search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மண வாழ்க்கையால் மன உளைச்சல்- மாயமான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
    X

    மண வாழ்க்கையால் மன உளைச்சல்- மாயமான வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே திருமண வாழ்க்கையில் மன உளைச்சல் அடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை பிள்ளை மகன் பழனிவேல் (வயது 27), விவசாயி.

    இவருக்கும் தேளூர் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரது மகள் மணிமாலாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஏற்கனவே மணிமாலாவுக்கு பலருடன் தொடர்பு இருந்துள்ளது.

    இதனால் திருமணம் நடந்த நாள் முதல் பழனிவேலுக்கும், மணிமாலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், அவ்வப்போது மணிமாலா மாயமாவதும் தொடர் கதையாக இருந்தது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

    இந்தநிலையில் மணி மாலா கடந்த மாதம் விக்கிரமங்கலம் அருகே உள்ள நாயக்கன்காடு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். முதல் கணவரிடம் இருந்து முறைப்படி விவாகரத்து எதுவும் பெறாமல் அவர் திருமணம் செய்து கொண்டதால் பழனிவேல் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

    இதற்கிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரண்டாவது கணவர் மணிகண்டனை பிரிந்த மணிமாலா மீண்டும் முதல் கணவரான பழனிவேலிடம் குடும்பம் நடத்த ரெட்டி பாளையம் கிராமத்திற்கு வந்தார்.

    ஆனால் அவரை பழனிவேலின் தந்தை பிச்சை பிள்ளை துரத்தினார். என் மகனுடன் குடும்பம் நடத்த நீ தகுதியானவர் இல்லை, இனிமேல் இங்கு வராதே என்று கூறி திருப்பி அனுப்பினார். தனது மண வாழ்க்கை பாழாய்போய் விட்டதே என்று பழனிவேல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

    இந்தநிலையில் தன்னை ஏமாற்றி திருமணம் செய்தததால் கடனாளி ஆகிவிட்டதாகவும், மணிமாலாவிடம் இருந்து திருமண செலவு ரூ.2 லட்சத்தை திரும்ப பெற்றுத் தருமாறும் மணிகண்டன் விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் முதல் கணவரான பழனிவேலை அழைத்து விசாரித்தனர். மேலும் ரூ.2 லட்சம் பணத்தையும் நீயே தர வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான பழனிவேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானார். அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் பழனிவேல் குறித்து எந்த தகவலும் இல்லை.

    இந்த நிலையில் இன்று காலை ரெட்டிபாளையம் பகுதியில் தனியார் சிமெண்டு ஆலை அருகே உள்ள ஒரு புளியமரத்தில் பழனிவேல் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் ரெட்டிபாளையம் பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த கயர்லாபாத் போலீசார் பழனிவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பழனிவேல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனையில் யாராவது அவரை அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டார்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×