search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chemotherapy"

    • ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
    • `கார்-டி’ புற்றுநோய்களுக்கு பயன்படுத்தப்படும் சிகிச்சையாகும்.

    இந்தியாவில் புற்றுநோய் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 2010-ம் ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 16 லட்சத்தை எட்டிவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் வேதனையை அனுபவிப்பது ஒருபுறமிருக்க, அதன் சிகிச்சை முறைகளும் மிகவும் வலி நிறைந்தவை. அதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான புதிய முறையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த முறையின் பெயர் கார்-டி (சிமெரிக் ஆன்டிஜென் ஏற்பி டி-செல்) செல் சிகிச்சை. இது புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தொழில்நுட்பமாகும்.

     லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற பி-செல் புற்றுநோய்களுக்கு பயன்படுத்தப்படும் சிகிச்சையாகும். இந்தியாவில் கார்-டி சிகிச்சைக்கு மத்திய மருந்து நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ) வணிக பயன்பாட்டிற்காக அங்கீகரித்தது.

    கீமோதெரபி போன்ற சிகிச்சைகளுக்கு குணமாகாத புற்று நோயாளிகளுக்கு கார்-டி (CAR-T) செல் சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. இது குறிப்பிட்ட புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் புதிய நோயெதிர்ப்பு சிகிச்சையாகும். இந்த சிகிச்சையானது புற்றுநோயை எதிர்த்து போராட, நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கிறது.

    கார்-டி சிகிச்சை என்பது புற்றுநோய் செல்களை தாக்குவதற்கு நோயாளியின் டி-செல்களை பயன்படுத்துவதாகும். டி-செல்கள் என்பது ஒரு வகை ரத்த வெள்ளை அணுக்களாகும். இவை உடலில் தொற்றுநோய் ஏற்படும்போது அதை எதிர்த்து போராட உதவுகிறது. இதற்காக டி-செல்கள் நோயாளியின் ரத்தத்தில் (ரத்த வெள்ளை அணுக்கள்) இருந்து எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் மரபணு மாற்றம்

    செய்யப்படுகின்றன. இந்த மரபணு மாற்றப்பட்ட செல்கள் மீண்டும் நோயாளிக்குள் செலுத்தப்பட்டு, அவை புற்றுநோய் செல்களைத் தாக்கி கொல்லும்.

    உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் கார்-டி சிகிச்சையின் பெயர் நெக்ஸ்கார்-19. இது இந்தியாவில் இன்மியூனோ ஆக்ட் என்ற நிறுவனத்தால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சம். லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற பி-செல் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிகிச்சையை வெளிநாட்டில் செய்தால் ரூ. 4 கோடி வரை செலவாகும். ஆனால் இந்தியாவில் சுமார் ரூ.40 லட்சத்தில் இந்த சிகிச்சையை செய்து கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை இப்போது அளிக்கப்படுகிறது. பி-செல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் இந்த சிகிச்சைக்கு தகுதியுடையவர்கள். குறிப்பாக லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற ரத்த புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளை காட்டியுள்ளது.

    புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிலரது உடலில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் பலருக்கு ரத்தத்தில் புற்று நோய் செல்கள் கண்டறியப்படவில்லை. இந்த சிகிச்சை பயனுள்ளாதாய் இருந்தாலும், கடுமையான பக்க விளைவுகளைக் கொண்டதாகும்.

    ஆனால் கார்-டி செல் சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் அதன் பயன்பாட்டை விரிவுப்படுத்துவதற்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

    2017-ம் ஆண்டில், அமெரிக்கா கார்-டி சிகிச்சையை முதன் முதலில் அங்கீகரித்தது. ஐரோப்பா மற்றும் சீனா உட்பட பல வளர்ந்த நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கிறது. முதலில் இந்தியா இந்த சிகிச்சை முறையை வெளிநாடுகளில் இருந்து தான் பெற வேண்டி இருந்தது.

    இங்குள்ள நோயாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும்போது மருத்துவமனை கட்டணம், மருத்துவர், உணவு மற்றும் பிற செலவுகளை ஒப்பிடும்போது விலை அதிகமாக இருந்தது. இப்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதன் விளைவாக, விலை குறையும் என்பதால் பலராலும் இந்த சிகிச்சையை பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த கார்-டி செல் சிகிச்சை மூலம் முதல் நோயாளியாக, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அவரது பெயர் வி.கே. குப்தா. டெல்லியை சேர்ந்த இவர் இரைப்பை குடல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கார்-டி செல் சிகிச்சையை பயன்படுத்தி மருத்துவர் ஒருவரே புற்றுநோயில் இருந்து குணமாகி இருப்பதால் இந்த சிகிச்சை புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த சிகிச்சை முறை உடலில் ஒரு முறை மட்டுமே செய்யப்படுகிறது. எந்தவொரு சிகிச்சை முறையிலும் முன்னேற்றம் அடையாத ரத்த புற்றுநோயாளிகளுக்கு இந்த சிகிச்சை பயனுள்ளதாகவே இருக்கும் என்பது மருத்துவ உலகின் கருத்தாக இருக்கிறது.

    • கொடிய நோய்களில் இரண்டாவது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது
    • கதிரியக்க சிகிச்சைக்கு வித்திட்ட மேரி கியூரி பிறந்த தினம் நவம்பர் 7

    நோய் தாக்குதலுக்கு உள்ளாகாத மனிதர்கள் இருப்பது அபூர்வம்.

    மனிதர்களுக்கு இயற்கை அளித்துள்ள எதிர்ப்பு சக்தி, சமநிலையான சத்தான உணவு மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை ஆகியவற்றால் மனிதர்கள் பெறுகின்ற ஆரோக்கியம், வாழ்நாள் முழுதும் அவர்கள் உடலை நோய் அண்டாத நிலையில் வைத்திருக்க உதவுகிறது. இதனால் பொதுவாக சாதாரணமாக நோய் வந்தாலும் மனிதர்கள் பெரும்பாலும் மனதளவில் அஞ்சுவதில்லை.

    ஆனால், ஒரு சில நோய்கள் இதற்கு விதிவிலக்காக உள்ளது. அவற்றில் கேன்சர் (cancer) எனப்படும் "புற்றுநோய்" அடங்கும். புற்றுநோயை உலகின் கொடிய நோய்களில் இரண்டாவது என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.

    மனிதர்களின் உடலில் உள்ள செல்கள் புதிதாக தோன்றுவதும், வளர்வதும், பிறகு பழைய செல்கள் இறப்பதும் தினந்தோறும் நடைபெறும் ஒரு இயற்கை மாற்றம்.

    ஆனால், ஒரு சிலரின் உடலில் திடீரென செல்கள் கட்டுப்பாடின்றி வளர்வதும், தேவையற்ற புதிய செல்கள் தோன்றுவதும், பழைய செல்கள் இறக்காமல் தங்கி விடுவதும், அபரிமிதமான எண்ணிக்கையில் செல்களை ஒரே இடத்தில் ஒன்று சேர வழிவகுக்கும். இந்நிலையைத்தான் மருத்துவத்தில் 'புற்றுநோய்' என அழைக்கின்றனர்.

    ஒரு இடத்தில் தோன்றும் இந்த நோய், பிற உறுப்புகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. புற்றுநோயில் பல வகைகள் உள்ளன.

    புற்றுநோய் சிகிச்சை முறையில் ஒன்றான ரேடியோதெரபி (radiotherapy) எனப்படும் கதிரியக்க சிகிச்சை முறைக்கு வித்திட்டவரான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மேரி கியூரி, பிறந்த தினம் நவம்பர் 7.

    அவர் நினைவாக இந்தியாவில் ஒவ்வொரு நவம்பர் 7, "தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்" என கடைபிடிக்கப்படுகிறது.

    2014 செப்டம்பரில் இதற்கான அறிவிப்பை முதன்முதலாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் வெளியிட்டார். 



    முன்கூட்டியே துல்லியமாக நோயை கண்டறிவது குறித்தும், நோய் சிகிச்சைக்கான வழிமுறைகளை கணிப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த தினத்தின் நோக்கங்கள்.

    புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் ஆண்டுக்கு 1 கோடி பேர் இந்நோயால் உயிரிழக்கின்றனர். நம் நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை, 2025ல் சுமார் 3 கோடியாக ஆகலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) தெரிவித்துள்ளது.

    வளிமண்டல மாசு அதிகரிப்பால் நுரையீரல் புற்றுநோய் உண்டாகலாம். புகைப்பழக்கம், புகையிலை, குட்கா, பான்மசாலா போன்றவற்றை பயன்படுத்துதல் வாய் புற்றுநோய் தோன்றும் வாய்ப்பை அதிகப்படுத்தும். செயற்கை வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட உணவு மற்றும் தின்பண்டங்கள் அதிகம் உட்கொள்வதால் வயிறு சார்ந்த புற்றுநோய் உண்டாகலாம். மது அருந்துவதால் ஒரு சிலருக்கு உடல் உறுப்புகளில் புற்றுநோய் உண்டாகலாம்.

    மரபுவழி உணவு பழக்கம், தினசரி உடற்பயிற்சி, புகை மற்றும் மது தவிர்த்தல், செயற்கை வேதிப்பொருட்கள் மிகுந்த உணவுகளை தவிர்த்தல் போன்றவை இந்நோய் அண்டாமல் வைக்கும் வழிமுறைகள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் இந்நோயை கட்டுப்படுத்துவது எளிதாகும். பாதிப்பை பொறுத்தே சிகிச்சைக்கான கால அளவு நிர்ணயிக்கப்படுகிறது.

    ×