search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police investigation"

    • உயர் அதிகாரிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் மத்திய தொழல் பாதுகாப்பு படையினர் ஷிப்டு முறையில் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இங்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாதுகாப்பு படைவீரர் ரவி கிரண் (வயது37) பணியாற்றி வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் ரவிகிரண் அணுமின்நிலையத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை பணி முடிந்து அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் நகரியத்திற்கு செல்ல உடன் பணியாற்றும் மற்ற வீரர்களுடன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அனைவரும் தங்களது துப்பாக்கியை வைத்து இருந்தனர்.

    சதுரங்கபட்டினம் "டச்சு கோட்டை" அருகில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பஸ் குலுங்கியது.

    அந்த நேரத்தில் ரவிகிரண் கையில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கி திடீரென வெடித்தது. இதில் துப்பாக்கி குண்டுகள் ரவிகிரணின் கழுத்தில் பாய்ந்து தலைவழியாக வெளியே வந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ரவி கிரண் உயிரிழந்தார். இதனை கண்டு உடன் பயணம் செய்த மற்ற பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கல்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ரவிகிரணின் உடலை கைப்பற்றி கல்பாக்கம் அணுசக்தி துறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் அணுமின் நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ரவிகிரண் வைத்து இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கியை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த குண்டுகள் அகற்றப்படாமல் இருந்தது தெரிந்தது.

    வழக்கமாக பாதுகாப்பு பணியின் போது மட்டுமே துப்பாக்கியில் குண்டுகள் லோடு செய்து தயார் நிலையில் வைக்கப்படும். பணி முடிந்ததும் பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை அகற்றி அதனை தங்களது பாதுகாப்பு இடுப்பு பெல்ட்டில் உள்ள சிறிய பையில் வைத்து விடுவார்கள்.

    ஆனால் ரவி கிரணிடம் இருந்த துப்பாக்கியில் குண்டுகள் அகற்றப்படாமல் அப்படியே இருந்து உள்ளது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் துப்பாக்கியில் இருந்த குண்டுகளை எதற்காக எடுக்காமல் இருந்தார்? மறந்து விட்டாரா? என்று தெரியவில்லை.

    எனவே வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கிய போது ரவிகிரணிடம் இருந்து துப்பாக்கி தவறுதலாக வெடித்து குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்வதற்கு திட்டமிட்டு துப்பாக்கியில் இருந்த குண்டை அகற்றாமல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் மற்றும் சதுரங்கபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     இது தொடர்பாக அவருடன் பணியில் இருந்த மற்றும் பஸ்சில் பயணம் செய்த வீரர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரவிகிரணின் நடவடிக்கைகள் எப்படி இருந்தது என்பது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இறந்து போன ரவிகிரண் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புதான் கர்நாடகாவில் இருந்து கல்பாக்கத்திற்கு பணிமாறுதல் ஆகி வந்து உள்ளார். அவருக்கு அனுசா என்ற மனைவியும், ஷாஸ்வினி, ரித்திகா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

    அணுமின் நிலைய மத்திய பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மனைவி உடலை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்து அதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.
    • கதவை உடைத்து உள்ளே சென்றபோது பெண் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.

    காசியாபாத்:

    உத்தரபிரதேச மாநிலம் இடாக் பகுதியைச் சேர்ந்த தம்பதி காசியாபாத் பகுதியில் வசித்து வந்தனர். அங்குள்ள லோனி என்ற இடத்தில் கணவர் பணிபுரிந்து வந்தார்.

    அவரது மனைவி டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவி வேலைக்கு செல்வது கணவருக்கு பிடிக்கவில்லை. இது தொடர்பாக இருவரும் கடும் வாக்குவாதத்தில் அடிக்கடி ஈடுபடுவது உண்டு.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கணவர் தாவணியால் மனைவியின் கழுத்தை சுற்றி சுருக்கு போட்டு இழுத்தார். இதில் அந்த பெண்ணின் கழுத்து எலும்புகள் நொறுங்கி அங்கேயே பிணமானார்.

    மனைவி உயிரிழந்ததை உறுதி செய்த கணவர் பிணத்துடன் செல்பி எடுத்தார். மனைவி உடலை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு பல்வேறு கோணங்களில் செல்பி எடுத்து அதை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார்.

    பிறகு செல்பி காட்சிகளை அவர் தனது தம்பி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார். அதை கண்டதும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபரை தொடர்பு கொள்ள செல்போனில் முயற்சிகள் மேற்கொண்டனர். அதற்கு பதில் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அந்த நபரின் தம்பி காசியாபாத்தில் உள்ள வீட்டுக்கு வந்து பார்த்தார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது அந்த பெண் படுக்கை அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.

    அதே அறையில் கணவர் கொலை செய்ய பயன்படுத்திய அதே தாவணியை பயன்படுத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
    • கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சின்னமணி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுகுமார்(வயது 70). இவர் நாகை ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவரது மனைவி புனிதா சென்னையில் ஆடிட்டராக உள்ளார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சுகுமார் கடந்த 10-ந்தேதி சென்னையில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க சென்று உள்ளார். சமீபத்தில் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இவரது வீட்டில் தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த அமுதா என்பவர் வீட்டு வேலைகளை பார்த்து வருகிறார். நேற்று மாலை வழக்கம் போல அவர் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று அதிகாலை கதவை திறக்க அமுதா வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் சுகுமாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுகுமார் தூத்துக்குடி தென்பாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறிக்கிடந்தன.

    வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பதை அறிந்த போலீசார், சென்னையில் உள்ள சுகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகை, பணம் குறித்து கேட்டறிந்தனர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் சீனோ வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த நாய் சுகுமாரின் வீடு அமைந்துள்ள தெருவின் முனை பகுதி வரை ஓடிச்சென்று திரும்பிவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இவரது வீட்டின் முன்பக்க சுவர் ஏறி குதித்து உள்ள சென்ற மர்மநபர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து லாக்கரில் வைத்திருந்த சுமார் 100 பவுனுக்கும் மேற்பட்ட தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.

    சுகுமார் வந்த பின்பு தான் வீட்டில் எவ்வளவு தங்க நகைகள் மற்றும் பணம் எவ்வளவு இருந்தது என்பது முழுமையாக தெரியவரும்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி போலீசார் திருட்டு போன வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • போலீசை பார்த்ததும் கஞ்சா பையை போட்டு விட்டு தப்பி ஓட்டம்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. கடந்த சில நாட்களாக ஈரோடு வழியாக செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டு ரெயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரெயில் களையும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோத னை செய்து வருகின்றனர்.

    அதன்படி ஜார்க்கென்ட் மாநிலம் டாட்டா நகர் பகுதியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தது.

    நேற்று இரவு ஈரோடு ரெயில் நிலையம் அருகே வந்த போது ரெயில்வே போலீசார் ரெயிலில் சோதனை நடத்தினர்.

    அப்போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.1 பெட்டியின் கழிப்பறை அருகே சோதனை செய்த போது பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. போலீசார் அதனை பிரித்து பார்த்த பொழுது அதில் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    ரெயிலில் கஞ்சா கடத்திய கும்பல் போலீஸ் வருவதை பார்த்ததும் கஞ்சா பையை போட்டு விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    கஞ்சாவை கைப்பற்றிய ஈரோடு ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை ஈரோடு மது விலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    • 8 பேர் மேல் சிகிச்சைக்காக பரத்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் அலிகாரில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்து ஒன்று புறப்பட்டது. இப்பேருந்தானது உத்தரபிரதேச மாநில அரசு பேருந்தாகும். ஹலைனா மஹுவா நெடுஞ்சாலையில் பேருந்து சென்ற போது முன்னால் சென்ற டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக பரத்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் கூறுகையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது குடும்பத்தினர் வந்தவுடன் பிரேதப் பரிசோதனை நடைபெறும் என்றும் கூறினர்.

    • 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக படகு அலங்கார போட்டி, சைக்கிள் போட்டி, குதிரை சவாரி, வாத்து பிடிக்கும் போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. இதனால் கோடை விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில், இன்று மதியம் கொடைக்கானல் வத்தலகுண்டு மலை சாலையில் மூளையார் என்ற இடத்தில் கர்நாடகா மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த கார் மீது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

    இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவியை அபகரித்துக் கொண்டு கவுதம் குடும்பம் நடத்தி வருவதை ஜீரணிக்க முடியாமல் இருந்த அவர் இதுபற்றி தனது நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.
    • வழக்கில் 3 பேர் சரண் அடைந்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான பிரியாவின் கணவர் ராஜ்கிரண் அவரது நண்பர்கள் சுகுமார், மணி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவை சேர்ந்தவர் கவுதம். 27 வயதான இவர் மீது தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் அடிதடி மற்றும் குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் காவல் நிலைய சரித்திர பதிவேட்டிலும் கவுதமின் பெயர் இடம்பெற்று உள்ளது. கொலை முயற்சி வழக்கு ஒன்றும் இவர் மீது உள்ளது. இதனால் போலீசார் கவுதமை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் மனைவி பிரியா மற்றும் 2 குழந்தைகளோடு கவுதம் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 11 மணியளவில் வீட்டின் கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டது. இதனால் கவுதமும், பிரியாவும் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே கும்பலாக ஆட்கள் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தனர். இதனால் பயந்து போன கவுதம் கதவை திறக்காமல் வீட்டுக்குள்ளேயே இருந்தார். நீண்ட நேரமாகவே தட்டியும் திறக்காததால் வெளியில் நின்றிருந்த 6 பேரும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர்.

    அவர்களது கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. இதைப்பார்த்ததும் கவுதமும் பிரியாவும் கலங்கிப் போனார்கள். குழந்தைகளும் கதறி துடித்தன. உயிர் பிழைக்க வழி தெரியாமல் கவுதம் வீட்டுக்குள்ளேயே தவித்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் கவுதமை சரமாரியாக வெட்டியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் மனைவி, குழந்தைகள் கண் எதிரே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து துடிதுடித்து பலியானார்.

    பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தனது கண் எதிரே கவுதம் கொலை செய்யப்பட்டதை பார்த்து பிரியா கதறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். இதனால் சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரவுடி கவுதமின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவுதமை வெட்டிக்கொன்ற 6 பேரில் பிரதீப், சுரேஷ், ராஜா பாய் ஆகிய 3 பேர் தேனாம்பேட்டை போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை தேனாம்பேட்டை போலீசார் சைதாப்பேட்டை போலீசாரிடமும் ஒப்படைத்தனர். 3 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.

    சைதாப்பேட்டை வீட்டில் கவுதமின் மனைவியாக வாழ்ந்து வந்த பிரியா அவரது முன்னாள் காதலி என்பதும் திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பிறகும் பிரியாவை மறக்க முடியாமல் முதல் கணவரிடம் இருந்து கவுதம் அபகரித்துக் கொண்டு குடும்பம் நடத்தியதும் அம்பலமானது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதல் காரணமாகவே பிரியாவின் முதல் கணவரான ராஜ்கிரண், தனது நண்பர்களோடு சேர்ந்து கவுதமை வீடு புகுந்து வெட்டிக் கொன்றதும் தெரிய வந்துள்ளது.

    ரவுடி கவுதமும், பிரியாவும் ஒருவரையொருவர் விரும்பி காதலித்து வந்துள்ளனர். ஆனால் பிரியாவின் வீட்டில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்கிரணை திருமணம் செய்து வைத்துள்ளனர். ராஜ்கிரண்- பிரியா தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்தனர். இருப்பினும் கவுதமால் பிரியாவை மறக்க முடியவில்லை. அவரோடு சேர்ந்து வாழ விரும்பினார். இதற்கு தடையாக இருந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் கவுதம், பிரியா இருவரும் சேர்ந்து ராஜ்கிரணை கொலை செய்ய முயன்றுள்ளனர். இது தொடர்பாக கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் வெளியில் வந்து கவுதம் மற்றும் பிரியா இருவரும் சைதாப்பேட்டையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

    இதை தொடர்ந்து ராஜ்கிரண் கவுதமை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். மனைவியை அபகரித்துக் கொண்டு கவுதம் குடும்பம் நடத்தி வருவதை ஜீரணிக்க முடியாமல் இருந்த அவர் இதுபற்றி தனது நண்பர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். அப்போதுதான் வீட்டில் தூங்கும் போது கவுதமை கொலை செய்வது என அவர்கள் முடிவு செய்தனர்.

    இதன்படி நேற்று இரவு வீட்டுக்கு சென்று சரமாரியாக வெட்டிக் கொன்று உள்ளனர். இந்த வழக்கில் 3 பேர் சரண் அடைந்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான பிரியாவின் கணவர் ராஜ்கிரண் அவரது நண்பர்கள் சுகுமார், மணி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • சி.சிடி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்.
    • ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தினந்தோறும் நெல்லைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி படுக்கை வசதி கொண்ட அரசு விரைவு சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று மதியம் நெல்லைக்கு வந்தது.

    நெல்லை புதிய பஸ்நிலை யத்தில் பயணிகளை இறக்கிவிட்டு வண்ணார்பேட்டையில் உள்ள பணிமனைக்கு பஸ் வந்தது. அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து வழக்கம் போல் பஸ்சை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அந்த பஸ்சில் 9-வது எண் படுக்கைக்கு கீழ் ஒரு துப்பாக்கியும், சுமார் 2½ அடி நீளம் கொண்ட ஒரு அரிவாளும் கிடந்தது.

    இதுகுறித்து பணிமனை மேலாளர் கண்ணன் பாளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜூலியட், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பணிமனைக்கு விரைந்து வந்து அரிவாள் மற்றும் துப்பாக்கியை கைப்பற்றினர்.

    மேலும் அந்த பஸ்சில் வேறு ஏதும் ஆயுதங்கள் இருக்கிறதா? என்று பஸ் முழுவதையும் சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் அரிவாள், துப்பாக்கியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பணிமனை மேலாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 102 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பஸ்சில் வந்தவர்கள், அந்த இருக்கையில் பயணித்த நபர் யார் என்பது குறித்த விபரங்களை போலீசார் சேகரித்தனர்.

    அப்போது அந்த இருக்கையில் பயணித்தவர் கோவில்பட்டியில் இறங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் பெயர் மட்டுமே இருந்தது. அவரது முகவரி இல்லை.

    இதையடுத்து தனிப்படை போலீசார் கோவில்பட்டிக்கு விரைந்தனர். அங்கு வழக்கமாக அரசு விரைவு பஸ்கள் நின்று செல்லும் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள சி.சிடி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் அந்த நபர் கோவில்பட்டியை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் சென்னையில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, தனது பாட்டியின் இறப்பு நிகழ்விற்கு சென்னையில் இருந்து விடுப்பு எடுத்து வந்ததாகவும், படுக்கைக்கு கீழ் ஆயுதங்கள் இருந்த விஷயமே போலீசார் தன்னை விசாரிக்கும்போது தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து அவரை இன்று பாளை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க போலீசார் உத்தர விட்டுள்ளனர். அங்கு வைத்து துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    அந்த வாலிபர் கூறுவது உண்மையெனில், இந்த ஆயுதங்களை வேறு யார் பதுக்கி வைத்திருந்தார்கள்? என்பதை அறியும் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வெங்கடேசலு வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தனது தாயாரை தாக்கினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் வைசிபள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுங்கம்மா (வயது 52). இவருடைய மகன் வெங்கடேசலு.

    நேற்று முன்தினம் ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் எந்த காரணத்தைக் கொண்டும் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது என வெங்கடேசலு அவரது தாயாரிடம் கூறினார்.

    ஆனால் சுங்கம்மா இதனை கண்டு கொள்ளவில்லை. தேர்தல் அன்று சுங்கம்மா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்த வாகனத்தில் ஏறி வாக்களிக்க சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்பினார். இதனால் தாயின் மீது வெங்கடேசலு கடும் கோபத்தில் இருந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த வெங்கடேசலு அவரது தாயிடம் எந்த கட்சிக்கு வாக்களித்தீர்கள் என கேட்டார்.

    அப்போது அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு மக்கள் நலத் திட்டங்களை நன்றாக செய்துள்ளது. இதனால் அந்த கட்சிக்கு ஓட்டு போட்டேன் என்றார்.

    இதனால் ஆத்திரம் உச்சத்திற்கு ஏறிய வெங்கடேசலு வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தனது தாயாரை தாக்கினார்.

    இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சுங்கம்மா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை கண்டதும் வெங்கடேசலு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார் .

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் தூண்டுதலின் பேரில் வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக அங்குள்ள கிராம மக்கள் தெரிவித்தனர்.

    கம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

    இதேபோல ஏலூர் மாவட்டம் விஜயாரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வம்சி. தெலுங்கு தேசம் கட்சி தொண்டரான இவர் தேர்தலில் அந்தக் கட்சிக்காக கடுமையாக வேலை பார்த்தார். தேர்தல் முடிந்த நிலையில் நேற்று அவருடைய குடும்பத்தினரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டார்.

    அப்போது அவருடைய தந்தை பென்டையா மற்றும் தாய், சகோதரி ஆகியோர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு வாக்களித்தோம் என பதில் அளித்தனர். இதனால் வெறிபிடித்த வம்சி இரும்பு கம்பியால் தந்தை தாய் மற்றும் தங்கையை தாக்கினார்.

    அப்போது அவருடைய தந்தை நான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர். அதனால் அந்த கட்சிக்கு வாக்களித்தேன் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    ஆனாலும் தந்தை என்று கூட பார்க்காமல் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கினார். அக்கம் பக்கத்தினர் சென்று இதனை தடுத்து நிறுத்தினர். காயம் அடைந்த பென்டையா மற்றும் அவருடைய மனைவி மகள் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.
    • வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள பல பள்ளிகள் வெடிகுண்டு மிரட்டல் குறித்து புகாரளித்த சில வாரங்களுக்குப் பிறகு, டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் வந்தன. டெல்லியில் உள்ள சில மருத்துவமனைகளுக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

    இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட ஜி.டி.பி. மருத்துவமனை, தாதா தேவ் மருத்துவமனை, ஹெட்தேவார் மருத்துவமனை, தீப்சந்தூர் மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவத்தால் டெல்லி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைகள், விமான நிலையம், டெல்லி வடக்கு ரெயில்வேயின் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அலுவலகம் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

    • 8 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஐதராபாத்:

    ஐதராபாத் மாநிலத்தில் சாலையோரத்தில் பைக் ஒன்று தீபற்றி எரிந்தது. தீப்பற்றி எரிந்த பைக்கை தண்ணீர் ஊற்றி அணைக்க அருகில் இருந்தவர்கள் போராடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பெட்ரோல் டேங்க் வெடித்ததால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர். இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த 8 பேரை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெட்ரோல் டேங்க் வெடித்து 8 பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



    • தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோன் மற்றும் மர பர்னிச்சர் தயாரிக்கு கிடங்கில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    தீ விபத்தில் யாருக்கும் காயமோ, உயிரிழப்பும் ஏற்படவில்லை. அப்பகுதி முழுவதும் கரும்புகையாக சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    ×