search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு ரெயில் நிலையம்"

    • ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையாக சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

    ஈரோடு:

    குடியரசு தின விழா நாளை இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் குடியரசு தின விழாவை முன்னிட்டு 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிக்கும் சம்பவத்தை தடுக்கும் வகையில் ஈரோடு டவுன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு ரெயில் நிலையம் நுழைவு வாயில் ஈரோடு ரெயில்வே போலீசார் பயணிகள் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பிறகே அவர்களை உள்ளே அனுமதித்தனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையாக சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த ஒவ்வொரு ரெயில்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். இதுபோல் ஈரோடு காவிரி ரெயில் இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று முதல் நாளை வரை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    • வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.
    • கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரெயில் டிரைவர்கள் அலுவலகம் உள்ளது. இதன் அருகே 80 அடி உயரத்தில் மின்விளக்கு டவர் உள்ளது. நேற்று மதியம் 2 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென அந்த 80 அடி உயர மின்விளக்கு டவரில் வேகமாக ஏறினார்.

    முதலில் இதைப்பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த நபர் டவரில் வேலை செய்கிறார் என்று நினைத்து கொண்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல அந்த வாலிபர் 80 அடி உயரத்திற்கு மேலே உட்கார்ந்து இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சூரம்பட்டி போலீசார் மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு போலீசார் வரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் இடம் பேச்சுவார்த்தை கொடுத்தனர்.

    அப்போது அந்த வாலிபர் ஹிந்தியில் பேசியதால் ஹிந்தி பேசத் தெரிந்த மற்றொரு வாலிபரை அழைத்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தனக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகவும், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் எனவும் மிரட்டல் விடுத்தார். சர்ச் பாதிரியாரை வரச்சொல்லுங்கள் அப்போதுதான் கீழே இறங்குவேன் என்றும் கூறினார்.

    பின்னர் அந்த வாலிபர் மேலே ஏறுவதும் பாதி தூரம் வரை கீழே வந்து திருப்பி மீண்டும் மேலே ஏறுவதும் என போக்கு காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் செல்போன் கேட்கவே போலீசார் ஒரு செல்போனை டவர் தகட்டில் வைத்தனர். அதை எடுக்க இறங்கியபோது போலீசார் பிடிக்க முயன்றதால் போனை எடுக்காமல் மீண்டும் டவர் மீது ஏறிக்கொண்டார். பின்னர் போலீசார் ஒருவர் பாதிரியார் போன்று வேஷம் போட்டு மேலே செல்ல முயன்றார். ஆனால் அவர் உண்மையான பாதிரியார் இல்லை என தெரிந்து கொண்ட அந்த வாலிபர் மீண்டும் மேலே ஏறி சென்று விட்டார்.

    இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போது அந்த வாலிபர் இறங்கி விடுவார் என்று எதிர்பார்த்த போலீசாருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. அந்த நபர் மழையில் நடந்தபடி மேலே டவரில் தொடர்ந்து அமர்ந்து இருந்தார். இரவு வரை தொடர்ந்த அந்த வாலிபர் டவரில் அமர்ந்து இருந்தார். பின்னர் இரவு 12 மணி ஆனது. ஆனாலும் அந்த வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.

    பின்னர் போலீசார் அங்கிருந்து கிளம்பி செல்வது போன்று அங்கிருந்து சிறிது தூரம் கிளம்பி சென்றனர். பின்னர் நள்ளிரவு 2.45 மணியளவில் அந்த வாலிபர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது டவரில் நன்கு ஏறும் வாலிபர் ஒருவரை போலீசார் அழைத்து வந்து அந்த 80 அடி மின் டவரில் ஏற செய்தனர். வாலிபர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் டக்கென்று இந்த வாலிபர் மேலே இருந்த வாலிபரை பிடித்துக் கொண்டார்.

    உடனடியாக தீயணைப்பு துறையினர் வேகமாக சென்று அந்த வாலிபரை மீட்டனர். பின்னர் அந்த நபர் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மத்திய பிரதேசம் மாநிலம் மண்டேல் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் மார்க்கம் (26) என்பதும், கேரளாவில் அவரது நண்பரை பார்க்க ரெயிலில் ஏறி வந்தவர் வழி தவறி ஈரோட்டில் இறங்கி விட்டதும் தெரிய வந்தது. அவருக்கு தமிழ் புரியாததால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் சுற்றி வந்துள்ளார்.

    பின்னர் திடீரென 80 அடி மின் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்று அந்த நபரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.

    இதனையேற்று அவரது நண்பர் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பிறகு தான் ராகுல் மார்க்கமுக்கு என்ன பிரச்சனை உள்ளது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என முழு விவரம் தெரிய வரும். கிட்டத்தட்ட 13 மணி நேரம் போலீசாரை அலறவிட்ட வடமாநில வாலிபர் செயலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • ஈரோடு மார்க்கமாக அதிகமான ரெயில்கள் வந்து செல்வதால் பயணிகள் கூட்டம் நேற்று அதிகளவில் இருந்தது
    • ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரெயில்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்து விட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார். இதைத்தொடர்ந்து ஈரோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஈரோடு போலீசார் உஷார்படுத்தப்பட்டு சூரம்பட்டி போலீசார் ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். இதேபோல் வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். இவர்களுடன் ஈரோடு ரெயில்வே போலீசாரும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் ரெயில் நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு ரெயில்வே நுழைவு பகுதி, டிக்கெட் கொடுக்கும் இடம், அனைத்து நடைமேடைகள், பார்சல் வழங்கும் இடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிப்பறைகள் என அனைத்து இடங்களிலும் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை ஈடுபட்டனர்.

    இரவு நேரத்தில் ஈரோடு மார்க்கமாக அதிகமான ரெயில்கள் வந்து செல்வதால் பயணிகள் கூட்டம் நேற்று அதிகளவில் இருந்தது. திடீரென போலீசார் சோதனை செய்வதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பயணிகள் உடமை கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    அந்த சமயம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரெயில்களையும் போலீசார் சோதனை செய்தனர். ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகள் உடமைகளையும் சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் சோதனையில் ஈடுபட்ட பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தது யார்? என்று போலீசார் விசாரணை தொடங்கினர். அப்போது ஆந்திராவில் இருந்து வெடிகுண்டு புரளி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போனில் பேசி நபரின் டவர் ஆந்திராவை காட்டியது. இதையடுத்து இன்று காலை ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படையினர் ஆந்திரா விரைந்துள்ளனர்.

    • பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.
    • இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி இன்று போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து நாளை, பொங்கல், மறுநாள் மாட்டுப்பொங்கல், அதன் மறுநாள் காணும் பொங்கல் எனத் தொடர்ந்து இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

    இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் கொண்டாடும் வகையில் ரெயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    பொங்கல் பண்டிகைக்காக ஏற்கனவே ரெயில்களில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. இதேபோல் பஸ்களிலும் முன்பதிவு இருக்கை நிரம்பி விட்டன.

    இந்நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று அதிகாலை முதலே ஈரோடு ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டனர். ஏராளமான பேர் குடும்பத்துடன் நேற்று இரவு முதல் ரெயில் நிலையங்களில் குவிய தொடங்கினர்.

    இதனால் ஈரோடு வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன.

    இதேபோல் ஈரோடு பஸ் நிலையங்களிலும் நேற்று இரவு முதல் கூட்டம் அதிகமாக இருந்தது. பொங்கல் பண்டிகையை மக்கள் சிரமம் இன்றி கொண்டாடும் வகையில் ஏற்கனவே இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் நேற்று இரவு முதல் இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் அந்த பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் போட்டா போட்டி போட்டனர். இதனால் பஸ் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    இதேபோல் இன்று இரவும் ஈரோடு ரெயில் நிலையம், பஸ் நிலையங் களில் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டி விடக்கூடாது என்பதற்காக ஈரோடு பஸ் நிலையத்தில் போலீசார் 24 மணி நேரமும் கண்கா ணித்து வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாநகரில் முக்கிய வீதிகளான ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு பகுதி, பன்னீர்செல்வம் பார்க், ஆர்கே.வி. ரோடு பகுதிகளில், கடை வீதிகளிலும் மக்கள் கூட்டம் இன்று வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் ஜவுளிக்கடைகளில் கூட்டம் குவிய தொடங்கியது.

    பெரிய ஜவுளி கடைகள் முதல் சாதாரண நடை பாதை ஜவுளி கடைகள் வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெண்களுக்கான பேன்சி கடையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ×