search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை வெள்ளம்"

    • மத்திய அரசின் நிதியை முழுமையாக பெற்றால்தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும்.
    • தென் மாவட்டங்களில் 8 அமைச்சர்கள், 10 ஆட்சி அலுவலர்கள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    டெல்லி:

    டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழ்நாடு அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பெருமளவு பாதிப்பும், சேதமும் தவிர்க்கப்பட்டது. புயல் ஓய்ந்த மறுநாளே சென்னையில் போக்குவரத்து சீரானது.

    * தற்போது தென் மாவட்டங்களில் மழையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வானிலை மையம் தெரிவித்ததை விடவும் அதிகமாக மழை பெய்துள்ளது.

    * மத்திய அரசின் குழுவினர் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.

    * இது பெரும் பேரிடர் என்பதால் கூடுதல் நிதியை கோரியுள்ளோம்.

    * மத்திய அரசின் நிதி வரட்டும் என காத்திருக்காமல் 4 மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டை அரசு அறிவித்தது.

    * மத்திய அரசின் நிதியை முழுமையாக பெற்றால்தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும்.

    * பிரதமரை சந்தித்து மிச்சாங் புயல் நிவாரணத்தோடு, தென் மாவட்ட பாதிப்புக்கு நிவாரணம் கோர உள்ளேன்.

    * நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

    * ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் கொட்டித் தீர்த்ததை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.

    * தென் மாவட்டங்களில் 8 அமைச்சர்கள், 10 ஆட்சி அலுவலர்கள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    * மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை தென்மாவட்டங்களுக்கு செல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 24 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
    • மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும், மீண்டும் வேதனைக்கு உள்ளாக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கும் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் துயரங்களைப் போக்குவதற்கு பதிலாக வேதனையையும், மன உளைச்சலையும் அதிகரித்திருக்கிறது. நிவாரண உதவி வழங்குவதில் நிகழும் குளறுபடிகள் தான் அனைத்துக்கும் காரணம் ஆகும். இந்த தவறான அணுகுமுறை கண்டிக்கத்தக்கது ஆகும்.

    சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குடிசைகளில் வாழும் ஏழை மக்களுக்குக் கூட நிவாரண உதவி மறுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைத்து வசதிகளுடன் வாழும் பணக்காரர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. எந்த அடிப்படையில் நிதி உதவி பெறுவதற்கான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது தெரியவில்லை. நிவாரண உதவி கண்டிப்பாக தேவைப்படும் நிலையில் உள்ள ஏழை மக்களை புறக்கணிப்பது அவர்களின் துயரங்களை மேலும் அதிகரிக்கும்.

    தமிழக அரசின் நிவாரண உதவி பெறுவதற்கான ஒரே தகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தான். அதன்படி பார்த்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 40 லட்சத்திற்கும் கூடுதலான குடும்பங்கள் மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மழை - வெள்ளத்தை பார்வையிட வந்த மத்தியக் குழுவிடம் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளில் இதை தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. அதன்படி, 40 லட்சம் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், 24 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

    நிவாரண உதவி மறுக்கப்பட்டவர்கள் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான முறை நடைமுறைக்கு சிறிதும் ஒத்துவராததாக உள்ளது. அதற்காக கோரப்படும் ஆவணங்களையும், சான்றுகளையும் சேகரித்து வழங்குவது பாமர மக்களால் இயலாத ஒன்றாகும். மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும், மீண்டும் வேதனைக்கு உள்ளாக்கக் கூடாது. மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும், மற்றவர்களுக்கும் எந்த நிபந்தனையும் இல்லாமல் ரூ.6000 இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

    • அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
    • முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என் ஒரு மாத ஊதியத்தை வழங்குகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார். மேலும் அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதையடுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தொழில் அதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நிதி வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 30 தி.மு.க. மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகைக்கான காசோலையே வழங்கினார்கள்.

    • வெள்ள நிவாரணமாக மக்களுக்கு குறைந்தது ரூ.10 ஆயிரமாவது வழங்க வேண்டும்.
    • பா.ஜ.க. வளர்ந்துவிட்டது என்பதால் எங்களை குறை கூறுகிறார்கள்.

    சென்னை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பேரிடரின் போது ஆய்வுக்கு வரும் மத்திய குழுவினர் மாநில அரசை குறை சொல்ல மாட்டார்கள்.

    * தமிழக அரசின் தவறை முதலமைச்சர் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

    * வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறு.

    * மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை என்பது கஷ்டத்தில் பங்கு கொள்ள மட்டுமே.

    * வெள்ள நிவாரணமாக மக்களுக்கு குறைந்தது ரூ.10 ஆயிரமாவது வழங்க வேண்டும்.

    * பா.ஜ.க. வளர்ந்துவிட்டது என்பதால் எங்களை குறை கூறுகிறார்கள்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • புயலுக்கு முன்பும்-புயலுக்கு பிறகும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் பாதிப்பு குறைந்தது.
    • பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாகப் பாதுகாப்பது மிகமிக அவசியமானதாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:-நிவாரணப் பணிகள் உங்களுக்குத் திருப்தியை அளிக்கின்றனவா? இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

    தமிழ்நாடு அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசின் குழு முழுமையாக வரவேற்றுப் பாராட்டி இருக்கிறது. 'சரியான நேரத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும்' என்றும், 'உரிய நேரத்தில் நீர் திறந்து விடப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது' என்றும், 'அதற்காக இந்த அரசை நாங்கள் பாராட்டுகிறோம்' என்றும் ஒன்றியக் குழு பாராட்டி இருக்கிறது.

    இதே கருத்தை, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் என்னைச் சந்தித்தபோது தெரிவித்தார்.

    அரசியல் ரீதியாக ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் எங்களுக்குமான கொள்கை முரண்பாடுகள் அனைவரும் அறிந்ததே. அதனையும் தாண்டி இந்தளவுக்குப் பாராட்டுகிறார்கள் என்றால், தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகள்தான் இதற்குக் காரணம்.

    கடுமையான மழை இரண்டு நாட்கள் இடைவிடாது பெய்கிறது. மழை நின்றதும் நிவாரணப் பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். மறுநாளே போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. பெரும்பாலான பகுதிகளுக்கு மின் இணைப்பானது மூன்று நாட்களுக்குள் கிடைத்து விட்டது. புறநகரில் ஒரு சில பகுதிகள் நீங்கலாக நான்கைந்து நாட்களுக்குள் மற்ற அனைத்துப் பகுதிகளும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டன.

    தண்ணீரில் மூழ்கியிருந்த பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்தோம். அவர்களையும் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வந்து அமர்த்தினோம். நானே பல்வேறு பகுதிக்குச் சென்றேன். 20 அமைச்சர்கள், 50 ஐ.ஏ.எஸ். -ஐ.பி.எஸ் அதிகாரிகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் களத்தில் இருந்தார்கள். வெளிமாவட்டங்கள் அனைத்தில் இருந்தும் ஆதரவுக் கரம் நீண்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த நொடி வரையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    புயலுக்கு முன்பும்-புயலுக்கு பிறகும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் பாதிப்பு குறைந்தது. பொதுவாக மக்கள் பணியாற்றும் நாங்கள் மேலும் மேலும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றுதான் நினைப்போம். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். இன்னும் அதிகமாக மக்களுக்கு உதவவே நான் ஆசைப்படுகிறேன்.

    கேள்வி:-பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. நீர் வடிந்து தேங்காமல் இருப்பதற்கு இயற்கையால் உருவான அந்த நிலத்தை முழுவதுமாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்குமா? அது போல வேளச்சேரியிலும் பல இடங்கள் சதுப்பு நிலமாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கப் போகிறது?

    பதில்:- பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாகப் பாதுகாப்பது மிகமிக அவசியமானதாகும். தென்சென்னை பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பயன்பாடு குறித்து நிச்சயமாக மறு ஆய்வு செய்யப்படும். இந்த சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும், வனத்துறை ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த முழுமைத் திட்டத்தில் வெள்ளத் தடுப்பிற்கான திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள் அது வெளியிடப்படும். இந்த மூன்றாவது முழுமைத் திட்டத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சென்னையில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கான அம்சங்கள் இடம் பெறும். சென்னையையும், அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளையும், சதுப்பு நிலங்களையும் மேம்படுத்தி, வெள்ள பாதிப்புகளைக் குறைத்து, ஒரு நிலைக்கத்தக்க திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வதற்கு இந்த மூன்றாவது முழுமைத் திட்டம் நிச்சயம் வழிவகுக்கும்.

    கேள்வி:- சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளும் தண்ணீர் வடியும் பாதைகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கின்றன. கனமழை பெய்யும்போது எல்லா ஊர்களிலுமே இது போன்ற நிலைமை ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளைச் சுணக்கம் காட்டாமல் அகற்ற அரசு முன் வருமா?

    பதில்:- ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு எப்போதும் முனைப்புடன் உள்ளது. எவ்வித ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு ஆகும். நீர்நிலைகளையும், வெள்ளச் சமவெளிகளையும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் இருந்து காக்க வேண்டும். அத்தகைய நீர்நிலைகளைச் சுத்தம் செய்து அகலப்படுத்த வேண்டும்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 2021 முதல் நவம்பர் 2023 வரை நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 350 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 475.85 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, நீர்வள ஆதாரத் துறைக்குச் சொந்தமான ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட பகுதிகளில் 19,876 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 220.45 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    கேள்வி:-முதலமைச்சராகிய நீங்களும் கவர்னரும் கலந்து பேசி, நிர்வாகத்தில் இருக்கும் முட்டுக்கட்டைகளைப் போக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருக்கிறது. கவர்னர் உங்களை அழைத்திருக்கிறார். அரசு நிர்வாகத்தில் இருக்கும் சிக்கல்களை இது களையும் என்று நம்புகிறீர்களா?


    பதில்:-கவர்னர் தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு பல முறை அவரை நான் சந்தித்து இருக்கிறேன். பேசி இருக்கிறேன். அரசு விழாக்களிலும் பல முறை இருவரும் பங்கெடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இனிமையாகத்தான் பழகினார் பேசினார். எனவே, நாங்கள் இருவரும் சந்திப்பது அல்ல பிரச்சனை. கவர்னர் மனம் மாறித் தமிழ்நாட்டின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டு மக்களுக்கும், சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக அவர் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்.

    கேள்வி:-மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இச்சூழலில் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நம்புகிறீர்கள்?

    பதில்:-மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பவை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தான். இது பாராளுமன்றத் தேர்தல் முடிவைப் பாதிக்காது. பொதுவாகச் சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலப் பிரச்சனைகள்தான் தலைதூக்கிக் காணப்படும். அவைதான் இத்தகைய முடிவுக்குக் காரணம் ஆகும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர்தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான் பா.ஜ.க அதிகம் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும்தான் 35 லட்சம் வாக்குகளைக் கூடுதலாக பா.ஜ.க. பெற்றுள்ளது.

    பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒருமுகப்பட்டிருக்குமானால் இந்த மூன்று மாநில வெற்றியை பா.ஜ.க. பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை. நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும். அதன் மூலமாக பாராளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை நாங்கள் பெறுவோம். மூன்று மாநிலத் தேர்தல் முடிவைப் படிப்பினையாகவே நாங்கள் பார்க்கிறோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 1000 முதல் 1,500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் உதவி தொகை பெற விரிவான ஏற்பாடுகளை உணவு வழங்கல்துறை செய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் வெள்ளத்தால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். வீட்டில் உள்ள பொருட்கள், உடமைகள், கடுமையாக சேதம் அடைந்தன.

    பெரும்பாலான பகுதிகளில் அதிகளவில் பாதிப்பு இருந்தாலும் ஒரு சில இடங்களில் குறைவாக இருந்தன. இருந்தாலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

    தமிழக அரசின் சார்பில் ரூ.6000 நிவாரண உதவி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னையில் 15 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.

    வெள்ள நிவாரண நிதி நாளை (17-ந்தேதி) முதல் வழங்கப்படுகிறது. அதற்கு முன்னதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று முதல் டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. அவரவர் பொருட்கள் வாங்கக் கூடிய ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்படுவதால் அந்த பகுதிகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது.

    சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைகள் முன்பும் பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர். இன்று 2-வது நாளாக டோக்கன் வழங்கப்படுகிறது.

    ஒரு சில ரேஷன் கடைகளில் இன்றுதான் டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 1000 முதல் 1,500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். நாளை முதல் நிவாரண நிதி வழங்கப்படுவதால் இன்று கூட்டம் அலைமோதியது.

    வடசென்னை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாலை 5 மணிக்கே வரிசையில் நிற்க தொடங்கினர். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெரியவர்கள் வரிசையில் உட்கார்ந்து இருந்தனர்.

    நேரம் செல்ல செல்ல வரிசை நீண்டு கொண்டே போனது. ஒரு தெருவில் இருந்து அடுத்த தெருவரை மக்கள் காத்து நின்றனர். காலை 8 மணிக்கே ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    டோக்கனில் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், நிவாரண தொகை வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்திற்கு ரேஷன் கடைக்கு சென்று நிவாரணத் தொகை பெற வேண்டும்.

    நிவாரணத் தொகை ஒவ்வொரு கடைகளிலும் தினமும் 100 பேர் முதல் 300 பேர் வரை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி தொடர்ந்து நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் உதவி தொகை பெற விரிவான ஏற்பாடுகளை உணவு வழங்கல்துறை செய்துள்ளது.

    ஒருசில ரேஷன் கடைகள் முன்பு கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வரிசையை ஒழுங்குப்படுத்தினர்.

    சென்னை நகரில் எங்கு பார்த்தாலும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக உதவிகளை பெற சென்று வருகிறார்கள். ஒவ்வொரு தெருக்களிலும் மக்கள் வரிசையில் நிற்பதை காண முடிகிறது.

    சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் போட்டி போட்டுக் கொண்டு நிவாரண பொருட்களை ஒருபுறம் வழங்கி வருகின்றனர்.

    • ஆதார் எண், வங்கி எண், வீட்டின் விபரங்கள் உள்ளிட்டவை விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது.
    • விண்ணப்பங்கள் ரேசன் கடைகள் மூலமாக தான் வழங்கப்படும்.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 ரேசன் கடைகள் மூலமாக வருகிற 17-ந்தேதி முதல் அரசு வழங்க உள்ளது. இதற்கான டோக்கன் நேற்று பிற்பகல் முதல் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுமா? இல்லையா? என்ற எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * குடும்ப அட்டை இல்லாமல் இருந்தாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் நிவாரணம் பெறலாம்.

    * பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் வருமானவரி செலுத்துவோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

    * ஆதார் எண், வங்கி எண், வீட்டின் விபரங்கள் உள்ளிட்டவை விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ளது.

    * விண்ணப்பங்கள் ரேசன் கடைகள் மூலமாக தான் வழங்கப்படும்.

    * விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள 11 கேள்விகளை பூர்த்தி செய்து வழங்கும்போது ஒப்புதல் சீட்டு வழங்கப்படும்.

    * விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினால் தேர்விற்கு பிறகு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • முகாமில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • மதியம் 1 மணிக்கு மேலும் மருத்துவ முகாமுக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் முகாம் நேரம் நீட்டிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் மழையினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையொட்டி மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் இயக்கத்தினர் நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு விஜய் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.

    இந்த நிலையில் புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று இலவச மருத்துவ முகாம் சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 25 இடங்களில் நடந்தது.

    காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    தென்சென்னை மாவட்டம் கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் நடந்த மருத்துவ முகாமை இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தொடங்கி வைத்தார்.

    முகாமில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மதியம் 1 மணிக்கு மேலும் மருத்துவ முகாமுக்கு பொதுமக்கள் திரண்டு வந்ததால் முகாம் நேரம் நீட்டிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தென்சென்னை வட சென்னை, மத்திய சென்னையில் 25 இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததுடன் மருத்துவ ஆலோசனையும் வழங்கினார்கள்.

    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கும் பணியை சென்னையில் 17-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதம் அடைந்தன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இதற்கான டோக்கன் வருகிற 16-ந் தேதி முதல் வினியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னையில் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீ பெரும்புதூர் (3கிராமங்கள் மட்டுமே) செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், திருப்போரூர், (3கிராமங்கள் மட்டுமே), திருவள்ளூரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய வட்டங்களில் உள்ள வீடுகளுக்கு டோக்கன்கள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.

    டோக்கன் பெற்றவர்களுக்கு வருகிற 17-ந்தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகளில் ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் வழங்கும் பணியை சென்னையில் 17-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

    • 4 மாவட்டங்களிலும் ஏற்பட்டிருந்த வெள்ள சேதம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துக் கூறினார்.
    • மத்திய குழுவினர், கண்டிப்பாக தமிழகத்திற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.

    சென்னை:

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிச்சாங் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் கடந்த 2 நாட்களாக பார்வையிட்டனர்.

    இந்த குழுவில் இடம் பெற்றிருந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (என்.டி.எம்.ஏ.) ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் திமான் சிங், வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை இணை இயக்குனர் ஏ.கே.சிவ்ஹரே, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விஜயகுமார், நிதித்துறை சார்பில் ரங்கநாத் ஆடம், மின்சாரத்துறை சார்பில் இயக்குனர் பவ்யா பாண்டே ஆகிய 6 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இவர்கள் கடந்த 11-ந்தேதி தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகளை சந்தித்து விட்டு அதன் பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வந்தனர். அவர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் சில இடங்களுக்கு உடன் சென்று பாதித்த விவரங்களை எடுத்துக் கூறினார்கள்.

    இதே போல் மற்ற மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட கலெக்டர்கள் உடன் சென்று சேத விவரங்களை எடுத்து கூறினார்கள்.

    அதன் அடிப்படையில் மத்திய குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை கணக்கெடுத்துள்ளனர். 4 மாவட்டங்களிலும் வெள்ளச் சேதத்தை பார்வையிட்டு மத்திய குழுவினர் இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மத்திய குழுவினர் சென்று சந்தித்தனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யாத்ரி தலைமையில் குழுவில் உள்ள அனைவரும் முதலமைச்சரை சந்தித்தனர். அவர்களுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுத்துறை செயலாளர் முருகானந்தம் ஆகியோரும் உடன் இருந்தனர்.


    அப்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் ஏற்பட்டிருந்த வெள்ள சேதம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துக் கூறினார்.

    அப்போது இடைக்கால நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.5060 கோடி கேட்டிருந்ததைவிட இப்போது சேத மதிப்பு அதிகமாக உள்ளதால் கூடுதலாக நிவாரண உதவி தேவைப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    புயல் பாதிப்பு தொடர்பாகவும் நிதி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை மனுவினையும் மத்திய குழுவின் தலைவரான குணால் சத்யாத்ரியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய சேதத்தை சரி செய்து மீண்டு உருவாக்கவும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய மக்களுக்கு அதனை மீண்டும் உருவாக்கி வழங்கிடவும் தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரம் மட்டும் போதுமானதல்ல. மத்திய அரசு பங்களிப்பும் பெருமளவு தேவைப்படுகிறது.

    எனவே மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை மீட்க தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு வகையான சமூக கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யவும், மத்திய அரசுக்கு நீங்கள் உரிய பரிந்துரை செய்து தமிழ்நாடு அரசு கோரி உள்ள தொகையை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதற்கு மத்திய குழுவினர், கண்டிப்பாக தமிழகத்திற்கு தேவையான உதவிகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.

    • ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகையை பயோமெட்ரிக் முறையில் மட்டுமே வழங்க வேண்டும்.
    • நிவாரண தொகை வழங்கப்பட்டதும் பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதம் அடைந்தன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இதற்கான டோக்கன் வருகிற 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.

    நிவாரண நிதி வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * நிவாரணத் தொகை விநியோகத்திற்கு ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நான்கு பணியாளர்கள் பணியமர்த்த வேண்டும்.

    * வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நிவாரண தொகை வழங்க அறிவுறுத்தல்.

    * ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 7 நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்க வேண்டும்.

    * டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள் தான் நேரில் சென்று வழங்க வேண்டும். மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

    * டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் வருலும் குடும்ப அட்டைதாரர்களை எக்காரணம் கொண்டும் ரொக்கத் தொகை இல்லையென திருப்பி அனுப்பக்கூடாது.

    * ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகையை பயோமெட்ரிக் முறையில் மட்டுமே வழங்க வேண்டும்.

    * நிவாரண தொகை வழங்கப்பட்டதும் பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    * தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையும் நிவாரண தொகை வழங்கப்படும்.

    • கொரோனா காலத்தில் தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது, மக்களை தேடி தேடி போய் உதவியது.
    • தகுதியுள்ள அத்தனை பேருக்கும் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும்.

    சென்னை:

    எழும்பூரில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி பி.கே.மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    * மழை வரும் என்று எச்சரித்தார்கள். ஆனால் இவ்வளவு பெரிய மழை இருக்கும் என்று எச்சரிக்கை செய்யவில்லை. இதை அனைத்தையும் மீறி 45 வருடங்கள் இல்லாத மழையை நாம் பார்த்துள்ளோம்.

    * தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு செயலாற்றும் கட்சி.

    * ஆட்சியில் இருக்கும் போது உள்ள வசதி, அதிகாரம் அதை பயன்படுத்தி நாம் சுலபமாக பணியாற்றி விடுவோம். ஆனால் ஆட்சியில் இல்லாத போதும் நாம் பணியாற்றி வருகிறோம்.

    * கொரோனா காலத்தில் தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது, மக்களை தேடி தேடி போய் உதவியது தி.மு.க.

    * 2015-ம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    * ஏரியை திறக்க அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்க அதிகாரிகள் பயந்தனர்.

    * 2015-ல் கொஞ்சம் கொஞ்சமாமக ஏரியை திறந்திருந்தால் பலர் உயிரிழக்காமல் இருந்திருப்பார்கள்.

    * 2015-ஐ விட மோசமான மழை பெய்தும் செம்பரம்பாக்கம் ஏரியை நிரம்ப விடாமல் கொஞ்சம் கொஞ்சமாக திறந்து சென்னைக்கும் வந்த பெரும் பாதிப்பை தவிர்த்து உள்ளோம்.

    * இந்த மழை வெள்ளத்தில் மக்களை சந்தித்து உதவிய ஒரே கட்சி திமுக தான். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று அனைவரும் மக்களை சந்தித்து உதவிகரமாக நீட்டினார்கள்.

    * மூன்று நாட்களாக ஆய்வு செய்யும் மத்திய அரசின் அதிகாரிகள் கூட மழை வெள்ளத்தை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு உள்ளது என்று கூறி உள்ளனர். மத்திய அரசில் இருந்து வந்துள்ள அதிகாரிகள் மனதார பாராட்டி உள்ளனர்.

    * தகுதியுள்ள அத்தனை பேருக்கும் ரூ.6000 நிவாரண தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×