என் மலர்
நீங்கள் தேடியது "கேரள சிறை"
- மூன்று விதமாக கைதிகள் பிரிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது.
- இறுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகளுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.
தவறு செய்து தண்டனை அனுபவிக்கக்கூடியவர்களை அடைக்கக்கூடிய இடமாக இருக்கும் சிறைச் சாலை, தொடக்க காலத்தில் மிகவும் கடினமான இடமாக இருந்தது. காலப்போக்கில் பல வசதிகளை கொண்ட இடமாக சிறைச்சாலைகள் மாறிவிட்டன.
அது மட்டுமின்றி தவறு செய்து தண்டனை அனுபவிப்பவர்கள், தண்டனை காலத்தில் திருந்துவதற்கான ஒரு இடமாகவும் மாறியிருக்கிறது. அதற்காக அந்தந்த மாநில அரசுகள், தங்களது மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு பல்வேறு தொழில்களை கற்றுக்கொடுப்பது மட்டுமின்றி, அந்த தொழிலில் ஈடுபடுவதற்கு ஊதியத்தையும் கொடுக்கிறது.
இதனால் பல கைதிகள் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி வெளியே செல்லும் போது, ஒரு பெருந்தொகையை வாங்கிச் செல்கிறார்கள். அது மட்டுமின்றி ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே சென்றபிறகு, ஜெயிலில் பார்த்த தொழிலை தொடர்ந்து பார்த்து வாழ்க்கையை நடத்தும் வகையில் பல கைதிகள் வடிவமைக்கப்படுகிறார்கள்.
இந்தநிலையில் கேரள மாநிலத்தில் ஜெயில்களில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கான ஊதியத்தை அம்மாநில அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் இருக்கின்றன. கொல்லம் உள்ளிட்ட பல இடங்களில் மாவட்ட மற்றும் கிளை சிறைகளும் இருக்கின்றன.
இங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பயன்படுத்தி துணி, தோல் மற்றும் அலுமினிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி பல்வேறு வேலைகளும் கைதிகளுக்கு வழங்கப்படுகின்றன. அவ்வாறு ஈடுபடும் கைதிகளுக்கு தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.
திறமையாக வேலை செய்பவர்கள், பாதியளவு திறமையாக வேலை செய்பவர்கள், திறமையற்ற முறையில் வேலை செய்பவர்கள் என மூன்று விதமாக கைதிகள் பிரிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. கைதிகளுக்கான ஊதியம் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகரிக்கப்படும். அதன்படி இறுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகளுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.
இந்தநிலையில் தற்போது கைதிகளுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதுவும் ஊதியம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. திறமையான வேலையில் ஈடுபடுபவர்களின் ஊதியம் ரூ.152 ஆக இருந்தது. அது தற்போது 620 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் பாதியளவு திறமையான வேலை செய்பவர்களுக்கான ஊதியம் 127 ரூபாயில் இருந்து 560 ரூபாயாகவும், திறமையில்லாத வேலை பார்ப்பவர்களுக்கான ஊதியம் ரூ.63-ல் இருந்து ரூ.530 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
கேரள மாநிலத்தில் கைதிகளுக்கான சம்பளம் இவ்வளவு அதிகமாக உயர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த ஊதிய உயர்வு மூலமாக கேரள ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் பயன்பெறுவார்கள்.
ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தாலும் கைதிகள் தங்களின் வாழ்வில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கத்திலே கைதிகளின் ஊதியம் உயர்த்தப்பட்டு இருப்பதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில், கேரளாவில் கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறைவாக இருந்ததால், தற்போது அதிகளவில் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வழக்குகளில் தண்டனை பெற்று வந்தாலும் தங்குமிடம், அசைவ உணவு வகைகள் என்று பல வசதிகள் இலவசமாக கிடைத்து வந்தநிலையில், தற்போது சம்பளமும் பல மடங்கு உயர்த்தியிருப்பது கைதிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
- பூஜப்புரா மத்திய ஜெயிலில் உள்ள 12 பிளாக்குகளிலும் இரு மடங்குக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர்.
- கைதிகள் உட்காரக் கூட இடம் இல்லாத நிலையே அனைத்து ஜெயில்களிலும் இருப்பதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தேடப்படும் குற்றவாளிகள், போதை பொருட்கள் விற்பவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதாகவும், இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் ரவுடிகளை பிடிப்பதற்காக அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
ஆபரேசன் ஏ.ஏ.ஜி. மற்றும் ஆபரேசன்-டி என்ற பெயரில் கடந்த 6 நாட்களாக மாநிலம் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். போலீசாரின் இந்த ஆபரேசனில் ரவடிகள், தலைமறைவு குற்றவாளிகள், போதை பொருட்கள் விற்றவர்கள், குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என 12ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் கேரள மாநில ஜெயில்களில் கைதிகளை அடைக்க இடம் இல்லை. இதன் காரணமாக போலீசார் நடத்திய சிறப்பு ஆபரேசனில் கைது செய்யப்பட்டவர்களை சிறைகளில் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
பூஜப்புரா மத்திய ஜெயிலில் உள்ள 12 பிளாக்குகளிலும் இரு மடங்குக்கும் அதிகமான கைதிகள் உள்ளனர். கண்ணூர், விய்யூர் ஜெயில்களிலும் இதே நிலைதான் நிலவுகிறது. கைதிகள் உட்காரக் கூட இடம் இல்லாத நிலையே அனைத்து ஜெயில்களிலும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தற்போது கைது செய்யப்பட்ட 12 ஆயிரம் பேரில் 500 பேர் மட்டுமே ஜெயிலிகளில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 11 ஆயிரத்து 500 பேர் போலீஸ் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
727 கைதிகள் அடைக்கப்பட வேண்டிய பூஜப்புரா மத்திய ஜெயிலில் 1,350 கைதிகளும், 585 கைதிகள் அடைக்கப்படவேண்டிய விய்யூர் ஜெயிலில் 1,110 கைதிகளும், 856 கைதிகள் அடைக்கப்படவேண்டிய கண்ணூர் ஜெயிலில் 1,140 கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரு அபுபக்கரின் தாய் மற்றும் தந்தையின் பெயர் ஒரே பெயராகும்.
- தன்னை தவறுதலாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோர்ட்டை அபுபக்கர் அணுக உள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வெளியங்கோடு பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வெளியங்கோட்டில் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலைபார்க்கும் அபுபக்கர் குடும்ப செலவுக்கு பணம் தராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
ஆகவே அபுபக்கர் மீது அவரது மனைவி ஆயிஷாபி திரூர் குடும்பநல கோர்ட்டில் புகார் செய்தார். அவரது மனுவை விசாரித்த கோர்ட்டு, அபுபக்கருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. அது தொடர்பாக பொன்னானி போலீசார் விசாரணை நடத்தி அபுபக்கரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஆயிஷாபியின் கணவர் அபுபக்கரை கைது செய்வதற்கு பதிலாக, பக்கத்து வீட்டில் வசித்து வரும் மற்றொரு அபுபக்கரை கைது செய்தனர். மனைவியுடன் தகராறு செய்தது தொடர்பாக இவர் மீது வழக்கு இருக்கிறது. அந்த வழக்கில் தான் தன்னை கைது செய்திருக்கின்றனர் என்று அந்த நபர் நினைத்துக் கொண்டார்.
போலீஸ் நிலையத்துக்கு சென்றதும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதால் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் அவரிடம் தெரிவித்தனர். அது தொடர்பான ஆவணங்களை அபுபக்கர் பார்த்தது, இது எனது மீதான வழக்கு இல்லை எனவும், தனது மீது பிடிவாரண்டு எதுவும் கிடையாது என்றும் தெரிவித்தார்.
ஆனால் அவர் கூறியதை போலீசார் கேட்காமல், அவரை திரூர் குடும்பநல கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ரூ. 4 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் தன்னால் அபராதம் செலுத்த முடியாது என்று அபுபக்கர் கூறினார். இதையடுத்து அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பேரில் அபுபக்கர் சிறையில் அடைக்கப்பட்டார். அபுபக்கர் சிறையில் அடைக்கப்பட்ட விவரம் அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. அவர்கள் தலையிட்டு விசாரணை நடத்தியபோது ஆயிஷாபியின் கணவர் அபுபக்கருக்கு பதிலாக பக்கத்து வீட்டு அபுபக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.
இரு அபுபக்கரின் தாய் மற்றும் தந்தையின் பெயர் ஒரே பெயராகும். இதனால் உண்மையான நபருக்கு பதிலாக மற்றொரு நபரை போலீசார் கைது செய்து விட்டது தெரியவந்தது. இதுபற்றி தவறுதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அபுபக்கரின் உறவினர்கள் கோர்ட்டில் கூறினர். மேலும் அதற்கான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
இதையடுத்து அபுபக்கரை போலீசார் தவறுதலாக கைது செய்து சிறையில் அடைத்தது உறுதியானது. ஆகவே தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட அபுபக்கரை உடனடியாக விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் அபுபக்கர் 4 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
விசாரணை நடத்தியபோது அபுபக்கர், அந்த அபுபக்கர் நான் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் அதனை போலீசார் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டதே இந்த தவறுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தன்னை தவறுதலாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோர்ட்டை அபுபக்கர் அணுக உள்ளார்.






