search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 பேர் பலி"

    எத்தியோப்பியா நாட்டில் சாலையில் சென்ற பஸ் கவிழ்ந்து விழுந்ததில் அதில் பயணித்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #EthiopiaBusAccident
    அடிஸ் அபாபா:

    ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள வொல்லேகா பகுதியில் ஏராளமான பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அரசு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

    மேலும், 33 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    எத்தியோப்பியா நாட்டில் சாலைகளை முறையாக பராமரிக்கப்படாததாலும், வாகனங்களை முறையான பராமரிப்பின்றி இயக்கப்பட்டு வருவதாலும் விபத்துக்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    #EthiopiaBusAccident
    ஈக்வடார் நாட்டில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். #EcuadorFireAccident
    குயிட்டோ:

    ஈக்வடார் நாட்டில் உள்ள கடற்கரை நகரம் குவாக்வில். இங்குள்ள போதை மறுவாழ்வு மையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தகவலறிந்து அங்கு 60க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் சிக்கி 18 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #EcuadorFireAccident
    ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று காவல் சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 8 போலீசார் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். #Afghanistantaliban
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    குறிப்பாக, நாட்டின் வடபகுதியில் உள்ள மாகாணங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
     
    இந்நிலையில், அந்நாட்டின் தக்கார்  மாகாணத்துக்குட்பட்ட காஜா கர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டேப்பா என்ற இடத்தில் காவல்துறை சோதனைச்சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் இன்று அதிகாலை துப்பாக்கிகளால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

    போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில்  சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 8 போலீசார் உயிரிழந்தனர். 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். போலீசார் தரப்பில் 6 பேரும் பயங்கரவாதிகளில் பத்துக்கும் அதிகமானவர்கள் இதில் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. #Afghanistantaliban
     
    18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. #HCMaduraiBench #ElectionCommission
    மதுரை:

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த வேதா என்ற தாமோதரன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக கவர்னரிடம் மனு அளித்த விவகாரத்தில் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவை எதிர்த்து தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இந்த உத்தரவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட18 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்தனர்.

    எனவே காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி புதிய எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவில்லை.

    இதனால் 18 தொகுதிகளைச் சேர்ந்த 27 லட்சம் வாக்காளர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வழியில்லாமல் தவிக்கிறார்கள்.


    எனவே 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #HCMaduraiBench #ElectionCommission
    தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #DisqualificationCase #18MLAs #TTVDhinakaran #ThangaTamilselvan
    சென்னை:

    தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இதுபற்றி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்ச்செல்வன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் ஒரே நாளில் தகுதி நீக்கம் செய்து விட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டசபையில் ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அதற்கு மாறாக எதிர்த்து ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்- அமைச்சர் பதவி வழங்கி உள்ளனர். இதில் எங்களுக்கு ஒரு நீதி அவருக்கு ஒரு நீதியா? இதை தெளிவுபடுத்ததான் கோர்ட்டுக்கு சென்றோம்.

    ஆனாலும் எங்கள் மீதான வழக்கில் சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரிதான் என்று கோர்ட்டு தீர்ப்பு கொடுத்து விட்டது.


    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் போகலாம் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் இதை காரணம் காட்டி இடைத்தேர்தலை நடத்தாமல் விட்டுவிடுவார்கள் என்பதால் நாங்கள் இதுவரை அப்பீல் செய்யாமல் இருந்தோம்.

    ஆனால் இப்போது சில அதிகாரிகளிடம் நாங்கள் விசாரித்த போது வேறுவிதமான தகவல்களை சொல்கிறார்கள்.

    18 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தால் அப்போது எங்களது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி மூலம் தள்ளுபடி செய்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் காரணம் கேட்டால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சொல்லிவிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

    தேர்தலில் நாங்கள் போட்டியிட முடியாவிட்டால் மாற்று வேட்பாளர்தான் தேர்தலில் நிற்க முடியும். இதனால் எளிதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்று எடப்பாடி அணியினர் மனக்கணக்கு போடுகிறார்கள்.

    இதையும் மீறி தேர்தல் நடந்தால் 10 தொகுதி தேர்தலை ஏதாவது காரணம் காட்டி நிறுத்தி விடுவார்கள். இதற்கெல்லாம் அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுவருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

    எனவே இந்த சூழ்நிலையில் நாங்கள் இடைத்தேர்தலில் நின்றால் எங்கள் மனு தள்ளுபடி ஆகுமா? ஆகாதா? என்பதை தெளிவுபடுத்தும் விதமாக 18 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவெடுத்துள்ளோம்.

    இது தொடர்பாக டி.டி.வி. தினகரனிடம் நாங்கள் பேசி உள்ளோம். அவரும் ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று கூறி இருக்கிறார். இதற்காக நாங்கள் அனைவரும் சென்னையில் வருகிற சனிக்கிழமை (15-ந்தேதி) டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து பேச உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி.டி.வி.தினகரன் அணியில் உள்ள தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்கு போக வேண்டும் என்ற முடிவில் தான் உள்ளனர். அப்பீல் செய்யாவிட்டால் வேறு கட்சிக்கு சிலர் சென்று விடுவார்கள் என்ற பயமும் தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தன்னிடம் உள்ளவர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அப்பீல் முடிவை தினகரன் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.  #DisqualificationCase #18MLAs #TTVDhinakaran #ThangaTamilselvan
    தமிழகத்தில் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. #ByElection #HCMaduraiBench
    மதுரை:

    தமிழகத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், 18 தொகுதிகளிலும் கடந்த முறை தேர்தல் நடத்துவதற்கு செலவான தொகையை தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடமும் வசூலிக்க வேண்டும் என்றும், அதுவரை இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.



    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவிற்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அத்துடன், இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #ByElection #HCMaduraiBench

    தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு அதிகம் உள்ளதால், 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டால் பரிசீலிப்பதாக தலைமை தேர்தல் ஆணையர் பதில் அளித்துள்ளார். #GajaCyclone #TamilNaduBypolls
    புதுடெல்லி:

    தமிழகத்தில் திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் தமிழகத்தில் கஜா புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. 

    தற்போது கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால், குறித்த காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தல் குறித்து டெல்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    கஜா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை எதுவும் வைக்கவில்லை. இதற்காக தமிழக அரசு கடிதம் எழுதினால் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிப்போம். புயல் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததும் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

    தேர்தலை தள்ளி வைக்கும்படி கடிதம் எழுதவில்லை என்றாலும், ஆணையமே தமிழக அரசிடம் கருத்து கேட்கும். தமிழக அரசு தனது கருத்துக்களை தெரிவிக்க 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும். அதன்பின்னர் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #TamilNaduBypolls
    இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தினகரன் பேசினார். #dinakaran #byelection #admk

    கம்பைநல்லூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் அரசின் வளர்ச்சிப் பணிகள், மக்கள் நலத் திட்டங்களை புறக்கணித்து வரும் தமிழக அரசை கண்டித்து, பாப்பிரெட்டிப் பட்டியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க. தொண்டர்கள் 90 சதவீதம் பேர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளனர். இதில் உள்ளவர்கள் அனைவரும் கட்சியின் விசுவாசிகள், உண்மையான தொண்டர்கள். அ.தி.மு.க.வில் அமைச்சர்களும், கட்சியின் தலைமை கழக கட்டிடம் மட்டுமே உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியால் அனைத்து தரப்பு மக்களும் கொதிப்படைந்து உள்ளனர்.

    இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொகுதிகள் உள்பட 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தால், அதில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் தான் வெற்றிப் பெறுவார்கள். இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு டெபாசீட் கூட கிடைக்காது. 18 சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சென்றால் நாங்கள் நிச்சயம் வெற்றிப் பெறுவோம். ஆனால், உச்ச நீதிமன்றம் சென்றால் தீர்ப்பு வருவதற்கு சுமார் 2 வருடங்கள் ஆகும். நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் அ.தி.மு.க. ஆட்சிக் காலம் முடிந்து விடும். எனவே, ஒருநாளும் தமிழகத்தில் இந்த மக்கள் விரோத ஆட்சி நீடிக்க கூடாது என்பதற்காகவே, 18 சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர்களும் மேல்முறையீடு செய்ய வில்லை.

    அதேபோல், வரும் 2019-ல் தமிழகத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிப் பெற அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் உழைக்க வேண்டும். 40-க்கு 40 தொகுதிகளில் நாம் வெற்றிப் பெற வேண்டும் என்பது லட்சியம். அதில் 37 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிப் பெறுவது நிச்சயம். இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தி தமிழக மக்களிடம் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அதுவரையிலும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க முடியாது. எனவே 18 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் வராது.

    அதேசமயம் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு உடனே இடைத்தேர்தல் வரலாம்.

    பாரதீய ஜனதாவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு எந்தவிதமான தேர்தல் கூட்டணியும் இல்லை. பாரதீய ஜனதாவுடன் நாங்கள் கூட்டணி வைப்போம் என்று ஒரு சில ஊடகங்கள் தான் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றன.

    மாநிலங்களின் நலன்களை பாதுகாக்க மத்திய ஆட்சியில் மாநில கட்சிகளுக்கு உரிய பிரதி நிதித்துவம் கிடைக்க வேண்டும் என்ற மனப்போக்கு மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. இதன் ஒரு பிரதிபலிப்பாக தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு பொதுமக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணிக்கு எந்த கட்சி வந்தாலும் பரிசீலிப்போம். கூட்டணி அமைத்தோ, தனித்து நின்றோ வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #byelection #admk

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு நகலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு சட்டசபை செயலாளர் அனுப்பிவைத்தார். #18MLAsdisqualificationcase #TNElectionCommission
    சென்னை:

    அ.தி.மு.க. அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் ப.தனபால் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. கடந்த ஜூன் மாதம் 23-ந் தேதி நீதிபதிகள் 2 பேரும் வழங்கிய தீர்ப்பு மாறுபட்டதாக அமைந்ததால், 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.சத்திய நாராயணன் இந்த வழக்கை விசாரித்து கடந்த மாதம் (அக்டோபர்) 25-ந் தேதி தனது தீர்ப்பை வழங்கினார்.

    அந்தத் தீர்ப்பில், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று அவர் அதிரடியாக அறிவித்தார். அந்த தீர்ப்பின் சாராம்சம் 475 பக்கங்களில் இடம்பெற்றிருந்தது. இந்த தீர்ப்பின் நகல் சமீபத்தில் சட்டசபை செயலாளர் சீனிவாசனுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த நகலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு நேற்று சட்டசபை செயலாளர் சீனிவாசன் அனுப்பிவைத்தார்.



    இனி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இந்த தீர்ப்பு நகலை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைப்பார். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடும். விரைவில் இந்த 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAsdisqualificationcase #TNElectionCommission
    இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது மேல் முறையீடு செய்வதா? என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குழப்பத்தில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். #ADMK #TNMinister #Udhayakumar #18MLAs #TTVDhinakaran
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அதிக மழையினால் 4,399 இடங்கள் பாதிக்கப்படும் எனக் கண்டறியப்பட்டு, இப்பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 9500 மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். பருவ மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், செல்லக்கூடாத வழியில் சென்று தகுதி இழந்து நிற்கிறார்கள். அவர்களிடம் தேர்தலை சந்திப்பது மற்றும் மேல் முறையீடு செய்வது என்பதில் குழப்பம் உள்ளது. அவர்கள் முதலில் மேல்முறையீடு என்று அறிவித்தார்கள். பின்னர் தேர்தலை சந்திக்கிறோம் என்று அறிவித்து உள்ளனர். நாளை என்ன அறிவிப்பார்கள் என்று தெரியாது.


    தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் அனைத்து தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து, தேர்தல் பணியாற்ற வியூகம் வகுத்து கொடுத்துள்ளார்கள். அதனை செயல்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம்.

    இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. சார்பில் சொல்லப்பட்டு வருகிறது.

    அது அவர்களின் தொண்டர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக காலம் காலமாக இதுபோன்று சொல்லி வருகிறார்கள். இந்த அரசு 5 ஆண்டுகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, அடுத்து வரும் தேர்தலிலும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முன்நிறுத்தி வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Udhayakumar #18MLAs #TTVDhinakaran
    பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். #Sasikala #TTVDhinakaran #18MLAs
    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவரை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்துப் பேசினார்.

    அப்போது டி.டி.வி. தினகரனுடன் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, ரத்தினசபாபதி, வெற்றிவேல், ரங்கசாமி, முத்தையா ஆகியோர் உடன் இருந்தனர்.  #Sasikala #TTVDhinakaran #18MLAs 
    பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை சந்தித்து பேசுகின்றனர். #Sasikala #TTVDhinakaran #18MLAs
    பெங்களூரு:

    சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவரை நாளை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க உள்ளனர்.

    இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:-

    பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நாளை கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில் சந்திக்க இருக்கிறோம். அவரை சந்திக்க 6 பேர் மட்டுமே அனுமதிக்க சிறை விதி உள்ளதால் 4 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் அவரை சந்திக்க முடியும்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் நாளை பெங்களூரு செல்கிறோம். நானும் அங்கு செல்கிறேன். அவரை சந்தித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எங்கள் துணை பொதுச்செயலாளர் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sasikala #TTVDhinakaran #18MLAs
    ×