search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்துவட்டி"

    • குடும்ப வறுமை மற்றும் விவசாயத்தின் வறட்சி காரணமாக 7 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனுக்கு வட்டியை சரியாக செலுத்த முடியவில்லை.
    • இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது கல் எறிவது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஜோத்தம்பட்டி பால்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. விவசாயி. இவர் மனைவி ஜோதிமணி, மகன்கள் இளமுகில், கார்த்திகேயன், தாயார் கன்னியம்மாள் மற்றும் மருமகள், பேரன், பேத்தியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தங்கள் வீட்டில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் துணை சூப்பிரண்டு அலுவலகத்திலேயே தங்கியிருக்கப் போவதாகக் கூறி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இரவு அங்கு வந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- குடும்ப வறுமை மற்றும் விவசாயத்தின் வறட்சி காரணமாக 7 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனுக்கு வட்டியை சரியாக செலுத்த முடியவில்லை. அதனால் கடன் கொடுத்தவர், நம்பிக்கைக்காக இருக்கட்டும் என்று சொல்லி தோட்டத்து பத்திரத்தை எங்களிடமிருந்து வாங்கி, பின்னர் ஏமாற்றி கிரயம் செய்துள்ளார். அதன் பிறகு வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தநிலையில் தற்போது இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது கல் எறிவது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே வீட்டில் தங்குவதற்கு அச்சமாக உள்ளதால் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடும்பத்துடன் தங்கியிருக்க முடிவு செய்துள்ளோம்'என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் கந்து வட்டி தொழில் நடைபெறுகிறது.
    • காங்கயம் போலீசார் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கந்து வட்டி தொழில் நடைபெறுகிறது. இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.கந்து வட்டி பிரச்னை தொடர்பான புகார்களை பெற்று விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில், அது குறித்த புகார்களை தெரிவிக்க 94981 76731 மற்றும் 94981 01320 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது குறித்த அறிவிப்பினை, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. காங்கயம் பஸ் நிலையம் முன்பு 4 ரோடு சந்திப்பில் காங்கயம் போலீசார் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

    • டாக்ஸி,வேன்,டெம்போ டிராவலர் என வாகனத்தை விலைக்கு வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் தொழில் செய்து வந்தார்.
    • முத்துகுமாரை தேடி வருகின்றனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் எஸ்.கே. எஸ் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார்(வயது 38) .இவர் தாராபுரம் பகுதியில் வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தும் தொழில் செய்து வருகிறார் .வாகனங்களை வாங்க தாராபுரத்தில் உள்ள தனியார் பைனான்சில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ. 21,50,000 கடனாக வாங்கினார்.அதனை கொண்டு டாக்ஸி,வேன்,டெம்போ டிராவலர் என வாகனத்தை விலைக்கு வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்தநிலையில் பைனான்ஸ் புரோக்கர் யாசர் அராபத்,உரிமையாளரான முத்துக்குமார் மற்றும் வீரன் ஆகியோர் கந்து வட்டி கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.இதனால் கடனை அடைக்க அருண்குமார் ஒரு வாகனத்தை விற்று கடந்த ஆண்டு ரூ.11,50,000 பணத்தை திருப்பி கொடுத்து விட்டார்.மீதமுள்ள பணம் ரூ.10,00,000க்கு ரூ.25,50,000ம் கேட்டு அவரிடமுள்ள இரு வாகனங்களை பறிமுதல் செய்துவாகனத்தை பறித்துவிட்டனர்.பிறகு இது பத்தாது என கேட்டு அவர் இல்லாத சமயம் வீட்டிற்குச் சென்று தந்தை ஜெயராமனை தாக்கியுள்ளனர்.

    இதனை அறிந்த அருண்குமார் தாராபுரம் போலீசில் யாசர் அராபத்( 32),மற்றும் வீரன்(48),முத்துகுமார் ஆகியோர் மீது கந்து வட்டி கொடுமைபடுத்துவதாக புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரணை நடத்தி முத்துக்குமார்,யாசர் அராபத் மற்றும் வீரன் ஆகியோர் மீது கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து யாசர் அராபத்,வீரன் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் முத்துகுமாரை தேடி வருகின்றனர். 

    • கடனுக்கு பால் விற்று கழித்து வந்த போதிலும் மேலும் மேலும் பணம் கேட்டு அடைக்கலம் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கடனுக்கு ஈடாக தோட்டத்து பத்திரத்தையும் பெற்றுக்கொண்டார்.
    • இதனால் மன உளைச்சலில் இருந்த ஆண்டிச்சியம்மாள் கடந்த மாதம் 26-ந் தேதி தனது மகளுக்கும் மகனுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு சாந்திபுரத்தைச் சேர்ந்த நல்லுமனைவி ஆண்டிச்சியம்மாள் (வயது 35). இவர்களுக்கு காவ்யா (17), கிருஷ்ணகுமார் (15) ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக ஆண்டிச்சியம்மாள் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் பூசனூத்து கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். மாடுகள் வளர்த்தும் பால் பண்ணை நடத்தியும் வந்துள்ளார். இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை மகன் அடைக்கலம் (29) என்பவரிடம் கடன் வாங்கி இருந்தார்.

    கடனுக்கு பால் விற்று கழித்து வந்த போதிலும் மேலும் மேலும் பணம் கேட்டு அடைக்கலம் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கடனுக்கு ஈடாக தோட்டத்து பத்திரத்தையும் பெற்றுக்கொண்டார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த ஆண்டிச்சியம்மாள் கடந்த மாதம் 26-ந் தேதி தனது மகளுக்கும் மகனுக்கும் விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றார். இதில் அதிர்ஷ்டவசமாக கிருஷ்ணகுமார் உயிர் பிழைத்தார்.

    தாய் மற்றும் மகள் இறந்த பிறகும் ஆண்டிச்சியம்மாளின் தந்தை மொக்கைச்சாமியிடம் சென்ற அடைக்கலம் உனது மகள் வாங்கிய கடனை நீதான் அடைக்க வேண்டும். இல்லையெனில் உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மொக்கைச்சாமி மற்றும் பேரன் கிருஷ்ணகுமார் ஆகியோர் சேர்ந்து மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் அளித்தனர். அவரது உத்தரவின் பேரில் வருசநாடு போலீசார் அடைக்கலம் மீது கந்து வட்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதே போல கந்து வட்டி கொடுமை நடப்பதால் போலீசார் கிராமங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக வட்டி வசூலிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோடிபதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி அம்பிகா.
    • கைதான சித்ராவை சேலம் மகளிர் சிறையிலும், இளவரசனை கிருஷ்ணகிரி சிறையிலும் அடைத்தனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கோடிபதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி அம்பிகா.

    இந்த நிலையில் இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த இளவரசன், இவரது மனைவி சித்ரா ஆகியோரிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பணம் வட்டிக்கு வாங்கியுள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் வாங்கிய பணத்திற்கு வட்டியும், முதலும் கட்டாமல் அம்பிகா காலம் தாழ்த்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சித்ரா தனது கணவருடன் அம்பிகா வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கு நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை. வட்டியும் அடைக்கவில்லை. அதனால் நீங்கள் வாங்கிய 1 லட்சத்து 20 ஆயிரம் பணம் எல்லாம் சேர்த்து 5 லட்சத்து 20 ஆயிரமாக கொடுக்க வேண்டும் என்று கூறினர். அம்பிகாவும், அவரது கணவரும் அவ்வளவு பணம் கொடுக்கமுடியாது என்றனர்.

    இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அம்பிகாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அம்பிகா மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் பெண்ணிடம் கந்துவட்டி பணம் கேட்டு மிரட்டியதாக சித்ரா, இளவரசன் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்தனர்.

    கைதான சித்ராவை சேலம் மகளிர் சிறையிலும், இளவரசனை கிருஷ்ணகிரி சிறையிலும் அடைத்தனர்.

    • கந்துவட்டி புகாரில் கணவன்-மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை டி.எஸ்.பி நகரைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் (வயது 36). இவர் அந்த பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜெயமுருகன் எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை கே.கே.நகர், கார்ப்பரேஷன் காலனி சீனிவாசன் (50), அண்ணாநகர் சுகுமார் (40), சீனிவாசன் மனைவி நிர்மலா (45), அவரது மகன் கிரீஸ் என்ற கிரீஸ்வர் ஆகியோரிடம் நிலத்தை அடமானம் வைத்து 11 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அதனை நான் திருப்பி செலுத்தி விட்டேன். இருந்தபோதிலும் அவர்கள் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், சுகுமார், நிர்மலா, கிரீஸ் என்ற கிரீஸ்வர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் தெற்கு பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், மதுரையைச் சேர்ந்த இன்பா குபேந்திரன், சூர்யா மற்றும் அருண் ஆகிய 3 பேரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன்.

    இதற்கான பணத்தை வட்டியுடன் சேர்த்து 7.88 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்தினேன். இருந்தபோதிலும் அவர்கள் மேலும் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.

    இதற்காக என் காரையும் அவர்கள் அபகரித்துக் கொண்டனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.
    • அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை: –

    சென்னிமலை பகுதியில் நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் தினசரி வசூல் விட்டு அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை அருகே மணிமலைகரடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றும் நபர் கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை தொடர்ந்து சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.

    அதை தொடர்ந்து சென்னிமலை ஒன்றிய பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கடைக்காரர்களை குறிவைத்து நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்று கடன் கொடுத்து தினசரி வசூல், மீட்டர் வட்டி, தின வட்டி என அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    இந்த ரகசிய தகவல் கசிய தொடங்கியதால் சென்னிமலை பகுதியில் கந்து வட்டி கும்பல் அலறிதுடித்து வருகின்றனர்.

    தற்போது பணம் பெற்ற நபர்களிடம் மிரட்டும் தோனியை விட்டு பம்பி பணிந்து கடன் தொகையினை வசூலித்து வருகின்றனர்.

    • கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், பூரணம் என்பவருடன் சேர்ந்து செல்வியின் வீட்டுக்கு வந்து அவரை அடிக்க பாய்ந்தார்.

    மதுரை

    மதுரை காமராஜர்புரம், கக்கன் தெருவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி செல்வி (45). இவர் அதே பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் (58) என்பவரிடம் ரூ.1.85 லட்சம் கடன் வாங்கினார். இதற்காக அவர் மாதம்தோறும் ரூ.12 ஆயிரம் செலுத்தி வந்தார்.

    2 மாதங்களாக செல்வி வட்டி செலுத்தவில்லை. ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், பூரணம் என்பவருடன் சேர்ந்து செல்வியின் வீட்டுக்கு வந்து அவரை அடிக்க பாய்ந்தார்.

    இதுகுறித்து செல்வி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    ஈரோடு:

    கடலூரை சேர்ந்த ஆயுத ப்படை போலீசார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை உடனே விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீசார் கந்துவட்டி கொடுமை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கந்து வட்டி சம்பந்தமாக ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் மோகமத் ஷெரிப் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

    எனவே கந்து வட்டி சம்பந்தமாக யாராவது புகார் அளிக்க விருப்பமிருந்தால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரடியாகவே, அல்லது போலீஸ் சூப்பிரண்டு வாட்ஸ்-அப் எண் 9655220100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதுடன் தகவல் தருபவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கந்துவட்டிக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.1 லட்சமும் அதற்குறிய வட்டியும் உடனே தரவில்லை என்றால் குடும்பதோடு கொன்று கொளுத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பள்ளபச்சேரி கிராமத்தை சேர்ந்த சித்திரை சாமி என்பவரிடம் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹபீபா என்ற பெண் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். இந்தத் தொகைக்கு மாதம்தோறும் ரூ.24 ஆயிரம் வட்டி செலுத்தி வந்துள்ளார். கடன் வாங்கிய பணம் ரூ.3 லட்சத்தில் ரூ.2 லட்சத்தை திருப்பி செலுத்தி விட்டார்.

    ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டிய நிலையில், சித்திரை சாமி அடியாட்களுடன் ஹபீபா வீட்டிற்கு சென்று தொந்தரவு செய்தார். நேற்று ஹபீபா கணவருடன் திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள மீன் கடை அருகே சென்றபோது அவரை வழி மறித்த கந்து வட்டிக்காரர் சித்திரை சாமி, ரூ.1லட்சமும் அதற்குறிய வட்டியும் உடனே தரவில்லை என்றால் குடும்பதோடு கொன்று கொளுத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து ஹபீபா திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரை சாமியை கைது செய்தனர்.

    • சேலம், நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகங்கள் மற்றும் டி.எஸ்.பி. அலுவலகங்களில் கந்துவட்டி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
    • கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அளித்து வருகின்றனர். அதன்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    சேலம்:

    கடலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் செல்வக்குமார் என்பவர் கந்துவட்டி கொடுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக அனிதா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து கந்து வட்டியை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகள், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் பொது மக்களிடம் மிகுந்த வட்டி வசூலித்த தொகை எவ்வளவு? என்பது பற்றி முறையாக விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கூறியிருந்தார்.

    இதேபோல் சேலம் மாவட்டத்தில் கந்துவட்டி, வங்கி காசோலை மற்றும் பத்திரம் வைத்து மிரட்டுபவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ அல்லது போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அல்லது போலீஸ் நிலையம் மூலமோ தெரிவித்தால் விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தெரிவித்திருந்தார்.

    இதை தொடர்ந்து சேலம், நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகங்கள் மற்றும் டி.எஸ்.பி. அலுவலகங்களில் கந்துவட்டி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அளித்து வருகின்றனர். அதன்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி நிதிநிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல்லை அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலைப்பட்டி பாலப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளரான சுந்தரராஜனிடம் ரூ.10 லட்சம் கடன்பெற்றார்.

    இதற்காக அவர் தனக்கு சொந்தமான வெவ்வேறு நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு தொடர்ந்து வட்டி செலுத்தி வந்து உள்ளார்.

    இதனிடையே நிதி நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன், விவசாயி ரங்கசாமியிடம் ரூ.40 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதோடு, குடும்பத்தினருடன் சேர்ந்து கூட்டு சதி செய்து ரங்கசாமியின் நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயி ரங்கசாமி புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் சுந்தரராஜன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×