என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "president election"

    • பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.
    • தேர்தலில் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக கூறி எதிர்க்கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டது.

    கராகஸ்:

    வெனிசுலாவில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடந்தது.

    54 கட்சிகள் கலந்துகொண்ட இந்த தேர்தலை அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். தேர்தலில் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறி எதிர்க்கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் வெனிசுலாவில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களுடைய வாக்குகளைச் செலுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட்டன.

    மொத்தம் 285 உறுப்பினர்களைக் கொண்ட அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் ஆளும் சோசியலிஸ்ட் கட்சியினர் 230 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

    மேலும், மாகாணங்களில் 24 இடங்களில் 23 இடங்களில் வெற்றி பெற்றனர். இதனால் அந்நாட்டின் புதிய அதிபராக நிகோலஸ் மதுரோ மீண்டும் தேர்வாகி பதவியேற்க உள்ளார்.

    • கடந்த ஆண்டு துணை அதிபர் வெரோனிகா அபாத் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
    • தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருவதால் அதிபரின் அதிகாரங்கள் விரைவில் சின்தியாவிடம் மாற்றப்பட உள்ளன.

    குயிட்டோ:

    தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அதிபர் டேனியல் நோபோவா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. இவரது பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலுக்கான 2-வது கட்ட வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சி சார்பில் அதிபர் டேனியல் நோபோவாவும், அவரை எதிர்த்து இடதுசாரி வேட்பாளர் லூயிசா கோன்சலசும் போட்டியிடுகின்றனர்.

    அந்த நாட்டு சட்டத்தின்படி தேர்தல் பிரசாரத்தின்போது அதிபரின் அதிகாரங்கள் துணை அதிபரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால் அதிபருடன் நிலவிய கருத்து வேறுபாட்டால் கடந்த ஆண்டு துணை அதிபர் வெரோனிகா அபாத் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த பதவி காலியாக இருந்ததால் அதிபரின் அதிகாரங்கள் மாற்றப்படாமல் இருந்தன. இந்தநிலையில் ஆளுங்கட்சியின் பொதுச்செயலாளரான சின்தியா கெல்லிபர்ட்டை இடைக்கால அதிபராக நியமித்து அதிபர் டேனியல் உத்தரவிட்டுள்ளார். தற்போது அங்கு தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருவதால் அதிபரின் அதிகாரங்கள் விரைவில் சின்தியாவிடம் மாற்றப்பட உள்ளன.

    • ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
    • அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் 2036-ம் ஆண்டு வரை அதிபராகத் தொடர முடியும்.

    மாஸ்கோ:

    ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்த அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையை பாராளுமன்ற மேலவையான தேசிய கவுன்சில் ஒருமனதாக அங்கீகரித்தது.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் விருப்பம் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மாளிகையில் ரஷிய ராணுவ அதிகாரிகளுக்கு நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் புதின், அவரது முடிவை ராணுவ அதிகாரியிடம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் வரும் 2036-ம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    • அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.

    ஜகார்த்தா:

    உலகின் 3-வது பெரிய ஜனநாயக நாடு இந்தோனேசியா. 20 கோடி வாக்காளர்களை கொண்ட அங்கு இன்று அதிபர் தேர்தல் நடந்தது. மேலும் பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடந்தது.

    காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. மக்கள் காலையிலேயே வாக்குசாவடி மையங்களில் குவிந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசை காணப்பட்டது.

    தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதிபர் தேர்தலில் மூன்று பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோ தேர்தலில் போட்டியிடவில்லை.

    பாதுகாப்புத்துறை மந்திரியாக பிரபோலோ சுபியாண்டோ, முன்னாள் மாகாண கவர்னர்களான அனீஸ் பஸ்லேடன், கஞ்சர் பிரனோவோ ஆகியோர் இடையே போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும். எந்த வேட்பாளர்களுக்கும் 50 சதவீத வாக்கு கிடைக்காவிட்டால் 2-வது சுற்றுத் தேர்தல் ஜூன் மாதம் நடைபெறும்.

    கருத்து கணிப்புகளில் பாதுகாப்பு மந்திரி பிரபோலோ வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 52 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    இவர் தற்போதைய அதிபரின் ஆதரவை பெற்றவர் ஆவார். துணை அதிபர் பதவிக்கு அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று மாலை ஓட்டுப் பதிவு முடிந்ததும் அதில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்படுகின்றன.

    • 400 தொகுதிகளில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
    • கடந்த 30 ஆண்டில் முதல்முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வென்றது.

    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்காவில் கடந்த மே மாதம் 29-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 400 தொகுதிகளில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 159 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

    கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்திற்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றது.

    இதற்கிடையே, பிரதான எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கட்சியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதையடுத்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற அதிபருக்கான தேர்தல் வாக்கெடுப்பில் சிறில் ரமபோசா 283 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜூலியஸ் மலேமா 44 வாக்குகளைப் பெற்றார்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட இலியாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • முகமது இலியாசுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    கொழும்பு:

    இலங்கையில் அடுத்த மாதம் 21-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடுகிறார். இதில் 39 பேர் வேட்புமனு தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே, சுயேட்சை வேட்பாளராக புட்டலம் மாவட்டத்தை சேர்ந்த இட்ராஸ் முகமது இலியாஸ் போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள முகமது இலியாசுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    அவரை உறவினர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே இலியாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இலியாஸ் 1990-ல் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் ஜாப்னா தொகுதியில் வென்று எம்.பி.யாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
    • இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி முன்னிலை வகிக்கிறது.

    கொழும்பு:

    இலங்கையில் 9-வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இலங்கை அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 38 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே போட்டி நிலவுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 4 மனிக்கு நிறைவடைந்தது. வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    கொழும்புவில் வரிசையில் காத்திருந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கேவும், கொழும்பு பாடசாலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.

    இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

    இதில், இடதுசாரி அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகிக்கிறார். அவர் 60.83 சதவீத வாக்கு பெற்று முன்னிலை வகிக்கிறார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 21.06 சதவீத வாக்கு பெற்றுள்ளார்.

    புதிய அதிபர் யார் என நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.

    தேர்தலுக்கு பிந்தைய வன்முறையைத் தடுக்கும் விதமாக இலங்கையில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
    • அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் செய்தியாளர் ஒருவருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், நீங்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், 2024-ல் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் முயற்சியில் தோல்வி அடைந்தால் 2028-ல் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவேன் என நினைக்கவில்லை என தெரிவித்தார்.

    • ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 66 சதவீதம் பேர் ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர்.
    • 28 சதவீதம் பேர் முன்னாள் அதிபர் டிரம்ப்பை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    கடந்த 10-ம் தேதி இரு வேட்பாளர்களும் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.

    இருவரும் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மக்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதை முடிவு செய்ய அவ்வப்போது கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.

    ஏற்கனவே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றிருந்தார்.

    இந்நிலையில், சிகாகோ பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் டிரம்பைவிட 38 புள்ளிகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    ஆசிய அமெரிக்க வாக்காளர்களிடையே டிரம்பை விட கமலா ஹாரிஸ் 38 சதவீத புள்ளிகளால் முன்னிலை வகிக்கிறார்.

    ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 66 சதவீதம் பேர் ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர். 28 சதவீதம் பேர் முன்னாள் அதிபர் டிரம்ப்பை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். வேறொரு வேட்பாளரை ஆதரிப்பதாகக் கூறுபவர்கள் அல்லது முடிவு செய்யப்படாதவர்கள் 6 சதவீதம்.

    ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்ட 2024 ஆசிய அமெரிக்க வாக்காளர் கணக்கெடுப்பில், ஆசிய அமெரிக்க வாக்காளர்களில் 46 சதவீதம் பேர் ஜோ பைடனை ஆதரித்தனர். 31 சதவீதம் பேர் டிரம்பை ஆதரித்தனர். அதே நேரத்தில் 23 சதவீதம் பேர் வேறு ஒருவருக்கு வாக்களிக்கத் திட்டமிட்டுள்ளோம் அல்லது முடிவு செய்யவில்லை என கூறினர்.

    அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்து வெளியேறி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஆன பிறகு நடத்தப்பட்ட முதல் கருத்துக்கணிப்பு இதுவாகும்.

    • ஜனநாயகக் கட்சியின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
    • இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள சதர்ன் அவென்யூ-ப்ரீஸ்ட் டிரைவ் அருகே உள்ள கமலா ஹாரிசின் பிரச்சார அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த அலுவலகம் மீது நள்ளிரவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது அலுவலகத்துக்குள் யாரும் இல்லை. சுவர்களில் தோட்டாக்களால் சேதம் ஏற்பட்டது. முன்பக்க ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
    • குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் 43 அடி உயர நிர்வாண சிலை 2 நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

    இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த சிலை இன்று அகற்றப்பட்டுள்ளது. ஆனால் யார் இந்த சிலையை வைத்தார்கள் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. 

    • மம்தா பானர்ஜி தனது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.
    • காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் டெல்லியில் நாளை கூடி ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளன.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை 24-ந்தேதி) முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. போட்டி ஏற்பட்டு ஓட்டுப்பதிவு நடக்கும் பட்சத்தில் ஜூலை 21-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இன்னும் சில தினங்களில் பா.ஜனதா கட்சி வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதில் அனைத்து கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்த பா.ஜனதா தலைவர் நட்டா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரையும் பிரதமர் மோடி பணியில் அமர்த்தி உள்ளார்.

    அவர்கள் இருவரும் பா.ஜனதாவின் தோழமை கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறார்கள். அதுபோல சில எதிர்க்கட்சி தலைவர்களிடமும் அவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். என்றாலும் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை களம் இறக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை எதிர்க்கட்சிகன் பொது வேட்பாளராக களம் இறக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் சரத் பவாரை சந்தித்து பேசினார். பிறகு மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    சரத்பவார் அனைத்து கட்சிகளுடன் நல்ல அணுகுமுறையில் இருப்பதால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தலாம் என்று சோனியா விரும்புகிறார். எனவே ஜனாதிபதி தேர்தல் தேதி அட்டவணை வெளியிடப்பட்டதும் அவர் முதன் முதலில் சரத் பவாருடன் போனில் பேசினார். அதுபோல இடதுசாரி கட்சி தலைவர்களும் சரத்பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சரத்பவாரை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று முடிவு செய்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மற்ற எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    குறிப்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியிடம் காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். மம்தா பானர்ஜி தனது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

    இதற்காகவே அவர் நாளை (புதன்கிழமை) டெல்லியில் 22 எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவார் என்று தெரிகிறது.

    குறிப்பாக சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னாள் பா.ஜனதா தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான யஷ்வந்த் சின்காவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி விரும்புகிறார். ஆனால் அவரது திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை.

    பா.ஜனதாவில் இருந்து வந்த ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று காங்கிரஸ், இடதுசாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டன. எனவே நாளை மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் தி.மு.க., ஆம்ஆத்மி, போன்ற கட்சிகளும் பங்கேற்காது என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறங்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தயக்கத்தை வெளியிட்டுள்ளார். நேற்று அவர் தனது கட்சி மூத்த தலைவர்களுடன் பேசுகையில், 'பொது வேட்பாளராக போட்டியிட எனக்கு விருப்பமில்லை' என்று கூறியுள்ளார்.

    எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பட்டியலில் நான் இல்லை என்றும் அவர் தெளிவுபட கூறி உள்ளார். 81 வயதாகும் சரத் பவார் தனக்கு பதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தச்செயலாம் என்று கூறி வருகிறார்.

    குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சரத்பவார் விரும்புகிறார். தனது விருப்பத்தை அவர் காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் டெல்லியில் நாளை கூடி ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளன. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பற்றி ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று உறுதியாக தெரிகிறது.

    காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா உள்பட பல கட்சிகள் சரத்பவாரையே ஆதரிக்கின்றன. எனவே அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்படுவாரா என்பது நாளை தெரிந்து விடும்.

    சரத் பவாருக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மம்தா பானர்ஜி, சந்திர சேகர ராவ், நவீன் பட்நாயக் போன்ற தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரத் பவாரை முன் நிறுத்தினால் மட்டுமே அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓர் அணியில் ஒன்று திரட்ட முடியும் என்று சோனியா கருதுகிறார். எனவே நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

    ×