search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "18 MLAs case"

    இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது மேல் முறையீடு செய்வதா? என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குழப்பத்தில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். #ADMK #TNMinister #Udhayakumar #18MLAs #TTVDhinakaran
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் உதயகுமார் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அதிக மழையினால் 4,399 இடங்கள் பாதிக்கப்படும் எனக் கண்டறியப்பட்டு, இப்பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் மற்றும் முதல்நிலை பொறுப்பாளர்கள் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள தேவையான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 9500 மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். பருவ மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், செல்லக்கூடாத வழியில் சென்று தகுதி இழந்து நிற்கிறார்கள். அவர்களிடம் தேர்தலை சந்திப்பது மற்றும் மேல் முறையீடு செய்வது என்பதில் குழப்பம் உள்ளது. அவர்கள் முதலில் மேல்முறையீடு என்று அறிவித்தார்கள். பின்னர் தேர்தலை சந்திக்கிறோம் என்று அறிவித்து உள்ளனர். நாளை என்ன அறிவிப்பார்கள் என்று தெரியாது.


    தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் அனைத்து தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து, தேர்தல் பணியாற்ற வியூகம் வகுத்து கொடுத்துள்ளார்கள். அதனை செயல்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம்.

    இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. சார்பில் சொல்லப்பட்டு வருகிறது.

    அது அவர்களின் தொண்டர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக காலம் காலமாக இதுபோன்று சொல்லி வருகிறார்கள். இந்த அரசு 5 ஆண்டுகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, அடுத்து வரும் தேர்தலிலும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முன்நிறுத்தி வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Udhayakumar #18MLAs #TTVDhinakaran
    18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். #18MLAsDisqualification #TTVDhinakaran
    மதுரை:

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதையடுத்து அந்த 18 பேரிடமும், டி.டி.வி. தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து அனைவரிடமும் தினகரன் கேட்டார். அப்போது மேல்முறையீடு செய்யவேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர். மேல்முறையீடு செய்யாமல் இடைத்தேர்தலை சந்திக்கலாம் என்று ஒரு தரப்பினர் ஆலோசனை தெரிவித்தனர்.

    இந்த ஆலோசனையின் முடிவில், தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே, அரசு கொறடா ராஜேந்திரன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில், டிடிவி தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்றும், தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.  காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தால் அமமுக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

    டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை என்றும், அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி கேட்டபோது, ‘மண் குதிரை யார் என்பதை, எங்கு தேர்தல் நடந்தாலும் மக்கள் நிரூபிப்பார்கள்’ என்றார் தினகரன்.  #18MLAsDisqualification #TTVDhinakaran
    அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோ வெளியானதற்கும், தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #TTVDhinakaran #Jayakumar #ThangaTamilSelvan #JayakumarAudio
    தென்காசி:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் பழைய குற்றாலத்தில் தனியார் விடுதியில் தங்கியுள்ள தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு டி.டி.வி. தினகரன் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடத்தினோம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் எந்தவித நலத்திட்ட பணிகளும் நடைபெறவில்லை. இதனை கண்டித்து அந்தந்த தொகுதிகளில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது குறித்து டி.டி.வி.தினகரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வருவதாக தெரிகிறது. தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே வரும் என எதிர் பார்க்கிறோம். அதன்பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டு நீராடுவதன் மூலம் இறைவன் அருள்புரிந்து எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என கருதுகிறோம். ஆகவே நாங்கள் அனைவரும் பாபநாசத்திற்கு சென்று நீராடுகிறோம்.

    புஷ்கர விழாவில் பங்கேற்று நீராடுவதற்காகவே குற்றாலம் வந்துள்ளோம். பாபநாசத்தில் நீராடிவிட்டு இன்றும், நாளையும் குற்றாலத்தில் தங்கி ஓய்வெடுத்து விட்டு நாளை மறுநாள் ஊருக்கு திரும்பி செல்கிறோம்.



    அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோ வெளியானதற்கும், எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை. டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக எங்கள் மீது புகார் கூறுகிறார்.

    தனக்கு அவதூறு ஏற்படும் வகையில் அந்த ஆடியோவை மாபியா கும்பல் வெளியிட்டுள்ளது என ஜெயக்குமார் கூறியிருக்கிறார். ஆனால் அந்த ஆடியோவை அவருடைய மாமியார் கும்பல் தான் வெளியிட்டுள்ளது.

    அமைச்சர் ஜெயக்குமார் மீதான புகாரின் மீது முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருக்கிறார். ஆகவே அதுகுறித்து விசாரணை நடத்தி தகுந்த எடுக்கவேண்டும். நடவடிக்கை எடுத்தால் அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

    இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். #TTVDhinakaran #Jayakumar #ThangaTamilSelvan #JayakumarAudio

    ஆடியோவில் உள்ள குரல் கேட்டால் அமைச்சர் குரல் போன்றுதான் தெரிகிறது என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran #Jayakumar #JayakumarAudio
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களுடைய தொகுதி மக்களின் கோரிக்கைகளை, அடிப்படை வசதிகளை, குறிப்பாக குடிநீர் பிரச்சனை, சாலை வசதி போன்றவற்றில் பாராமுகமாக இருந்து அந்த தொகுதி மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.

    முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மக்களை பழனிசாமி அரசு வஞ்சிக்கிறது. தனி நபர் மீதுள்ள கோபத்தை 2½ லட்சம் வாக்காளர்கள் மீது, வாழும் பொதுமக்கள் மீது காண்பிக்கிறார்கள்.


    அமைச்சர் மீதுதான் குற்றச்சாட்டு வந்துள்ளது. குரல் கேட்டால் அமைச்சர் குரல் போன்றுதான் தெரிகிறது. உப்பை தின்றவர்கள் தண்ணீரை குடித்தாக வேண்டும். அதுதான் உண்மை.

    இதுபற்றி முதல்- அமைச்சரிடம் கேட்டீர்களா? ஜெயக்குமார் அதற்கு பதில் சொன்னாரா? அவர் குரல் போன்று இருக்கிறது. அதுபற்றி அவர்தான் சொல்ல வேண்டும். அம்மாவின் சீட்டில் அமர்பவர்கள் எல்லாம் அம்மாவாகி விடுவார்களா?

    முதல்-அமைச்சர் மீது என்ன குற்றச்சாட்டு, முதல்வரின் உறவினர்களுக்கு டெண்டர் மூலம் அவர் பொறுப்பு வகிக்கின்ற நெடுஞ்சாலைத்துறையில் பணிகளை ஒதுக்கி கொடுத்திருக்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டு. அவ்வாறு பணிகளை வழங்கலாமா? வழங்கக் கூடாதா? என்பதுதான்.

    அது உலக வங்கி ஒப்பந்தம். உலக வங்கி நடைமுறை அதனை அனுமதிக்கிறதா? என்பதுதான். அதனை விசாரணை செய்ய வேண்டும். அதனை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை சரியாக விசாரணை செய்யவில்லை என்ற எண்ணத்தினால்தான். நீதிபதி அதனை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்கிறார்.

    லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு தனி அதிகாரம் இருந்தாலும் அது தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இல்லையென்றால் மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இதிலிருந்து யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

    சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு தள்ளிவிட நினைக்கிறார்கள். முதல்-அமைச்சர் துறை மீதான டெண்டர் ஒதுக்கீட்டில், நீதிமன்றமே சொன்ன பிறகு விட்டுவிட வேண்டியதுதானே? எதற்கு சுப்ரீம்கோர்ட்டிற்கு செல்ல வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு சரியான முடிவை எடுப்பார்கள்.

    அ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு விழாவை அவர்கள் எல்லா ஊர்களிலும் காலி சேர்களோடு, கூட்டம் போட்டுவிட்டு, முடிந்த வரையில் டி.டி.வி. தினகரனை தாக்கி பேசுகிறார்கள். அதுதான் நடந்தது. கட்சியை ஆரம்பித்த புரட்சித்தலைவரும், 30 ஆண்டுகள் கட்டிக் காத்திட்ட அம்மாவின் ஆன்மாவும் இதனை ஏற்றுக் கொள்ளாது என்பது வரும் காலத்தில் தெரியும்.

    அம்மாவின் தொண்டர்கள் 90 சதவீதம் பேர் என்னுடன் உள்ளனர். ஆட்சி, அதிகாரம் இருப்பதால் கொஞ்சம் பேர் அங்கு இருக்கிறார்கள்.

    இந்த ஆட்சி இல்லையென்றால் அந்த கட்சியே இருக்காது. எங்களோடு வந்து விடுவார்கள். அதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்டு எடுக்கும் என்று சொல்கிறேன்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #TNMinister #Jayakumar #JayakumarAudio
    எடப்பாடி பழனிசாமி தன் மீது வழக்கு போட்டால் சந்திக்கத் தயார் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். #DMK #MKStalin #Edappadipalaniswami
    காஞ்சீபுரம்:

    மதுராந்தகத்தில் எஸ்.டி. உகம்சந்த் படத்திறப்பு நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய துறையை பயன்படுத்தி ஒப்பந்ததாரர் அடிப்படையிலே தன்னுடைய உறவினருக்கு காண்ட்ராக்டை கொடுத்திருக்கிறார். ஏறக்குறைய ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேலே அதிலே ஊழல் நடைபெற்றிருக்கிறது.

    இதை உடனடியாக விசாரிக்க வேண்டும். இதற்குரிய தண்டனையை அவருக்கு வழங்கிட வேண்டும் என்று அமைப்புச் செயலாளர் அந்த வழக்கை தி.மு.க. சார்பில் தொடுத்தார்.

    சென்னை உயர்நீதிமன்றம் இதையெல்லாம் அடிப்படையாக வைத்து முகாந்திரம் இருக்கிறது என்று சொல்லி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது.

    அடுத்த வினாடியே அவர் முதல்-அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து இருக்க வேண்டும். அந்த வழக்கை சந்திக்காமல், உளுந்தூர்பேட்டையிலே போய் அவர் இதை திசை திருப்புகிற வகையில் நாங்களும் தி.மு.க. மீது வழக்கு போடுவோம் என்கிறார்.

    எங்கள் மீது வழக்கு போடுங்கள், நாங்கள் சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். எத்தனையோ வழக்குகள் எங்கள் மீது போடப்பட்டதுண்டு. எம்.ஜி.ஆரே எங்கள் மீது வழக்கு போடவில்லையா? சர்க்காரியா கமி‌ஷனை மறந்திருப்பீர்களா?

    சென்னை மாநகரத்திலே 9 மேம்பாலங்கள் நான் மேயராக இருந்தபோது கட்டப்பட்டது. ஆட்சி மாறிய பிறகு ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்ததற்கு பிறகு அதற்காக வழக்கு போட்டார்.

    வழக்கு போட்டது மட்டுமல்ல, இரவோடு இரவாக தலைவர் கலைஞர் வீட்டிலே தூங்கிக் கொண்டிருந்தபோது காவல் துறையைச் சேர்ந்த அதிகாரி உள்ளே புகுந்து தரதரவென இழுத்து வந்த அந்தக் கொடிய காட்சிகள் எல்லாம் பார்த்து உலகமெங்கும் இருக்கக் கூடிய தமிழர்கள் அத்தனைபேரும் வேதனைப் பட்டார்கள்.

    பாலம் வீக்கென்று சொன்ன ஜெயலலிதா, அதே பாலத்தின் மேல்தான் தொடர்ந்து கோட்டைக்கு போய் கொண்டும் வந்து கொண்டும் இருந்தார். பாலம் வீக்கென்று சொல்லி நம் மீது வழக்கு. வழக்கு போட்டு ஐந்து வருடங்கள் ஆகி விட்டது. ஐந்து வருடமாக ஒரு சார்ஜ்சீட் பைல் பண்ண முடிந்ததா?.

    தலைவரை கைது செய்தீர்கள். என்னை கைது செய்தீர்கள், பொன் முடியை கைது செய்தீர்கள், கோ.சி.மணியை கைது செய்தீர்கள். இப்படி பலபேரை கைது செய்து சிறையில் வைத்தீர்கள். வழக்கு போட்டதற்கு பிறகு அதே அ.தி.மு.க. ஆட்சி ஒரு சார்ஜ் சீட் பைல் செய்ததா என்றால், கிடையாது.

    2ஜி, 2ஜினு ஒரு பிரச்சனையை கிளப்பினார்ளே. எவ்வளவு திட்டமிட்டு பிரசாரம் நடந்தது. அது என்ன ஆனது? நீதிமன்ற தீர்ப்பில் எந்த முகாந்திரமும் இல்லை. அத்தனை பேரும் விடுதலை. இதுதான் தி.மு.க. நாங்கள் எத்தனையோ முறை சிறைக்குப் போய் இருக்கிறோம். ஆனால் இவர்களைப் போல கொள்ளையடித்து விட்டு போகவில்லை.

    இதே எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தி.மு.க. தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் என்கிறார். அதை இன்றைக்கு நாங்கள் போய் நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி விட்டோம். அந்த வழக்கு போடப்பட்டதற்கு பிறகு இதுவரையிலே 7 வருடம் ஆயிற்று. இதுவரையில் அதுபற்றி விசாரணை நடந்ததா? கிடையாது.

    ஆனால் விசாரணைக் கமி‌ஷன், அதற்கு ஒரு அலுவலகம், 3 கார்கள், போலீஸ் ஏறக்குறை 10 கோடி ரூபாய் அந்த நீதிபதிக்கே செலவு. இதைக் கண்டித்து உயர்நீதிமன்றம் என்ன செய்தது என்றால், அந்த கமி‌ஷனையே கலைத்து விட்டது.

    ஆனால் முதல்-அமைச்சராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் என்ன சொல்கிறது? ஆதாரங்கள் இருக்கிறது, அடிப்படை ஆதாரங்கள் இருக்கிறது. எனவே இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறது. அதை எதிர்த்து நியாயமாக எடப்பாடி என்ன செய்திருக்க வேண்டும்?

    சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று தடை வாங்கியிருக்க வேண்டும். வாங்குவேன் என்று சொன்னார். இதுவரைக்கும் வாங்கவில்லை. ஆனால், வாங்குவதற்கு நாம் தடை போட வேண்டும். அதை வாங்கினால் எங்களையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று சொல்லி, நம்முடைய ஆர்.எஸ்.பாரதி சார்பில் கேவியட்டும் போட்டு வைத்துள்ளோம்.

    எங்களுக்கு தைரியம் இருக்கிறது. தெம்பு இருக்கிறது, நாங்கள் கேவியட் போடுகின்றோம். தலைமைச் செயலக வழக்கில் எங்களுக்கு ஸ்டே கொடுத்துள்ளார்கள். அதை எதிர்த்து அப்பீலுக்கு செல்லும் தைரியும் உங்களுக்கு இல்லை. ஆனால் உளுந்தூர்பேட்டையில் வந்து புலம்பிக் கொண்டு போயிருக்கிறீர்கள்.

    18 எம்.எல்.ஏ. தீர்ப்பு வரட்டும். வந்ததற்கு பிறகு தான் இருக்கிறது கதை. ஏதோ ஆட்சியில் இருக்கிறோம். பதவியில் இருக்கிறோம். அதிகாரம் இருக்கிறது என்கிற திமிரில் இப்படி எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் முடிவு கட்டக்கூடிய காலம் வரப் போகிறது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #DMK #MKStalin #Edappadipalaniswami
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #18mlas #sasikala #hraja #tngovt

    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை கடந்த 31-ந் தேதி முடிவடைந்தது. கோர்ட்டு தினமும் பல வழக்குகளை சந்திக்கிறது. இதனால் தீர்ப்பு எப்போது வரும் என்பதை கூற முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குள் குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பை கூற வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. இதை கூற யாருக்கும் அதிகாரமும் இல்லை.

    இருப்பினும் 3-வது நீதிபதி வழங்கும் தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சசிகலாவுக்கு பெங்களூருவில் நிலவும் சீதோஷ்ண மாற்றம் தொடர்பான சில பாதிப்புகள் இருந்தன. தற்போது அவர் நலமாக உள்ளார். அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் தவறானவை.

    சிறையில் சசிகலா கன்னடம் மற்றும் இந்தி மொழிகளை கற்பது பற்றி நான் எதுவும் அவரிடம் கேட்கவில்லை.


    தூத்துக்குடியில் தூயக்காற்று, குடிநீர் இல்லை என்று கூறி போராடிய பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் யாரும் தீவிரவாதிகள் கிடையாது. இதனால் உணர்ச்சி வசப்பட்டு குரல் எழுப்பிய சோபியாவை கைது செய்ய காட்டிய வேகத்தை எச்.ராஜா விவகாரத்தில் தமிழக போலீசார் காட்டவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் அடிமை அரசு உள்ளது.


    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது தவறான முடிவு. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும்.

    சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு செலவாகும் ரூ. 10 ஆயிரம் கோடியை கொண்டு மாநில சாலைகளை சீர்செய்யலாம். கர்நாடகத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரை சேமிப்பதற்கு திட்டங்கள் தீட்டலாம். அத்துடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற செலவிடலாம். தொழிற்சாலைகள் கொண்டு வருவதாக கூறி புதிய திட்டங்களை கொண்டு வந்தால் தமிழகம் சோமாலியாவாக மாறும். ஒவ்வொரு பொழுதும் இன்று என்ன திட்டத்தை அறிவிக்க உள்ளார்கள் என்ற அச்சத்தோடு தான் விடிகிறது.

    தமிழக மக்கள் இயற்கையிலேயே அமைதியானவர்கள். இதனால் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க போலீசார் எந்த நடவடிக்கை யும் எடுக்க வில்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பராமரிக்க வேண்டிய காவல் துறையினரால் தான் பிரச்சினைகள் உருவாகிறது. ஸ்டெர்லைட் போன்ற சம்பவங்கள் இதற்கு உதாரணம். இதில் உளவுத்துறை முற்றிலுமாக செயல் இழந்துள்ளது. இந்தியாவில் எங்கேயும் கேள்விப்படாத வகையில் குட்கா முறைகேடு விவகாரத்தில் காவல் துறை தலைவர் (டி.ஜி.பி.) வீட்டிலேயே சோதனை நடைபெற்றது. இவை அனைத்தும் தவறான நிகழ்வாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக தம்பிதுறை களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 2 மாதங்களாக வருகிற பாராளுமன்ற தேர்தலை நோக்கி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

    எங்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வயது ஒரு தடை இல்லை.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். அடுத்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதிக்குள் இந்த உறுப்பினர்கள் எண்ணிக் கையை எட்டி விடுவோம்.

    வருகிற 7-ந் தேதி திருப்பரங்குன்றத்திலும், 10-ந் தேதி திருவாரூரிலும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இதன் மூலம் சமூக நீதி பாதுகாக்கப்பட்டது. 34 ஆண்டுகளாக பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் படித்து நல்ல நிலையை அடைந்து வருகின்றனர்.

    கல்லூரியில் படித்து மருத்துவர்களான பலர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இதை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில் குறுக்கு வழியில் “நீட்” என்ற ஆயுதத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.

    தமிழகத்தில் நர்சிங் படிப்புக்கு “நீட்” தேர்வு தேவையற்றது.

    ஆர்.பி. உதய்குமார், பாண்டிய ராஜன் ஆகியோர் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏதேதோ பேசுவார்கள். இவர்களின் பேச்சுக்கு மக்களிடம் மரியாதை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #18mlas #sasikala #hraja #tngovt

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் 17-ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்த தீர்ப்பு தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பலாம் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. #18MLAs #MLAsDisqualification
    சென்னை:

    கடந்த ஆண்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் அன்றைய கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

    இதையடுத்து கவர்னரை சந்தித்த 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் அ.தி.முக. கொறடா ராஜேந்திரன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அவர்களில் ஜக்கையன் எம்.எல்.ஏ. சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    அவரைத்தவிர கவர்னரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகர் தனபால் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

    இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள்.

    இதையடுத்து 3-வது நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்தார். விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வருகிற 17-ந்தேதி தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் புயலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டால், தற்போது சட்டசபைக்கு தன்னந்தனியாக வந்துபோகும் டி.டி.வி. தினகரனின் கை ஓங்கும். இந்த 18 பேர் தவிர வேறு சில எம்.எல்.ஏ.க்களும் தினகரனுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தற்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 110 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். முழு மெஜாரிட்டிக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை. எனவே, தினகரனுக்கு ஆதரவு அதிகரித்தால் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும்.


    இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தினகரன் முதல்- அமைச்சர் பதவியை குறி வைக்கலாம். தன்னை முதல்-அமைச்சராக ஆக்கினால் ஆட்சியை காப்பாற்றுவேன் என்று நிபந்தனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

    ஆட்சியை காப்பாற்ற விரும்பினால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதற்கு பணிந்து போக நேரிடலாம். இல்லையென்றால் ஆட்சி கலையும். அதன் பிறகு தேர்தலை சந்தித்து ஆக வேண்டிய கட்டாயம் ஏற்படும். தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. எனவே தேர்தலை சந்திக்க இன்றைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தேர்தலை சந்திக்க வேண்டியது வரும். ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள் காலியாக உள்ளன. எனவே 20 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கு தேர்தல் வரும்.

    இதில் அ.தி.மு.க. வெற்றி பெறுமா? தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் வெற்றி பெறுவார்களா? என்பதில் எதையும் நிச்சயமாக சொல்ல முடியாது. தி.மு.க.வும் களம் இறங்கும் போது மும்முனை போட்டி ஏற்படும். எனவே ஆளும் கட்சி நிலை என்ன ஆகும் என்பதை கணிக்க முடியாது. எனவே இடைத்தேர்தல் முடிவும் பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம்.

    தி.மு.க.வுக்கு தற்போது சட்டசபையில் 88 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். குறுக்கு வழியில் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    எனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து தி.மு.க. ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. அந்த கட்சி பொதுத் தேர்தலை சந்திப்பதையே விரும்புகிறது.

    இன்றைய சூழ்நிலையில் 18 எம்.எல்.எ.க்கள் வழக்கில் அவர்களை நீக்கியது சரி என்று தீர்ப்பு வந்தாலும், நீக்கியது தவறு என்று தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் அது தமிழக அரசியலில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

    எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்படி அமையும் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரு எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள் ளது. புயல் கடுமையாக வீசுமா? எளிதில் கரை யேறுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.  #18MLAs #MLAsDisqualification
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்றும் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிய வருகிறது. #18MLAsCase #MLAsDisqualificationCase
    சென்னை:

    அ.தி.மு.க.வில் தனித்தனியாக செயல்பட்ட அணிகள் இணைப்புக்குப் பின் டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 18 பேர் ஆதரித்தனர்.

    அவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து முறைப்படி விலகாமலேயே தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். அதே சமயம் தாங்கள் அ.தி.மு.க.வில் நீடிப்பதாகவும் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களும் கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்தனர். ஆனால் கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    முதல்வரை மாற்றக்கோருவது உள்கட்சி விவகாரம். இதில் தான் தலையிட முடியாது என்று கவர்னர் மறுத்து விட்டதாக தகவல் வெளியானது.

    இதற்கிடையே 18 எம்.எல்.ஏ.க்களும் கட்டளையை மீறியதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க. கொறடா சபாநாயகருக்கு சிபாரிசு செய்தார். இதை ஏற்று 18 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    ஆனால் விளக்கம் அளிக்க மறுத்து விட்டதால் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது செல்லும் என்று அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியும், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.


    இதனால் 3-வது நீதிபதி முடிவுக்கு விடப்பட்டது. 3-வது நீதிபதியாக எம்.சத்திய நாராயணன் நியமிக்கப்பட்டார். கடந்த ஜூலை 21-ந்தேதி முதல் அவர் வழக்கை விசாரித்து வந்தார்.

    இதில் சபாநாயகர், சட்டசபை செயலாளர், முதல்- அமைச்சர், அரசு கொறடா ஆகியோர் சார்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர்.

    இதேபோல் தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் மூத்த வக்கீல்கள் ஆஜராகி தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர். நேற்று இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது.

    அப்போது தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் வக்கீல்கள் வாதாடுகையில், “கவர்னரை சந்தித்தது ஆட்சி கவிழ்ப்பு முயற்சி என்று கூற முடியாது, தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து செயல்படவில்லை, இதற்காக கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

    சபாநாயகர் தரப்பு வக்கீல் வாதாடும்போது, 18 பேருக்கும் போதிய அவகாசம் வழங்கப்பட்ட பின்பே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரை மாற்றும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை என்று தெரிந்தும் அவரிடம் மனு கொடுத்துள்ளனர். இதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. எனவே தகுதி நீக்கம் செய்தது சரிதான் என்றனர்.

    வக்கீல்கள் வாதம் நிறைவடைந்ததால் இந்த வழக்கில் அடுத்த கட்டமாக எழுத்துப்பூர்வமான பதில்கள் தாக்கல் செய்ய வேண்டுமா என்று வக்கீல்கள் கேட்டனர்.

    அதற்கு அவசியம் இல்லை, வக்கீல்கள் வாதமே தனக்கு நிறைவாக இருக்கிறது என்று நீதிபதி சத்திய நாராயணன் கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

    எனவே அடுத்த 1 வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்றும் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிய வருகிறது.  #18MLAsCase #MLAsDisqualificationCase
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்றுடன் இறுதி கட்ட விசாரணை முடிவடைகிறது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAsCase #MLAsDisqualificationCase
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த தங்கதமிழ்ச் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

    சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அப்போதைய ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

    இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார். 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3-வது நீதிபதியாக விமலா பரிந்துரை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் சுப்ரீம்கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் 3-வது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3-வது நீதிபதி சத்திய நாராயணன் கடந்த மாதம் 20-ந்தேதி விசாரணையை தொடங்கினார்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் ஆகியோர் 3 நாட்கள் வாதிட்டனர்.

    கடந்த 23 மற்றும் 24-ந்தேதிகளில் சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளர் சார்பில் அரிமா சுந்தரமும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் வைத்தியநானும் 3 நாட்கள் வாதிட்டனர்.

    அரசு தலைமை கொறடா சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஜி வாதாடினார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் பி.எஸ்.ராமன் இன்று இறுதி கட்ட வாதம் செய்கிறார். இன்றுடன் இறுதி கட்ட விசாரணை முடிவடைகிறது.

    இதை தொடர்ந்து இந்த வழக்கில் 1 வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #18MLAsCase #MLAsDisqualificationCase
    டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கு கடந்து வந்த பாதை குறித்த கண்ணோட்டத்தை பார்ப்போம். #18mlacase
    சென்னை:

    டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கு கடந்து வந்த பாதை குறித்த கண்ணோட்டம்.

    2017 பிப்ரவரி 16 - தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். 15 நாட்களில் அரசின் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு.

    2017 பிப்ரவரி 18 - அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டபேரவையில் கொண்டு வரப்பட்டது. முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.

    2017 ஆகஸ்ட் 22 - முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனவும் அவரை மாற்ற கோரி டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற 19 எம்.எல்.ஏ.கள் தமிழக கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர்.

    2017 ஆகஸ்ட் 23 - தமிழக கவர்னரை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அரசை தனது பெரும்பான்மையான நிரூபிக்க உத்தரவிட கோரி மனு அளித்தார்.

    2017 ஆகஸ்ட் 24 - அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ.கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறாடா புகார் அளித்தார்.

    2017 ஆகஸ்ட் 28 - அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கோரி சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினர். ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

    2017 செப்டம்பர் 5 - வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் இடைக்கால விளக்கம் அளித்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். அந்த விளக்கத்தில் திருப்தி இல்லை என கூறி செப்டம்பர் 7-ந்தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக சபாநாயகர் உத்தரவிட்டார்.

    2017 செப்டம்பர் 7 - வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் விசாரணைக்கு நேரில் ஆஜாரானார்கள். கெறாடா சார்பில் ஆஜராகதால் சபாநாயகர் விசாரணை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    2017 செப்டம்பர் 12 - தமிழக அரசு உடனடியாக பெரும்பான்மை நிரூபிக்க கோரி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, செப்டம்பர் 20-ந்தேதி வரை பெரும்பான்மை நிரூபிக்க இடைக்கால தடை விதித்தார். அதுவரை குட்கா பொருள்களை சட்டமன்றத்திற்குள் எடுத்துச் சென்றதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதித்து உத்தரவு.

    2017 செப்டம்பர் 14 - அரசு கெறாடா அளித்த புகார் மனுவை அளிக்க 19 எம்.எல்.ஏக்கள் சார்பில் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.


    2017 செப்டம்பர் 16 - டி.டி.வி தினகரன் ஆதரவு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.

    2017 செப்டம்பர் 18 - அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் அளித்த 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் காலை 11 மணிக்கு உத்தரவிட்டார். இரவு 8.30 மணிக்கு தகுதி நீக்கம் தொடர்பான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் அரசுக்கு எதிராக கடிதம் அளித்த ஜக்கையன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால் அவருக்கு தகுதி நீக்கம் செய்யவில்லை என விளக்கம்.

    2017 செப்டம்பர் 19 - தகுதி நீக்கத்தை எதிர்த்து வெற்றிவேல், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்.

    2017 செப்டம்பர் 20 - தகுதி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்த மனு மீது நீதிபதி துரைசாமி விசாரணை. மறு உத்தரவு வரும் வரை தகுதி நீக்கம் செய்த எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்கால தடை விதித்தார். தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை பேரவைக்குள் எடுத்து சென்றதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிட்டார்.

    அக்டோபர் மாதம் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முதல் நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணை நடந்தது.

    2017 நவம்பர் 2 - வழக்கின் முக்கியத்துவம் கருதி டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி ரவிசந்திரபாபு உத்தரவு.

    2017 நவம்பர் 6 - எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரணை கோரி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வில் முறையீடு.

    நவம்பர் 16-ந்தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், முதல் அமர்வே இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    2017 நவம்பர் 16 - தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியது.

    2018 ஜனவரி 18 - அனைத்து தரப்பும் இறுதி வாதங்களை நிறைவு செய்தனர். எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    2018 ஜனவரி 23 - அனைத்து தரப்பினரும் எழுத்துப் பூர்வமான இறுதி வாதங்களை தாக்கல் செய்தனர். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு உத்தரவு.

    2018 ஜூன் 14 - தீர்ப்பு வெளியிடப்பட்டது. #18mlacase
    ×