என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cannabis seized"

    • போலீசார் சுற்றி வளைத்து 7 பேர் கும்பலையும் பிடித்தனர்.
    • சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை அமைக்கப்பட்டு, அவர்கள் கஞ்சா, போதைப்பொருள் விற்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை மாநகர போலீசாருக்கு கோவை மாநகர பகுதிகளில் உயர் ரக போதைப்பொருட்கள் விற்க கும்பல் ஒன்று இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் விவேக் மற்றும் தனபால் தலைமையிலான போலீசார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, மேட்டுப்பாளையம் ரோடு பூமார்க்கெட், அம்மா உணவகம் கேட் அருகே சந்தேகத்திற்கிடமாக 7 பேர் நின்றிருந்தனர்.

    இதை பார்த்த போலீசார் அவர்களின் அருகில் சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.


    உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து 7 பேர் கும்பலையும் பிடித்தனர். பின்னர் அவர்களை பிடித்து சோதனை செய்தனர்.

    அவர்களிடம் எம்.டி.எம்.ஏ. பவுடர், கொகைன், கிரீன் கஞ்சா, உலர்ந்த கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதைப் பொருள் இருந்தது. இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில், இவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டி இத்தலார் போத்தியாடா பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது39), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஆனந்தூரை சேர்ந்த விநாயகம் (34), கோவை பி.என்.பாளையம் கிருஷ்ணகாந்த் (35), வடவள்ளி மகாவிஷ்ணு (28), சுங்கம் பைபாஸ் ஆதர்ஷ் (24), நஞ்சுண்டாபுரம் ரித்தேஷ் லம்பா (41), ரோகன் செட்டி (30) என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

    கைதான மணி கண்டன் என்பவர், நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த ரிதேஷ் லம்பா மூலமாக மகராஷ்டிராவை சேர்ந்த ஜேக்கப் பிராங்களின் என்பவரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள் மற்றும் கொகைன் வாங்கி, இவர்களுடன் சேர்ந்து இங்கு விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதேபோல் கிரிஷ் ரோகன் செட்டி என்பவர் இமாச்சல பிரதேசத்தில் இருந்து கஞ்சா மற்றும் கிரீன் கஞ்சா, உயர் ரக போதைப்பொருட்களை கோவைக்கு வாங்கி வந்து, அதனை இங்கு பதுக்கி வைத்ததும், அதனை கோவையில் உள்ள தனது நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    போதைப்பொருள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அவர்கள் அதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்று சம்பாதித்த பணத்தில் கோவைப்புதூரில் புதிதாக ஒரு வீடு கட்டி வருகின்றனர். அத்துடன் காரமடை டீச்சர்ஸ் காலனி பகுதியில் புதிதாக வீடும், ஒரு வீட்டு மனை வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

    மேலும் போதைப்பொருள் விற்று அதில் சம்பாதித்த அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு 12 வங்கி கணக்குகள் இருப்பதை கண்டுபிடித்துள்ள போலீசார், அதனை முடக்குவதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

    கைதானவர்களில் மகாவிஷ்ணு என்பவர் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் விஜயலட்சுமியின் மகன் ஆவார்.

    கைதானவர்களிடம் இருந்து போலீசார் 24.40 கிராம் எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள், 12.47 கிராம் எம்.டி.எம்.ஏ. பவுடர், 92.43 கிராம் கொகைன், 1.620 கிலோ கிரீன் கஞ்சா, 1 கிலோ 16 கிராம் உலர்ந்த கஞ்சா மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கப்பணம், பணம் எண்ணும் எந்திரம், போதை பொருள் எடை பார்க்கும் எந்திரம், பீர் பாட்டில்கள், 3 கார்கள், 12 செல்போன்கள் என ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர். 

    • அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன்,மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சந்திரன், மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு லோடு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் மானுரை சேர்ந்த இசக்கிமுத்து (39), சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி பாண்டி, நெல்லை டவுனை சேர்ந்த மடத்தான், சிவா ஆகியேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    • போலீசை பார்த்ததும் கஞ்சா பையை போட்டு விட்டு தப்பி ஓட்டம்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. கடந்த சில நாட்களாக ஈரோடு வழியாக செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டு ரெயில் நிலையத்துக்கு வரும் அனைத்து ரெயில் களையும் ஒவ்வொரு பெட்டியாக சென்று சோத னை செய்து வருகின்றனர்.

    அதன்படி ஜார்க்கென்ட் மாநிலம் டாட்டா நகர் பகுதியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தது.

    நேற்று இரவு ஈரோடு ரெயில் நிலையம் அருகே வந்த போது ரெயில்வே போலீசார் ரெயிலில் சோதனை நடத்தினர்.

    அப்போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.1 பெட்டியின் கழிப்பறை அருகே சோதனை செய்த போது பை ஒன்று கேட்பாரற்று கிடந்தது. போலீசார் அதனை பிரித்து பார்த்த பொழுது அதில் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    ரெயிலில் கஞ்சா கடத்திய கும்பல் போலீஸ் வருவதை பார்த்ததும் கஞ்சா பையை போட்டு விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

    கஞ்சாவை கைப்பற்றிய ஈரோடு ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை ஈரோடு மது விலக்கு அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    சேலம் ரெயிலில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை கேரள மாநிலம் நோக்கி சென்ற தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. 

    அந்த ரெயிலில் சேலம் ெரயில்வே பாதுகாப்பு படையினர் கஞ்சா கடத்தலை தடுக்க சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் பெரிய 
    பை ஒன்று சந்தேகத்திற்கிடமாக இருந்தது. 

    அந்த பையை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இதைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அந்த பையை சோதனை செய்த போது, அதில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

    அதனை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்ற விவரம் தெரியவில்லை.  சேலம் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ெரயிலில் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை அருகே போதை பொருள் விற்றதாக 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    மதுரை:

    தமிழகத்தில் போதை பொருட்களான கஞ்சா, புகையிலை பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனை திருட்டுத்தனமாக விற்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை வைகை தென்கரை சர்வீஸ் ரோட்டில் சிலர் கஞ்சா விற்பதாக கரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையாவுக்கு தகவல் கிடைத்தது. அவர் போலீசாருடன் சென்று சோதனை நடத்தியபோது கஞ்சா விற்றதாக 2 பேரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் கைதானவர்கள் சின்னராஜ் (வயது 30) அய்யனார்குளம், உசிலம்பட்டி, காவேரி (35) என தெரிய வந்தது.

    இதேபோல் தல்லாகுளம் போலீசார் அதிரடி சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக திருப்பதி, பாலா, மாணிக்கம், பெரியவீரன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 583 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. #tamilnews
    திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 2 சிம்கார்டுகள் ஆகியவற்றை சிறை வார்டன்கள் பறிமுதல் செய்தனர்.
    திருச்சி:

    சென்னை சிந்தாமணி அண்ணாநகரை சேர்ந்தவர் சங்கர்(வயது 32). ஆயுள்தண்டனை கைதியான இவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சங்கரை புழல் சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றினார்கள். சென்னை ஆயுதப்படை போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வந்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, சிறையின் நுழைவு வாயிலில் சங்கரிடம் சிறை வார்டன்கள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அவர் தனது உடைக்குள் 200 கிராம் கஞ்சா, 2 சிம்கார்டுகள் ஆகியவற்றை மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. உடனே அவற்றை சிறை வார்டன்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் சிறை வார்டன் ரமேஷ் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கைதியிடம் கஞ்சா மற்றும் சிம்கார்டுகள் பறிமுதல் செய்தது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ×