என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ecuador"

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    ஈக்வடார்:

    ஈக்வடாரில் உள்ள குவாரந்தா-அம்பாடோ இடையிலான சாலையில் பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. சிமியாடுக் பகுதியில் மலைப் பாதையில் பயணித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    பள்ளத்துக்குள் பேருந்து விழுந்த விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    • மச்சாலா நகரில் உள்ள சிறையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
    • சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

    ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர்.

    எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். சிலர் மூச்சுத் திணறலால் இறந்தனர், மற்றவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டத்தை எதிர்த்து கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

    உடனடியாக ஒரு சிறப்பு போலீஸ் குழு சிறைக்குள் நுழைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

    சிறைச்சாலைக்குள் இரண்டு கும்பல்களுக்கு இடையேயான கலவரமாக இது இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

    முன்னதாக செப்டம்பர் மாத இறுதியில், அதே சிறையில் நடந்த மற்றொரு ஆயுதமேந்திய கிளர்ச்சியில் 13 கைதிகளும் ஒரு சிறைக் காவலரும் கொல்லப்பட்டனர்.

    • டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
    • போராட்டக்காரர்களின் அழுத்தத்துக்கு அரசாங்கம் அடிபணியாது.

    குயிட்டோ:

    தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பட்ஜெட்டில் பல்வேறு செலவினங்களை அரசாங்கம் குறைத்துள்ளது.

    அந்தவகையில் டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்வதாக அதிபர் டேனியல் நோபோவா அறிவித்தார். இதனால் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரித்தது.

    இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. எனவே டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி தலைநகர் குயிட்டோவில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    அதேசமயம் அதிபர் டேனியல் நோபோவாவின் ஆதரவாளர்களும் அங்கு அதிகளவில் திரண்டனர். அப்போது அதிபருக்கு எதிராக முழக்கம் எழுப்பிய போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை மீறி அங்கிருந்த பூங்காவுக்குள் நுழைய முயன்றனர்.

    இதனால் ஏற்பட்ட வன்முறையில் பலருக்கு காயம் ஏற்பட்டது. எனவே போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து அதிபர் டேனியல் நோபோவா சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போராட்டக்காரர்களின் அழுத்தத்துக்கு அரசாங்கம் அடிபணியாது. மேலும் போராட்டத்தில் வன்முறையை கையில் எடுப்பவர்கள் குற்றவாளியாகவே கருதப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    எனினும் அதிபருக்கு எதிரான போராட்டம் பல இடங்களில் தீவிரமடைந்து வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மாகாணங்களில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்கள் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளன.

    • 2026 உலக கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.
    • இந்த தொடரில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

    ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.

    நேற்று நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் மூலம் 5 முறை சாம்பியனான பிரேசில், ஈக்வடார், ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன.

    தென் அமெரிக்காவுக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில்-பராகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டம் பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ நகரில் நடந்தது. இதில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காகவின் சியஸ் ஜூனியர் கோல் அடித்தார்.

    இந்த வெற்றி மூலம் பிரேசில் அணி 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 23-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஈக்வடார்-பெரு அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இதன் மூலம் ஈக்வடார் அணியும் 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 5-வது தடவையாக முன் னேறி இருக்கிறது.

    மற்ற ஆட்டங்களில் பொலிவியா 2-0 என்ற கோல் கணக்கில் சிலியையும் ,உருகுவே 2-0 என்ற கணக் கில் வெனிசுலாவையும் தோற்கடித்தன. அர்ஜென்டினா-கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.

    ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியா-சவுதி அரேபியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் அந்த அணி 'சி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா 7-வது முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ளது.

    • எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது.
    • இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஈக்வடார் நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும் விரைவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அந்நாட்டின் நாட்டின் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

    இருப்பினும் முன்னெச்சரிக்கையாக எஸ்மரால்டாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

    மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • சுமார் 20,000 டாலர்கள் பரிசுத் தொகையைத் திருடிச் சென்றனர்.
    • குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    ஈக்வடார் நாட்டில் சேவல் சண்டையின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காயமடைந்தனர்.

    மனாபி மாகாணத்தில் வலென்சியாவில் உள்ள சேவல் சண்டை அரங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு 11:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சண்டையை பார்க்க மக்கள் கூடியிருந்த நிலையில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு சுமார் 20,000 டாலர்கள் பரிசுத் தொகையைத் திருடிச் சென்றனர்.

    காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு டொமிங்கோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்தவர்களில் 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

    இந்த தாக்குதல் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த விசாரணை நடந்து வரும் சூழலில் தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • ஆளுங்கட்சி சார்பில் டேனியல் நோபா மீண்டும் போட்டியிட்டார்.
    • வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    குயிட்டோ:

    தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் அதிபர் ஆட்சிமுறை நடைபெறுகிறது. அந்த நாட்டின் அதிபராக டேனியல் நோபா என்பவர் ஆட்சி செய்து வந்தார்.

    அவருடைய பதவிக்காலம் முடிவு அடைந்ததை தொடர்ந்து அங்கு புதிய அதிபருக்கான தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சி சார்பில் டேனியல் நோபா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இடதுசாரி கட்சி பெண் வேட்பாளர் லூயிஸ் கோன்சலஸ் போட்டியிட்டார். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்ததை தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    இதில் டேனியல் நோபா 55.6 சதவீதம் வாக்குகளை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட லூயிசை காட்டிலும் 16,468 வாக்குகள் அதிகம் பெற்று ஈகுவடார் நாட்டின் அதிபராக டேனியல் மீண்டும் தேர்வாகி உள்ளார்.

    • கடந்த ஆண்டு துணை அதிபர் வெரோனிகா அபாத் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
    • தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருவதால் அதிபரின் அதிகாரங்கள் விரைவில் சின்தியாவிடம் மாற்றப்பட உள்ளன.

    குயிட்டோ:

    தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அதிபர் டேனியல் நோபோவா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-வது கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சி சார்பில் அதிபர் டேனியல் நோபோவாவும், அவரை எதிர்த்து இடதுசாரி வேட்பாளர் லூயிசா கோன்சலசும் போட்டியிடுகின்றனர்.

    அந்த நாட்டு சட்டத்தின்படி தேர்தல் பிரசாரத்தின்போது அதிபரின் அதிகாரங்கள் துணை அதிபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால் அதிபருடன் நிலவிய கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு துணை அதிபர் வெரோனிகா அபாத் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த பதவி காலியாக இருந்ததால் அதிபரின் அதிகாரங்கள் மாற்றப்படாமல் இருந்தன. இந்தநிலையில் ஆளுங்கட்சியின் பொதுச்செயலாளரான சின்தியா கெல்லிபர்ட்டை இடைக்கால அதிபராக நியமித்து அதிபர் டேனியல் உத்தரவிட்டுள்ளார். தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருவதால் அதிபரின் அதிகாரங்கள் விரைவில் சின்தியாவிடம் மாற்றப்பட உள்ளன.

    • 2021 முதல் தற்போது வரை அங்கு 430 கைதிகள் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டனர்
    • எஸ்.என்.ஏ.ஐ. அமைப்பு ஆயுத வேட்டையை நடத்தி, சில கைதிகளை இடம் மாற்றியது

    தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு கடற்கரையோரம் உள்ள நாடு ஈக்வடார். இதன் தலைநகரம் குவிடோ.

    இந்நாட்டின் அண்டை நாடுகளான கொலம்பியா மற்றும் பெரு ஆகியவை உலகின் மிக பெரும் கொகைன் என் போதைப் பொருள் உற்பத்தியாளர்களாக இருந்த வருகின்றன. எனினும், ஈக்வடார் நாட்டில் சமீப காலம் வரை போதை பொருள் சம்பந்தமான சிக்கல்கள் தோன்றாமல் அமைதியான நாடாகவே இருந்து வந்தது. தற்போது அங்கு நிலைமை மாறி, போதை பொருள் கடத்தலில் ஒரு முக்கிய மையமாகவே இந்நாடு மாறி வருகிறது.

    போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் கொலம்பியா மற்றும் மெக்சிகோ நாட்டை சேர்ந்த பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் அந்நாட்டு சிறையில் கைதிகளாக உள்ளனர். அவர்களுக்கிடையே சண்டைகள் நடந்து வருவது வழக்கம். அண்மைக் காலமாக அங்குள்ள சிறைச்சாலைகளில் ஒரு கும்பலை சேர்ந்த கைதிகள் மற்றொரு போட்டி கும்பலை தாக்குவதும், கூட்டாக கொல்வதும் அதிகரித்துள்ளது.

    2021 முதல் தற்போது வரை அங்கு 430 கைதிகள் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்படுபவர்களின் உடல்கள் கூட முழுமையாக கிடைக்காமல் துண்டு துண்டுகளாக கிடைக்கிறது. அந்நாட்டில் சிறைச்சாலை மேற்பார்வையை எஸ்.என்.ஏ.ஐ. எனும் அமைப்பு நிர்வகித்து வருகிறது.

    எஸ்.என்.ஏ.ஐ. உத்தரவின் பேரில் சிறைச்சாலையில் கைதிகள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை தேடும் வேட்டை ஒன்று நடைபெற்று அனைத்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் நடவடிக்கையாக பல கைதிகள் இடம் மாற்றி தங்க வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், தலைநகர் குவிடோவில் கையெறி குண்டு தாக்குதலும், சிறைச்சாலை மேற்பார்வையை கவனிக்கும் எஸ்.என்.ஏ.ஐ. அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு காரிலும், அந்த அமைப்பு இயங்கிய அலுவலகத்தின் அருகில் ஒரு இடத்திலுமாக, 2 இடங்களில் குண்டு வெடிப்பும் நிகழ்ந்துள்ளது.

    இது சம்பந்தமாக கொலோம்பியா நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேரை காவல்துறை கைது செய்தது. இவர்கள் அனைவரும் முன்பே ஆள் கடத்தல், கொள்ளை, மற்றும் கொலைக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தங்கள் பலத்தை காட்ட இது போன்ற வன்முறை தாக்குதல்களில் இக்குழுக்கள் ஈடுபடுவது வழக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் அந்நாட்டு சிறைச்சாலையை சேர்ந்த 6 சீர்திருத்த நிலையங்களில் உள்ள கைதிகள் உட்பட 57 சிறை காவலாளிகள் மற்றும் 7 சிறை அதிகாரிகளை, அங்குள்ள போதை பொருள் கடத்தல் சிறை கைதிகள், சிறைக்குள்ளேயே பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.

    அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜுவான் ஜபாடா பணயமாக உள்ளவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    • ஃபிடோ எனும் கொள்ளைக்கார கும்பல் தலைவன் சிறையிலிருந்து தப்பித்தான்
    • நேரலை நிகழ்ச்சியின் போது ஆயுதம் ஏந்திய கும்பல் தொலைக்காட்சி நிலையத்தில் அத்துமீறியது

    தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையாரம் உள்ள நாடு, ஈக்வடார் (Ecuador).

    கடந்த திங்கட்கிழமை ஈக்வடாரில், பல குற்றங்களை புரிந்து சிறையில் அடைக்கப்பட்ட அடால்ஃபோ மேசியஸ் வில்லமார் (Adolfo Macias Villamar) எனும் கைதி சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டான். அவனை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. ஃபிடோ (Fito) என காவல்துறையால் அழைக்கப்படும் அவன், கோனெரோஸ் (Choneros) கும்பல் எனும் தொடர் குற்றங்களை புரிந்து வரும் ஒரு ஆயுதமேந்திய கொள்ளைக்கார குழுவின் தலைவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனை தொடர்ந்து, 60 நாட்கள் எமர்ஜென்சி அந்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அந்நாட்டின் குவாயாக்வில் (Guayaquil) பகுதியில் உள்ள தொலைக்காட்சி நிலையம் ஒன்றில், துப்பாக்கிகளை ஏந்தி, முகமூடி அணிந்த ஒரு கும்பல் அதிரடியாக நுழைந்து நிலையத்தை கைப்பற்றியது. அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அச்சத்தில் செய்வதறியாது திகைத்தனர்.

    தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த கும்பலில் 13 பேர்களை கைது செய்தனர்.

    ஈக்வடார் அதிபர் டேனியல் நொபோவா (Daniel Noboa) அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இச்சம்பவத்தால், ஈக்வடார் நாட்டின் அருகே உள்ளெ பெரு (Peru) தனது எல்லையை பலப்படுத்தி உள்ளது.

    • ஈக்வடாரின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோர்ஜ் கிளாஸ், அரசியல் தஞ்சம் கேட்டு தலைநகர் குய்டோவில் உள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தில் இருந்தார்.
    • தூதரகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததால் ஈக்வடாருடனான தூதரக உறவுகளை முறித்து கொள்ள போவதாக மெக்சிகோ அதிபர் அறிவித்துள்ளார்.

    தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோர்ஜ் கிளாஸ், அரசியல் தஞ்சம் கேட்டு தலைநகர் குய்டோவில் உள்ள மெக்சிகோ நாட்டு தூதரகத்தில் இருந்தார். அப்போது போலீசார் தூதரகத்திற்குள் நுழைந்து அவரை கைது செய்தனர்.

    தூதரகத்திற்குள் போலீசார் அத்துமீறி நுழைந்ததால் ஈக்வடாருடனான தூதரக உறவுகளை முறித்து கொள்ள போவதாக மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரேஸ் மானுவல் லோபஸ் அறிவித்துள்ளார்.

    ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர். #EcuadorHeavyRains
    குயிட்டோ:

    ஈக்வடார் நாட்டில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் உள்ள 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஈக்வடார் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமாஎ 20 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 47 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கனமழையால் சுமார் 30 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 7 ஆயிரத்து 700 கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    #EcuadorHeavyRains
    ×