search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DSP office"

    • வாங்கிய கடனுக்கு முறையாக ஜெகநாதன் வட்டி கட்டியதாக கூறப்படுகிறது.
    • 6 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து ரூ. 28 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி மகன் ஜெகநாதன்(வயது 50). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை திருப்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் அடமானம் வைத்து ரூ. 28 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் கெடு காலம் முடிந்ததால், பெருமாநல்லூரைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.40 லட்சத்திற்கு விவசாய நிலத்தை அடமானம் வைத்து பணம் பெற்று உள்ளார். ஏற்கனவே வாங்கிய சிவலிங்கத்தின் கடனை அடைத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடன் தொகைக்காக பெருமாநல்லூர் நிதி நிறுவனத்திற்கு கிரைய உடன்படிக்கை எழுதிக் கொடுத்துள்ளார். கடன் தொகை செலுத்தாவிடில் நிலம் நிதி நிறுவனத்திற்கு சொந்தமாகி விடும் என்ற ஒப்பந்த அடிப்படையில் எழுதப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாங்கிய கடனுக்கு முறையாக ஜெகநாதன் வட்டி கட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வங்கியில் கடன் பெறுவதற்காக, கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்து கொடுக்குமாறு நிதி நிறுவனத்தில் ஜெகநாதன் கேட்டுள்ளார்.

    இன்று, நாளை என காலம் தாழ்த்திய அவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஜெகநாதன் வில்லங்க சான்றிதழ் எடுத்துப் பார்த்தபோது அதில் அவரது நிலத்தை,போலியான பத்திரங்கள் தயாரித்து கடந்த 2020 ஆண்டு வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகநாதன் நிதி நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதிலளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த அவர் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்ட் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்த நிலையில், மனவேதனையில் இருந்த அவர் திடீரென மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

    அருகே இருந்த உறவினர்கள் மற்றும் போலீசார் அவரை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதையடுத்து ஜெகநாதனின் புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இது போன்ற காரியங்களில் இனி ஈடுபடக்கூடாது என பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட்சவுமியா விவசாயி ஜெகநாதனுக்கு அறிவுறுத்தினார். துணை சூப்பிரண்ட் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர்.
    • சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவமனை சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தாரமங்கலம் அருகே துட்டம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் கோனேரி வளவு என்ற பகுதியில் தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார், மேலும் ஆட்டோ கன்சல்டிங் தொழிலும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு மது அருந்த அனுமதி இல்லை என சந்திரசேகரன் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக்தி உள்ளிட்ட 3 பேரும் போன் செய்து உறவினர்களை வரவழைத்தனர். பின்னர் சந்திரசேகரை பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் கூச்சல் போட்டார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவ மனை சிகிச்சையாக அனு மதிக்கப்பட்டார். ஓட்டல் உரிமையாளரை கும்பல் தாக்கும் சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சக்தி, அவரது சகோதரர்கள் அருள் மற்றும் அஜித் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே 3 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி ஓட்டல் உரிமையாளர் சந்திரசேகரனின் உறவினர்கள் ஓமலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து டி.எஸ்.பி. சங்கீதா, தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள 3 பேரையும் தீவிர மாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூர், தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • குடும்ப வறுமை மற்றும் விவசாயத்தின் வறட்சி காரணமாக 7 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனுக்கு வட்டியை சரியாக செலுத்த முடியவில்லை.
    • இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது கல் எறிவது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஜோத்தம்பட்டி பால்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. விவசாயி. இவர் மனைவி ஜோதிமணி, மகன்கள் இளமுகில், கார்த்திகேயன், தாயார் கன்னியம்மாள் மற்றும் மருமகள், பேரன், பேத்தியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் தங்கள் வீட்டில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால் துணை சூப்பிரண்டு அலுவலகத்திலேயே தங்கியிருக்கப் போவதாகக் கூறி குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் இரவு அங்கு வந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- குடும்ப வறுமை மற்றும் விவசாயத்தின் வறட்சி காரணமாக 7 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய கடனுக்கு வட்டியை சரியாக செலுத்த முடியவில்லை. அதனால் கடன் கொடுத்தவர், நம்பிக்கைக்காக இருக்கட்டும் என்று சொல்லி தோட்டத்து பத்திரத்தை எங்களிடமிருந்து வாங்கி, பின்னர் ஏமாற்றி கிரயம் செய்துள்ளார். அதன் பிறகு வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிகிறது. இந்தநிலையில் தற்போது இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது கல் எறிவது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    எனவே வீட்டில் தங்குவதற்கு அச்சமாக உள்ளதால் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குடும்பத்துடன் தங்கியிருக்க முடிவு செய்துள்ளோம்'என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    • திட்டக்குடி டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.
    • நீண்ட நாட்களாக செந்தில் அசல் பணத்தையும் தரவில்லை, வட்டியும் தரவில்லை. 2017-ம் ஆண்டு 23 ஆயிரம் கொடுத்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி வள்ளி (வயது60) கூலி தொழிலாளி. தனது மகன் கடந்த 2009 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவு பேரில் சாலை விபத்தில் இறந்து போன மகனுக்கு 40 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது. அந்த பணத்தினை அதே பகுதியை சேர்ந்த பூமாலை மகன் செந்தில் (43) என்பவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு 40 ஆயிரத்தையும் அவரிடம் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக செந்தில் அசல் பணத்தையும் தரவில்லை, வட்டியும் தரவில்லை. 2017-ம் ஆண்டு 23 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்நாள் வரை மீதி தொகையை தராமல் இழுத்த–டித்தார். பணம் கேட்டால் ஆபாசமாக திட்டி உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. 

    இது குறித்து வள்ளி ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் செய்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத–தால் மன உளைச்சலான மூதாட்டி இன்று காலை திட்டக்குடி டி.எஸ்பி. அலுவலகம் முன்பு மண்எண்ணை கேனுடன் வந்து தனது உடல் முழுவதும் மண்எண்ணயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றினர் டி.எஸ்பி. அலுவலகம் அழைத்து சென்று விசாரணை செய்தனர் . உங்களது பணம் விரைவில் பெற்றுத் தரப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மூதாட்டி சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    மாமல்லபுரம் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு டாஸ்மாக் பார் உரிமையாளர் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் அ.தி.மு.க. பிரமுகரும், போலீசாரும் பணம் பறித்ததாக குற்றம்சாட்டி முகநூலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
    மாமல்லபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் தண்டலம் கிராமத்தில் வசித்து வந்தவர் நெல்லையப்பன் (வயது 37). நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். இவருக்கு சுமதி (30) என்ற மனைவியும், ருஜன்யா (7) என்ற மகளும், கந்தசாமி என்ற ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளது.

    இவர் திருப்போரூர், கேளம்பாக்கம், கண்டிகை, நாவலூர், சிங்கபெருமாள்கோவில், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் தண்டலத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் மேல்வாடகைக்கு டாஸ்மாக் பார் எடுத்து நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று நெல்லையப்பன் மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த போலீசாரும், அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதன்பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    தற்கொலை செய்வதற்கு முன்பாக நெல்லையப்பன் தனது முகநூலில் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெங்களூருவில் ஒரு ஓட்டலில் ரூ.30 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை செய்து நிம்மதியாக வாழ்ந்து வந்தேன். பார் மேல் வாடகை எடுத்து நடத்தியதால் இதுவரை என்னிடம் அ.தி.மு.க. பிரமுகர் 7 வருடத்தில் ரூ.19 கோடிக்கும் மேல் மனசாட்சி இல்லாமல் பணம் பறித்துவிட்டார். எவ்வளவு காசு கொடுத்தாலும் அவருக்கு பத்தாது. போதாக்குறைக்கு போலீசாருக்கும் மாதாமாதம் மாமூல் கொடுத்தாக வேண்டும்.

    ஒரு நாள் தவறினாலும் பாரை இழுத்து மூடிவிடுவார்கள். ஏண்டா இந்த தொழிலுக்கு வந்தோம் என்று பலமுறை நான் வருந்தி உள்ளேன். தமிழகத்தில் மதுவை ஒழிக்க ஸ்டாலின், வைகோ, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் ஆகிய தலைவர்கள் முன்வர வேண்டும். தமிழகம் முழுவதும் மதுவை ஒழித்தால் 1 கோடி பெண்கள் நிம்மதியாக வாழ்வார்கள். நான் இறப்பதற்கு முன் இப்பதிவை வெளியிடுகிறேன்.

    இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் நெல்லையப்பன் பேசி பதிவிட்டுள்ளார்.

    மேலும் அ.தி.மு.க. பிரமுகர் மீது புகார் கொடுக்க வந்த நெல்லையப்பனை போலீசார் அலைக்கழித்ததாகவும் கூறப்படுகிறது.

    முன்னதாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நெல்லையப்பன் மாஜிஸ்திரேட்டிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது தன் தற்கொலைக்கான முழு காரணத்தையும் அவர் நீதிபதியிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

    டாஸ்மாக் பார் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்தது மாமல்லபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    ×