search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புற்றுநோய்"

    • சமூக வலைதளங்களை சிலர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.
    • சிறுமி தேவிகா தனது பள்ளிக்கு பஸ் ஏற 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபடி இருந்திருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    தற்போதைய நவீன காலத்தில் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் சிறிய குழந்தைகள் கூட செல்போனை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவதை காண முடிகிறது.

    செல்போன் பயன்படுத்துவோர் பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கின்றனர். அவ்வாறு கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக லைக்குகளை வாங்குவதற்காக வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

    அதே சமூக வலைதளங்களை சிலர் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். அதாவது மருத்துவ சிகிச்சைகளுக்கு பணம் இல்லாமல் தவிப்பவர்கள், படிக்க வசதியில்லாமல் தவிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட தகவல்களையும் வெளியிடுகிறார்கள்.

    இதன்மூலம் கஷ்டப்படக்கூடிய நபர்கள், பணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பெற முடிகிறது. அதேபோன்ற ஒரு செயலில் கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் செயல்பட்டுள்ளார்.

    புற்றுநோய் பாதித்து அவதிப்பட்டு வரும் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவரின் மருத்துவ செலவுக்கு நிதி திரட்டுவதற்காகவே அவர் யூடியூப்பில் கணக்கு தொடங்கியிருக்கிறார். அதன்மூலம் அவருக்கு கிடைத்த 3 லட்சம் ரூபாயை அந்த பெண்ணின் சிகிச்சைக்கு கொடுத்திருக்கிறார்.

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜன். பான் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மகள் தேவிகா. 7-ம் வகுப்பு படித்து வருகிறார். ராஜனின் சொற்ப வருமானத்திலேயே அவரது குடும்பம் இயங்கி வருகிறது. இதனால் தனது மகளுக்கு சைக்கிள் கூட வாங்க வழியில்லாமல் இருந்திருக்கிறார்.

    இதன் காரணமாக சிறுமி தேவிகா தனது பள்ளிக்கு பஸ் ஏற 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றபடி இருந்திருக்கிறார். இதனால் சைக்கிள் வாங்குவது சிறுமியின் கனவாக இருந்துள்ளது. சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பிரேமா. அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.

    அந்த பெண்ணின் குடும்பமும் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். இதனால் அந்த பெண்ணுக்கு சிகிச்சை பெறக்கூட போதிய பணம் இல்லை. இதனையறிந்த சிறுமி தேவிகா, அந்த பெண்ணுக்கு உதவுவதற்காக யூடியூப்பில் "தேவுஸ் வேர்ல்ட்" என்ற பெயரில் கணக்கை தொடங்கினார். அதில் தனது கனவு மற்றும் தனது வீட்டின் அருகே சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பெண் பற்றிய தகவல்களை பதிவிட்டார்.

    மேலும் சிறுமி தேவிகா தனக்கு அதிர்ஷ்ட குலுக்கலில் கிடைத்த சைக்கிளை விற்று, அதில் கிடைத்த பணத்தை புற்றுநோய் பாதித்த பெண்ணின் சிகிச்சைக்கு வழங்கினார். சிறுமி தேவிகாவின் இந்த செயலை திருச்சூர் மாவட்ட கலெக்டர் கிருஷ்ண தேஜா அறிந்தார்.

    அவர் சிறுமியை நேரில் வரவழைத்து பாராட்டினார். மேலும் சிறுமியின் செயல்பாடு குறித்து கலெக்டர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

    அதன்பிறகே சிறுமியின் செயல் வெளியுலகுக்கு தெரியவந்தது. இதையடுத்து பலரும் சிறுமிக்கு பண உதவி செய்தனர். மேலும் பலர் சிறுமிக்கு சைக்கிளும் வாங்கிக் கொடுத்தனர். மொத்தம் சிறுமிக்கு 12 சைக்கிள்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தையும் விற்றார்.

    நிதியுதவி மற்றும் சைக்கிள்களை விற்று கிடைத்த பணம் என மொத்தம் ரூ.3 லட்சம் நிதியை சிறுமி திரட்டியிருக்கிறார். அவற்றை புற்றுநோயால் பாதித்து அவதிபட்ட பெண்ணுக்கு சிகிச்சைக்காக வழங்கியிருக்கிறார்.

    தனது ஆசையைப்பற்றி சிந்திக்காமல், பரிசாக கிடைத்த சைக்கிள்களையும் விற்று, அதில் கிடைத்த பணத்தை புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு வழங்கிய மாணவி தேவிகாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    • கொடிய நோய்களில் இரண்டாவது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது
    • கதிரியக்க சிகிச்சைக்கு வித்திட்ட மேரி கியூரி பிறந்த தினம் நவம்பர் 7

    நோய் தாக்குதலுக்கு உள்ளாகாத மனிதர்கள் இருப்பது அபூர்வம்.

    மனிதர்களுக்கு இயற்கை அளித்துள்ள எதிர்ப்பு சக்தி, சமநிலையான சத்தான உணவு மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை ஆகியவற்றால் மனிதர்கள் பெறுகின்ற ஆரோக்கியம், வாழ்நாள் முழுதும் அவர்கள் உடலை நோய் அண்டாத நிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனால் பொதுவாக சாதாரணமாக நோய் வந்தாலும் மனிதர்கள் பெரும்பாலும் மனதளவில் அஞ்சுவதில்லை.

    ஆனால், ஒரு சில நோய்கள் இதற்கு விதிவிலக்காக உள்ளது. அவற்றில் கேன்சர் (cancer) எனப்படும் "புற்றுநோய்" அடங்கும். புற்றுநோயை உலகின் கொடிய நோய்களில் இரண்டாவது என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.

    மனிதர்களின் உடலில் உள்ள செல்கள் புதிதாக தோன்றுவதும், வளர்வதும், பிறகு பழைய செல்கள் இறப்பதும் தினந்தோறும் நடைபெறும் ஒரு இயற்கை மாற்றம்.

    ஆனால், ஒரு சிலரின் உடலில் திடீரென செல்கள் கட்டுப்பாடின்றி வளர்வதும், தேவையற்ற புதிய செல்கள் தோன்றுவதும், பழைய செல்கள் இறக்காமல் தங்கி விடுவதும், அபரிமிதமான எண்ணிக்கையில் செல்களை ஒரே இடத்தில் ஒன்று சேர வழிவகுக்கும். இந்நிலையைத்தான் மருத்துவத்தில் 'புற்றுநோய்' என அழைக்கின்றனர்.

    ஒரு இடத்தில் தோன்றும் இந்த நோய், பிற உறுப்புகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. புற்றுநோயில் பல வகைகள் உள்ளன.

    புற்றுநோய் சிகிச்சை முறையில் ஒன்றான ரேடியோதெரபி (radiotherapy) எனப்படும் கதிரியக்க சிகிச்சை முறைக்கு வித்திட்டவரான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மேரி கியூரி, பிறந்த தினம் நவம்பர் 7.

    அவர் நினைவாக இந்தியாவில் ஒவ்வொரு நவம்பர் 7, "தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்" என கடைபிடிக்கப்படுகிறது.

    2014 செப்டம்பரில் இதற்கான அறிவிப்பை முதன்முதலாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் வெளியிட்டார். 



    முன்கூட்டியே துல்லியமாக நோயை கண்டறிவது குறித்தும், நோய் சிகிச்சைக்கான வழிமுறைகளை கணிப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த தினத்தின் நோக்கங்கள்.

    புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் ஆண்டுக்கு 1 கோடி பேர் இந்நோயால் உயிரிழக்கின்றனர். நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, 2025ல் சுமார் 3 கோடியாக ஆகலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) தெரிவித்துள்ளது.

    வளிமண்டல மாசு அதிகரிப்பால் நுரையீரல் புற்றுநோய் உண்டாகலாம். புகைப்பழக்கம், புகையிலை, குட்கா, பான்மசாலா போன்றவற்றை பயன்படுத்துதல் வாய் புற்றுநோய் தோன்றும் வாய்ப்பை அதிகப்படுத்தும். செயற்கை வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட உணவு மற்றும் தின்பண்டங்கள் அதிகம் உட்கொள்வதால் வயிறு சார்ந்த புற்றுநோய் உண்டாகலாம். மது அருந்துவதால் ஒரு சிலருக்கு உடல் உறுப்புகளில் புற்றுநோய் உண்டாகலாம்.

    மரபுவழி உணவு பழக்கம், தினசரி உடற்பயிற்சி, புகை மற்றும் மது தவிர்த்தல், செயற்கை வேதிப்பொருட்கள் மிகுந்த உணவுகளை தவிர்த்தல் போன்றவை இந்நோய் அண்டாமல் வைக்கும் வழிமுறைகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் இந்நோயை கட்டுப்படுத்துவது எளிதாகும். பாதிப்பை பொறுத்தே சிகிச்சைக்கான கால அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

    • புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
    • ரத்தப் பரிசோதனை மூலம் கொழுப்பின் அளவை கண்டறியலாம்.

    குடும்ப நலன் நாடும் பெண்கள் தங்கள் நலனில் போதிய அக்கறை கொள்ளாததால் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருசில பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பெரிய அளவிலான ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய சில பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்..

    புற்றுநோய்

    உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதிலும் பல பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இளம் வயது பெண்கள் கூட இந்த புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் 20 வயதை கடந்த பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    மார்பக புற்றுநோயும் வயது வித்தியாசமின்றி பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்குரிய பரிசோதனையையும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். 40 வயதை கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராம் சோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொள்வது நல்லது.

    கொழுப்பு பரிசோதனை

    ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் சேர்ந்தால், பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் கொழுப்பு அளவை கண்டறிய வேண்டியது அவசியமானது. சாதாரண ரத்தப் பரிசோதனை மூலமே கொழுப்பின் அளவை கண்டறிந்துவிடலாம். அதனால் 5 ஆண்டு களுக்கு ஒருமுறையாவது கொழுப்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. 20 வயதை கடந்த பெண்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

    தைராய்டு பரிசோதனை

    கழுத்து பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பியின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பதுதான். இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம், குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்ற பாதிப்பு உண்டாகும். ஆரம்ப நிலையிலேயே தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்தால் மருந்துகளின் மூலம் குணப்படுத்திவிட முடியும்.

    கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால் அது பெரும்பாலும் தைராய்டு கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்வதன் மூலமே கண்டறிய முடியும். ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்துவிட்டால் நோய் பாதிப்பின் வீரியத்தை கட்டுப்படுத்திவிடலாம்.

    கண்பார்வை பரிசோதனை

    பெண்கள் பலரும் கண் பார்வை பரிசோதனை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதன் அவசியத்தை புரிந்து கொள்வதுமில்லை. கண் பார்வையில் சிறு குறைபாடு தென்படும்போதே கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.

    நாளடைவில் கண் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்க தொடங்கிவிடுகிறது. ஆண்டுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. கண்ணாடி அணியுமாறு மருத்துவர் பரிந்துரைத்த நபர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    எலும்பு அடர்த்தி சோதனை

    எலும்புகள் பலவீனம் அடைந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எலும்புகளின் அடர்த்தியில் மாறுபாடு ஏற்படும்போது கடுமையான விளைவுகளை அனுபவிக்க நேரிடும். எலும்பின் அடர்த்தியை முன்கூட்டியே பரிசோதனை செய்து அறிந்து கொண்டால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

    பெண்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. அதிலும் 65 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய் நிற்கும் காலகட்டமான மெனோபாஸ் சமயத்தில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

    • உடற்பயிற்சி செய்துவந்தால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம்.
    • இதய நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்கும்.

    தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை தொடர்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு பல்வேறு உடல்நல பிரச்சினைகளை உருவாக்கும் அபாயத்தையும் குறைக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்துவந்தால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம். உடற்பயிற்சிகள் வழங்கும் நன்மைகள் எண்ணற்றவை. வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் தடுக்கக்கூடிய 8 வியாதிகள் குறித்து பார்ப்போம்.

    இதயநோய்

    வழக்கமான உடற்பயிற்சி இதயத்தை வலுப்படுத்துவதற்கும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய காரணியாக அமையும். அதனால் இதய நோய்களின் அபாயத்தை கணிசமாக குறைக்கும். ஓட்ட பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏரோபிக் செயல்பாடுகள் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தவும் உதவுகின்றன.

    உடல் பருமன்

    உடல் பருமனை தடுப்பதற்கும், சீரான உடல் எடையை நிர்வகிப்பதற்கும் உடல் இயக்க செயல்பாடு முக்கியமானது. வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வது கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும். அதனுடன் ஏரோபிக் பயிற்சிகளை மேற்கொள்வது தசையின் வலுவை மேம்படுத்துவதோடு கொழுப்பை எரித்து உடல் திறனை அதிகரிக்க செய்யும்.

    டைப் - 2 நீரிழிவு நோய்

    வழக்கமான உடற்பயிற்சி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும். இதனால் டைப் -2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்.

    ஆஸ்டியோபோரோசிஸ்

    நடைப்பயிற்சி, நடனம், பளு தூக்குதல் போன்ற பயிற்சிகள் எலும்புகளை வலுப்படுத்துவதோடு ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்கும். வழக்கமான உடல் செயல்பாடு எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவும். குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகள் வலு இழப்பதை குறைக்கும். வழக்கமான உடற்பயிற்சி மூட்டு வலியைக் குறைக்கும். நீச்சல், யோகா மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற நடவடிக்கைகள் மூட்டின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். தசைகளை வலுப்படுத்தும். மூட்டுவலி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

    மனநலக் கோளாறு

    வழக்கமான உடற்பயிற்சி, மனச்சோர்வு, பதற்றம் மற்றும் மன அழுத்தத்தின் அறிகுறிகளை குறைப்பதன் மூலம் மன ஆரோக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் தினமும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது எண்டோர்பின்களின் வெளியீட்டை தூண்டும். மனமகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். வயதாகும்போது ஏற்படும் அறிவாற்றல், நினைவாற்றல் வீழ்ச்சியை தடுக்கும்.

    புற்றுநோய்

    உடற்பயிற்சியால் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும், வழக்கமான உடல் செயல்பாடு மார்பகம், பெருங்குடல் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் உடற்பயிற்சி நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் துணைபுரியும்.

    சுவாச நோய்கள்

    வழக்கமான உடற்பயிற்சி நுரையீரலின் செயல் திறனையும், சுவாச செயல்பாட்டையும் மேம்படுத்த உதவும். ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் (சி.ஓ.பி.டி) பாதிப்புக்குள்ளானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஏரோபிக் பயிற்சிகள் சுவாச செயல்பாடுகளுடன் இணைந்து நுரையீரல் திறன் மற்றும் ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நாள்பட்ட நோய்கள்

    வழக்கமான உடற்பயிற்சி உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து பல நாள்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவும். உடற்பயிற்சி, நோயை குணப்படுத்தாவிட்டாலும் மோசமடையாமல் தடுக்க உதவும்.

    முதுமை பருவத்தை எட்டுபவர்கள் உடற்பயிற்சி வழக்கத்தை தொடர்வது அவசியம். இது உடல் இயக்கம், சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். உடல் செயல்பாடு, அறிவாற்றல் செயல்பாடு, நினைவகம் மற்றும் ஒட்டுமொத்த மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

    • நுரையீரல் சம்மந்தமான நோய்கள் பொதுவாக வரக்கூடியது ஆஸ்துமா
    • அலர்ஜி குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் அதிகமாக உள்ளது.

    இன்று அதிக அளவில் நுரையீரல் பாதிப்புக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். நுரையீரல் தொற்றில் இருந்தும் புற்று நோயில் இருந்தும் எப்படி தற்காத்துக்கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

    அறிகுறிகள்

    நுரையீரல் சம்மந்தமான நோய்கள் பொதுவாக வரக்கூடியது ஆஸ்துமா தான். நெஞ்சில் சளி கட்டி இருமலாக மாறும், இரவிலும் அதிகாலையிலும் இருமல் அதிகமாக இருக்கும். கட்டி கட்டியாக சளி வெளியேறுதல், மூச்சுத் திணறல், சுவாசிக்கும் போதுபூனை கத்துவது போன்ற சப்தம் கேட்பது போன்றன பொதுவாக இந்த நோயிற்கான அறிகுறிகள்.

    ஆஸ்துமா, அலர்ஜி எதனால் ஏற்படுகிறது?

    இவ்வகை அலர்ஜி குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் அதிகமாக உள்ளது. இந்த அலர்ஜி தூசியால், செல்லப்பிராணிகளின் ரோமங்களை சுவாசித்தாலோ அல்லது பூஞ்சை காளான்கள் அல்லது மகரந்த துகள்களை சுவாசித்தாலோ கூட இது போன்ற சளி, தும்மல், இருமல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது போன்ற மாசுபடுத்திகளால் நுரையீரலில் உள்ள ம்யூக்கஸ் சுரப்பிகள் வீங்கி அதிகப்படியான சளியை உண்டு பண்ணுகின்றன. மூச்சுக்குழாயின் சுருங்கும் தன்மை அதிகமாவதால் வீசிங் வருகிறது.

    இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு நடக்கும் போது மாடிப்படி ஏறும் போது வீசிங் அதிகமாகும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மூச்சு விடும்போது சப்தம் அதிகமாகிறது. இவற்றை ஆஸ்துமா அல்லது அலர்ஜி என்று சொல்வார்கள்.

    அலர்ஜி, ஆஸ்துமா வந்தால் எடுக்க வேண்டிய சிகிச்சை

    அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் அவர்களுக்கான மருந்து மாத்திரைகள் மற்றும் இன்ஹெல்லர்-ஐ தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மக்கள் பலருக்கு இன்ஹெல்லர் எடுப்பதில் இன்னும் குழப்பம் நிலவுகிறது. ஆனால், இன்ஹெல்லர் ஸ்டீராய்டு இருக்கும் என அச்சப்பட தேவையில்லை. மைக்ரோ மில்லிகிராம் அளவே அது இருக்கும் என்பதோடு இது மாத்திரை போல உணவுக் குழாயில் இருந்து ரத்தத்தில் கலக்கும் தன்மை கிடையாது என்பதால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. இன்ஹேல்லரை பயன்படுத்திய பிறகு வாய்க்கொப்பளிப்பது அவசியம்.

    அதேபோல ஆஸ்துமா வந்தால் மருந்து இன்ஹேல்லர் எடுப்பது மட்டுமல்ல, வீட்டில் தூசி சேராமல் சுத்தமாக வைத்துக்கொள்வது, செல்லப்பிராணிகள், பறவைகளை தவிர்ப்பது, மழை அல்லது குளிர்காலங்களில் விடியற்காலை நடைப்பயிற்சி செய்வதை தவிர்ப்பது போன்றவற்றால் அலர்ஜி பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். நுரையீரல் பிரச்சினை உள்ளவர்கள் நுரையீரல் செயல்பாடு சோதனை செய்வது போன்றவை இன்றியமையாதது.

    செல்லப்பிராணிகள் வளர்ப்பதால் நுரையீரலில் பாதிப்பு ஏற்படுமா?

    புறாக்களின் கழிவுகளை நீண்ட நாட்களாக சுவாசிப்பதால் நுரையீரல் பாதிக்க வாய்ப்புண்டு. அலர்ஜி உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பை இது ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இந்த கழிவை சுவாசிப்பவர்களுக்கு Hypersensitivity Pneumonitis என்ற ஒரு வகை மிகைப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி வரலாம். ஒன்று இரண்டு புறாக்களால் எந்த பிரச்சனையும் வராது. இவ்வகையான அலர்ஜி தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் மிக அதிகம்.

    ஃப்ளூ காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன?

    தற்போது வரக்கூடிய ஃப்ளூ காய்ச்சல் ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள் தொண்டை வலியாக தொடங்கி, காய்ச்சல், தலை பாரம் வந்து பிறகு இருமலாக மாறும். இந்த வகை காய்ச்சலால் வரும் இருமலை கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளது. இவ்வகை அறிகுறிகளை Post Viral Bronchitis என்று அழைப்போம். அதாவது வைரஸ் காய்ச்சலின் பின் விளைவுகள். அதோடு சைனஸிட்டிஸ், வீசிங்க் பிரச்சினை போன்ற அலர்ஜி இருக்கும் நபர்களுக்கு இந்த அறிகுறிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    சாதாரணமாக ஒருவருக்கு சளி அல்லது காய்ச்சல் வந்தால் இரண்டு மூன்று நாட்களில் குணமாகிவிடும் ஆனால் இந்த வகை ஃப்ளூ காய்ச்சல் குணமாக இரண்டு மூன்று வாரங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.

    வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

    இது போன்ற வைரல் இன்ஃபெக்ஷன் வைரஸால் ஏற்படும் தொற்று. இவை பொதுவாக காற்றுவழியாக மற்றவர்களுக்கு பரவும். குறிப்பாக பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இது எளிதில் பரவ வாய்ப்புள்ளது. அந்த குழந்தைகள் மூலம் பெற்றோருக்கும் வீட்டில் உள்ள தாத்தா பாட்டிக்கும் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு இவ்வகை தொற்று சுலபமாக வர வாய்ப்பு உள்ளது அதனை தொடர்ந்து நிமோனியா வர அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வயதினர்களுக்கு ஆண்டு தோறும் ஃப்ளூ வைரசிற்கான Influenza shot என்ற தடுப்பூசி போடுவதால் ஃப்ளூ காய்ச்சலை தவிர்க்கலாம்.

    நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபிடிப்பது மட்டுமே காரணமா?

    நிச்சயமாக இல்லை, புகைபிடிப்பது நுரையீரல் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கி்ல்லை என்றாலும், மரபணு சார்ந்த காரணங்கள், காற்று மாசுபாடு போன்ற மற்ற காரணங்களால் கூட நுரையீரல் புற்றுநோய் வரலாம். பொதுவாக சரியான நேரத்திற்கு உணவு உண்பது, துரித உணவுகளை தவிர்த்து சத்தாண உணவுகளை உண்பது, நல்ல தூக்கம், தொடர்ச்சியான உடற்பயிற்சி, புகைப் பிடிப்பது அல்லது மது அருந்துவதை தவிர்த்தல் போன்றவற்றை சரியாக பின்பற்றினால் பெரும்பாலும் புற்றுநோய் வருவதில் இருந்து தப்பலாம்.

    நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

    நுரையீரல் புற்றுநோயை பொறுத்தவரை சிறிய அளவிலான கேன்சர் கட்டி ஒருவரின் உடலில் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்போ அறிகுறிகளோ ஏற்படுத்தாது. இவை பெரிய அளவில் வந்த பிறகே அவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படும். நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், ரத்த வாந்தி, இருமல் போன்ற அறிகுறிகள் வெளிப்படும் போது கேன்சரின் மூன்றாவது அல்லது நான்காவது நிலையிலே தான் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

    இதனை தவிர்க்க வருடம் தோறும் முழு உடல் பரிசோதனை செய்வது அவசியம். இவ்வாறு செய்யும்போது ஆரம்ப நிலையிலேயே நோயினை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது, அதனால் ஆரம்ப நிலையிலையே கண்டறிந்து குணப்படுத்திவிடலாம். அதிக பாதிப்பிற்கு உள்ளான பிறகு தெரிய வந்தால் அதனை குணமாக்குவது கடினம்.

    நுரையீரல் வீக்கம் என்றால் என்ன?

    நுரையீரல் வீக்கம் என்பது COPD (Chronic Pulmonary Obstructive Disease) நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்று சொல்வார்கள். புகைபிடிப்பது, காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் மூச்சுக் குழாய் சுருங்கி நுரையீரல் வீங்குவது. இவை பொதுவாக சுற்றுச்சூழல் காரணமாக வரக்கூடியவை. பெரும்பாலும் ஆண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

    முற்காலத்தில் விறகு மற்றும் வரட்டிகளை உபயோகித்து அடுப்பு எரித்ததால் பெண்களுக்கும் பாதிப்பு அதிகம் இருந்து வந்தது, இடை பட்ட காலத்தில் சமையல் எரிவாயுவான எல்.பி.ஜி. வந்த பிறகு பெண்களிடையே இந்த COPD குறைவானது. தற்போது passivesmoking (அதாவது அருகில் உள்ளவர்கள் புகைபிடிப்பதை சுவாசிப்பது), அல்லது புகைபிடிப்பது போன்ற காரணங்களால், கொசுவர்த்தி சுருள் அல்லது சுற்றுச்சூழல் காரணிகளான காற்று மாசுபாடு போன்றவற்றால் பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கும் இன்ஹெல்லர் தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டும்.

    பொதுவாக மூச்சு வாங்குதல், மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் நுரையீரல் பிரச்சினை என்று சொல்லப்படுகிறது. இவை எதனால் ஏற்படுகிறது, இந்த அறிகுறிகள் ஏற்படலாம் மருத்துவரை அணுகுவது எவ்வளவு முக்கியம்?

    பொதுவாக தூசி, மற்ற சில அலர்ஜிகளால் முதலில் தும்மல், மூக்கடைப்பு ஏற்படுத்தும் அதை சரியாக குணப்படுத்தா விட்டால் அலர்ஜி மற்றும் சைனசிட்டிஸ் ஏற்பட்டு நுரையீரலில் சளி உண்டாகலாம், இதனை தொடர்ந்து இருமல் ஏற்படும், அடிக்கடி இருமல் சளியை வெளியேற்றிக் கொண்டே இருப்பார்கள்.

    பொதுவாக விடியற்காலை நேரங்களில் இருமல், தும்மல், மூக்கடைப்பு ஏற்படும் இவையெல்லாமே அலர்ஜிக்கான அறிகுறிகள், இதனை தொடர்ந்து வீசிங் ஏற்படும். இதற்கு மருத்துவரை அணுகி அலர்ஜி மாத்திரைகள் எடுக்கலாம், அடிக்கடி வரும்பட்சத்தில் இன்ஹெல்லர் சிறந்த தீர்வு.

    என்னென்ன உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

    ஏசியை அடிக்கடி பராமரித்து உபயோகபடுத்த வேண்டும், சீரற்ற தூக்கம், இவை பிரச்சினைகளை ஏற்படுத்தும். இவற்றை தவிர்க்க மூச்சுப் பயிற்சி தொடர்ச்சியாக செய்ய வேண்டும் உடற்பயிற்சி, ஏதாவது விளையாட்டு வீசிங், அலர்ஜிக்கான வாய்ப்புகளை குறைக்கும். சத்தான உணவை சரியான நேரத்திற்கு உட்கொள்வது, கீரை, காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது நல்லது.

    முகக் கவசம் உபயோகப்படுத்துவது தேவையா?

    தற்போது ஃப்ளூ காய்ச்சல் அதிகம் பரவி வருவதால் நிச்சயமாக பொது இடங்களுக்கு செல்லும் போதும், பேருந்து ரயில் பயணங்கள் போன்றவற்றில் பயணிக்கும் போதும் முகக் கவசம் அணிவதுநல்லது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மார்பக புற்றுநோய் என்பது மரபியல் மற்றும் குடும்ப வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆபத்து காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான நோயாகும்.
    • தாமதமாக கண்டறிதல் என்பது இந்தியாவில் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது.

    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. கல்லூரி மருத்துவமனையின் கதிரியக்க புற்றுநோயியல் துறை சார்பில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் இருந்து கோட்டை வரை பேரணி நடந்தது.

    இதில் மார்பக ஆரோக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் பற்றிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர். 

    வேலூரில் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி

    வேலூரில் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்த காட்சி

    ஊர்வலத்திற்கு ரேடியேஷன் ஆர்காலஜி துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பி.ராஜேஷ் தலைமை தாங்கினார். அப்போது மருத்துவர்கள் கூறியதாவது:-

    மார்பக புற்றுநோய் என்பது மரபியல் மற்றும் குடும்ப வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆபத்து காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான நோயாகும்.

    உணவுமுறை, உடல் செயல்பாடு மற்றும் மது அருந்துதல் போன்ற வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    மேலும், தாமதமாக கண்டறிதல் என்பது இந்தியாவில் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது, பெரும்பாலும் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுவதில் தயக்கம் போன்றவை பெரும் பிரச்சினையாக உள்ளது.

    இந்தியாவில் பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக இதன் ஆபத்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கையில் மார்பக புற்றுநோய் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2020-ம் ஆண்டில் சுமார் 1.7 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு ஆய்வில் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இது மிகவும் அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை மற்றும் சுகாதார நெருக்கடியை குறிக்கிறது. மேலும் சமூக, சுகாதார நிபுணர்களின் நடவடிக்கைக்கான தேவையை வெளிப்படுத்துகிறது.

    நோயின் அறிகுறிகளை தொடக்க காலத்திலேயே கண்டறியும்போது, வெற்றிகரமான சிகிச்சை மற்றும் நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சி.எம்.சி ஊழியர்கள் மற்றும் மார்பக புற்றுநோய் மேலாண்மை குழுவின் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மருத்துவர் சந்தியா விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை செய்தார்.
    • முகாமில் அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரவணசமுத்திரம் ஊராட்சியில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் நெல்லை கேன்சர் சென்டர் மருத்துவர் சந்தியா கலந்து கொண்டு விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகளை செய்தார். முகாமில் புற்றுநோய் தடுக்கும் விதமாக விதமாக பிளாஸ்டிக் பை ஒழித்து மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு அனைவருக்கும் மஞ்சள் பை வழங்கப்பட்டது.

    இதில் ஊராட்சி தலைவர் முகம்மது உசேன், துணை தலைவர் ராமலெட்சுமி சங்கிலி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர், மகளிர் சுய உதவிக் குழு மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மக்கள் கல்வி நிறுவனம் செய்திருந்தது.

    • உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும்.
    • கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    தற்போது பெரும்பாலான பெண்களின் கவலையை அதிகரிப்பது அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைதான். இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பை நோய்கள், பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய், கீல்வாதம், பக்கவாதம், மனி அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும். இதை தவறாக புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.

    காலை உணவை தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் முரண்பாடு ஏற்படும். இது உடல் பருமன் பிரச்சினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும், மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.

    முதலில் எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள். துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதச்சத்து. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவுமுறையை பின்பற்ற வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'டி' மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் அவசியமானதாகும் இவை நிறைந்த உணவுகளை தினசரி உணவுப் பட்டியவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    காலை உணவாக முழு தானியங்கள் பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கதிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தினமும் போதுமான அளவு தண்ணிர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு சீரான தூக்கமும் முக்கியமானது. இவற்றோடு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால் உடல் எடை எளிதாக குறையும்.

    • இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது கணவர் மொட்டையடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
    • வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரிய வலிகளை அனுபவித்து கொண்டிருப்பார்கள். இந்த நோய் பாதித்தவர்களுக்கு கொடுக்கப்படும் கீமோதெரபி போன்ற சிகிச்சைகளால் அவர்களுக்கு கொத்து கொத்தாக முடி கொட்டும் என்பதால் அவர்கள் முடியை மொட்டையடித்து கொள்வார்கள்.

    உணர்வு ரீதியாக இந்த வலியை கடப்பது சற்று கடினமானது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது கணவர் மொட்டையடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. புற்றுநோயை எதிர்த்து போராடும் மனைவிக்கு ஆதரவாக கணவர் ஒருவர் அவரது தலையை மொட்டையடிக்கும் காட்சிகள் அதில் உள்ளது.

    அப்போது அந்த பெண் கதறி அழும் காட்சிகள் காண்போர் மனதை உருக்குவதாக உள்ளது. பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர் அந்த பெண் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும், நீங்கள் புற்றுநோயை முறியடிப்பீர்கள் என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    • கல்லூரியின் தாவரவியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு,கல்லூரி முதல்வா் ஆா்.எழிலி தலைமை வகித்தாா்.
    • திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு தொடா்பான சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

    திருப்பூா்:

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு தொடா்பான சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் தாவரவியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு,கல்லூரி முதல்வா் ஆா்.எழிலி தலைமை வகித்தாா். தாவரவியல் துறை தலைவா் ஆா்.குருசாமி வரவேற்புரையாற்றினாா்.

    இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சவூதி அரேபியா தபுக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் முகமது அலிசயத், கடல் சாா்ந்த இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது என்ற தலைப்பில் பேசினாா்.இந்தக் கருத்தரங்கில், தாவரவியல் துறை செயலாளா் அபிநயா, கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது.
    • புற்றுநோய் இறப்பிலும் உத்தரபிரதேசம் முன்னிலையில் உள்ளது.

    புதுடெல்லி :

    மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்று அல்லாத நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளையும், நிதி உதவிகளையும் வழங்குகிறது. புற்றுநோய், மேற்படி திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். புற்றுநோய் தடுப்புக்கான உள்கட்டமைப்பு, மனிதவள மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் விழிப்புணர்வை உருவாக்குதல், ஆரம்பகால நோயறிதல் போன்றவற்றில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது. சிகிச்சைக்காக நோயாளிகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் அந்த பதிலுடன், கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்புகள் குறித்த புள்ளிவிவரங்களையும் அளித்துள்ளார். அதன்படி, நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு 13 லட்சத்து 92 ஆயிரத்து 179 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இது 2021-ம் ஆண்டு 14 லட்சத்து 26 ஆயிரத்து 447 ஆக அதிகரித்து, 2022-ம் ஆண்டு 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.

    அதைப்போல புற்றுநோய் இறப்புகளை எடுத்துக்கொண்டால் 2020-ம் ஆண்டு 7 லட்சத்து 70 ஆயிரத்து 230 பேரும், 2021-ம் ஆண்டு 7 லட்சத்து 89 ஆயிரத்து 202 பேரும், 2022-ம் ஆண்டு 8 லட்சத்து 8 ஆயிரத்து 558 பேரும் இறந்துள்ளனர்.

    புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு கடந்த ஆண்டு 2 லட்சத்து 10 ஆயிரத்து 958 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 93 ஆயிரத்து 536 பேருக்கு பாதிப்பு உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். புற்றுநோய் இறப்பிலும் உத்தரபிரதேசம் முன்னிலையில் உள்ளது. அங்கு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 818 பேர் இறந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 50 ஆயிரத்து 841 பேர் இறந்துள்ளனர்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மார்பக புற்றுநோயை கண்டுபிடிப்பது மிகவும் எளிது.
    • மார்பகத்தில் வரும் பிரச்சினை பற்றி கணவரிடம் கூட சொல்ல வெட்கப்படுகிறார்கள்.

    இந்தியாவில் மார்பக புற்றுநோயால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில், இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக மாறியிருப்பது கவலை தருவதாக உள்ளது. உலகளவில் புற்றுநோய் இறப்புகளில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் சதவீதம் 18.1 சதவீதம் ஆகும். எனவே அரசு தொடர்ந்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நமது உடல் பல வகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன.

    இந்த சீரான பணியில் ஏதேனும் பிறழ்வுகள் ஏற்படும்போது புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகி விடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்து விடுகின்றன. இந்த உயிரணுக்கள் ஆரோக்கியமான உயிரணுக்களை தாக்குகிறது. மேலும், அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கின்றது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பெண்களின் மார்பகங்களில் கட்டிகள் உருவாகின்றன.

    இது புற்றுநோய் கட்டிகளாக மாறுகின்றன. மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மார்பகத்தில் பால் சுரக்கும் இடத்தில் வருகிறது. இத்தகைய புற்றுநோய் கட்டிகள் வலியே இல்லாமல் வளரக்கூடியது. இந்த கட்டி சிறிது, சிறிதாக வளர்ந்து கோலிக்குண்டு அளவுக்கு வந்து விடக்கூடியது.

    மார்பக புற்றுநோயை கண்டுபிடிப்பது மிகவும் எளிது. நம் வீட்டில் உள்ள தாய், மனைவி, மகள் என ஒவ்வொரு பெண்மணியும் முக்கியமானவர்கள். அவர்கள் வீட்டை பொறுப்புடன் நிர்வகிப்பவர்கள். அவர்களுக்கு ஒரு நோய் என ஆஸ்பத்திரிக்கு சென்று படுத்து விட்டால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போய் விடும். எனவே விழிப்புணர்வுடன் இருந்தால் மார்பக புற்றுநோயை பெண்கள் எளிதில் வெல்லலாம்.

    பெண்கள் தங்கள் மார்பகத்தை அவர்களாகவே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தினமும் இவ்வாறு சோதனை செய்ய வேண்டும் என்றில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறையோ, ஒரு மாதத்துக்கு ஒருமுறையோ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். காலையில் குளிக்கும் போது மார்பகத்தை தொட்டுப்பாருங்கள். இடது மார்பகத்தை வலது கையாலும், வலது மார்பகத்தை இடது கையாலும் சோதித்து பாருங்கள். குளிக்கும்போது அந்த நீரோடு தொட்டு பார்க்கும்போது எந்த கட்டி இருந்தாலும் தெரிந்து விடும்.

    வழக்கமாக இருப்பதை விட ஏதாவது கட்டி மாதிரி தெரிந்தாலோ, நரம்பு சுருண்டு இருப்பது போல் நீங்கள் உணர்ந்தாலோ உஷாராகி விட வேண்டும். சிறிய கட்டி தானே, வலி ஒன்றுமே இல்லையே என்று சாதாரணமாக இருந்து விடக்கூடாது. வலி இல்லாத கட்டி 2 வகையை கொண்டது. ஒன்று மார்பக புற்றுநோய் கட்டி, மற்றொன்று மார்பக நார்த்திசுக் கட்டி (Fibroadenoma) எனப்படும் சாதாரண கட்டி. இதில் எந்தவகையான கட்டி உடலில் உள்ளது என்பதை நிபுணத்துவம் பெற்ற சிறப்பு டாக்டர்கள் தான் பரிசோதித்து உறுதி செய்வர்.

    சில பெண்கள் மார்பகத்தில் வரும் கட்டி பெரிதான பிறகே மருத்துவரிடம் ஓடுகிறார்கள். இந்த கட்டி பற்றி அவர்கள் தனது கணவரிடம் கூட தெரிவித்து இருக்க மாட்டார்கள். மருத்துவரிடம் சென்றதும் அவர் ஏன் இவ்வளவு தாமதம் செய்தீர்கள் என கேட்பார். பெண்ணின் கணவரையும் கண்டிப்பார். பெண்கள் தங்கள் மார்பகத்தில் வரும் பிரச்சினை பற்றி கணவரிடம் கூட சொல்ல வெட்கப்படுகிறார்கள்.

    மருத்துவர் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட சில பரிசோதனைகளை எடுத்து பார்ப்பார். மார்பகத்தில் உள்ள கட்டி புற்றுநோய் கட்டி தான் என்று தெரியவந்தால் கட்டி உள்ள மார்பகத்தை முழுமையாக அகற்ற வேண்டும் என்பார். கதிரியக்க சிகிச்சை அளிக்க வேண்டியது இருக்கும். கீமோ தெரபி கொடுக்க வேண்டும். இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறுவதற்கு உங்களது அலட்சியம் தான் முழுக்க முழுக்க காரணம் ஆகும். உங்கள் உடலை பாதுகாக்க நீங்கள் தவறி விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.

    எனவே மார்பகத்தில் சிறிய கட்டி வந்தவுடன் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் ஆஸ்பத்திரிகளிலும் இப்போது ஏராளமான சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். அவர்களை கண்டிப்பாக போய் பார்க்க வேண்டும்.

    தொண்டை கமறல் உள்ளது, இருமல் இருக்கிறது என்றவுடன் தனக்கு கொரோனாவாக இருக்குமோ என அச்சப்பட்டு சோதிக்கச் சொல்லும் பெண்கள், மார்பக பிரச்சினைக்கும் டாக்டர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும். எனக்கு தெரிந்து தமிழகத்தில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு புற்றுநோய் வருகிறது. அதில் 50 ஆயிரம் பேர் புற்றுநோய் முற்றிய நிலையிலேயே வருகிறார்கள். அவர்களுக்கு ரேடியேசன் சிகிச்சை கொடுக்க வேண்டும். மேஜர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். இதெல்லாம் தேவையா? என்பதை எண்ணிப்பாருங்கள். ஆரம்பத்திலேயே புற்றுநோய் கட்டியை கண்டுபிடித்து விட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம். எனவே பெண்களே அதிஜாக்கிரதையாக இருங்கள்.

    தொடர்புக்கு:info@kghospital.com, 98422 66630

    ×