search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varanasi"

    மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடாதது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார். #LokSabhaElections2019 #Priyanka #Varanasi
    அமேதி:

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்றத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என பரவலாக பேசப்பட்டது. கட்சி மேலிடம் கூறினால் போட்டியிட தயாராக இருப்பதாக பிரியங்காவும் கூறியிருந்தார். ஆனால், அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. கடந்த முறை போட்டியிட்ட அஜய்  ராய், மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வாரணாசியில் மோடி ஆதரவு அலை வீசுவதால், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.



    இந்நிலையில், வாரணாசியில் போட்டியிடாததற்கான காரணம் குறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    நான் போட்டியில் இருந்து வெளியேறவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சக தலைவர்களின் ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளேன். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 41 தொகுதிகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    எங்கள் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும், நான் அவர்களின் தொகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். நான் ஒரு தொகுதியில் மட்டும் அதிக கவனம் செலுத்தினால், அவர்கள் சற்று ஏமாற்றம் அடைவார்கள் என நினைத்தேன். அதனால்தான் தேர்தலில் போட்டியிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 41 மக்களவைத் தொகுதிகளுக்கும் பிரியங்கா காந்தி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 39 தொகுதிகளுக்கும் மற்றொரு பொதுச்செயலாளரான ஜோதிராதித்ய சிந்தியா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். #LokSabhaElections2019 #Priyanka #Varanasi
    பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவை குறை கூறி வீடியோ வெளியிட்ட தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். #Varanasipolls #TejBahadurYadav #Samajwadi
    லக்னோ:

    பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
     
     ஊழல் பிரச்சினையை நான் எழுப்பியதால், என்னை பணி நீக்கம் செய்தார்கள். எனது முதல் நோக்கம் பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான். எனவே, வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.



    இந்த பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி இங்கு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல்  முடிவடைகிறது.

    இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாதி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.#Varanasipolls #TejBahadurYadav #Samajwadi
    வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். முன்னதாக தொண்டர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தேர்தலின்போது தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார். #PMModi #AddressingWorkers
    வாரணாசி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 3 கட்டங்களாக முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதையடுத்து உத்தரபிரதேசம் மாநிலத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    தேர்தலின்போது வாக்குச்சாவடிக்குச் செல்லும் தொண்டர்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் . நாம் நேர்மையான  கூட்டணி அமைத்துள்ளோம்.  நாட்டுக்காக எவ்வித சூழலிலும்  ஓய்வின்றி உழைக்க வேண்டும். நாடு முழுவதும் நமக்கு ஆதரவான அலை உருவாகியுள்ளது. தேர்தலின் போது அத்துமீறுவது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.



    நாம் அவ்வழியில் செல்லக்கூடாது. பிரதமர் மோடி தான் மீண்டும் வரவேண்டும் என நாடே ஆசைப்படுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கொண்டாடும் வகையில்  ஆட்சி நடைபெறுகிறது.  நான் நேற்று ரோட்ஷோ நடத்தியபோது உங்களின் உழைப்பை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

    மக்களின் உள்ளங்களை வெல்லும் அளவிற்கு உங்கள் பணி இருக்க வேண்டும். பாஜக எப்போதும் தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. கேரளா, வங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது வன்முறை நடந்தபோதும் உங்களின் ஊக்கம் சற்றும் குறையவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #AddressingWorkers 
    உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரமாண்ட பேரணி நடத்திய பிரதமர் மோடி கங்கா ஆரத்தி செய்து வழிபட்டார். #LokSabhaElections2019 #Modi
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    இதையொட்டி, பாஜக சார்பில் வாரணாசியில் இன்று மாலை பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். மேலும் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத்துடன் இதில் பங்கேற்றார்.



    தொண்டர்கள் சூழ பிரதமர் மோடி சாலையில் ஜீப்பில் நின்றபடி தசாஸ்வமேத நதி முகத்துவாரத்தை அடைந்தார். இதையடுத்து கங்கை நதியை வழிபட்ட பிரதமர் மோடி அங்கு கங்கா ஆரத்தி செய்து வழிபாடு நடத்தினார்.  
     
    முன்னதாக, வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனர் மதன் மோகன் மாளவியா உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Modi
    உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி பிரம்மாண்ட பேரணியை இன்று நடத்தினார். #LokSabhaElections2019 #Modi
    லக்னோ:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். நாளை அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

    வாரணாசியில் இன்று பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதால் அங்குள்ள அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், உ.பி.யின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி இன்று மாலை பிரம்மாண்ட பேரணியை நடத்தினார்.
     


    வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    இதையடுத்து, சாலை மார்க்கமாக மோடி பேரணி சென்றார். வாரணாசியில் உள்ள தசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதி வரை பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர் கங்கை நதியில் வழிபாடு நடத்தினார்.  #LokSabhaElections2019 #Modi
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டால் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். #Varanasi #PriyankaGandhi #LSpolls2019 #PriyankaGandhicontest
    திருவனந்தபுரம்:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி எம்.பி.யாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி வகித்து வருகிறார். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடும் அவர் கேரள மாநில காங்கிரஸ் பிரமுகர்களின் வற்புறுத்தலுக்கிணங்க அங்குள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி நிறுத்தப்பட்டுள்ளார்.



    இன்று மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்ந்த நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவு திரட்டுவதற்காக வயநாட்டில் இரண்டாவது நாளாக இன்று பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நீங்கள் நிறுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி வருவது பற்றி? என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, 'காங்கிரஸ் தலைவர் உத்தரவிட்டால் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவேன்’ என தெரிவித்தார்.  #Varanasi #PriyankaGandhi  #PriyankaGandhicontest #LSpolls2019
    வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 26-ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார். #LokSabhaElection #PMModi #Varanasi
    வாரணாசி:

    பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடைசி கட்டமாக மே 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் அந்த தொகுதியில் 26-ந் தேதி பிரதமர் மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் 25-ந் தேதி வாரணாசி செல்கிறார். அன்று சாலை வழியாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். 26-ந் தேதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு அதன் பிறகு வேட்பு மனுவை தாக்கல் செய்ய செல்கிறார்.

    நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கலின் போது பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி மற்றும் மாநில மந்திரிகள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் செல்கின்றனர். வாரணாசிக்கு வருவதற்கு முன்பு பீகார் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் மோடி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.  #LokSabhaElection #PMModi #Varanasi 
    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பிரியங்கா காந்தி. #PriyankaGandhi #KashiVishwanathtemple
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரியங்காவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 42 பாராளுமன்ற தொகுதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    மிகவும் பலவீனமாக உள்ள இந்த 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் பொறுப்பு பிரியங்காவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் பிரசாரம் செய்வதை தவிர்த்து விட்டு இந்த 42 தொகுதிகளிலும் பிரியங்கா அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளார்.

    முதல் கட்டமாக அவர் நேற்று முன்தினம் உத்தரபிரதேசத்தில் கங்கையில் படகு பிரசாரத்தை தொடங்கினார். பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள மனையா காட்டில் இருந்து அவர் படகு பயணத்தை தொடங்கினார். மொத்தம் 3 நாட்கள் படகில் சென்று வாரணாசியை சென்றடைகிறார்.



    பிரியங்கா காந்தி மேற்கொண்டுள்ள படகு பயணத்தின் இறுதி நாளான இன்று வாரணாசிக்கு சென்றார். அங்குள்ள ராம் நகரில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி  வீட்டுக்கு சென்றார். அங்குள்ள லால்பகதூர் சாஸ்திரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதைத்தொடர்ந்து, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார். அங்கு காசி விஸ்வநாதரை வழிபட்டு தரிசனம் செய்தார்.  #PriyankaGandhi #KashiVishwanathtemple
    வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இன்று(நேற்று) தனது முதல் வர்த்தகப்பயணத்தை தொடங்கியது. #VandeBharatExpress #Delhi #Varanasi
    புதுடெல்லி:

    நாட்டின் முதல் அதிவேகமான ரெயிலை சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலை தயாரித்தது. என்ஜின் இல்லாமல் இயங்கக்கூடிய இந்த ரெயிலுக்கு ‘வந்தே பாரத்’ எனப் பெயரிடப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் நடந்த விழாவில் பிரதமர் மோடி ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சோதனை ஓட்டமாக டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகருக்கு சென்ற வந்தே பாரத் ரெயில், அங்கிருந்து டெல்லிக்கு திரும்பியபோது நடுவழியில் பழுதானது. பின்னர் பழுது நீக்கப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில், ‘வந்தேபாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் வர்த்தக ரீதியான தனது முதல் பயணத்தை நேற்று தொடங்கியது. இது குறித்து ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், ‘வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இன்று(நேற்று) தனது முதல் வர்த்தகப்பயணத்தை தொடங்கியது. அடுத்த 2 வாரங்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. உங்களுக்கான டிக்கெட்டுகளை இன்றே பெறுங்கள்” என குறிப்பிட்டார். 
    உத்தர பிரதேசத்தின் கோவில் நகரமான வாரணாசியில், வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். #PravasiBharatiyaDiwas #Modi
    வாரணாசி:

    மத்திய அரசின் சார்பில், வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் பங்குவகிக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வெளிநாடுவாழ் இந்தியர் தின (பிரவசி பாரதிய திவஸ்) மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் 15வது பிரவசி பாரதிய திவஸ் மாநாடு, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நடத்தப்படுகிறது. மாநாட்டின் முதல் அங்கமாக, இளைஞர்கள் பிரவசி பாரதிய திவஸ் மாநாடு நேற்று நடைபெற்றது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

    இந்நிலையில் முக்கிய நிகழ்வான பிரவசி பாரதிய திவஸ் மாநாடு இன்று தொடங்கியது. ‘புதிய இந்தியாவை கட்டமைப்பதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு’ என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைமை விருந்தினரான மொரிஷியஸ் பிரதமர் பிரவீன் ஜக்நாத் ஆகியோர் துவக்கி வைத்தனர்.



    சவால்கள் மற்றும் வாய்ப்புகள் முதல்,  நிலையான வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் திறன் வரை பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, மாநாட்டில் பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.

    மாநாட்டின் துவக்க நிகழ்ச்சிக்கு பிறகு, மோடியும், மொரிஷியஸ் பிரதமரும் சந்தித்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். நாளை நடைபெறும் நிறைவு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினமான ஜனவரி 9ம் தேதி இந்த மாநாடு நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அலகாபாத் நகரில் நடைபெறும் கும்பமேளாவிலும் குடியரசு தின விழாவிலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்க ஏதுவாக, மாநாடு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #PravasiBharatiyaDiwas #Modi
    வாரணாசியில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பிரவசி பாரதிய திவாஸ் மாநாட்டை இன்று துவக்கி வைத்தனர். #YogiAdityanath #SushmaSwaraj #YouthPravasiBharatiyaDiwas
    வாரணாசி:

    மத்திய அரசின் சார்பில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் பங்குவகிக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், பிரவசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் 15வது பிரவசி பாரதிய திவாஸ் மாநாடு, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று தொடங்கியது. வாரணாசில் இந்த மாநாடு முதல் முறையாக நடக்கிறது. இந்த ஆண்டுக்கான பிரவேச பாரதி திவாஸின் கருப்பொருள் "புதிய இந்தியாவை உருவாக்க இந்திய புலம்பெயர்ந்தோர்களின் பங்கு" ஆகும்.

    மாநாட்டின் முதல் அங்கமாக, இளைஞர்களுக்கான பிரவசி பாரதிய திவாஸ் மாநாட்டை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



    இன்று முதல் 23 வரையிலான மூன்று நாட்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில், பல்வேறு துறைகளின் நிபுணர்கள், தங்கள் துறை சார்ந்த கருத்துக்களை பதிவு செய்ய உள்ளனர். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காஷ்மீர், சாரநாத் மற்றும் கங்கா காட்ஸ் போன்ற புகழ்பெற்ற இடங்களுக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    அடுத்த மூன்று நாட்களில் கலந்துரையாடல்களின் போது, ​​இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல உலகத் தலைவர்கள்,  புலம்பெயர்ந்த இந்தியர்களின் பங்கினைக் குறித்து கலந்துரையாடுவார்கள்.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள்:

    இன்று நடைபெறும் நிகழ்வில் அடுத்த தலைமுறை மீது, குறிப்பாக உத்திரபிரதேச இளைஞர்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான இளம் புலம்பெயர்ந்தோர் இந்தியாவுக்கு வந்துள்ளனர். துவக்க விழாவில் உ.பி முதல்வருடன் மத்திய மந்திரிகள் சுஷ்மா, ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் கன்வல் ஜீத் சிங் பக்ஷி, நார்வே எம்.பி.  ஹிமான்ஷு குலதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    நாளை நடைபெற உள்ள நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தலைமை விருந்தினரான மொரிஷியஸ் பிரதமர் பிரவீன் ஜுக்நாத் ஆகியோர் ‘பிரவசி பாரதிய திவாஸ்’ மாநாட்டை துவக்கி வைக்க உள்ளனர். சவால்கள் மற்றும் வாய்ப்புகள் முதல்,  நிலையான வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் சைபர் திறன் வரை பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரவசி பாரதிய பிரதிநிதிகளுக்கும், மாநில தலைவர்களுக்கும் பிரதமர் மோடி மதிய விருந்தினை வழங்க உள்ளார்.

    புதன்கிழமை  நடைபெற உள்ள விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட என்.ஆர்.ஐ., பி.ஐ.ஓ.க்கள் மற்றும் என்ஆர்ஐக்களால் நடத்தப்படும் அமைப்புகளுக்கு பிரவசி பாரதிய சம்மான் விருது (பிபிபிஏ), வழங்கப்படும். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பல்வேறு துறைகளில் கணிசமான பங்களிப்பு செய்தவர்களுக்கு இந்த விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குவார்.

    மாநாட்டிற்கு வருகை தந்திருக்கும் பிரதிநிதிகளை உற்சாகமூட்டவும், ஓர் அற்புத அனுபவத்தை வழங்கவும் கங்கை மலர்களால் மேடை அலங்கரிக்கப்பட்டு கண்கவர் வகையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. #YogiAdityanath  #SushmaSwaraj  #YouthPravasiBharatiyaDiwas

    வாரணாசி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியில்லை என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. #AamAadmi #Kejriwal

    லக்னோ:

    டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது.

    இதை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங் இது தொடர்பாக கூறியதாவது:-


    கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் அவர் தீவிர கவனம் செலுத்துவார். வாரணாசி தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவோம்.

    பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா, கோவாவில் போட்டியிடுவோம். உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் நிற்போம். அடுத்த மாதம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AamAadmi #Kejriwal

    ×