என் மலர்
நீங்கள் தேடியது "president election"
- கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர்முகம்மது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
- நூர்முகம்மது 38 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது 39-வது தேர்தலை சந்திக்க உள்ளார்.
கோவை:
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்கண்ட் முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா களமிறங்கி உள்ளார்.
இந்த நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் நூர்முகம்மது என்பவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இவர் சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், வேலூர் தொகுதி எம்.பி. தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளார்.
சாத்தான்குளம், ஆண்டிப்பட்டி, திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் என பல்வேறு தேர்தல்களை சந்தித்த இவர் தற்போது ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடுகிறார். அதற்காக அவர் டெல்லி சென்று மனுதாக்கல் செய்தார்.
இதுவரை நூர்முகம்மது 38 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது 39-வது தேர்தலை சந்திக்க உள்ளார். எந்த பகுதியில் தேர்தல் நடந்தாலும் அந்த தேர்தலை நான் சந்திக்க தயாராக உள்ளேன் என்கிறார் நூர்முகம்மது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மன்னர் வேடம் அணிந்து கொண்டு வீதி வீதியாக பொதுமக்களை சந்தித்தார்.
நூர்முகம்மது
- திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது.
- யஷ்வந்த் சின்கா ஓட்டு சேகரிக்க ஐதாராபாத் வரும்போது அவரை தனியாக சந்திக்க சந்திர சேகரராவ் முடிவு செய்து உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐதாராபாத்:
ஜனாதிபதி தேர்தல் அடுத்தமாதம் (ஜூலை) 18-ந்தேதி நடக்கிறது. இதில் பாரதிய ஜனதா சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். திரவுபதி முர்முவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இதனால் அவர் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
யஷ்வந்த் சின்காவுக்கு சில மாநில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறாத தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும். தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் யஷ்வந்த் சின்காவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சந்திரசேகரராவ் அறிவித்து உள்ளார்.
நாளை யஷ்வந்த்சின்கா வேட்பு மனுதாக்கல் செய்கிறார் இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள் கேசவராவ், நாகேஸ்வர ராவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். யஷ்வந்த் சின்கா ஓட்டு சேகரிக்க ஐதாராபாத் வரும்போது அவரை தனியாக சந்திக்க சந்திர சேகரராவ் முடிவு செய்து உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
- பா.ஜனதா, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்கட்சிகளுக்கு எதிராகவோ இந்த முடிவை எடுக்கவில்லை.
லக்னோ:
பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். பா.ஜனதா, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்கட்சிகளுக்கு எதிராகவோ இந்த முடிவை எடுக்கவில்லை. எங்கள் கட்சி மற்றும் இயக்கத்தை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.
இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.
எதிர்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த்சின்கா நிறுத்தப்பட்டுள்ளார்.
- தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம் திரவுபதி முர்மு வேட்பு மனுவை அளித்தார்.
- அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், தம்பிதுரை உள்ளிட்டோரும் பாஜக ஆளும் பிற மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.
குடியரசுத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இருவரும் முக்கியத் தலைவர்களிடம் ஆதரவுக் கோரி வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம் திரவுபதி முர்மு வேட்பு மனுவை அளித்தார்.
பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், தம்பிதுரை உள்ளிட்டோரும் பாஜக ஆளும் பிற மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.
- ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு டெல்லியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.
- டெல்லி வந்த முர்மு பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட மூத்த தலைவர்களை நேற்று சந்தித்தார்.
புதுடெல்லி:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வரும் முர்மு, ஒடிசாவில் இருந்து நேற்று புறப்பட்டு புதுடெல்லி வந்தார். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், புதுடெல்லி வந்த திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களைச் சந்தித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதள பக்கத்தில் கூறுகையில், திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருப்பதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். நாட்டில் நிலவி வரும் அடிமட்ட பிரச்னைகள் பற்றிய அவரது புரிதல் மற்றும் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை சிறப்பானது என குறிப்பிட்டுள்ளார்.
- காந்தி சிலைக்கு மாலை அணிவித்த தான் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார்.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஆதரவு கேட்க உள்ளார்
திருப்பூர் :
இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுவதையடுத்து, அவர் வகிக்கும் பதவிக்கான தேர்தல் ஜூலை 18ந் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் முகமது முத்துகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திருப்பூர் பெருமாநல்லூரை சேர்ந்த முகமது முத்து தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராக உள்ளார். இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த முகமது முத்து, தான் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து வேட்புமனு வாங்கி வந்துள்ளேன், வரும் 27ந் தேதி பாராளுமன்ற வளாகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரிடம் ஆதரவு கேட்டுள்ளேன்.
அதே போன்று ஆந்திர முதல்வரிடமும் ஆதரவு கேட்டுள்ளேன். அதுமட்டுமின்றி வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஆதரவு கேட்க உள்ளேன். நான் வெற்றி பெறும் பட்சத்தில் மக்களின் நலனில் அக்கறை செலுத்துவேன். கல்வி, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். தமிழகத்தின் பெருமையை நிலைநிறுத்துவேன் என்றார்.
- ஜூலை 18-ந்தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்கனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டார். இப்போது பா.ஜ.க.வும் வேட்பாளரை அறிவித்துள்ளது.
- ‘எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.
டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற பாராளுமன்றக்குழு கூட்டத்திற்கு பிறகு திரவுபதி முர்மு பெயர் அதிகாரபூர்வ குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஜூலை 18-ந்தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்கனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டார். இப்போது பா.ஜ.க.வும் வேட்பாளரை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புக்கு பின் திரவுபதி முர்மு அளித்த பேட்டியில், "எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, என்னால் நம்ப முடியவில்லை. இந்த கட்டத்தில், அதிகம் பேச விரும்பவில்லை. நன்றி உள்ளவராக இருக்க கடமைப்பட்டுள்ளேன்.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு என்ன அதிகாரங்கள் இருந்தாலும், நான் அதற்கேற்ப செயல்படுவேன். தேர்தலில் வெற்றி பெற அனைத்துக் கட்சிகள், மாநிலங்கள் ஆதரவைக் கோருகிறேன். எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நான் பெறுவேன்."
இவ்வாறு அவர் கூறினார்.
- குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ம.க.வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் திரவுபதி முர்முவை ஆதரிப்பது என்று பா.ம.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
- இந்தியக் குடியரசின் 72 ஆண்டு கால வரலாற்றில் பழங்குடியின பெண்மணி ஒருவரை முதன்முறையாக குடியரசுத் தலைவராக்க ஆதரவளிப்பதில் பா.ம.க. மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறது.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ம.க. தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாசை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பா.ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டாவும் நேற்று மாலை தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுனராகிய திரவுபதி முர்முவை களமிறக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு பா.ம.க. ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்தக் கோரிக்கை குறித்து ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் இன்று காலை கலந்தாய்வு நடத்தினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி ஆவார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், பல தடைகளை முறியடித்து பொதுவாழ்வில் முன்னேறியவர். ஜார்க்கண்ட் கவர்னராக 6 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
திரவுபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும்போது அந்தப் பதவியை அலங்கரிக்கும் முதலாவது பழங்குடியினராகவும், 2-வது பெண்மணியாகவும் இருப்பார். பழங்குடியினர் ஒருவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பது அந்த இனத்திற்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பதாலும், செய்யப்படும் பெருமை என்பதாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ம.க.வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் திரவுபதி முர்முவை ஆதரிப்பது என்று பா.ம.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
இந்தியக் குடியரசின் 72 ஆண்டு கால வரலாற்றில் பழங்குடியின பெண்மணி ஒருவரை முதன்முறையாக குடியரசுத் தலைவராக்க ஆதரவளிப்பதில் பா.ம.க. மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒடிசாவில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள அவரது வீட்டிற்கும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
- துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 14- 16 பேர் கொண்ட ஒரு பிரிவினர் முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற மூத்த தலைவர்கள் அடங்கிய கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜார்க்கண்ட் ஆளுநராக பணியாற்றிய ஒடிசாவைச் சேர்ந்த கட்சித் தலைவரான முர்முவின் வேட்புமனுவை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு பிறகு, மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி வேட்பாளர் முர்முவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க அதன் விஜபி பாதுகாப்புக் குழுவை அனுப்புமாறு மத்திய ரிசரவ் போலீஸ் படைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஒடிசாவை தளமாகக் கொண்ட துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 14- 16 பேர் கொண்ட ஒரு பிரிவினர் முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.
ஒடிசாவில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள அவரது வீட்டிற்கும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். மேலும், நாட்டின் முதல் குடிமகனாக அவர் பொறுப்பேற்கும் வரை கமாண்டோ பாதுகாப்பு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
- யஷ்வந்த்சின்கா மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவராக உள்ளார்.
புதுடெல்லி:
புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடக்கிறது. ஜூலை 21-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும்.
ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
யஷ்வந்த்சின்கா மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவராக உள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதால் அவர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.
இதற்காக அவர் மம்தா பானர்ஜிக்கு தனது நன்றியை தெரிவித்து உள்ளார்.
- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
- ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதனால் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து, ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் டெல்லியில் நேற்று முன்தினம் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பவாரை அனைவரும் முன்மொழிந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் தன்னால் நிற்க முடியாது என சரத்பவார் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஜூன் 21-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.