புதிய இயல்பு வாழ்க்கை வாழ மக்கள் பழகி கொள்ள வேண்டும்- டிடிவி தினகரன்
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கொரோனா தடுப்பு தொடர்பாக ஊரடங்கு காலத்தில் அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் உத்தரவுகள் ஒருபுறம் இருக்க... மக்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து, ஊரடங்கு கால கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்று நீடிக்கும் நேரத்திலும் அதன் தாக்கம் குறைந்த பிறகும் கூட, ஒரு ‘புதிய இயல்பு வாழ்க்கை’ வாழத் தயாராகும்படி உலக சுகாதார நிறுவனம் சொல்லியிருப்பதை மக்கள் கவனத்தில்கொண்டு அந்த வாழ்க்கையை வாழத் தயாராக வேண்டும்.
அதாவது, வெளியில் செல்லும்போதெல்லாம் மாஸ்க் அணிவது, தனி மனித விலகலை தொடர்ந்து கடைபிடிப்பது, கூட்டமாக ஓரிடத்தில் கூடுவதைத் தவிர்ப்பது, அது போன்ற இடங்களை நெருங்காமல் இருப்பது உள்ளிட்ட பழக்க வழக்கங்களை கொரோனா நோய் ஆபத்து முழுமையாக நீங்கும் வரை நிரந்தரமாக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருப்பதை மக்கள் உணர்ந்து செயல்பட்டு, இந்தப் பெருந்தொற்று நோயிலிருந்து முழுமையாக விடுபட்டு, ஆரோக்கியமான தமிழகத்தைப் படைக்க, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

