்ந்து அடித்து கொன்றுள்ளார்கள் என கூறியுள்ளார்.

    இது குறித்து ஆர்.டி.ஓ. சத்திய நாராணன், இன்ஸ் பெக்டர் பழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வெற்றி செல்வி அடித்து கொலை செய்யப்பட்டரா? அல்லது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த கன மழையால் அப்பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. மழை நீரால் சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.இதன் காரணமாக மின்சாரம் தடைப்பட்டதோடு, பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நேற்று மாலை 3 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் எங்கும் செல்லும் முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெய்த மழை குளிர்ச் சியை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதனிடையே செந்துறை பகுதியில் நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தன. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே பருவ மழை காலத்திற்கு முன்பாக நீர்வரத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் மரங்கள் முறிந்து சாலையில் கிடப்பதை படத்தில் காணலாம்

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் போதிய அளவு மழை பெய்யாததால் அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்ததால் ஆழ் குழாய் கிணறுகளிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை கறம்பக்குடி பகுதியில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் வயல் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழை மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கரூர் மாவட்டத்தில் கரூர் தாந்தோணி மலை, சுங்கவாயில், திருமாநிலையூர், லைட்ஹவுஸ் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் குளித்தலை பகுதியில் மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை லேசான தூரலுடன் மழை பெய்தது.#tamilnews
    வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் 4½ பவுன் தாலி சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.
    அரியலூர்

    அரியலூர் அருகே உள்ள மண்டையன்குறிச்சியை சேர்ந்த சுந்தரராசு மனைவி வேம்பு(வயது 25). இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்று கொண்டிருந்தார். வாகன பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வேம்புவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் வேம்பு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். 

    இந்த வழக்கு சம்பந்தமாக பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா உசேன்நகரம் கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி மற்றும் சுதாகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகையும் மீட்கப்பட்டது.
    அரியலூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக மகனே தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 80). இவருக்கு பரமசிவம் (55) என்ற மகனும், வளர்மதி (52) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி அவருக்கு சொந்தமான சொத்துக்களை வளர்மதிக்கு எழுதி வைத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும் பரமசிவத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்றிரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவம் , கிருஷ்ணமூர்த்தியை தாக்கி காலால் மிதித்தார். இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பரமசிவத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள்சார் பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி  தமிழகம்  முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், உடையார்பாளையம், மீன் சுருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 4500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 80 சதவீதத்திற்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகள், மெடிக்கல் கடைகள், பெட்டிக்கடைகள், பால் பூத்துகள் ஆகியவை மட்டும் திறந்து இருந்தன. ஆட்டோக்கள், பஸ்கள், வாடகை கார்கள் வழக்கம் போல் ஓடின.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி,  கந்தர்வக்கோட்டை, விராலிமலை ஆகிய ஊர்களில் குறைந்த அளவிலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ்  நிலையம், அண்ணா சிலை, பிருந்தாவனம், மேல ராஜ வீதி, கீழராஜ வீதி, டி.வி.எஸ்., திலகர் திடல் ஆகிய பகுதிகளில்  உள்ள பெரிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில சிறிய கடைகள்  மட்டும்  திறந்து உள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு பகுதி, வடக்கு மாதவி சாலை, பெரம்பலூர் மதர்ஷா சாலை, எளம்பலூர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் ஓடியது. 

    கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய ஊர்களில் குறைந்த அளவிலான  கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் இல்லை. கரூரில் ஜவகர் பஜார், கோவை சாலை, மேற்கு பிரதட்சணம் சாலை, காமாட்சியம்மன் கோவில் தெரு, செங்குந்தபுரம், பழைய திண்டுக்கல் சாலை ஆகிய இடங்களில்  செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் இன்று வழக்கம்போல் திறந்திருந்தன. அனைத்து பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. 

    இந்த  முழுஅடைப்பு போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம், ம.தி.மு.க., மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய  யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன.
    அரியலூர் அருகே மொபட் மீது லாரி எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள ஜெமீன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 40). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பொருட்கள் வாங்குவதற்கு மொபட்டில் அரியலூருக்கு வந்துள்ளார். ஜெயங்கொண்டம் சாலை சந்தை பேட்டை அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. 

    இதில் படுகாயமடைந்த சின்னப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கருப்பண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையான்குடி ரெயில்வே கேட் தண்டவாளம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உடையான்குடி ரெயில்வே கேட் தண்டவாளம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விருதாச்சலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்த வாலிபரின் சட்டை பையில் ஐ.டி. கார்டு ஒன்று இருந்துள்ளது. அதில் அவரது பெயர் மகேந்திரன் எனவும், தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும்  திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் தாம்பரம் செல்வதற்காக எடுக்கப்பட்ட டிக்கெட்டும் இருந்தது.  அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவரது செல்போனின் முகப்பு படத்தில் இளம்பெண் ஒருவரின் திருமண புகைப்படம் உள்ளது. இதனால் மகேந்திரனுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.  

    மேலும் அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. ரெயிலில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் ரெயிலில் இருந்து தள்ளி அவரை கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 90 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மனைவி தில்லைநாயகி (வயது 45). இவர்களது மகன் தினேஷ் (21). சின்னப்பா சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் தில்லைநாயகி அவரது மகனுடன் நாகல்குழியில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அதனை காண்பதற்காக தில்லைநாயகி மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவுகளை பூட்டி விட்டு சென்றனர்.

    இன்னிசை கச்சேரி முடிந்ததையடுத்து நள்ளிரவில் இருவரும் வீடு திரும்பினர். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. பின்பக்க கதவு உடைக்கப்பட்டும் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தில்லைநாயகி வீட்டின் அறையில் உள்ள பீரோவை பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 90 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


    இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

    தில்லைநாயகி மற்றும் அவரது மகன் கோவில் திருவிழாவுக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தெரிந்த நபர்களாகவே இருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி. அபினவ்குமார், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×