என் மலர்
நீங்கள் தேடியது "நகை கொள்ளை"
- யமுனாபாய் வீட்டுக்கு திரும்பி சென்றபோது வீட்டில் நகை கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வண்டலூர்:
சிங்கப்பெருமாள் கோவில், பாரதியார் தெருவை சேர்ந்தவர் யமுனாபாய். இவரது மகன் ரத்தீஸ். தி.மு.க.பிரமுகரான இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளராக உள்ளார். பஸ், லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். யமுனாபாய் தனியாகவும், ரத்தீஸ் குடும்பத்துடன் தனியாகவும் அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
நேற்று மாலை யமுனாபாய் வீட்டை பூட்டிவிட்டு மகன் வீட்டுக்கு வந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யமுனாபாயின் வீட்டுக்குகள் பூட்டை உடைத்து புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 140 பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அள்ளிசென்று விட்டனர்.
இன்று காலை யமுனாபாய் வீட்டுக்கு திரும்பி சென்றபோது வீட்டில் நகை கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மறைமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
யமுனாபாய் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும் நேரத்தை நோட்ட மிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
- வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
- கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வேலம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தெய்வானை. இவர் பாளேகுளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இருவரும் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இருவரும் காலை பள்ளிக்கு சென்று மாலையில் தான் வீட்டிற்கு வருவார்கள். இவரது வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் காலை பள்ளிக்கு சென்ற தெய்வானை மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த நாய் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 55 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருடுபோயி இருந்தது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கணவனுக்கு போன் செய்து தெய்வானை கத்தி கதறி உள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த ஆசிரியர் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் உதவியுடன் கொள்ளையர்களை தேடினர். ஆனால் நாய் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் கொள்ளையர்களின் கைரேகை எதுவும் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர்.
வீட்டில் பகல் நேரங்களில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் நேற்று வீட்டில் பின்புற கேட்டின் வழியாக புகுந்துள்ளனர். அங்கு கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்துள்ளனர். அதில் இருந்த நகை, பணம் ஆகியவையை கொள்ளை அடித்து சென்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வீடுகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள் வேண்டுமென போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் சிசிடிவி கேமரா பொருத்தவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் பகலில் ஆளில்லாதது நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பணம் நகை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
- சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும், செல்போன் டவர்களையும் ஆய்வு செய்து வந்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அருகே உள்ள புதுபிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் ராஜா (45). இவர் விழுப்புரத்தில் வாடகை வீட்டில் தங்கி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி இரவு புதுபிள்ளையார் குப்பத்தில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் 158 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் 2 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், பண்ருட்டி டி.எஸ்.பி. ராஜா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், பண்ருட்டி குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும், செல்போன் டவர்களையும் ஆய்வு செய்து வந்தனர்.
இந்த நிலையில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்தது வேலூரை சேர்ந்த சுரேஷ்குமார் (35) மற்றும் அவரது கூட்டாளிகளாக தர்மபுரியை சேர்ந்த முருகன், அசோக்குமார், தினேஷ்குமார், ஜெகதீசன் என 5 பேர் கும்பல் என தெரியவந்தது. இதில் சுரேஷ் இந்த கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இது குறித்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது.
- ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரது மனைவி ருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
பாலசுந்தர் காவல்கிணறு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அர்ஜூனன் கடந்த மாதம் இறந்து விட்டார். இதனால் ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு பால சுந்தர் தினமும் சாப்பாடு கொண்டு கொடுப்பது வழக்கம்.
அதன்படி இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது. உடனே பாலசுந்தர் பலமுறை தனது தாயை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் வீட்டின் பின்புறம் சென்றபோது அங்கு பின்கதவு திறந்து கிடந்தது.
பின்வாசல் அருகே ருக்மணி தலையில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் கழுத்தில் 7 பவுன் செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 7 பவுன் எடை கொண்ட வளையல்கள் என 14 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுந்தர் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ருக்மணி தனியாக இருப்பதை அறிந்து மர்மநபர்கள் அவரை அடித்துக்கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது. எனவே மர்மநபர்கள் கழுத்து, கையில் இருந்த நகைகளை பறித்தபோது ருக்மணி தடுத்திருக்கலாம் என்றும், அப்போது கொள்ளையர்கள் ருக்மணியை தள்ளி விட்டு நகையை பறித்துக் கொண்டு ஓடியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. ஆனால் அதில் லாக்கர் இருந்ததால் அதற்குள் வைக்கப்பட்டிருந்த நகை தப்பி உள்ளது.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துப்பாக்கியைக் காட்டி, நகை கடைக்காரரை கொள்ளைக்காரர்கள் மிரட்டியுள்ளனர்.
- ல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம், ஹரிசந்தன்பூர் பஜாரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த ஆயுத மேந்திய கொள்ளையர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
துப்பாக்கியைக் காட்டி, கடைக்காரர் மற்றும் வாடிக்கையாளர்களை கொள்ளைக்காரர்கள் மிரட்டும் சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைகளை கொள்ளையடித்து சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- வீட்டில் கேசரி வர்மன் வயதான தந்தை முனியன், தாய் பொன்னம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
- கொள்ளை குறித்து சங்கராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சங்கராபுரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலையில் கடுவனூர் கிராமம் உள்ளது.
இக்கிராமத்தில் வசித்து வருபவர் கேசரி வர்மன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2-வது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.
இதற்காக கேசரி வர்மன் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். அவர் தனது மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக வங்கி லாக்கரில் வைத்திருந்த சுமார் 200 பவுன் நகைகளை எடுத்து பீரோவில் வைத்திருந்தார்.
தனது மகள் மஞ்சள் நீராட்டு விழா பத்திரிகை வைப்பதற்காக கேசரி வர்மன் தனது மனைவியுடன் சென்னை சென்றார். வீட்டில் கேசரி வர்மன் வயதான தந்தை முனியன், தாய் பொன்னம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
நேற்று நள்ளிரவு அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் முனியன், பொன்னம்மாள் மற்றும் கேசரி வர்மன் உறவினர்களை ஒரு அறையில் கட்டிப் போட்டனர்.
பின்னர் அங்குள்ள அறையில் இருந்த பீரோ மற்றும் பெட்டியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 200 பவுன் நகைகைளை கொள்ளையடித்து சென்றனர்.
வீட்டில் கட்டி போடப்பட்டு இருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இன்று காலை மீட்டனர். இந்த கொள்ளை குறித்து சங்கராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மர்ம நபர்கள் பிடிபட்டால் மட்டுமே கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு குறித்த முழு விபரம் தெரியவரும்.
- போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலபட்டினத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர் அப்பகுதியில் நெல்லை- தென்காசி மெயின் ரோட்டில் தனியார் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். மேலும் பள்ளிக்கூட வளாகத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளி, பி.எட். கல்லூரி ஆகியவற்றையும் நடத்தி வருகிறார்.
ராஜசேகர், கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மனைவி மகேஸ்வரி, மகன் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் அங்கு புறப்பட்டு சென்றார்.
மீண்டும் நேற்று காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் இருந்த 1 கிலோ 150 கிராம் தங்க நகைகள், ரூ.50 லட்சம் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேரடி விசாரணையில் இறங்கி உள்ளார். அவரது உத்தரவின்பேரில் ஆலங்குளம் டி.எஸ்.பி. கிளாட்சன் ஜோஸ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பால முருகன், ஆடிவேல் உள்ளிட்டோர் தலைமையில் மொத்தம் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்வி நிறுவன வளாகத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் வீட்டில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. இதனால் போலீசார் வளாகத்தின் மெயின் கேட்டில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தபோது அதில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் எதுவும் இல்லை.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் காம்பவுண்டை ஒட்டி உள்ள பெரியமரத்தின் வழியாக ஏறி மாடி வழியாக வீட்டுக்குள் நுழைந்து நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்துள்ளது. அந்த வளாகத்தின் பின்பகுதி தோட்டங்கள், காடுகள் நிறைந்ததாகவே இருக்கிறது என்பதால் மர்ம நபர்கள் அந்த வழியாக தப்பிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். அதில் பதிவான ரேகைகளை பழைய குற்றவாளிகளிகளின் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் பணியிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
மேலும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் கல்வி நிறுவன வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள வணிக வளாகங்கள், வீடுகள், பெட்ரோல் பங்குகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கடந்த 2 நாட்களாக சந்தேகப்படும் படியான நபர்களின் நடமாட்டம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு மேலும் கூடுதலாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. பள்ளிக்கூடங்கள், கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால், அவரது வீட்டில் ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம் இருந்ததாகவும், நகையின் மதிப்பும் 1¼ கிலோவுக்கும் அதிகமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மர்ம நபர்கள் பிடிபட்டால் மட்டுமே கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு குறித்த முழு விபரம் தெரியவரும். இதனிடையே கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் நேற்று இரவு முழுவதும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆலங்குளம் போலீசார் அங்கு விடிய விடிய முகாமிட்டு தடயங்கள் ஏதும் சிக்குகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
- மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார்.
- மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் என கூறிக்கொண்டு மர்ம நபர் ஒருவர் நோயாளியிடம் இருந்து நகை, செல்போனை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே உடை அணிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் ஒவ்வொரு நோயாளியிடமும் கேஸ் ஷீட்டுகளை சரி பார்த்துள்ளார்.
கடந்த 6-ந்தேதி அந்த மர்ம நபர் தன்னை மருத்துவர் என கூறிக்கொண்டு நோயாளிகளை பரிசோதித்துள்ளார். காப்பீடு திட்டம் இருக்கிறதா என கேட்டுவிட்டு மின்னஞ்சலையும் அவர் கொடுத்துள்ளார்.
நோயாளி ஒருவரை ஸ்கேன் எடுக்க அழைத்து சென்ற அவர், ஸ்கேன் எடுக்கும்போது நகை போடக்கூடாது எனக்கூறி நகைகளை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து மருத்துவமனையில் விசாரித்தபோது சம்பந்தப்பட்ட நபர் போலி மருத்துவர் என்பது அம்பலமானது.
இதையடுத்து நகை திருட்டு தொடர்பாக நோயாளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில், 3 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை மருத்துவர் என கூறிக்கொண்டு வந்தவர் திருடி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
மர்மநபர் ஒருவர் மருத்துவரை போன்று அரசு மருத்துவமனையில் வலம் வந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நகை திருட்டு சம்பவம் தொடர்பாக மகேஷ்குமார் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
- நேபாள தம்பதியிடம் இருந்து 60 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.
சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வுபெற்ற ஐ.டி. ஊழியர் மகேஷ்குமார் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டில் வேலை பார்த்த நேபாள தம்பதி மாயமாகி இருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மகேஷ்குமார் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மகேஷ்குமார் அளித்த புகாரையடுத்து அவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்தில் கைவரிசை காட்டிய நேபாளத்தைச் சேர்ந்த தம்பதியை நீலாங்கரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நகைகளை கொள்ளையடித்துவிட்டு மாயமான நேபாளத்தை சேர்ந்த தம்பதி ரமேஷ், நிகிதாவை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 60 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
- கொள்ளையர்கள் 3 பேரும் 200 பவுனுக்கு மேல் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரிய வந்துள்ளது.
- நகைகளை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தது.
போலீசாரின் அதிரடி விசாரணையில், புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரகுராமன், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நட்சத்திரம் மற்றும் ஜெயசந்திரன் உள்ளிட்ட 3 பேர் இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதில் ரகுராமன் உள்ளிட்ட 2 பேர் நேரடியாக கொள்ளையில் ஈடுபடுவதும், நட்சத்திரம் நகைகளை விற்க உதவி செய்து வந்துள்ளார். மேலும் கொள்ளையடித்த நகைகளை புதுச்சேரியில் உள்ள ஒரு வட்டி கடையில் அடகு வைத்து பணம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.
தீவிர விசாரணைக்குப் பின் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ரகுராமன், ஜெயச்சந்திரன் ஆகிய 2 பேரையும் பெங்களூரு போலீசார் புதுச்சேரி அழைத்து வந்தனர்.
புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள அடகு கடையில் கர்நாடக போலீசார் சோதனை நடத்தி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கொள்ளையர்கள் 3 பேரும் 200 பவுனுக்கு மேல் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த நகைகளை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
கர்நாடக போலீசார் புதுச்சேரி அடகு கடையில் திடீர் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ராமச்சந்திரன் அங்கிருந்த கத்தியால் கொள்ளையன் ஒருவரை வெட்டினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 60). விவசாயி. இவரது மனைவி கோவிந்தம்மாள் (56). இவர்கள் உத்தனப்பள்ளி அருகே தொட்டமெட்டரையில் 11 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்கள்.
மேலும் அங்குள்ள தோட்டத்திலேயே அவர்கள் குடியிருந்து வந்தனர். அவர்களுடன் மருமகன் ராமச்சந்திரன் (40), பேத்தி வர்ஷினி (9) ஆகியோர் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டில் இருந்தனர்.
அந்த நேரம் காரில் 7 பேர் கொண்ட முகமூடி கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த ராஜா, கோவிந்தம்மாள் உள்ளிட்டோரை கத்தியை காட்டி மிரட்டினார்கள்.
மேலும் கோவிந்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 8½ பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து செல்ல முயன்றனர். அந்த நேரம் ராமச்சந்திரன் அங்கிருந்த கத்தியால் கொள்ளையன் ஒருவரை வெட்டினார். இதனால் அவனுடன் இருந்த மற்ற கொள்ளையர்கள் ராமச்சந்திரனை தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடினார்கள்.
இந்த கொள்ளை குறித்து தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கொள்ளை குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். விவசாயி ராஜா குடும்பத்துடன் தோட்டத்தில் வீட்டில் இருப்பதை முகமூடி கொள்ளையர்கள் நோட்டமிட்டு கொள்ளையை நடத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த முகமூடி கொள்ளை கும்பலை பிடிக்க தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. ஆனந்தராஜ் தலைமையில் 4 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
- கோவிந்தம்மாள் உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த தொட்டமெட்டரை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தவர் ராஜா (வயது60). இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மருமகன், பேத்தி ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்றிரவு ராஜா தனது குடும்பத்துடன் சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு திடீரென மர்ம நபர்கள் 7 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து இறங்கினர்.
அப்போது ராஜா வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றனர். அங்கு தூங்கி கொண்டிருந்த கோவிந்தம்மாளின் கழுத்தில் கத்தியை வைத்து அணிந்திருந்த தங்க நகைகளை கழட்டி கொடு இல்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர். அவர் உயிருக்கு பயந்து உடனே தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை கழட்டி கொடுத்தார். பின்னர் அங்கு பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். பின்னர் கோவிந்தம்மாள் உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அவர்கள் உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர்களை நோட்டமிட்டு திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சமீபத்தில் ஈரோட்டில் முதிய தம்பதியரை கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. பல்லடத்தில் ஒரே குடும்பத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் உத்தனப்பள்ளி அருகே நடந்த இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரே கும்பல் கைவரிசை காட்டியுள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






