என் மலர்
நீங்கள் தேடியது "கைதிகள்"
- மூன்று விதமாக கைதிகள் பிரிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது.
- இறுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகளுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.
தவறு செய்து தண்டனை அனுபவிக்கக்கூடியவர்களை அடைக்கக்கூடிய இடமாக இருக்கும் சிறைச் சாலை, தொடக்க காலத்தில் மிகவும் கடினமான இடமாக இருந்தது. காலப்போக்கில் பல வசதிகளை கொண்ட இடமாக சிறைச்சாலைகள் மாறிவிட்டன.
அது மட்டுமின்றி தவறு செய்து தண்டனை அனுபவிப்பவர்கள், தண்டனை காலத்தில் திருந்துவதற்கான ஒரு இடமாகவும் மாறியிருக்கிறது. அதற்காக அந்தந்த மாநில அரசுகள், தங்களது மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு பல்வேறு தொழில்களை கற்றுக்கொடுப்பது மட்டுமின்றி, அந்த தொழிலில் ஈடுபடுவதற்கு ஊதியத்தையும் கொடுக்கிறது.
இதனால் பல கைதிகள் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி வெளியே செல்லும் போது, ஒரு பெருந்தொகையை வாங்கிச் செல்கிறார்கள். அது மட்டுமின்றி ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே சென்றபிறகு, ஜெயிலில் பார்த்த தொழிலை தொடர்ந்து பார்த்து வாழ்க்கையை நடத்தும் வகையில் பல கைதிகள் வடிவமைக்கப்படுகிறார்கள்.
இந்தநிலையில் கேரள மாநிலத்தில் ஜெயில்களில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கான ஊதியத்தை அம்மாநில அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் இருக்கின்றன. கொல்லம் உள்ளிட்ட பல இடங்களில் மாவட்ட மற்றும் கிளை சிறைகளும் இருக்கின்றன.
இங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பயன்படுத்தி துணி, தோல் மற்றும் அலுமினிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி பல்வேறு வேலைகளும் கைதிகளுக்கு வழங்கப்படுகின்றன. அவ்வாறு ஈடுபடும் கைதிகளுக்கு தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
திறமையாக வேலை செய்பவர்கள், பாதியளவு திறமையாக வேலை செய்பவர்கள், திறமையற்ற முறையில் வேலை செய்பவர்கள் என மூன்று விதமாக கைதிகள் பிரிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. கைதிகளுக்கான ஊதியம் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகரிக்கப்படும். அதன்படி இறுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகளுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.
இந்தநிலையில் தற்போது கைதிகளுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதுவும் ஊதியம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. திறமையான வேலையில் ஈடுபடுபவர்களின் ஊதியம் ரூ.152 ஆக இருந்தது. அது தற்போது 620 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் பாதியளவு திறமையான வேலை செய்பவர்களுக்கான ஊதியம் 127 ரூபாயில் இருந்து 560 ரூபாயாகவும், திறமையில்லாத வேலை பார்ப்பவர்களுக்கான ஊதியம் ரூ.63-ல் இருந்து ரூ.530 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
கேரள மாநிலத்தில் கைதிகளுக்கான சம்பளம் இவ்வளவு அதிகமாக உயர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த ஊதிய உயர்வு மூலமாக கேரள ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் பயன்பெறுவார்கள்.
ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தாலும் கைதிகள் தங்களின் வாழ்வில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கத்திலே கைதிகளின் ஊதியம் உயர்த்தப்பட்டு இருப்பதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில், கேரளாவில் கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறைவாக இருந்ததால், தற்போது அதிகளவில் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்குகளில் தண்டனை பெற்று வந்தாலும் தங்குமிடம், அசைவ உணவு வகைகள் என்று பல வசதிகள் இலவசமாக கிடைத்து வந்தநிலையில், தற்போது சம்பளமும் பல மடங்கு உயர்த்தியிருப்பது கைதிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
- மச்சாலா நகரில் உள்ள சிறையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர்.
எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். சிலர் மூச்சுத் திணறலால் இறந்தனர், மற்றவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டத்தை எதிர்த்து கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
உடனடியாக ஒரு சிறப்பு போலீஸ் குழு சிறைக்குள் நுழைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.
சிறைச்சாலைக்குள் இரண்டு கும்பல்களுக்கு இடையேயான கலவரமாக இது இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக செப்டம்பர் மாத இறுதியில், அதே சிறையில் நடந்த மற்றொரு ஆயுதமேந்திய கிளர்ச்சியில் 13 கைதிகளும் ஒரு சிறைக் காவலரும் கொல்லப்பட்டனர்.
- அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் 2016 இல் பதிவாகியுள்ளன.
- கடந்த 5 ஆண்டுகளில் சிறைகளில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.
இந்திய சிறைச்சாலைகளில் 2014 முதல் 2022 வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 170 இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகின்றன .
தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) வெளியிட்ட கடைசி சிறைச்சாலை புள்ளிவிவர அறிக்கையில்இது தெரியவந்துள்ளது.
2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், சிறையில் 1521 பேர் மர்மமான சூழ்நிலையில் இறந்தனர். இதில் 70 சதவீதம் தற்கொலைகள். அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் 2016 இல் பதிவாகியுள்ளன. அந்த ஆண்டில் 231 பேர் இருந்துள்ளனர். இதில் 102 தற்கொலைகள்.
அதேபோல் 2022 இல்பதிவு செய்யப்பட்ட 159 இயற்கைக்கு மாறான மரணங்களில், அதில் 119 தற்கொலைகள் ஆகும்.
கடந்த 5 ஆண்டுகளில் சிறைகளில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.
கைதிகளின் மனநலப் பிரச்சனைகள் போதுமான அளவு கவனிக்கப்படவில்லை என்றும், சிறைகளில் போதுமான மனநல மருத்துவர்கள் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
- சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சில கைதிகள் காவலர்களின் அறைக்குள் நுழைந்தனர்.
என்ஜாமெனா:
மத்திய ஆப்பிரிக்க நாடான சாட்டின் மோங்கோ நகரத்தில் சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு தண்டனை கைதிகள் உள்பட சுமார் 500 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையே அங்குள்ள கைதிகள் தங்களுக்கு போதிய உணவு வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் குவேரா மாகாண கவர்னர் மோங்கோ சிறைச்சாலையை பார்வையிட சென்றிருந்தார். அப்போது சிறை நிர்வாகத்தைக் கண்டித்து கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த சமயத்தில் சில கைதிகள் காவலர்களின் அறைக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கு கலவரம் வெடித்தது.
இந்த கலவரத்தில் 3 பேர் பலியாகினர். கவர்னர் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இந்த நெருக்கடியான சூழலை பயன்படுத்தி 130-க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
- 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9 ஆயிரத்து 106 சிறைவாசிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
- 24 பேர் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பையும், 268 பேர் பட்டய படிப்பையும் படித்து வருகின்றனர்.
சென்னை:
சிறைவாசிகளுக்கு 100 சதவீத கல்வி அறிவை புகட்டும் விதமாக தமிழக அரசும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் ஒருங்கிணைந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, அனைத்து சிறைகளிலும் எழுதப்படிக்க தெரியாத சிறைவாசிகளுக்கு பள்ளி கல்வித்துறையின் சிறப்பு கல்வியறிவு திட்டத்தின் மூலமாக அடிப்படை கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தால் பயன் அடைந்து வரும் சிறை கைதிகள் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:-
அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனி சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறை ஆகியவற்றில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை கொண்ட ஆரம்ப பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகாத்மா காந்தி சமுதாய கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன.
2024-25-ம் கல்வி ஆண்டில் சிறை கைதிகளில் 135 பேர் பிளஸ்-2 தேர்வும், 137 பேர் பிளஸ்-1 தேர்வும், 247 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும், 232 பேர் 8-ம் வகுப்பு தேர்வும் எழுதி உள்ளனர்.
2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9 ஆயிரத்து 106 சிறைவாசிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 24 பேர் வணிக மேலாண்மை முதுகலை பட்டப்படிப்பும், 3 பேர் கலை அறிவியல் முதுகலை படிப்பும் படித்து வருகின்றனர். ஒருவர் கணினி முதுகலை பட்டப்படிப்பும் படித்து வருகிறார்.
120 பேர் கலை, அறிவியல், வணிகவியல், இலக்கியம் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பும், 24 பேர் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பையும், 268 பேர் பட்டய படிப்பையும் படித்து வருகின்றனர்.
'கத்தியை தீட்டாதே...புத்தியை தீட்டு' என்ற அறிவுரையை ஏற்று சிறை கைதிகள் மனம்மாறி கல்வி கற்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கைதிகள் அனைவரும் காலை உணவு சாப்பிட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
- 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம் குடகேன் நகரில் பிரதான சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 400 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே அங்கு 100 பேர் மட்டுமே தங்குவதற்கு இடம் இருப்பதாகவும், இதனால் கடுமையான கூட்ட நெரிசலாக இருப்பதாகவும் கைதிகள் குற்றம்சாட்டினர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிறை அதிகாரிகளிடம் கைதிகள் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்களில் பலர் போராட்டத்தில் குதித்தனர்.
எனினும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து சிறையில் இருந்து தப்பியோட கைதிகள் முடிவு செய்தனர். இதற்கான சமயத்தை அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்தநிலையில் கைதிகள் அனைவரும் காலை உணவு சாப்பிட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மிகுதியான காவலர்கள் பணியில் இல்லாததால் அதனை வாய்ப்பாக பயன்படுத்தி சிறையின் பிரதான கதவை உடைத்தனர்.
பின்னர் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் 20 கைதிகளை கைது செய்தனர். அதேசமயம் தப்பியோடிய மற்ற கைதிகள் தலைமறைவாகினர். எனவே அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்கிடையே கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடிய காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- சிறைக்கைதிகள் கடுங்குளிரால் அவதிப்படுவதாகவும், மேலும் வயதானவர்கள் மெத்தை இல்லாமல் துன்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- டெல்லியில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு குளிப்பதற்கும், சுகாதாரத்தேவைகளுக்கும் வெந்நீர் மற்றும் மெத்தை போன்ற வசதிகளை செய்து தர கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லி கவர்னர் சக்சேனா சமீபத்தில் சிறைக்கைதிகளின் அடிப்படை மனிதத் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறைகளுக்கான 2 வார ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், சிறைக்கைதிகள் கடுங்குளிரால் அவதிப்படுவதாகவும், மேலும் வயதானவர்கள் மெத்தை இல்லாமல் துன்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து டெல்லியில் உள்ள 16 மத்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு குளிப்பதற்கும், சுகாதாரத்தேவைகளுக்கும் வெந்நீர் மற்றும் மெத்தை போன்ற வசதிகளை செய்து தர கவர்னர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
- மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.
- ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
மதுரை:
மதுரை மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக சிறை நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கைதிகளுக்கு கைத்தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன.
அவர்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களை விற்க சிறை வளாகத்தில் அங்காடி உருவாக்கப்பட்டு உள்ளது. மதுரை மத்திய ஜெயிலுக்குள் ஸ்டேஷனரி பொருட்கள், நெசவு, விவசாய உற்பத்தி உள்பட பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் சென்னை புழல் சிறையைத் தொடர்ந்து, மதுரை மத்திய ஜெயிலிலும் கைதிகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து 1 லட்சம் புத்தகங்களை பெறுவது என்று ஜெயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.
சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் தலைமையிலான குழுவினர் முகாமிட்டு புத்தகங்களை சேகரித்து வருகின்றனர். 'புத்தக திருவிழா முடிவதற்குள் சுமார் 1 லட்சம் புத்தகங்களை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெற முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.
இந்தநிலையில் மதுரை கூடல்நகர், ரெயிலார் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த நெசவு தொழிலாளி பாலகிருஷ்ணன் (வயது 92) என்பவர் மதுரை மத்திய ஜெயிலுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் "தன்னிடம் உள்ள 300 புத்தகங்களை, ஜெயில் நூலகத்திற்கு இலவசமாக வழங்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
மேலும் வயது முதிர்வு காரணமாக தன்னால் நேரில் வர முடியாது. அதனை நேரில் வந்து பெற்றுச்செல்லுங்கள் என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மதுரை மத்திய ஜெயிலில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் இருந்து 300 புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.
ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். இதுபற்றி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
வள்ளலார் கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டு, ஏராளமான புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை வாங்கி, வீட்டில் நூலகம் அமைத்து பராமரித்து வந்தேன். எனக்கு புத்தகங்களே சொத்து, பொழுதுபோக்கு, வெளியில் யாரை பார்க்கச் சென்றாலும், என்னை பார்க்க வருவோருக்கும் புத்தகமே பரிசாக அளிப்பேன்.
என்னிடம் சுமார் 1500 புத்தகங்கள் உள்ளன. அவற்றை சரியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது தான் மதுரை சிறைச்சாலையில் நூலகம் அமைப்பது தெரியவந்தது. அதனால் என்னிடம் இருந்த 300 புத்தகங்களை வழங்கி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- சிறை பஜார் 2013-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இயற்கை உணவுகள் தரமான செக்கு எண்ணெய் வகைகள், படுக்கை விரிப்புகள், காலணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைதிகளால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புழல் மத்திய சிறைச்சாலை உள்ளிட்ட அனைத்து சிறைகளின் முன்பும் இந்த பொருட்களை விற்பனை செய்வதற்காக சிறை துறை சார்பில் கடைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதை சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி தெரிவித்து உள்ளார். இதற்கான நடவடிக்கைகளில் சிறை துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள். சிறை பஜார் 2013-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை, சேலம், திருச்சி, கடலூர், மதுரை, வேலூர், பாளையங்கோட்டை, கோவை ஆகிய மத்திய சிறைகளிலும் சென்னையில் புழல் சிறை எண்.1 மற்றும் 2 மற்றும் பெண்கள் சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கைதிகள் தயாரிக்கும் பொருட்களில் கிடைக்கும் லாபத்தில் கைதிகளுக்கு 20 சதவீதமும் அரசுக்கு 20 சதவீதமும், சிறை ஊழியர்கள் நலனுக்கு 20 சதவீதமும் பொருட்கள் தயாரிப்பு நிதிக்கு 40 சதவீதமும் பிரித்து வழங்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மதுரையில் கைதிகளுடன், போலீசார் கைப்பந்து விளையாடினர்.
- கைதிகள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
மதுரை
தமிழகம் முழுவதும் கைதிகளின் உடல் திறனை மேம்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையில் அனைத்து மத்திய சிறைகளிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை மத்திய சிறையில் ஏற்கனவே கைப்பந்து, இறகுப்பந்து, கேரம், செஸ் ஆகியவற்றுக்கான உள்-வெளி அரங்கங்கள் உள்ளன. அங்கு கைதிகள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கைதிகள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். அங்கு வந்த மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பரசுராமன் மற்றும் அதிகாரிகள் கைப்பந்து விளையாடும் கைதிகளுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தனர்.
- பழங்களை வைத்து கைதிகள் சிலர் சாராய ஊறல் போட்டிருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம்:
சேலம் மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட குண்டர் சட்டம் பாய்ந்த கைதிகள் உள்பட 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு சிறையில் வழங்கும் உணவுகள் தவிர கேன்டீன் மூலமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழவகைகளும் கொடுக்கின்றனர். இதனை கைதிகள் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.
இப்படி வழங்கப்படும் பழங்களை வைத்து கைதிகள் சிலர் சாராய ஊறல் போட்டிருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜெயிலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மத்திய சிறையில் உள்ள 7-வது பிளாக் அருகில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை தோண்டி எடுத்தனர். அதில் ஆப்பிள், மாதுளை, வெல்லம் உள்பட பல்வேறு பழங்களை போட்டு ஊற வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அதனை கைப்பற்றிய சிறை அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனர். மேலும் அந்த ஊறலை அங்கு போட்டு வைத்த கைதிகள் யார் ? என்பது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- மொத்தம் 21 சிறிய அளவிலான குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
- 6 வழக்குகள் முடிக்கப்பட்டு, கைதிகள் விடுதலை செய்யப்பட்டனா்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா், கும்பகோணம் உள்ளிட்ட சிறைச் சாலைகளில் தஞ்சாவூா் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில் சிறைக் கைதிகளுக்கான சிறை நீதிமன்றம் நடைபெற்றது.
இந்த நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான இந்திராகாந்தி தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூா் கிளை சிறைச்சாலையில் தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் சுசீலா தலைமையிலும், கும்பகோணம் கிளை சிறைச்சாலையில் திருவிடைமருதூா் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா்
சிவபழனி தலைமையிலும், புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் தஞ்சாவூா் மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் பாரதி தலைமையிலும், திருச்சி மத்திய சிறையில் தஞ்சாவூா் குற்றவியல் நீதித்துறை விரைவு நீதிமன்ற நடுவா் முருகேசன் தலைமையிலும் நடைபெற்றது.
இவற்றில் மொத்தம் 21 சிறிய அளவிலான குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 6 வழக்குகள் முடிக்கப்பட்டு, சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனா்.
இந்த நிகழ்வில், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு நிா்வாக அலுவலா் சந்தோஷ்குமாா், இளநிலை நிா்வாக உதவியாளா் பிரசன்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.






