search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road show"

    • பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர் வயநாட்டில் களமிறங்கி வெற்றி பெற்றார். அதேநேரம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் வென்றுள்ளார்.

    இதையடுத்து வயநாடு, ரேபரேலி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க ராகுல்காந்தி முடிவு செய்தார். அதன்படி நேற்று ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    இந்தநிலையில் ராகுல் காந்தி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக இன்று வயநாடுக்கு வந்தார். இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

    பின்னர் அவர் மலப்புரம் மாவட்டம் எடவண்ணாவுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் ரோடு ஷோ நடத்தினார். சாலைகளின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களுக்கு கையசைத்தவாறு ராகுல்காந்தி சென்றார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

    பின்னர் எடவண்ணாவில் நடந்த பொதுமக்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    தாயின் மறைவிற்கு பிறகே தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை உணர்ந்ததாக பிரதமர் மோடி கூறினார். நான் எந்த முடிவும் எடுப்பதில்லை, என்னை பூமிக்கு அனுப்பிய பரமாத்மாவே அனைத்து முடிவையும் எடுப்பதாக கூறினார்.

    அவர் கூறிய பரமாத்மா விசித்திரமான பரமாத்மா. அனைத்து முடிவுகளையும் அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்குமாறு மோடியின் பரமாத்மா கூறுகிறது.

    நான் சாதாரண மனிதன், மோடியை போல் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் அல்ல. துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிகாட்டப்படுபவன் அல்ல.

    ரேபரேலி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாட்டின் எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டு முடிவு செய்வேன். எந்த தொகுதி எம்.பி.யாக தொடர்வது என்பதை முடிவு செய்ய தர்மசங்கடமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
    • `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ந் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இதையொட்டி பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    வாரணாசி எம்.பி.யாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.

    வாரணாசியில் நேற்று தொடங்கிய வேட்புமனு தாக்கல் மே 14-ந் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இங்கு கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

    இதையொட்டி இதற்கு முதல் நாளில் இருந்தே வாரணாசியில் பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடைபெற உள்ளன.

    உத்தரபிரதேசத்தில் புனித நகரமான வாரணாசி யின் மால்தஹியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    வரும் 14-ந் தேதியிலும் அதேபோல் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவிக்க உள்ளார். இதற்கு ஒருநாள் முன்னதாக மே 13-ல் பிரதமர் மோடி வாரணாசி செல்ல உள்ளார். அதே நாளில் அவரது `ரோடு ஷோ' வாரணாசியில் நடைபெற உள்ளது.

    பிரதமர் தனது வேட்புமனுவை வாரணாசி தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க உள்ளார். இப்பதவியில் மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.ராஜலிங்கம் உள்ளார். வாரணாசியுடன் சேர்த்து உத்தரபிரதேசத்தின் 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1-ல் நடைபெற உள்ளது. இதன் மூன்றாவது நாளான ஜூன் 4-ல் நாடு முழுவதிலுமான தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

    • உ.பியில் 7ம் தேதி (நாளை) 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
    • பிரதமர் மோடியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி நேற்று சாமி தரிசனம் செய்தார்.

    ஜனவரி மாதம் நடைபெற்ற பிரதிஷ்டை விழாவுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக அயோத்தி ராமர் கோவில் சென்றார்.

    இதைதொடர்ந்து, பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தினார். உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன், சுக்ரீவா கோட்டையில் இருந்து லதா சவுக் வரை பிரதமர் மோடி பேரணியில் பங்கேற்றார்.

    பிரதமர் மோடிக்கு பாஜகவினர், பொது மக்கள் உள்ளிட்டோர் கோஷம் எழுப்பியும், மலர் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.

    பிரதமர் மோடியின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் வரும் 7ம் தேதி (நாளை) 3ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கானாவில் 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • ரோடு ஷோவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தெலுங்கானாவில் நிலவும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானாவில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    இன்று நாகர்கர்னூல் தொகுதிக்கு உட்பட்ட கட்வாலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகின்றனர். அதை தொடர்ந்து அடிலாபாத் தொகுதியின் நிர்மலில் ரோடு ஷோவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    வருகிற 9-ந் தேதி மீண்டும் தெலுங்கானாவிற்கு வரும் ராகுல் காந்தி கரீம் நகர் மற்றும் மல்காஜ்கிரி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

    அதே நாளில் பிரியங்கா காந்தி ஜாஹிராபாத் நாடாளுமன்ற தொகுதியின் காமி ரெடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பின்னர் செவல்லா நாடாளுமன்ற தொகுதியின் தந்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பேச உள்ளார்.

    இந்த தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிரிய கட்சி வேட்பாளர் ரஞ்சித் ரெட்டி வெற்றி பெற்றார். ரஞ்சித் ரெட்டி பாரத ராஷ்ட்ரிய கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    10-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரியங்கா காந்தி மகபூப் நகர் நாடாளுமன்ற தொகுதியின் ஷாத் நகரில் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

    • முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்.
    • வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை?

    மேற்கு வங்காள மாநிலம் மால்டா தெற்கு தொகுதியில் நடைபெற்ற ரோடு ஷோவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அமித் ஷா, "திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை வழியே ஊடுருவல் தடையின்றி தொடர்கிறது. முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார். அதன் மூலம் இங்கு குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை பெறுவதை அவர் தடுக்கிறார்.

    வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை? நீங்கள் ஊடுருவலையும் ஊழலையும் நிறுத்த விரும்பினால், நீங்கள் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

    அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் எல்லைப் பாதுகாப்பு படை (BSF), வங்கதேச - இந்திய எல்லையை கண்காணிக்கும் நிலையில் அவர் மேற்கு வங்காள மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • தேர்தல் பிரசாரத்தின் போது ஆந்திர முதல் மந்திரி மீது கல் வீசப்பட்டதில் அவர் காயமடைந்தார்.
    • இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்தனர்.

    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரத்துக்காக ரோடு ஷோ நடத்தினார். சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் நடந்த ரோடு ஷோவில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரின் கல்வீச்சு தாக்குதலில் ஜெகன்மோகன் காயமடைந்தார்.

    இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அருகிலிருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலில் முதல் மந்திரி அருகிலிருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி தனது பேருந்து யாத்திரையைத் தொடர்ந்தார்.

    இந்த தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக விஜயவாடா ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திர முதல் மந்திரி மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    முதல் மந்திரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மதுரை நேதாஜி சாலையில் உள்துறை மந்திரி அமித் ஷா ரோடு ஷோ தொடங்கினார்.
    • சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை அடுத்த நேதாஜி சாலையில் தொடங்கி தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்தூண் பகுதி வரை ரோடு-ஷோ மூலமாக பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.

    உள்துறை மந்திரியின் வருகையை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். குறிப்பாக மதுரை நேதாஜி சாலை, தெற்கு ஆவணி மூல வீதி, விளக்குத்தூண் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    ரோடு ஷோவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள உயரமான கட்டிடங்களில் நின்றபடி காவல்துறையினர் முழுவதுமாக கண்காணித்தனர்.

    இந்நிலையில், மதுரை நேதாஜி சாலையில் உள்துறை மந்திரி அமித் ஷா ரோடு ஷோ தொடங்கினார். பா.ஜ.க. வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். வழியெங்கும் நின்றிருந்த தொண்டர்களைப் பார்த்து மந்திரி அமித் ஷா உற்சாகமாக கையசைத்தார்.

    • பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • காரைக்குடியில் நாளை நடைபெற இருந்த ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர் பிரசாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை நெல்லை, கோவை மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.

    இதற்கிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய உள்ளார்.

    மதுரைக்கு நாளை பிற்பகல் 3.05 மணிக்கு வருகை தரும் அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று காரைக்குடியில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

    சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளதால் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதேபோல், மதுரையில் 12-ம் தேதி பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தபிறகு மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்லும் நிகழ்வையும் ரத்து செய்துள்ளார் அமித்ஷா.

    • 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார்.
    • மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை சென்னை வந்தார்.

    சென்னை பாண்டி பஜாரில் நடந்த பிரமாண்ட ரோடு- ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை பிரதமர் மோடி வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்திலும் அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், சென்னை தியாகராயர் நகரில் நடந்த பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல் நடந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீஸ் விதித்த நிபந்தனைகளை மீறி விளம்பர பதாகைகளை வைத்ததாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், மாம்பலம், பாண்டி பஜார் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார்.
    • ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். நேற்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்தார்.

    இந்நிலையில், தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடுஷோ நடைபெறும் இடத்தை வந்தார்.

    அங்கு, பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார்.

    ரோடு ஷோவில் பங்கேற்றது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது. அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அணுகுவதில்லை, குறிப்பாக சவால்கள் நிறைந்த கடினமான நேரங்களில்.

    கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்த சமீபகால தகவல்கள், நமது நாட்டின் வியூக நலன்களுக்கும், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரஸும் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

    சாலைகள், துறைமுகங்கள், நகர்ப்புற போக்குவரத்து, கலாச்சாரம், வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி மற்றும் பல துறைகளில் என்டிஏ அரசு தொடர்ந்து பணியாற்றும். அதே நேரத்தில், பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவது, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கிய பிரச்சனைகளில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம்.

    சென்னை என் மனதை வென்றது!

    இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன.

    சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தில்லைநகர் சாலை முதல் உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை வரை பேரணி.
    • பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோட் ஷோ பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று பிற்பகலில் உத்தரவிட்டுள்ளது.

    மேலும்,"கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்றுப்பாதையில் ரோட் ஷோ நடத்திக் கொள்ளலாம். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கியும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

    அதன்படி, நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாற்றுப் பாதையில் பேரணி தொடங்கியுள்ளார்.

    அதன்படி, தில்லைநகர் சாலை முதல் உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை வரை பேரணியை ஜே.பி.நட்டா நடத்தி வருகிறார்.

    பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு.
    • இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை தேனியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் நேற்று இரவு அவர் திருச்சிக்கு வருகிறார்.

    இதனிடையே திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து மலைக்கோட்டை வரை ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இதற்காக திருச்சி மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்டனர்.

    அதற்கு போலீஸ் கமிஷனர் காமினி அனுமதி மறுத்துள்ளார். ரோடு ஷோவுக்கான அனுமதி கேட்கப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி. பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பகுதி என்பதால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    எனினும் திட்டமிட்டபடி ரோடு ஷோ நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்தனர். அதற்கான மாற்று இடம் குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இடம் தேர்வு செய்யப்பட்டதும் உரிய அனுமதி பெற்று ரோடு ஷோ நடத்தப்படும் என்று பா.ஜ.க.வினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில், திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோட் ஷோ பேரணிக்கு மாற்றுப் பாதையில் அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மேலும்,"கண்ணப்பா ஹோட்டல் முதல் விஎஸ்ஐ மருத்துவமனை வரை மாற்றுப்பாதையில் ரோட் ஷோ நடத்திக் கொள்ளலாம். மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    ×