search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ByElection"

    • மூன்று சுயேட்சை எம்எல்ஏ-க்கள் மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
    • பின்னர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து போட்டியிட்டனர்.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது சுயேட்சையாக போட்டியிட்ட 3 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆகினர்.

    சமீபத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த நிலையில் மூன்று பேரும் பாஜக கட்சியில் இணைந்தனர்.

    இதனால் மூன்று தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 10-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் இரண்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் பாஜக வெற்றி பெற்றது.

    இந்த மூன்று இடங்களிலும் பாஜக அதே நபர்களை களம் இறக்கியது. அவர்களில் ஒருவர் மட்டும்தான் வெற்றி பெற்றார். இதன்மூலம் இமாச்சல பிரதேச தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக சுயேட்சை எம்.எல்.ஏ. இல்லாத சட்டமன்றம் ஆகியுள்ளது.

    தெக்ரா தொகுதியில் முதல்வர் சுகுவின் மனைவி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மேற்கு வங்காளத்தில் பாஜக கைவசம் இருந்த 3 தொகுதிகளை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
    • பாஜக ஆளும் உத்தரகாண்டில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடுகிறது.

    மேற்கு வங்காளம் (4), இமாச்சல பிரதேசம் (3), தமிழ்நாடு (1), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் (2), பீகார் (1), மத்திய பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 13 தொகுதிகளில் சுமார் 11 தொகுதிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கைப்பற்றுகிறது.

    ஏழு மாநிலங்களில் மத்திய பிரதேசம், உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் பாஜக ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். இந்த மூன்று மாநிலங்களில் நான்கு இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 3 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இருக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் நான்கு தொகுதிகளிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பாஜக-விடம் இருந்த மூன்று தொகுதிகளை தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. இவர் இந்தியா கூட்டணியில் இடம் பெறவில்லை என்றாலும் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    தமிழகத்தில் திமுக தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக-வை வீழ்த்தியுள்ளது.

    மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அமர்வார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தீரன் ஷா முன்னிலை பெற்று வந்தார். இறுதியில் பாஜக வெற்றி பெற்றது.

    உத்தரகாண்டில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கே உள்ள இரண்டு தொகுதிகளான பத்ரிநாத் மற்றும் மங்க்லாயுர் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஒரு தொகுதியில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கம்லேஷ் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வரும் நிலையில், பாஜக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

    பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார். இங்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

    பீகாரில் நிதிஷ் குமார் கட்சி வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டல் முன்னிலை வகிக்கிறார்.

    சமீபத்தில் முடிவடைந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி பாஜகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனால் பாஜகவால் தனியாக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளார்.

    • இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது.
    • வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

    இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.

    இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.

    இதனிடையே அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு அனுப்பி வைத்து, அறையை பூட்டி சீல் வைத்தார்.

    இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    அதன்படி இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படுகிறது. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

    இந்த வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கஞ்சனூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.
    • வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி அருகே அன்னியூரை அடுத்த கொசப்பாளையத்தை சேர்ந்தவர் கனிமொழி (வயது42) இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் ஏழுமலை என்பவருடன் கனிமொழிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் திருமணம் செய்யாமலேயே இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இதற்கிடையே கனிமொழிக்கு மற்றொருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ஏழுமலை கனிமொழியை கண்டித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் கனிமொழி தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் கனிமொழி மீது ஏழுமலை ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி கனிமொழி கொசபாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று 11.30மணியளவில் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஏழுமலை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கனிமொழியை கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கனிமொழிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்த போலீசார் கனிமொழியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கனிமொழிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக கஞ்சனூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏழுமலை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வாக்குசாவடியில் வாக்களிக்க வந்த பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாறுதல் நம்மிடமிருந்து தான் வர வேண்டும்.
    • நாம் ஒன்றை திரும்ப திரும்ப சொன்னால் அதில் வெற்றி பெறலாம்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பனையபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலகத்திற்கு விவசாயத்தை கற்றுக் கொடுத்தவன் தமிழன். எதிர்காலத்தில் தம்பிகள் வரலாற்றுப் பாதையில் பயணிக்க வேண்டும். இன்று சாதி, மதப்பற்று பெருகி விட்டது. எதை மறைக்கப்பட வேண்டுமோ அதை உயர்த்திக் காண்பிக்கிறார்கள். ஏற்றுக்கொள்ள வேண்டியவகைள் மறைக்கப்படுகின்றன.

    துணைக்கண்டத்தில் சாதி, மத அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. தாய் மீதும், தம்பி மீதும் என்னை விட அக்கறை உள்ளவன் யாரும் இல்லை. நான் இறந்தால் கூட என் கடமை இந்த இன மக்களுக்கு நான் எடுத்த பிறவி பயனை செய்து விட்டேன் என பழியில்லாமல் என் உயிர் மூச்சிபோகும்.

    மாறுதல் நம்மிடமிருந்து தான் வர வேண்டும். ஒன்றை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும். இனிய சொல் இரும்பு கதவை கூட திறக்கும் என்பார்கள். அப்படி நாம் ஒன்றை திரும்ப திரும்ப சொன்னால் அதில் வெற்றி பெறலாம். நீ வெல்லும் வரை பேசு, வென்றுவிட்ட பின் செயலாற்ற வேண்டும். இப்போது உள்ள அரசியல் அரசு மத அரசாக செயல்படுகிறது. மதம் எப்படி அரசாளும்? மனிதம் தான் அரசாள வேண்டும். அரசியல் முழுக்க முழுக்க மக்கள் சேவையாக இருக்க வேண்டும். மானிடத்தில் மதத்தின் வேறாக சாதி உள்ளது. மனிதர்களுக்கு எதிரி சாதி. சாதிகள் குடிகளின் அடையாளம். தமிழ் தான் என் இனத்தின் அடையாளம். இவன் ஜெயிச்சிடுவானோ என்ற பயம் மட்டும் அவர்களிடத்தில் இருக்கிறது. இது ஒன்று போதும் 2026-ல் வெற்றி பெற்றிடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அரசியல் கட்சியினர் மீது தேர்தல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
    • நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாராயணசாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி இறுதிக்கட்ட பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் ஓய்கிறது.

    இதற்கிடையே தேர்தல் நடத்தை விதிகளை மீறிய அரசியல் கட்சியினர் மீது தேர்தல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி வாக்கூரில் அனுமதியின்றி பிரசாரம் செய்த நாம் தமிழர் கட்சி மாவட்டசெயலாளர் பூபாலன், விக்கிரவாண்டி பஸ் நிறுத்தம் அருகில் அனுமதியின்றி கட்சிக்கொடி கம்பங்களை நட்டதாக நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாராயணசாமி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதுபோல் விராட்டிக்குப்பத்தில் விளம்பர பதாகை வைத்த தி.மு.க. நகர இளைஞரணி செயலாளர் கலைச்செல்வன், சானாந்தோப்பில் கொடி தோரணங்களை கட்டிய பா.ம.க. கிளை செயலாளர் மதியழகன், கடையத்தில் கொடி தோரணங்களை கட்டிய தி.மு.க. நிர்வாகிகள் தேவேந்திரன், குணசேகரன், பா.ம.க. நிர்வாகி கணேசன், ஆரியூரில் கொடிக்கம்பம் நட்ட பா.ம.க. கிளை செயலாளர் விஜயகுமார், அதே பகுதியில் விளம்பர பதாகை வைத்த தி.மு.க. கிளை செயலாளர் ராகுல், சி.என்.பாளையத்தில் விளம்பர பதாகைவைத்த தி.மு.க. கிளை செயலாளர் முருகன், அயினம்பாளையத்தில் விளம்பர பதாகை வைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுந்தரவளவன், செ.குன்னத்தூரில் விளம்பர பதாகை வைத்த தி.மு.க. நிர்வாகி புஷ்பா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 12 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தமிழகத்தில் போதைப்பொருள் பரவலாக அதிகரித்து உள்ளது.
    • தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று கட்சியாக பா.ஜ.க. உள்ளது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் எச்.ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-

    கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மாடுகள் உள்ளன. இவைகள் சரியான முறையில் பராமரிப்பு இல்லாததால், கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் இடத்தில் கோசாலை அமைத்து பசுக்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் கோவிலை விட்டு அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்பதனை வலியுறுத்தி மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் 2000 கோவில்கள் சிதிலமடைந்து உள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டு உள்ளது. தேவாலயமோ அல்லது மசூதியோ இது போன்று சிதிலமடைந்து உள்ளது என தெரிவிக்க முடியுமா? ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் மக்கள் அளிக்கும் கோவில் பணத்தை சுரண்டுகின்றனர்.

    தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பாதிப்பு மற்றும் விஷ சாராய சாவு நிறைந்த மாநிலமாக உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் இறப்பு தொடர்பாக உளவுத்துறைக்கு தகவல் தெரியும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் ஏன் சரியான முறையில் பாதுகாப்பு வழங்கவில்லை?. மேலும் சேலத்தில் திமுக கவுன்சிலரின் கணவர் அ.தி.மு.க. நிர்வாகியை கொலை செய்து உள்ளார்.

    தமிழகத்தில் போதைப்பொருள் பரவலாக அதிகரித்து உள்ளது. இதனை கண்டித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவாரா? ஆகையால் இவர்களின் நாடகம் மக்களுக்கு தெரிந்து வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் முழுமையாக இவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.

    கடலூரில் தற்போது பா.ம.க. நிர்வாகி ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்ய முயன்று உள்ளனர். தமிழகத்தில் காவல்துறை கட்டுப்பாட்டில் இல்லை. தமிழக முழுவதும் கூலிப்படை சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். இதனை பார்க்கும் போது முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வருகிறது. மேலும் அவரது கட்டுப்பாட்டில் அரசு மற்றும் கட்சி இல்லை என்பது தெரிய வருகின்றது.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்று கட்சியாக பா.ஜ.க. உள்ளது. விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க.விற்கு மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பா,ஜ.க. மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டு சென்றனர்.
    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு, தி.மு.க., நாம் தமிழர் கட்சியினரை சமாதானப்படுத்தினர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட தொரவி கிராமத்தில் தி.மு.க.வினர் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் பிரசாரத்தில் ஈடுபட திரவுபதி அம்மன் கோவில் அருகே ஒன்று திரண்டு நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியில் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டு சென்றனர். தி.மு.க.வினர் நிற்பதை பார்த்த நாம் தமிழர் கட்சியினர், அங்கே நின்று பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது தி.மு.க.வை தாக்கி பேசியதால் தி.மு.க.வினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு, தி.மு.க., நாம் தமிழர் கட்சியினரை சமாதானப்படுத்தினர். இருந்த போதும் போலீசாரின் முன்னிலையிலையே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் நெட்டித் தள்ளிக்கொண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • தி.மு.க.வுக்கு பா.ம.க. கடும் போட்டியை ஏற்படுத்தி இருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • நாம் தமிழர் கட்சியும் அ.தி.மு.க. வினரின் ஓட்டுகளை பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10 -ந்தேதி நடைபெறுவதையொட்டி அங்கு பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

    தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ள நிலையில் அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்துள்ளது.

    இதைதொடர்ந்து அ.தி.மு.க.வினரின் ஓட்டு யாருக்கு? என்கிற எதிர் பார்ப்பு தேர்தல் களத்தில் அதிகரித்துள்ளது.

    விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க.வினர் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பிலேயே ஈடுபடுவார்கள், இரட்டை இலையை தவிர வேறு எந்த சின்னத்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்று அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் உள்ளூர் அ.தி.மு.க.வினர் இடைத்தேர்தலில் ஓட்டு போடுவதற்கு தயாராகி வருவதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே அவர்கள் யாருக்கு ஓட்டு போடப்போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்பு தொகுதி முழுவதும் மட்டுமின்றி அரசியல் களத்திலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

    விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி 93,730 வாக்குகளும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 84,157 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். 9,573 வாக்குகள் வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருந்தது.


    முன்னதாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 1 லட்சத்து 13,766 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அப்போது தி.மு.க.வுக்கு 62,842 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. 2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற நிலையில் அ.தி.மு.க. 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்துள்ளது. இப்படி விக்கிரவாண்டி தொகுதியில் இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களிலும் தி.மு.க.வுக்கு அ.தி.மு.க கடும் போட்டியை ஏற்படுத்தி வென்றும் காட்டியுள்ளது.

    இதனால் அ.தி.மு.க. வினரின் ஓட்டுகள் பா.ம.க. வுக்கு கிடைத்தால் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்பதே அக்கட்சியின் கணக்காக உள்ளது.

    இதை தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அ.தி.மு.க.வினர் பா.ம.க.வுக்கு ஓட்டு போட வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டார். பிரசார பேனர்களிலும் ஜெயலலிதாவின் படத்தை போட்டு பா.ம.க. வினர் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

    அக்கட்சி வேட்பாளரான சி.அன்புமணி மாநில வன்னியர் சங்க துணை தலைவராக இருந்து வருகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் 2016-ம் ஆண்டு பா.ம.க. தனித்து போட்டியிட்ட போது இவர் 41,428 ஓட்டுகளை பெற்றிருக்கிறார். வன்னியர் சமூகத்தினர் அதிக அளவில் உள்ள இந்த தொகுதி பா.ம.க.வுக்கு சாதகமான தொகுதியாகவே பார்க்கப்படும் நிலையில் அ.தி.மு.க.வில் உள்ள வன்னியர்களும் பா.ம.க. வேட்பாளருக்கே ஓட்டு போட தயாராகி வருவதாகவே அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.


    பா.ம.க. வேட்பாளரான சி.அன்புமணி வன்னியர் சங்கத்தில் செயல்பட்டு வருவதால் கட்சி பேதங்களை தாண்டி அவருக்கு அ.தி.மு.க.வினர் நிச்சயம் ஓட்டு போடுவார்கள் என்றே கூறப்படுகிறது. இதன் மூலம் விக்கிரவாண்டியில் தி.மு.க.வுக்கு பா.ம.க. கடும் போட்டியை ஏற்படுத்தி இருப்பதாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. ஏற்கனவே இடம் பெற்று தேர்தலை சந்தித்திருப்பதால் அந்த பாசத்தில் அ.தி.மு.க.வில் உள்ள 4 பேரில் 2 பேர் நிச்சயம் பா.ம.க.வுக்கு ஓட்டு போடுவார்கள் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இப்படி போட்டி கடுமையாகி இருப்பதாலேயே விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெறும் முனைப்புடன் தி.மு.க. அமைச்சர்கள் அங்கு பம்பரமாக சுழன்று பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இப்படி அ.தி.மு.க.வினரின் ஓட்டை பெறுவதற்கு பா.ம.க. முழு அளவில் காய் நகர்த்தி உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியும் அ.தி.மு.க. வினரின் ஓட்டுகளை பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது.

    சென்னையில் நடந்த அ.தி.மு.க. உண்ணா விரத போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் நிர்வாகி ஒருவர் நேரில் சென்று ஆதரவு அளித்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமி நன்றியும் தெரிவித்துக் கொண்டார். இதனால் அ.தி.மு.க.வினரில் சிலர் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது.

    எப்போதுமே இடைத்தேர்தல் களத்தில் ஆளும் கட்சிக்கு வெற்றி என்கிற நிலையே காணப்படும். இதனால் மற்ற எந்த விஷயங்களும் அங்கு பேசு பொருளாக இருக்காது. ஆனால் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதற்கு மாறாக அ.தி.மு.க. வினரின் ஓட்டு யாருக்கு? என்பதே பிரதான பேச்சாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • 200 வாக்காளர்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்து தினமும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர்.
    • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

    விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

    இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

    அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.


    தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காக அமைக்கப்பட்ட அக்கட்சியின் தேர்தல் பணிக் குழுவில் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, செஞ்சி மஸ்தான், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 25 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    சட்டசபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அனைவரும் விக்கிரவாண்டியில் முகாமிட்டு வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு கிராமத்திலும் 2 வீதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று பிரிக்கப்பட்டு அங்குள்ள வாக்காளர்களின் தேவையை நிறைவேற்றி வருகின்றனர்.

    200 வாக்காளர்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்து தினமும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டீ, காபி கொடுத்து உபசரிக்கின்றனர். வடை, பஜ்ஜி உள்ளிட்டவைகளும் இலவசமாக கிடைக்கிறது.


    காலை, மாலையில் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து செல்லுங்கள், உங்கள் பகுதி குறைகளை சொன்னால் நிறைவேற்றி தருகிறோம் என்று கூறுகின்றனர். இதனால் தி.மு.க. தேர்தல் அலுவலகங்களில் எப்போதும் கூட்டம் 'களை' கட்டுகிறது.

    பா.ம.க.வை பொறுத்தவரை டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார பலமாக ஒவ்வொரு பகுதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க.வை கடுமையாக சாடுகிறார்.

    மாநில, மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.வினர் எப்படி பிரசாரம் செய்கிறார்கள் என்பதை கண்காணித்து அன்புமணி ராமதாசுக்கு தகவல் கொடுக்கிறார்கள்.

    அதன் மூலம் பிரசார வியூகம் மாற்றப்படுகிறது. மதுவின் தீமைகளை எடுத்துக் கூறி பெண்களின் வாக்குகளை மொத்தமாக பெற்றிட டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சவுமியா ஆகியோரும் தீவிரமாக வாக்கு சேகரிக்கின்றனர்.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். பா.ம.க. எங்கெல்லாம் எழுச்சியாக உள்ளதோ அங்கு கூடுதலாக தி.மு.க. வினர் வரவழைக்கப்பட்டு களப் பணியாற்றுகின்றனர்.

    மொத்தத்தில் இந்த தேர்தலில் சாதனைகளை சொல்லி தி.மு.க.வினர் ஓட்டு கேட்கும் நிலையில் வேதனைகளை சொல்லி பா.ம.க. வினர் ஆவேசமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு செல்லும் என்பதை பொறுத்தே வெற்றி அமையும் என தெரிகிறது.

    • அ.தி.மு.க. பிரமுகர்களை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
    • தி.மு.க.வை விழ்த்துவது தான் அ.தி.மு.க.வின் நோக்கம்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெறுகிறது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதனை தொடர்ந்து அக்கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வும் போட்டியிடவில்லை

    இதனால் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வினரின் வாக்குகளை சேகரிக்க பா.ம.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அ.தி.மு.க. பிரமுகர்களை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதே போல தே.மு.தி.க. பிரமுகர்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார்.

    இந்த நிலையில் பா.ம.க. சார்பில் வாக்கு சேகரிக்கும் போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் அச்சிடப்பட்ட நோட்டீஸ், பேனர்களை பா.ம.க.வினர் எடுத்து செல்கின்றனர். மேலும், தி.மு.க.வை விழ்த்துவது தான் அ.தி.மு.க.வின் நோக்கம். இதனை நிறைவேற்ற மாம்பழம் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார கூட்டங்களில் பேசி அ.தி.மு.க.வினரிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

    • நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர்.
    • மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.

    தமிழகத்தையும், தமிழர்களையும் காப்பாற்றுவதற்காக நாம் தமிழர் கட்சி சமரசம் இல்லாமல் கடந்த 13 ஆண்டுகளாக எவ்வித அரசியல் பின் புலமும் இல்லாமல் போராடி வருகிறது. நாட்டில் நடப்பது தவறு என்று தெரிந்தும் கூட்டணி கட்சியினர் துணை போய் வருகின்றனர். தேர்தல் களத்தை வைத்து தெளிவு பெற வேண்டும். இந்தியம் என்பது இந்தியை திணிக்கும், திராவிடம் அதை ஆதரிக்கும். அதனால் நாம் தமிழர் தமிழ் தேசியம் பேசுகிறது.

    தற்போது எந்த இடத்திலும் தமிழ் இல்லை. திராவிடம் தமிழர்களை பிரிக்கும். தமிழர்கள் ஒன்றுபட்டால் திராவிடம் இருக்காது. மத்திய அரசின் திட்டங்கள் எதிலும் தமிழ் இல்லை. இதை கேட்கும் தைரியம் திராவிடத்துக்கு இருக்கிறதா என்பதை மக்கள் அறிய வேண்டும். தமிழ் தேசியத்துக்கும், திராவிடத்துக்கும் பல்வேறு கருத்தியல் முரண்பாடு உள்ளது. தமிழ்மொழி, பாராளுமன்ற கட்டிடத்தில் இல்லை. அது குறித்தும் தி.மு.க. பேசவில்லை. திராவிடம், தேர்தலின் போது பணத்தை முன்நிறுத்தும். ஆனால் தமிழ் தேசியம் மானத்தையும், தன்மானத்தையும் முன்னிறுத்தும்.

    சமூகநீதி குறித்து பேசும் தி.மு.க. மாநில உரிமைகளையெல்லாம் விட்டுக்கொடுத்து விட்டனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? நாங்கள் கேட்பது இடஒதுக்கீடு அல்ல, இடபங்கீடு தான் கேட்கிறோம். இதை மாநில அரசு செய்யலாம் என உரிமை உள்ளபோது, மத்திய அரசிடம் இந்த உரிமையை திராவிடம் அடமானம் வைக்கிறது. அரசியல் மாற்றம் இலவசங்களை அளித்து மக்களை அடிமையாக்கி வைத்துள்ள தி.மு.க.வுக்கு முடிவு கட்ட வேண்டும்.

    நடைபெற உள்ள இந்த இடைத்தேர்தலால் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படபோவதில்லை. ஆனால் இத்தேர்தல் நாம் தமிழர் கட்சிக்கு ஒரு முன்னோட்டமாக அமையும். எனவே தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழ மக்கள், இத்தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×