search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம், நாமக்கல் எஸ்.பி.அலுவலகங்களில் குவியும் கந்துவட்டி புகார்கள்
    X

    சேலம், நாமக்கல் எஸ்.பி.அலுவலகங்களில் குவியும் கந்துவட்டி புகார்கள்

    • சேலம், நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகங்கள் மற்றும் டி.எஸ்.பி. அலுவலகங்களில் கந்துவட்டி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
    • கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அளித்து வருகின்றனர். அதன்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    சேலம்:

    கடலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் செல்வக்குமார் என்பவர் கந்துவட்டி கொடுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக அனிதா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து கந்து வட்டியை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகள், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் பொது மக்களிடம் மிகுந்த வட்டி வசூலித்த தொகை எவ்வளவு? என்பது பற்றி முறையாக விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கூறியிருந்தார்.

    இதேபோல் சேலம் மாவட்டத்தில் கந்துவட்டி, வங்கி காசோலை மற்றும் பத்திரம் வைத்து மிரட்டுபவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ அல்லது போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அல்லது போலீஸ் நிலையம் மூலமோ தெரிவித்தால் விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தெரிவித்திருந்தார்.

    இதை தொடர்ந்து சேலம், நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகங்கள் மற்றும் டி.எஸ்.பி. அலுவலகங்களில் கந்துவட்டி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அளித்து வருகின்றனர். அதன்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி நிதிநிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல்லை அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலைப்பட்டி பாலப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளரான சுந்தரராஜனிடம் ரூ.10 லட்சம் கடன்பெற்றார்.

    இதற்காக அவர் தனக்கு சொந்தமான வெவ்வேறு நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு தொடர்ந்து வட்டி செலுத்தி வந்து உள்ளார்.

    இதனிடையே நிதி நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன், விவசாயி ரங்கசாமியிடம் ரூ.40 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதோடு, குடும்பத்தினருடன் சேர்ந்து கூட்டு சதி செய்து ரங்கசாமியின் நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயி ரங்கசாமி புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் சுந்தரராஜன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×