search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amma Makkal Munnetra kazhagam"

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்று அதன் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இது குறித்து தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சின்னம், பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. இதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும். வருங்காலத்தில் தோல்வி ஏற்படாதவாறு கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.

    இதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஆலோசனை கூட்டம் 1-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிப்போம்.



    எங்களின் பிரசாரங்களை மக்கள் ரசிக்கவில்லை என்பது இந்த தேர்தலில் தெரிகிறது. என்னை பார்க்கும் பொதுமக்கள் ‘உங்களுக்குத்தான் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டேன் என்று கூறுகிறார்கள். கிராமங்களில் என்னை மக்கள் அ.தி.மு.க. கட்சிக்காரராகவே பார்க்கிறார்கள். இரட்டை சிலை சின்னம் மக்கள் மனதில் பதிந்துவிட்ட சின்னமாகவே உள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தோல்வியை வைத்து எதிர்காலத்தை முடிவு செய்து விட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்களை அ.தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வருகிறதே? என்று கேட்டதற்கு தங்க தமிழ்ச்செல்வனுக்கு கிராக்கி இல்லாமல் இருக்குமா? என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

    அரசியல் பாதை என்பது நிதானமாக இருக்க வேண்டும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றும் அவர் கூறினார்.

    அ.தி.மு.க.வில் பதவி கிடைத்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உடைக்க நீங்கள் தயாராக இருப்பதாக செய்திகள் வருவது குறித்து கேட்டதற்கு அது உண்மையல்ல. எனது அரசியல் பாதை தெளிவாக உள்ளது. அதன்படி செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.
    சசிகலாவின் ஒப்புதலோடு தான் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டதாகவும் அவரை ஓரங்கட்டவில்லை எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். #TTVDinakaran

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிறையில் சசிகலாவை சந்தித்த பின் பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சசிகலா எனக்கு வாழ்த்து சொன்னார். நன்றாக செயல்பட சொன்னார். ஊடகங்களில் பல வி‌ஷயங்களை கிளப்பி விடுவதை போன்று ஒன்றும் இல்லை என்று உங்களிடம் (செய்தியாளர்களிடம்) தெரியப்படுத்த சொன்னார்.

    ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் நான் இருந்ததால் இங்கு வந்து சசிகலாவை சந்திக்க முடியாத காரணத்தினால் கட்சி, சின்னம் தொடர்பாக ஏற்கனவே எங்களது வழக்கறிஞர் சசிகலாவிடம் கலந்து பேசினார். சசிகலாவின் ஒப்புதலோடு தான் அனைத்தும் நடைபெற்று வருகிறது.

    சசிகலா பேச முடியாத நிலைமையில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு சில வி‌ஷமிகள் புகழேந்தியை வைத்து சில டாட்காமில் தவறான தகவல்களை கொடுத்திருக்கிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை.

    சாதிக்அலி தீர்ப்புபடி எண்ணிக்கை அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை பழனிசாமி-பன்னீர்செல்வம் கம்பெனிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது. ஆனால் அதனை ஏற்காத ஆர்.கே.நகர் மக்கள் பழனிசாமி-பன்னீர்செல்வம் கம்பெனிக்கு தோல்வியை தந்தார்கள். அதேபால் தற்போது மக்கள் தீர்ப்பு வந்தவுடன் மீதமிருக்கிற உண்மையான தொண்டர்களும் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள்.

    மக்களே இறுதி எஜமானர்கள். ஜனநாயக முறைப்படி போராடுவோம். அதே நேரத்தில் சசிகலா இரட்டை இலை தொடர்பாக சீராய்வு மனுவை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்து சட்டப்படி போராடுவார். இரட்டை இலை சின்னம் தொடர்பாக தான் சுப்ரீம்கோர்ட்டில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்படும். அதே நேரத்தில் கட்சி தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அதனையும் அவர் நடத்துவார்.

    ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். கம்பெனியால் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அது தொடர்பான வழக்கையும் அவர் தொடர்ந்து நடத்துவார். எங்கள் கட்சியில் சசிகலாவுக்காக தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம். துணைத் தலைவரும் தற்போது வந்திருக்கிறார்.

    எங்கள் கட்சியில் தலைவர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர் ஆகிய பதவிகள் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய பதவிகள். பொதுச்செயலாளர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவியை சசிகலாவுக்காக காலியாக வைத்திருக்கிறோம். அவர் வெளியில் வந்தபிறகு அது தொடர்பாக முடிவு செய்வார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா ஏற்கனவே இருக்கிறார். அதனால் சசிகலாவை ஓரங்கட்டுவது, ஒதுக்குவது என்று சொல்வது மிகவும் தவறானது. அதேபோல் தொலைக்காட்சிகளின் விவாதங்களில் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று கூறி அ.தி.மு.க. தொண்டர்களை அழைத்து வந்து தினகரன் ஏமாற்றிவிட்டார் என்று சொல்வதும் தவறானது. ஏனெனில் எதனால் இதுபோன்று நடைபெறுகிறது என்பது எங்கள் தொண்டர்களுக்கு நன்றாக தெரியும்.

    சுப்ரீம்கோர்ட்டில் எங்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு சீராய்வு மனுதாக்கல் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கும் பணியில் நாங்கள் இறங்கி விட்டோம். சசிகலா சீராய்வு பணியை மேற்கொள்வார். அதுபோல அ.தி.மு.க. கட்சி தொடர்பான வழக்குகளையும் தொடர்ந்து நடத்துவார். சசிகலா நன்றாக இருக்கிறார்.

    பொன்பரப்பி போன்ற இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும். சமுதாய அடிப்படையிலான சண்டைகள் இல்லாமல் இருப்பதுதான் நாட்டிற்கு நல்லது. அதனால்தான் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அரசியல் இயக்கங்கள் இருக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருக்கிறேன்.

    நடந்து முடிந்த தேர்தலில் பரிசுப் பெட்டகம் மாபெரும் வெற்றி பெறும். அதே போல் மே 19-ந்தேதி நடைபெறவிருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். மே 1-ந்தேதியிலிருந்து 15-ந் தேதி வரை பிரசாரம் மேற் கொள்கிறேன்.

    இவ்வாறுஅவர் கூறினார். #TTVDinakaran

    வாழப்பாடி அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து(50). கட்டிட ஒப்பந்ததாரரான இவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வாழப்பாடி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் பணத்தை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு கொடுப்பதாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.

    இதனையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீரமுத்து வீட்டிற்கு அடுத்தடுத்து சென்ற பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பணம், பொருள் மற்றும் ஆவணங்கள் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.

    இதே கிராமத்தை சேர்ந்தவர் விஜயன். அமமுக. எம்.ஜி.ஆர். மன்ற சேலம் மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. இதனையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை விஜயன் வீட்டிற்கு சென்ற தேர்தல் பணிக்கான சிறப்பு வருமான வரி அலுவலர்கள், வீடு, மாட்டுக் கொட்டகை, டிராக்டர் செட், வைக்கோல் குவியல் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இவரது வீட்டிலும் பணம், பொருள், ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். ஒரு கிராமத்திலுள்ள அமமுக கட்சி நிர்வாகிகள் இருவரை மட்டும் குறிவைத்து, தொடர்ந்து புகார் தெரிவித்து, அதிகாரிகளை அலைகழிப்புக்குள்ளாகி வருபவர்கள் குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டியில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும், அ.ம.மு.க.விற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019 #AMMK #ThangaTamilselvan
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நேற்று ஆண்டிப்பட்டியில் தேர்தல் அதிகாரிகள் ரூ.1.48 கோடி பணத்தை பறிமுதல் செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

    அந்த பணத்திற்கும், அ.ம.மு.க.விற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அ.தி.மு.க.வும், தேர்தல் ஆணையமும் இணைந்து ஜோடித்த நாடகம்தான் இது.

    அந்த வணிகவளாகம் அ.தி.மு.க பிரமுகர் அமரேஷ் என்பவருக்கு சொந்தமானது. அவ்வாறு இருக்கும்போது அவரது இடத்தில் நாங்கள் பணம் பதுக்கி வைக்க முட்டாள்களா? ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் ரூ.150 கோடி அளவுக்கு வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தார். இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.



    பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தேனி பாராளுமன்ற தொகுதி மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த முயற்சி எடுக்கப்படுகிறதா என்பதற்கு விளக்கம் சொல்ல முடியாது.

    தேர்தலை நிறுத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியமும் இல்லை. தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.க.வினரே இதுபோன்ற புகாரை பரப்பி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #LoksabhaElections2019 #AMMK #ThangaTamilselvan
    வேலூர் தேர்தல் விவகாரத்தில் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க. ரகசிய உறவு வைத்திருப்பதாக அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AMMK #TTVDhinakaran
    சென்னை:

    அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசால் பொருளாதாரம் சீரழிந்து, தொழில்கள் முடங்கி, வேலை வாய்ப்பை இழந்து, தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து தவிக்கிறார்கள் தமிழக மக்கள். இன்னொருபுறம்... ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியையும் ஆட்சியையும் பா.ஜனதாவிடம் அடகு வைத்துவிட்டு, அவர்களுக்கு அடிமை சேவகம் செய்து வருகிறார்கள்.

    இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் சிக்கி தமிழகம் தத்தளிக்கும் நேரத்தில்தான், பாராளுமன்றப் பொதுத்தேர்தலும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. தமிழக மக்களின் ஒட்டுமொத்த துயரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பாக, ஒரு வரமாக நமக்கு அமைந்திருக்கிறது இந்தத் தேர்தல்.

    தமிழகத்தின் நலன்களைக் கூட்டணி போட்டு சூறையாடியது போதாது என்று, தேர்தல் களத்திலும் கூட்டணி அமைத்து வருகிறார்கள் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும். அம்மாவின் மரணத்திற்குப் பிறகும் அவரைத் தரம் தாழ்ந்து விமர்சித்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. கட்சிகளையும் இணைத்து துரோகம் கலந்த ஒரு சுயநலக் கூட்டணியை அமைத்திருக்கிறது அ.தி.மு.க.

    மக்கள் நலன் சார்ந்த வி‌ஷயங்களில் இவர்கள் போடும் இரட்டைவேடத்தை இவர்களே இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.

    கிராமப்புற மாணவர்களின் டாக்டராகும் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அ.தி.மு.க. சொல்ல ‘அவர்கள் எங்களிடம் அப்படிக் கேட்கவில்லை. நீட் தேர்வு அவசியம் எனும் எங்கள் நிலைப்பாட்டை சொல்லி அவர்களையும் ஏற்கச் செய்வோம்’ என்று பா.ஜனதா சொல்கிறது. எவ்வளவு பெரிய பித்தலாட்டம் இது?

    ஐந்து மாவட்ட விவசாயத்தை, இயற்கை வளங்களை, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து உருவாக இருந்த சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை ரத்து செய்துவிட்டது உயர்நீதிமன்றம். ‘அந்தத் தீர்ப்பை மதிப்போம்’ என்று சொன்ன முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், ‘இந்தத் தீர்ப்பு எங்களுக்குக் கிடைத்த வெற்றி’ என்று சொன்ன டாக்டர் ராமதாசையும் மேடையில் வைத்துக் கொண்டு, இந்தத் தீர்ப்புக்கு மாறாக அத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவேன் என்று அறிவிக்கிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

    அதைக்கேட்டு ஒரு வார்த்தைகூட மறுப்பு சொல்லவில்லை இருவரும். மக்கள் நலன் சார்ந்த வி‌ஷயத்தில் இவர்களின் இரட்டை வேடத்தைப் பார்த்தீர்களா..?



    இன்னொரு புறம் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டே பா.ஜனதாவுடன் ரகசிய உறவை வைத்துள்ளது தி.மு.க. ஒரு துண்டுச் சீட்டை கைப்பற்றியதாகச் சொல்லி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்திய தேர்தல் ஆணையம், வேலூரில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான இடங்களில் சுமார் 12 கோடி ரூபாய் கைப்பற்றிய பிறகும் தேர்தல் நடப்பதை அனுமதிப்பது எதைக் காட்டுகிறது? பா.ஜனதாவுடன் ரகசிய உறவு இல்லாமல் எப்படி இது சாத்தியம்?

    அந்தக் காங்கிரசாவது நியாயமாக நடக்கிறதா என்றால் இல்லை. டெல்டாவை பாலைவனமாக்கும் வகையில் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம், காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்போம் என்று கர்நாடகாவில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்து நீட் தேர்வு பற்றி பேசும் ராகுல் காந்தி, மேகதாது அணை மற்றும் காவிரி பிரச்சனை பற்றி எதுவும் பேசுவதில்லை. தி.மு.க.வும் அதை வேடிக்கை பார்க்கிறது.

    அரசியலில் எதுவும் சாத்தியம்... எப்படி வேண்டுமானாலும் கூட்டணிகள் அமைக்கலாம் என்ற அருவெறுக்கத்தக்க அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கொள்கையற்ற, முரண்பட்ட, சுயநலமான, மக்கள் விரோத கூட்டணிகளை அமைக்காமல், தமிழக மக்களையும் அம்மாவின் உண்மை விசுவாசிகளையும் மட்டுமே நம்பி களம் காண்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்.

    ஆபத்து அரசியல் நடத்தும் மதவாத பா.ஜனதாவையும், அப்படிப்பட்ட கட்சியுடன் தேர்தல் உறவு இல்லை என்று சொல்லிவிட்டு, தேர்தலுக்குப் பின்பு ஒட்டிக்கொள்ளும் வகையில் பா.ஜனதாவுடன் ரகசிய உறவைப் பேணிவரும் இரட்டை வேட தி.மு.க.வையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவர்களைப் புறக்கணிப்பதன் மூலம், மக்கள் விரோத ஆட்சி ஒழிவது மட்டுமல்ல... சுயநல, சந்தர்ப்பவாத, இரட்டை வேட அரசியலும், கூட்டணி என்ற பெயரில் நடக்கும் அருவெறுக்கத்தக்க பேர அரசியலும் ஒழிக்கப்படும்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #AMMK #TTVDhinakaran
    பெரம்பூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த 210 பரிசுப் பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #Loksabhaelections2019 #AMMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் பெரம்பலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலையொட்டி சென்னையில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    பெரம்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் சீதாராம் நகர் 7-வது தெருவில் உள்ள முத்தமிழ் நகர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் சிலர் வாக்காளர்களுக்கு மிட்டாய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டியை கொடுப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    பறக்கும்படை அதிகாரிகள் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக 210 பரிசுப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக அ.ம.மு.க.வை சேர்ந்த மணிவண்ணன், வட்டச் செயலாளர் மாதவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Loksabhaelections2019 #AMMK
    பாலியல் புகாரில் சிக்கிய பெரியகுளம் சட்டசபை தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமுவுக்கு மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. #KathirKamu #MaduraiHCBench
    மதுரை:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு. பெரியகுளம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

    இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2015-ம் ஆண்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்த பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி, கடந்த 8-ந்தேதி தேனி அனைத்து மகளிர் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அ.ம.மு.க. சார்பில் போட்டியிடுகிறேன். எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.



    மனுதாரர் வக்கீல் ஆஜராகி, “மனுதாரர் முக்கியமான அரசியல் கட்சி வேட்பாளராக உள்ளார். அவர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அந்த சமயத்தில் அவரை போலீசார் திடீரென கைது செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

    அதற்கு அரசு வக்கீல், இன்று (வெள்ளிக்கிழமை) வரை மனுதாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று உறுதியளித்தார். இதையடுத்து முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை 12-ந்தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன்படி இந்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மனுதாரரை தேர்தல் முடியும் வரை கைது செய்யக்கூடாது. தேர்தல் முடிந்த பின்பு மனுதாரருக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைக்கலாம். சம்பந்தப்பட்ட போலீசாரின் விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார். #KathirKamu #MaduraiHCBench
    தேர்தல் விதிகளை மீறியதாக டி.டி.வி. தினகரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #LokSabhaElections2019 #TTVDhinakaran
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் வ.து.ந. ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட முக்கிய பகுதிகளில் அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடந்த 9-ந் தேதி திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக வாகனங்களில் பேரணியாக வந்ததாக புகார் எழுந்தது.

    இது குறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ்குமாரி முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி டி.டி.வி. தினகரன், வேட்பாளர் வ.து.ந. ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    அ.ம.மு.க. வேட்பாளர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண், கதிர்காமு தனக்கு மயக்க ஊசி செலுத்தி பின்னர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக கூறியுள்ளார்.
    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு (வயது 61). இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு டி.டி.வி அணிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த தேர்தலிலும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மீது பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

    கடந்த 14.10.2015-ம் தேதி தேனி அல்லி நகரத்தில் தனியார் ஆஸ்பத்திரி நடத்தி வந்த டாக்டர் கதிர்காமு தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.

    எனது முழங்கால் வலிக்கு அவரிடம் சிகிச்சைக்கு சென்றேன். அப்போது எனக்கு மயக்க ஊசி போட்டதால் நான் மயங்கி விட்டேன். அப்போது என்னை பாலியல் பலத்காரம் செய்து விட்டார்.

    இது குறித்து பின்னர் அவரிடம் நியாயம் கேட்டபோது எனது ஆபாச வீடியோவை எடுத்து வைத்துள்ளதாகவும் தான் அழைக்கும் போது ஆசைக்கு இணங்காவிட்டால் இதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டினார்.

    இதனை கூறியே என்னை பல முறை ஆசைக்கு இணங்க வைத்தார். அதன் பிறகு எம்.எல்.ஏ. ஆகி விட்டார். அதன் பிறகு நான் அவரை தொடர்பு கொண்டு எனது ஆபாச வீடியோவை என்னிடம் கொடுத்து விடுமாறு கெஞ்சி கேட்டேன். கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சென்ற போது அங்கு மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அவர்களும் என் மீது ஆசைப்படுவதாக கதிர்காமு கூறி மிரட்டினார்.

    இவ்வாறு அவர் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

    தாமதமாக புகார் அளித்தது குறித்து அந்த பெண்ணிடம் கேட்ட போது கதிர்காமு எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் நான் அச்சத்தில் இருந்தேன். பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வெளியான பிறகு போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் தைரியமாக புகார் கொடுத்துள்ளேன். மேலும் எனது புகார் மனுவிலும் எனது பெயரை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டு எனது உயிருக்கு பாதுகாப்பு கோரியுள்ளேன் என்றார்.

    இதனையடுத்து பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 417, 376, 505(1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் தேனி அனைத்து மகளிர் போலீசார் டாக்டர் கதிர்காமு மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இது குறித்து கதிர்காமுவிடம் கேட்டபோது, என் மீது கொடுக்கப்பட்ட புகார் முற்றிலும் பொய்யானது. தோல்வி பயம் காரணமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்குமார், தம்பி ஓ.ராஜா ஆகியோர் தூண்டுதலின் பேரில் பொய் வழக்கு போட்டுள்ளனர் என்றார்.
    பெரியகுளம் சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #AMMK #Kathirkamu
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கதிர்காமு. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தேனி அல்லிநகரத்தில் உள்ள தனது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணை மயக்கமடைய வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து தேனி அல்லி நகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    பின்னர் கதிர்காமு அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இவர் சசிகலா அணிக்கு தாவினார். இதனையடுத்து இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் பெரியகுளம் தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக களத்தில் உள்ளார்.

    தற்போது கதிர்காமு மீது தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் 35 வயது மதிக்கத்தக்க தன்னை கதிர்காமு ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் புகாரில் கூறியுள்ளார்.



    அதன் பேரில் கதிர்காமு மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சம்பவத்துக்கு 4 ஆண்டுகள் கழித்து தாமதமாக புகார் அளிப்பதன் காரணம் குறித்து அந்த பெண்ணிடம் கேட்ட போது பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்தே தனக்கு உயிர் பாதுகாப்பு, மான பாதுகாப்பு கேட்டு புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    இதனிடையே கதிர்காமு தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அந்த காட்சியில் இருப்பது டாக்டர் கதிர்காமுதானா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து டாக்டர் கதிர்காமு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    என் மீது அளிக்கப்பட்ட புகார் முற்றிலும் பொய்யானது. தோல்வி பயம் காரணமாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் தூண்டுதலின் பேரில் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர். நான் யாரையும் மிரட்டியதும் இல்லை. இது போன்ற ஒரு சம்பவமும் நடக்கவும் இல்லை. இருந்தபோதும் இந்த பொய் வழக்கை சந்திக்க நான் தயாராக உள்ளேன் என்றார். #AMMK #Kathirkamu
    தேனி தொகுதியில் தனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

    தினகரன் கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ள இவர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இப்போது எம்.பி. தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்த தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    3 பேருமே பிரபல நபர்கள் என்பதால் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தேனி உள்ளது.

    தேர்தல் போட்டி தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அதுவும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் அந்த கட்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் இப்போது எங்களையே ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் கட்சியில் மிகவும் ஜுனியர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் என்ற ஒரே காரணத்தினால் அவரை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

    நான் அ.தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை அ.தி.மு.க.வில் முக்கிய பிரமுகராக இருந்தவர். அவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் சீனியர்.



    டி.டி.வி.தினகரனால் தான் ஓ.பன்னீர்செல்வம் அரசியலிலும், அரசிலும் முன்னுக்கு வந்தவர். இப்போது அவருக்கு எதிராகவே மாறி இருக்கிறார். இது அவருக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும்.

    இந்த தொகுதியில் உள்ள நிலைமை எனக்கு சாதகமாக இருக்கிறது. டி.டி.வி.தினகரன் இந்த தொகுதி எம்.பி.யாக இருந்து சிறப்பான சேவைகளை செய்தார். அவர் எல்லா தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றார்.

    இப்போது இங்குள்ள நிலவரப்படி அ.தி.மு.க. தனது செல்வாக்கை இழந்து விட்டது. அவர்கள் எல்லாம் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக மாறி விட்டார்கள். எனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. களத்திலேயே இல்லை.

    ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க.வை நாங்கள் தோற்கடித்தோம். அதுபோன்ற நிலை இங்கும் ஏற்படும். இந்த தொகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அவர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது. கடந்த தேர்தலில் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றது. அதே வேட்பாளரை இப்போது ஏன் நிறுத்தவில்லை?

    ஓ.பன்னீர்செல்வம் குடும்ப அரசியலை எதிர்ப்பதாக கூறுகிறார். ஆனால் தனது மகனை வேட்பாளராக்கி இருக்கிறார். தனது தம்பியை ஆவின் சேர்மனாக்கி இருக்கிறார்.

    இவ்வாறு தங்க தமிழ்ச் செல்வன் கூறினார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பொன்னாடை, பூங்கொத்து வேண்டாம் என்று கட்சி தொண்டர்களுக்கு டி.டி.வி.தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #AMMK #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜனநாயக நாட்டில் மிகச்சாதாரணமாக மற்றவர்களுக்கு கிடைக்கிற உரிமைகளைக் கூட நாம் உச்சநீதிமன்றம் வரை சென்றுதான் பெற வேண்டிய நிலையை துரோகிகளும், தமிழ்நாட்டின் எதிரிகளும் உருவாக்கி இருக்கிறார்கள். இவ்வளவுக்கு பிறகும் நம்மை எப்படியாவது வீழ்த்திட வேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக எந்த எல்லைக்கும் போவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

    பிரசாரத்திற்கும், நம்முடைய புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் மிகக்குறைந்த கால அளவே இருக்கிறது. இப்போது நமக்கு ஒவ்வொரு மணித்துளிகளும் முக்கியம். நொடிப்பொழுதைக் கூட வீணடிக்காமல் தேர்தல் களத்தில் மட்டுமே கவனத்தை வைக்க வேண்டிய நேரம் இது. அதற்காக உங்களின் அன்பான முகங்களைத் தரிசிப்பதற்காகவும், மக்களைச் சந்தித்து நம்முடைய வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவும் மீண்டும் ஒரு முறை புறப்பட்டிருக்கிறேன்.

    இந்த பிரச்சார பயணத்தின் போது பட்டாசு வெடிப்பதில், பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுப்பதில், புகைப்படம் எடுப்பதில் பொன்னைவிட மேலான நம்முடைய நேரத்தை நாமே விரயமாக்கிடக்கூடாது.

    மேலும் தேர்தல் பிரசார பயணத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் தோரணக் கொடிகளை முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். இதைப் போலவே நூற்றுக்கணக்கான வாகனங்களில் என்னைப் பின்தொடர்ந்து வரும் தங்களின் ஆர்வம் புரிகிறது.

    ஆனால் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாதல்லவா? அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு நம்மால் எந்தத் தொல்லையும் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். இன்னொரு பக்கம் பட்டாசுகள், வாகனங்கள் போன்றவற்றை நம்முடைய வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் சேர்த்துவிடுவார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

    40 பாராளுமன்றத் தொகுதிகள், 19 சட்டப் பேரவைத் தொகுதிகள் ஆகியவற்றை மொத்தமாக வென்றெடுப்பதில் மட்டுமே உங்கள் ஒவ்வொருவரின் முழுக்கவனமும் இருக்க வேண்டும்.

    நம்மை வீழ்த்தத் துடிக்கும் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் மத்தியில் நம்முடைய ஒவ்வொரு மணித் துளியும் அந்த வெற்றிக்கு முக்கியம். உலகமே போற்றும் வெற்றியை நமதாக்கிடுவோம். நாம் புரட்சித்தலைவி அம்மாவின் பிள்ளைகள் என நாட்டுக்கு உரக்கச் சொல்லிடுவோம்.

    இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.  #LokSabhaElections2019 #AMMK #TTVDhinakaran
    ×